Sunday, May 12, 2013

நாபிஉன் லிகைரிஹி (பிறருக்குப் பயனளிப்பவன்)


தனிமனித உருவாக்கப் பண்புகளில் மற்றுமோர் முக்கியமான பண்பு நாபிஉன் லி கைரிஹிஎன்பது. பிறர்க்குப் பயனுள்ளவனாக வாழ்தல்என்பது இதன் பொருளாகும். நாபிஹ்என பயன்படுத்தப்பட்டுள்ள இந்த சொற்பிரயோகம் பிறர்க்குப் பயனளிப்பவன்என்ற கருத்தில் ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு சொற்பிரயோகமாகும்.

அந்த வகையில் நாபிஉன் லிகைரிஹிஎன்பது ஒரு ஷரீஅத் சொற்பிரயோகம் என்று கூறினால் அது நிச்சயமாக ஒரு மிகையான கருத்தாக இருக்க மாட்டாது.

நபியவர்கள் கூறினார்கள்: உங்களில் எவருக்கு தனது சகோதரனுக்குப் பயனளிக்க இயலுமாக இருக்கிறதோ அவன் அதனைச் செய்யட்டும். (முஸ்லிம்)
நபியவர்கள் மற்றோர் சந்தர்ப்பத்தில் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய மனிதன் பிறர்க்குப் பயனுள்ளவனாவான். (ஸஹீஹுல் ஜாமிஃ)

அடுத்து இதே கருத்தை அல்குர்ஆன் நன்மையான விடயங்களில் ஈடுபடல்என்ற சொற்பிரயோகத்தின் ஊடாக விளங்கப்படுத்தியுள்ளது.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஹ் செய்யுங்கள். ஸுஜூத் செயுங்கள். உங்களது இரட்சகனுக்கு இபாதத் செய்யுங்கள். நல்ல காரியங்களில் ஈடுபடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்என்கிறது. (ஹஜ் - 77)

இங்கு நல்ல காரியங்கள்என்ற கருத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள அறபுப் பதம் கைர்என்ற சொல்லாகும். அதனை விளங்கப்படுத்திய திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் (முஃபஸ்ஸிரீன்) பயன்தரக் கூடிய அனைத்து விதமான செயல்களையும் இந்தச் சொல் குறிக்கும் என்றார்கள்.

மற்றோர் இடத்தில் அல்குர்ஆன் நபிமார்களது பணியைப் பற்றிப் பேசும் பொழுது இவ்வாறு கூறுகிறது:

நன்மையான விடயங்களைச் செயுமாறு நாம் அவர்களுக்கு அறிவித்தோம். (அன்பியா  73)

இந்த வசனத்திலும் நன்மையான விடயங்கள் என்பதைக் குறிக்க கைராத் என்ற சொற்பிரயோகமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் பயன்தரக்கூடியவைஎனும் விளக்கத்தையே தப்ஸீர் ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் நாபிஉன் லிகைரிஹிஎன்பது ஒரு ஷரீஅத் பெறுமானம் என்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம். இனி அந்த சொல்லின் கருத்து குறித்து சற்று கவனம் செலுத்துவோம்.

நாபிஉன் லி கைரிஹிஎன்பதன் கருத்தை விளங்கிக்கொள்ள நபியவர்களின் ஒரு ஹதீஸை விளங்கிக் கொள்தல் மிகவும் பொறுத்தமானது. ஒரு தடவை ஒரு பிரயாணத்தின்போது நோன்பு நோற்காதிருந்தவர்கள் பிரயாணத்தின் அனைத்து பணிவிடைகளையும் செய்தார்கள். கூடாரங்களை அடித்தார்கள். ஒட்டகங்களுக்கு நீர் புகட்டினார்கள். உணவு தயாரித்தார்கள். நோன்பு நோற்றவர்களால் எந்த வேலையிலும் ஈடுபட முடியவில்லை. களைத்துப் போய் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள்; இன்று நோன்பு நோற்காதவர்கள்தான் எல்லா நன்மைகளையும் எடுத்துவிட்டார்கள்என்றார்கள்.

நோன்பு நோற்காதவர்களுக்கு எல்லா நன்மைகளும் ஏன் சென்றன? ஏனெனில் அவர்களது செயற்பாட்டின் பிரயோசனம் அவர்களுடன் மாத்திரம் சுறுங்கிவிடவில்லை. அது அடுத்தவர்களையும் சென்றடைந்தது. ஆனால் நோன்பு நோற்றவர்களைப் பொறுத்தவரையில் அதன் பயனை அவர்கள் மாத்திரமே பெற்றுக் கொண்டார்கள். அது பிறர்க்கும் கடத்தப்படவில்லை. எனவே, ஒருவனது செயலின் பயன் அவனுக்கு மாத்திரம் உரியதல்லாமல் பிறர்க்கும் கடத்தப்படக்கூடியதாக இருத்தல் மிகவும் முக்கியமானது. அதில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்கிறோம்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் பார்வையில் எந்த செயலுக்குப் பெறுமானம் அதிகம்? செய்பவனுக்கு மாத்திரம் பயனளிக்கும் செயற்பாடா? அல்லது பிறர்க்கும் பயனளிக்கும் செயற்பாடா? நிச்சயமா இரண்டாவது அம்சம்தான். அந்த வகையில் ஒரு செயலின் முழுமையான கூலி அந்த செயல் பிறர்க்கும் பயனளிக்கும்போதுதான் கிடைக்கிறது. நாபிஉன் லிகைரிஹிஎன்பதன் பொருள் இதுதான்.

இதனால்தான் ஸலஃப்கள் எப்பொழுதும் கஷ்டத்தில் உள்ள ஒரு மனிதனைவிட தாம் சிறப்புக்குரியவர்கள் என்று நினைக்கமாட்டார்கள். மாற்றமாக கஷ்டத்தில் உள்ளவர்கள் தான் சிறப்புக்குரியவர்கள் என நினைப்பார்கள். காரணம் அவர்களுக்குப் பயனளிப்பதற்கான வாய்ப்பை தமக்கு ஏற்படுத்துகிறார்கள் என்பதற்காகவாகும்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் தனது ஆசிரியரான இமாம் இப்னு தைமியா அவர்களைப் பற்றிக் கூறும் பொழுது, அவர்கள் மக்களது தேவையை நிவர்த்திப்பதில் மிகவும் கடுமையாக உழைப்பார்கள் என்றார்கள்.

ஸைனுல் ஆப்தீன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற இமாம் அலி இப்னுல் ஹுஸைன் அவர்கள் இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் உணவுப் பொருட்களை சுமந்து சென்று ஏழைகளின் வீட்டு வாசல்களில் வைத்து விட்டு வருவார்கள். இதனைச் செய்பவர் யார்? என்பது எவருக்கும் தெரியவில்லை. அவர் வபாத்தானதன் பின்னர் இந்த வேலை நடைபெறாத போதுதான், அது இவரால்தான் நடைபெற்றது என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களைப் பார்க்கும் போது அடுத்தவர்களுக்கு கிடைக்கும் பயன்தான் முக்கியமானது. அதுதான் நோக்கமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. தனது பயன் நோக்கமாகக் கொள்ளப்படவில்லை என்பது விளங்குகிறது. இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். இந்தப் பள்ளிவாசலில் ஒரு மாதம் இஃதிகாப் இருப்பதை விடவும் எனது சகோதர முஸ்லிம் ஒருவரின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அவருடன் நடந்து செல்வது எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியது என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஃ)

அடுத்து இன்னும் இரண்டு விடயங்கள் குறித்து பார்வையைச் செலுத்துவது சற்று பொறுத்தமானது என நினைக்கிறோம். ஒன்று பயனுள்ள விடயங்கள் எவை? என்பது பற்றிய ஷாPஅத் பார்வை பற்றியது. மற்றையது பிறர்என்பதன் பொருள் என்ன? என்பது பற்றியது.

முதலில் பயனுள்ளவை எவை? என்பது பற்றிய ஷாPஅத் பார்வையை இவ்வாறு விளங்கலாம். அல்லாஹ்தஆலா அல்குர்அனில் கூறுகின்றான்:

உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு நபிக்கும் ஒரு விடயத்தை நாம் அறிவித்திருக்கிறோம். அதுதான் என்னைத்தவிர வேறு கடவுள் கிடையாது. எனக்கு மாத்திரமே நீங்கள் அடிமைப்பட்டு வாழ வேண்டும்” (அன்பியா  25)

இந்த வசனம் எதனைச் சொல்கிறது? அல்லாஹ் உலகில் மனித இனத்திற்கு வழங்கிய தூதுத்துவத்தின் சாராம்சம் இதுதான். பூமியில் அல்லாஹுதஆலா தோற்றுவிக்க விரும்பிய மனித நாகரீகத்தின் அடிநாதம் இதுதான். அதனால்தான் எல்லா நபிமார்களுக்கும் சொல்லப்பட்ட செய்தியாக இது காணப்படுகிறது. அல்லாஹ் மாத்திரம்தான் கடவுள். அவனது கொள்கை மாத்திரம் தான் மனிதன் பின்பற்றி வாழ்வதற்குரியது. இதன் மீதுதான் மனித நாகரீகம் கட்டியெழுப்பப்படுகிறது.

இதனடிப்படையில் எழும் நாகரீகம்தான் மனிதனின் படைப்பியல்போடு இயைந்து செல்லக் கூடியது. இதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டு வாழுதலை முழுமையாக மேற்கொள்ளுங்கள். இதுதான் அல்லாஹ்தஆலா மனிதனைப் படைத்த இயல்பாகும். அல்லாஹ்வின் இந்தப் படைப்பொழுங்கில் எந்த மாற்றமும் இல்லை. இதுதான் நேர்த்தியான மார்க்கமாகும். ஆனாலும் அதிகமான மனிதர்கள் இதனை அறியாதிருக்கிறார்கள்.” (ரூம் - 30)
அல்லாஹ் மாத்திரம் தான் கடவுள். அவனது தூதுத்துவம் மாத்திரம் தான் பின்பற்றுவதற்குரியது. இதுதான் மனித இயல்புடன் இயைந்து செல்வதற்குரியது. என்ற கோட்பாட்டை பலப்படுத்துவதற்குரிய அனைத்துமே பயனுள்ளவைதான். இந்தக் கோட்பாட்டுக்குத் துணை செயாத ஒன்று உலகில் நிச்சயமாப் பயனற்றதாகவே காணப்படும். எனவேதான் அல்லாஹ்வை நோக்கிய அழைப்பே உலகிலேயே மிக அழகிய வார்த்தை என்றும் மிகவும் பயனுள்ள வார்த்தை என்றும் அல்குர்ஆன் கூறியது.

அல்லாஹ்வை நோக்கி அழைத்து ஸாலிஹான அமல் செது நான் முஸ்லிம் என்றும் சொல்பவனை விடவும் அழகான வார்த்தை பேசுபவன் வேறு யார் இருக்க முடியும்?” (புஸ்ஸிலத் - 33)
எனவேதான், அந்த மனித நாகரீகத்தை நோக்கி அழைப்பு விடுக்கின்ற, முஸ்லிம் சமூகத்தை மனிதர்களுக்காகவே வந்துள்ள மிகவும் பயனுள்ள சமூகம் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

நீங்கள் மனிதர்களுக்காகவே அனுப்பப்பட்டுள்ள பயனுள்ள சமூகம். நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள். தீமையைத் தடுக்கிறீர்கள் (ஆலுஇம்ரான்)

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நன்மைஎன்பது மனித நாகரீகத்திற்கு பயனளிக்கக்கூடியது. தீமைஎன்பது மனித நாகரீகத்திற்கு பயனற்றது. எனவே, பயனுள்ளது ஏவப்படுகிறது. பயனற்றது தடை செயப்படுகிறது. இங்கு பயனுள்ளது எது? என்பதும் பயனற்றது எது? என்பதும் வேறுபடுத்தப்படுவது ஏற்கனவே நாம் கூறிய மனித நாகரீ உருவாக்கத்தின் அடிநாதக் கோட்பாட்டின் அடியாகவே நடைபெறுகிறது.

இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாத்தில் கல்வியும், பொருளாதாரமும், பண்பாடும், ஒழுக்கமும், ஆன்மீகமும், சகோதரத்துவமும் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், இவையனைத்தும் அல்லாஹ்தஆலா எதிர்பார்க்கும் மனித நாகரீகத்திற்கு பயனளிக்கும் காரணிகள். இதனால்தான் மனித நாகரீகத்தை இறுதியாக முழுமையான வடிவில் நடைமுறைப்படுத்திக் காட்ட வந்த நபியவர்கள் இந்த ஒவ்வொரு காரணியையும் ஆழ்ந்து வலியுறுத்தியுள்ளார்கள்.

இவற்றில் ஒன்றை மாத்திரம் உதாரணத்திற்காக அடையாளப்படுத்திக் காட்டலாம். கல்வியைப் பற்றி நபியவர்கள் கூறியதைப் பாருங்கள். அல்லாஹ்வும் மலக்குமார்களும் வானங்களில் உள்ளவர்களும், பூமிகளில் உள்ளவர்களும், ஏன் தமது குழிகளில் வசிக்கும் எறும்புகளும், கடலில் உள்ள மீன்களும், மனிதர்களுக்கு நல்ல விடங்களைக் கற்றுக் கொடுப்பவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கின்றன என்றார்கள்.

வானங்கள், பூமிகளில் உள்ள எல்லா உயிரினங்களும்,எத்தனை உயிரினங்கள்!? எத்தனை பறவைகள்?! எத்தனை மிருகங்கள்?! நிச்சயமாக மனிதகணக்கியல் பெறுமானங்களுக்கு அப்பால்பட்ட எண்ணிக்கையாகத்தான் இருக்கும். இவற்றுடன் அல்லாஹ்வும், மலக்குமார்களும், ஸலவாத்துச் சொல்கின்றார்கள். யாருக்கு? கல்வியைப் போதிக்கின்றவனுக்கு, ஏன் இந்த சிறப்பு? அல்லது ஏன் இவையனைத்தும் இவனுக்குச் ஸலவாத்துச் சொல்ல வேண்டும்?

ஏனெனில், கல்வி என்பது இந்த அனைத்திற்கும் பயனளிக்கக் கூடியது. அதனுடைய பயன் இந்த எல்லா பரப்புக்களையும் தொடக்கூடியது. ஒவ்வொரு உயிருள்ள பொருளுக்காகவும் உதவி செய்வது நன்மையைப் பெற்றுத் தருகிறது என்றும் ஒரு நாய்க்கு நீர் புகட்டினாலும் சுவர்க்கம் கிடைக்கிறது என்றும் கல்விதானே சொல்லிக் கொடுக்கிறது. எனவே, உயிரினங்கள் அந்த நன்றிக் கடனைத் தான் ஸலவாத்தாக மொழிகின்றன.

உண்மையில் மனித நாகரீகம் என்பது இதுதான். அது உலகின் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு படைப்பிற்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்குகிறது. உரிய கண்ணியத்தைக் கொடுக்கிறது. அதன் பரப்பு இந்த வானங்கள் பூமிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். அதனால்தான் கல்வி என்ற காரணி இந்த முழுப் பரப்பையும் தழுவியதாக இருக்கின்றது.

அடுத்த விடயம் பிறர்என்பதன் கருத்து பற்றியது. இதனை மூன்று வகையில் நோக்கலாம் என நினைக்கிறோம். பிறர் என்பதன் முதலாவது கருத்து அது தனக்காக அல்ல என்பதாகும். அல்குர்ஆனில் நபிமார்கள் சொல்லும் செய்தியாக அல்லாஹ்தஆலா ஒரு விடயத்தை பல இடங்களில் கூறுகின்றான்.

நான் உங்களிடத்தில் எந்தக் கூலியையும் எதிர்பார்க்கவில்லை. எனக்குரிய கூலி நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கிறது. (ஷுஅரா - 109)

இந்த வசனத்தின்படி நபிமார்கள் தாம் மேற்கொள்ளும் பணி ஊடாக பிறரது நலனையே நோக்கமாகக் கொள்கிறார்கள். அடுத்தவர்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களேயன்றி தமக்கு அதனால் ஒரு பயன் கிடைக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இல்லை.

அதாவது உலகில் தான் எதனையும் பெற்றுக் கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. உலகில் தமக்கு எதுவும் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் அல்லாஹ்விடத்தில் தமக்கு கூலி கிடைத்தால் போதுமானது என்றுதான் எதிர்பார்த்தார்கள். எனவே, “பிறர்என்பது தனக்குப் பயனளித்தல்என்பது நோக்கமாக இல்லாமல் பிறர்க்குப் பயனளித்தல்என்பது நோக்கமாகக் காணப்படுவதுடன், தனது அந்த செயலுக்காகவும் மனநிலைக்காகவும் கூலியை அல்லாஹ்விடம் மாத்திரம் எதிர்பார்த்தலாகும்.

அடுத்து பிறர் என்பதன் இரண்டாவது கருத்து அது தான் அல்லாத பிற அனைத்தும்என்பதாகும். இந்த விடயம் இஸ்லாமிய ஷரீஅத்தில் மிகத் தெளிவான ஒரு உண்மையாகும். முழு மனித இனத்தையும் ஆதமுடைய சந்ததிகள் என்று கூறுவதன் மூலம் மனித சகோதரத்துவத்தை அடையாளப்படுத்திக் காட்டுகிறது. மனித நடத்தைக்கும் பௌதீக உலகத்திற்குமிடையிலான தொடர்பை இனம் காட்டுவதன் மூலம் ஒரு நாகரீகத்தை அடையாளம் காட்டுகிறது.

இதனால்தான் பிறர்க்குப் பயனளிப்பது தொடர்பான அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் அதிகமாக பொதுப்படையான அமைப்பில் பிரயோகிக்கப்பட்டுள்ளமை யைக் காணலாம். நாம் ஏற்கனவே கூறிய அல்குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் அனைத்தும் இந்தக் கருத்தைச் சொல்ல போதுமானவையே. இருப்பினும் முக்கியமான ஓரிரு விடயங்களைத் தொட்டுச் செல்கிறோம்.

ஸுறதுல் கஸஸில் மூஸா (அலை) அவர்கள் மத்யன் நகரின் நீர் நிலையில் எந்தவிதமான பிரதி உபகாரத்தையும் எதிர்பாராமல் இரண்டு பெண்களுக்கு உதவி செய்த சம்பவத்தை அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இங்கு சிரமப்படுகின்றவர்கள் என்ற அடிப்படையில் இருந்துதான் உதவி செய்தல் நடைபெற்றிருக்கிறது.

நபியவர்கள் தூதுவராக அனுப்பப்பட முன்னர் அவரது பண்பாடுகள் எவ்வாறு காணப்பட்டிருக்கின்றன என்று கதீஜா (றழி) அவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேளுங்கள். அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். ஏனெனில், நீங்கள் உறவுகளை இணைந்து நடக்கிறீர்கள். சிரமப்படுகின்றவர்களைத் தாங்குகிறீர்கள்வசதியற்றவர் களுக்கு உழைத்துக் கொடுக்கிறீர்கள். விருந்தினர்களை கௌரவிக்கிறீர்கள். மனிதர்களது துயரச் சம்பவங்களில் அவர்களுக்கு உதவுகிறீர்கள் என்றார்கள்.

நபியவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களைக் கண்டு பயந்தபோது, கூறப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் இவை. ஜிப்ரீல் (அலை) ஒரு தீய சக்தியல்ல. ஒரு நல்ல சக்தி. அல்லாஹ் நிச்சயமாக ஒரு தீய சக்தியை அனுப்பி உங்களை இழிவுபடுத்த மாட்டான். ஏனெனில், நீங்கள் உயர்ந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பது தான் கதீஜா (றழி) அவர்களின் ஆறுதல். இங்கும் மனிதன்என்ற அடிப்படை மீதுதான் உதவி செய்தல் நிகழ்ந்துள்ளது.

பிறர்என்பதன் மூன்றாவது கருத்து, அது மனித நாகரீ உருவாக்கத்திற்கான முஸ்லிம்களின் கூட்டு ஒத்துழைப்பு என்பதாகும். அல்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு ஒத்துழைப்பவர்கள். அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள். தீமையைத் தடுக்கிறார்கள்” (பகரா)

இந்த வசனம் மிகத் தெளிவாக சில விடயங்களைப் பேசுகின்றது. முதலில் ஒரு கூட்டு ஒத்துழைப்பு பற்றிப் பேசுகின்றது. அது ஆண் பெண் என்ற இரு தரப்பும் இணைந்த ஒரு வடிவில் காணப்படுவதாகக் கூறுகிறது. அடுத்து இது எல்லா மனிதர்களையும் குறிக்கவில்லை. ஈமானுள்ள மனிதர்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றது. அடுத்து இவர்களது பணியைப் பற்றிப் பேசுகின்றது. அந்தப் பணி மனித நாகாPகத்தை கட்டி எழுப்புவதற்காக பயனுள்ளதை ஏவுதலும் பயனற்றதைத் தடை செய்தலுமாகும்.

எனவே, முஸ்லிகள் மத்தியில் தொழிற்படல் அது மனித நாகரீகத்தை கட்டியழுப்புவதற்கான கூட்டு ஒத்துழைப்பு என்பது நாபிஉன் லி கைரிஹிஎன்பதனால் நாம் புரிந்து கொள்ளும் ஒரு கருத்தாகும். அந்த முஸ்லிம்கள் மத்தியிலான கூட்டு ஒத்துழைப்பை வலியுறுத்தும் விதமாகவே முஸ்லிம்கள் மத்தியிலான ஈமானிய சகோதரத்துவம். பரஸ்பர உதவி, தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற பல விடயங்கள் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்தப்பட்டுள்ளமையைக் காணலாம்.

உதாரணமாக யார் ஒரு முஃமினுடைய உலகச் கஷ்டம் ஒன்றை நீக்குகின்றாரோ அவரது மறுமைக் கஷ்டம் ஒன்றை அல்லாஹ் நீக்கி விடுவான்என்று நபியவர்கள் கூறினார்கள் (புஹாரி).

இறுதியாக, “நாபிஉன் லி கைரிஹிஎன்ற பண்பு தனிமனித உருவாக்கத்தில் என்ன முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பது பற்றி சுருக்கமாக சில அவதானங்களைச் செலுத்துவோம்.

முதலில் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல்,“நாபிஉன் லிகைரிஹிஎன்பது ஒரு ஷரீஅத் பெறுமானமாகும். ஒவ்வொரு தனிமனிதர்களிலும் காணப்பட வேண்டிய ஒரு உயர்ந்த பெறுமானம். எனவே, தனிமனித உருவாக்கத்தில் இதன் பங்கு அவசியமாகிறது.

அடுத்து, “அடுத்த மனிதனுக்குப் பயனளித்தல்என்பது ஒரு சிறந்த தஃவாவாக அமைகிறது. இஸ்லாத்தின் உயர்ந்த பண்பாடுகளையும், இலட்சியங்களையும் நாம் வார்த்தைகளாகப் பேசுவதை விடவும், அவற்றை நடைமுறைகளாகக் காட்டுவது பலரை இஸ்லாத்தின் பால் ஈர்ப்பதற்குக் காரணமாகிறது.

இங்கு ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு உதவி செய்தலை மார்க்கக் கடமையாக எந்தவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர்பாராமல் ஒரு கூட்டத்தினர் செய்கிறார்கள். எனின், அங்கு அந்த மனிதனின் மனது இவர்களின் மார்க்கம் என்ன என்று பார்க்க முற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. அந்தவகையிலும் தனிமனித உருவாக்கத்தில் இந்தப் பண்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்து, நாம் வாழும் பல்லின சமூக சூழலில் சகவாழ்வுஎன்பது ஒரு இன்றியமையாத தேவையாக உள்ளது. சகவாழ்வுஎன்ற இந்த சிந்தனை, பரஸ்பரம் பயனளித்தல் என்பதிலேயே தங்கியிருக்கிறது. அல்குர்ஆன் ஏனைய சமூகங்களுடன் நீதியாக நடந்து கொள்ளுமாறு கூறுகிறது.

அத்துடன், அவர்களுக்குப் பயனளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கூறுகிறது (மும்தஹினா - 08) இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள பிர்என்ற சொற்பிரயோகம் நன்மை பயக்கக்கூடிய எல்லாவிதமான நற்செயல்களையும் குறிக்கக்கூடிய ஒரு சொல்லாகும்.

அதன் பிரயோக வடிவங்களைத்தான் முஸ்லிமல்லாத அயலவருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது பற்றியும் முஸ்லிமல்லாத உறவினருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது பற்றியும் இஸ்லாம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்த வகையில் இவை அனைத்தும் பயனளித்தல் எனும் கருத்தைப் பிரதிபளிப்பனவாகவே காணப்படுகின்றன. எனவே, சகவாழ்வு என்பது பயனளித்தல் என்ற வகையில் தனிமனித உருவாக்கத்தில் நாபிஉன் லி கைரிஹிஎன்பது முக்கியம் பெறுகிறது.

Tuesday, April 23, 2013

இஸ்லாமியச் சமூக மாற்றக் கோட்பாட்டில் “இர்ஷாதுல் முஜ்தமஃ” - சில குறிப்புகள்



இர்ஷாதுல் முஜ்தமஃஎன்ற சொல்லுக்கு சமூகத்தை வழி நடாத்துதல் என்று பொருள் கூறலாம். சமூக மாற்றம் பற்றிய கருத்தியலுக்குள்ளே தவிர்க்க முடியாத ஒரு சொற்பிரயோகம் இது என்றால், அது மிகையாகாது. சமூக மாற்றக் கோட்பாட்டுப் பரப்பில் தனிமனிதன் குடும்பம் என்ற கட்டங்களையடுத்து முன்றாவது இடத்தை இது பெறுகிறது.

குறிப்பு 01


‘இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது, தற்போது செயல்பாட்டில் இருக்கும் சமூகக் கட்டமைப்புகள் ஒழுங்குகளை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு ஒரு புதிய இஸ்லாமியச் சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல் என்று பொருள் கொள்ளப்படுகிறதா? அல்லது இருக்கின்ற கட்டமைப்புகள் ஒழுங்குகளைப் பயன்படுத்தி, அவற்றினூடாக இஸ்லாமியச் சமூகக் கட்டமைப்பு அடையப்பெற வேண்டும் என்று பொருள் கொள்ளப்படுகிறதா?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கின்ற வகையிலேயே இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள், “இர்ஷாதுல் முஜ்தமஃஎன்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இர்ஷாத் என்ற சொல்லின் கருத்து வழிகாட்டல் என்பதாகும். அது புதிதாய் உருவாக்குதல் என்ற பரப்பைவிடவும் சீர்திருத்தம் என்ற பரப்பையே அதிகம் உணர்த்துகிறது.

இமாமவர்கள் இந்தச் சொல்லுக்கு விளக்கமளிக்கும்போது, இவ்வாறு கூறுகிறார்கள்:

“சமூகத்திற்கு வழிகாட்டுதல், அது சமூகத்தில் நன்மைகளைப் பரப்புதல், தீமைகள் பாவங்களுக்கு எதிராகப் போராடல், நல்ல செயல்களின் பால் தூண்டுதல் வழங்கல், நன்மையை ஏவுதல், நல்ல செயல்களை முன்வந்து முதலில் செய்தல், இஸ்லாமியச் சிந்தனையின்பால் பொதுக் கருத்தை ஈர்த்தல், எப்போதும் பொதுவாழ்க்கையின் வெளிப்பாடுகளை இஸ்லாமியச் சிந்தனை சார்ந்ததாக வைத்திருத்தல் போன்ற அனைத்தும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். அத்துடன் ஒரு பொது அமைப்பு என்ற வகையில், இது ஜமாஅத் மீதும் கடமையாகும்என்றார்கள்.

இந்த வார்த்தைகள் சமூகத்தின் கட்டமைப்பை முழுமையாக மறுதலிக்கச் சொல்லவில்லை. மாற்றமாக, அவற்றில் பயனுள்ளதை அங்கீகரித்துப் பயனற்றதை அகற்றி, அவசியமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது, இங்கு வலியுறுத்தப்படும் கருத்தாகும்.
இங்கு புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. அதாவது, அமுலில் உள்ள கட்டமைப்பைப் பயன்படுத்தி இஸ்லாமிய மாற்றத்தை அடைய வேண்டும் என்று சொல்லும்போது, அதன் மூலம் அமுலில் உள்ள கட்டமைப்பும் இஸ்லாமியக் கட்டமைப்புதான் என்ற அங்கீகாரம் நிச்சயமாக அதற்கு வழங்கப்படுவதில்லை. மாற்றமாக, அதில் இஸ்லாத்தின் போதனைகளுடன் முரண்படாத, பயனுள்ள விடயங்கள் மறுக்கப்படக் கூடாது. அவற்றை ஏற்று, குறைபாடுகள் முழுமைப்படுத்தப்படுவதன் மூலம் இஸ்லாமிய மாற்றம் அடையப்பெற வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

நபியவர்களது தஃவாவில் இரண்டு முக்கிய காலப் பகுதிகளான மக்கா, மதீனா காலங்களை சற்று உன்னிப்பாக அவதானித்துப் பார்த்தால், அந்த இரண்டு காலங்களிலும் அங்கு ஏற்கனவே ஒரு சமூக ஒழுங்கு காணப்பட்டிருக்கிறது என்பதையும், அந்த ஒழுங்குக்கு உள்ளே நின்று நபியவர்கள் எவ்வாறு ஒரு மாற்றத்தை மேற்கொள்ள முயன்றார்கள் என்பதையும் நாம் கண்டுகொள்ளலாம்.

அந்த வகையில், முதலில் மக்காவில் காணப்பட்ட சமூக ஒழுங்கிற்கு உள்ளேயிருந்து கொண்டு, அதில் மாற்றங்களைச் செய்வதற்கு நபியவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். அங்கு கோத்திர அடிப்படையிலான தலைமைத்துவ முறைமை காணப்பட்டமையை நபியவர்கள் மறுக்கவில்லை. மாற்றமாக, அவற்றிற்கிடையிலான பகைமையை மறுத்தார்கள். வெறியுணர்வை மறுத்தார்கள்.

அங்கு காணப்பட்ட பன்னாட்டு வியாபார முறைமையை மறுக்கவில்லை. ஆனால், பொருளாதார ஆதிக்கத்தையும் நீதியற்ற அடக்குமுறையையும் மறுத்தார்கள். அங்கு காணப்பட்ட ‘ஸுகுல் உக்காழ் எனும் கவிமன்றங்களையும் அறிவுமன்றங்களையும் நபியவர்கள் மறுக்கவில்லை. மாற்றமாக, அவற்றிலிருந்த ஆபாசத்தையும் ஒழுக்கச் சீர்கேட்டையுமே மறுத்தார்கள். அங்கு மக்களிடத்தில் காணப்பட்ட வீரத்தையும் விருந்தோம்பலையும் மறுக்கவில்லை. மாற்றமாக, அநியாயமாய் இரத்தம் சிந்துவதையும் ஹராமையும் வீண்விரயத்தையுமே மறுத்தார்கள். அவர்களது இறைநம்பிக்கையை மறுக்கவில்லை. மாற்றமாக, அதிலிருந்த ஷிர்க்கையே மறுத்தார்கள்.

இங்கு நபியவர்கள் ஒரு சமூகச் சூழலில் ஏற்கனவே காணப்படுகின்ற கட்டமைப்புகள் ஊடாக, அவற்றைப் பயன்படுத்தி, மாற்றங்களைச் செய்வதற்கு முயன்றிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், மதீனா சூழலைப் பொறுத்தவரையில் அங்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது. மக்கா சூழலில் நபியவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், மாற்றங்களை ஏற்படுத்தமுடியவில்லை. மதீனா சூழலில் மாற்றம் மிகத் தெளிவாக ஏற்படுத்தப்பட்டது. அங்கு ஒரு சமூகக் கட்டமைப்பை நபியவர்கள் உருவாக்கினார்கள்.

நபியவர்களின் தலைமையில், சஹாபாக்களை இணைத்த ஷூரா சபையுடன், பள்ளிவாசலை மத்தியத் தளமாகக் கொண்ட, ஏனைய சமூகங்களுடன் உடன்படிக்கையுடன் வாழுகின்ற ஓர் ஒழுங்கை ஏற்படுத்தினார்கள். இதுகூட ‘அவ்ஸ் ‘கஸ்ரஜ் கோத்திரங்களை இல்லாமல் செய்து உருவானதல்ல. மாற்றமாக, அவை அப்படியே இருக்க அவற்றிற்கு மேலால் உருவாக்கப்பட்டதாகும். இங்கு அவற்றுக்கிடையே, இருந்த பகைமையும் வெறியுணர்வும் அகற்றப்பட்டன. அதே நேரம் ஈமானும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் உயர் இலட்சியமும் அங்கு விதைக்கப்பட்டன.

மக்கா, மதீனா என்ற இரண்டு அணுகுமுறைகளிலும் ஒரு விடயத்தை நாம் அவதானிக்கலாம். அது, ஏற்கனவே காணப்பட்ட ஒழுங்கில் இருந்த பயனுள்ள விடயங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய வாழ்வொழுங்குக்கு பாதகமாக அமையாதவை மறுக்கப்படவில்லை அல்லது உடனடியாக இல்லாமல் செய்யப்படாமல் கொஞ்சம் கால தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் சமூக மாற்றம் என்பது ஏற்கனவே காணப்படுகின்ற சமூக ஒழுங்கை முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டு, முழுமையாக அனைத்தையும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதல்ல. மாற்றமாக ஏற்கனவே உள்ள ஒழுங்கினைப் பயன்படுத்தி, அவற்றினூடாக மேற்கொள்ளப்படுகின்ற மாற்றமாகும் என்பதே நாம் புரிந்துகொள்கின்ற கருத்தாகும். ஆனால், இங்கு இஸ்லாமிய வாழ்வொழுங்குக்கு முரணான, அதற்கு இடையூரான ஒரு விடயம் முழுமையாக மறுக்கப்பட வேண்டும் என்பதும், அதற்கு முறையான மாற்றீடுகள் கொண்டுவரப்படல் வேண்டும் என்பதும் ஒருபோதும் மறுக்கப்படமாட்டாது.


குறிப்பு 02


மேற்சொல்லப்பட்ட சிந்தனையை மிகச் சரியாகப் புரிந்துகொள்ள மற்றொரு உண்மையையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில், அமுலில் உள்கட்டமைப்பை அல்லது சமூக ஒழுங்கைப் பயன்படுத்தும்போது அதனை இஸ்லாமியச் சமூக ஒழுங்கு என்று சொல்வதில்லை என்று கூறினோம். காரணம் இஸ்லாமியச் சமூக மாற்றம் என்பது, ஓர் அடித்தளம் இன்றி எழுகின்ற ஒரு மாற்றமல்ல. அல்லது இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு என்பது இஸ்லாத்தைப் பின்பற்றி வாழுகின்ற தனிமனிதர்களையும் குடும்பங்களையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும்.

அந்த வகையில், சமூக மட்டத்தில் புதிதாய் உருவாக்கவும் சரி, சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும் சரி, ஒரு பலமான அடித்தளம் கண்டிப்பாக அவசியமானதாகும். அந்த அடித்தளம்தான் தனிமனிதர்களும் குடும்பங்களுமாகும். இவையிரண்டிலும் நிகழ்த்தப்படுகின்ற மிகச் சரியான உருவாக்கம்தான் ஒரு நிலையான இஸ்லாமியச் சமூக வாழ்வொழுங்கை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான அணுகுமுறையாகும். நபியவர்களது மக்கா கால தஃவாவில் இந்த ஒழுங்கை நாம் அவதானிக்கலாம். நபியவர்கள் மக்காவில் தனது தஃவாவைஆரம்பம் செய்தார்கள். அங்கு அவரது பணியில் நேரடியாக சமூக மட்டத்தில் நடைபெற வேண்டிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாகவே காணப்பட்டது. ஏனெனில், அங்கு ஏற்கனவே அமுலில் இருந்த சமூக ஒழுங்கு பலமாகக் காணப்பட்டதுடன், அவர்கள் புறத்திலிருந்து வந்த எதிர்ப்புகளும் கடுமையானவையாகக் காணப்பட்டன. அவற்றை எதிர்கொள்வதற்கோ அல்லது அந்த சமூகஒழுங்கிற்கு முழுமையான ஒரு தீர்வை உடனடியாக வழங்குவதற்குரிய போதிய தயார்நிலையோ அப்போது நபியவர்களிடம் இருக்கவில்லை.

அதனால்தான் உங்களுக்குத் தலைமைத்துவம் தான் தேவை என்றிருந்தால் நாங்கள் தருகிறோம் இந்த தஃவாவை விட்டுவிடுங்கள் என்று குறைஷிகள் பேரம் பேசியபோதும் நபியவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். மக்காவில் நபியவர்களது தஃவா பெரியளவில் வெற்றி பெற்ற பரப்புக்கள் என்று நாம் அடையாளம் காணமுடியுமானவை தனிமனிதன் குடும்பம்; என்ற பரப்புகளாகும். உண்மையில் அதிகம் வெற்றி பெற்றன என்பதை விடவும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டன என்பதே மிகவும் பொறுத்தமான வார்த்தையாகும் என நினைக்கிறேன். இந்த உண்மையை அவர்களது சீராவில் மிகத் தெளிவாகக் காணலாம்.

அதனால் தான் மதீனாவில் ஒரு இஸ்லாமிய வாழ்வொழுங்கையும் அதற்குரிய கட்டமைப்பையும் உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கும், வருகின்ற சவால்களை தைரியமாய் எதிர்கொள்வதற்கும் இயலுமாக இருந்தது. அவர்களிடம் போதுமான மனிதவளம் காணப்பட்டது. போதுமானளவு அவர்கள் பயிற்றப்பட்டும் இருந்தார்கள். இஸ்லாமிய வாழ்வொழுங்கை எந்தத் தடையுமின்றி இலகுவில் அங்கிகரித்துச் செயற்படும் மனோநிலை அவர்களிடம் காணப்பட்டது.

இந்தப் பின்புலத்தைத்தான் சமூகமாற்றக் கோட்பாட்டில் இவ்வாறு சொல்வார்கள். மாற்றம் என்பது வேறிலிருந்து செய்யப்பட வேண்டியது. அது ஒரு நீண்ட கட்டம் கட்டமான செயற்பாடாகக் காணப்படும். அது தனிமனிதனில் இருந்து ஆரம்பித்து ஒரு முழுமையான சமூகக் கட்டமைப்பை நோக்கிப் பயணிக்கிறது. அரைவாசித் தீர்வுகளையும் ஒட்டுப் போடுதல்களையும் மாத்திரம் அது போதுமாகக் கருதுவதில்லை. ஒரே பாய்ச்சலில் இலக்கை அடைய நினைப்பதுமில்லை. இருக்கின்ற சமூக ஒழுங்கினுள் நுழைவதனால் அடிப்படை மாற்றத்தை மறந்து விடுவதுமில்லை.

இன்ஷா அல்லாஹ் மூன்றாம் குறிப்பு எமது நாட்டுச் சூழலுக்குரியது. அதனை அடுத்த அமர்வில் நோக்குவோம்.

Friday, April 5, 2013

சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின் அறிக்கை


இலங்கைச் சூழ்நிலை குறித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வஅறிக்கை.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தார், அவர்களைப் பின்பற்றுவோர் அனைவர்மீதும் உண்டாவதாக

இன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு வரும் இனமுறுகல் நிலைகள் தொடர்பாக வெளிவரும் தொடர்ச்சியான செய்திகள், அறிக்கைகளை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் மிகுந்த கவலையுடன் அவதானித்து வருகிறது.

குறிப்பாக, முஸ்லிம்கள் மிகுதியாக வாழ்நதுவரும் மத்தியப் பகுதிகளில் இந்நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளில் தாக்கத்தை விளைவித்துள்ளதுடன், பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், நாட்டின் சில உயர்மட்டத் தலைவர்களின் அணுசரனையுடன் இயங்கிவரும் சில பௌத்த தீவிரவாதக் குழுக்களின் செயற்பாடுகளையும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் அவதானித்தே வருகிறது. பள்ளிவாசல்கள்மீதான தாக்குதல்கள், அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகள், முஸ்லிம் இளைஞர்கள்மீதான கெடுபிடிகள், முஸ்லிம் பெண்களுக்கு, பிறர் முன்னிலையில் இஸ்லாம் கடமையாக்கிய ஹிஜாப் ஆடை மீதான அத்துமீறல்கள் இவற்றில் சிலவாகும். இது மிகத் தெளிவாக நம்பிக்கை, மத அனுஷ்டானங்களின் மீதான சுதந்திரத்திற்கெதிரான அத்துமீறலாகும்.

அத்துடன், முஸ்லிம்கள் குறித்தும் அவர்களது இருப்பு குறித்தும் அவர்கள் பௌத்தர்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்ற தவறான கருதுகோளின் அடிப்படையில் பரப்பப்படும் வீண்வதந்திகள் குறித்தும், சில தீவிரக் குழுக்களால் முஸ்லிம் வியாபார நிலையங்கள்மீதும் அவர்களின் பொருளாதாரத்தின் மீதும் தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறது.

இலங்கையில் சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக சில இனவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தீவரவாத நடவடிக்கைகள் குறித்து சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கீழ்க்காணும் விடயங்களை வலியுறுத்துகிறது:

1. சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் பின்வருமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது:

சூழ்நிலையை அமைதிப்படுத்தப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். ஒரே தேசத்தின் மக்கள் என்ற வகையில் அவர்களிடையே உண்மையான பங்குபற்றலை உத்தரவாதப்படுத்துவதுடன், அவர்களிடையே சமூக அமைதியை பலமடையச் செய்தல் வேண்டும். இலங்கையின் சமூகக் கூறுகளிடையே உரிமைகளிலும், கடமைகளிலும், சமத்துவம் பற்றிய பிரக்ஞையை மேலோங்கச்செய்வதுடன், இனரீதியாகவோ மதரீதியாகவோ அவற்றுக்கிடையில் பாகுபாடு உருவாவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தக் கூடாது. மதரீதியான வெறுப்புணர்வுகளை தூண்டி விடுபவர்களுக்கெதிராகவும், இனரீதியான குழப்பங்களை உருவாக்குபவர்களுக்கெதிராகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் அமைதியும் பாதுகாப்பும் சிறந்த முறையில் காணப்பட்ட ஒரு சூழ்நிலை காணப்பட்டிருக்கிறது. எனவே, சர்வதேச சட்டங்களும், எல்லா மதங்களின் வழிகாட்டல்களும் வலியுறுத்துவது போல், அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதும் அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். குழப்பங்கள் தோன்றி, அவை தலைதூக்காமல் இருப்பதில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடனும் உறுதியுடனும் செயற்பட வேண்டும். ஏனெனில், இதனால் விளையும் நஷ்டம் இலங்கையின் அனைத்துத் தரப்பினர்க்கும் உரியதாகும்.



  1. 2. அத்துடன் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் இதுபற்றிப் பேச வேண்டும் எனவும், முஸ்லிம் தரப்பையும் பௌத்த அமைப்புக்களையும் இணைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான குழுக்களை அமைத்து செயற்பட வேண்டுமென்றும், அதன் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடியதொரு நிரந்தர சகவாழ்வுக்கான வழிவகைகளைக் காண வேண்டுமென்றும், சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.


  1. 3. இலங்கை முஸ்லிம்களின் இருப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை வழங்குமாறு முஸ்லிம் நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பையும், ஏனைய எல்லா சிவில் சமூக, தனியார், மனித உரிமை ஸ்தாபனங்களையும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கேட்டுக்கொள்வதுடன், இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமைகள் விடயத்தில், தாம் அதிக அக்கறையுடன் காணப்படுகிறோம் என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்தும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

  1. 4. இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றும், ஒரேயணியாக நிற்க வேண்டும் என்றும், வன்முறையைத் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், சவால்களை எதிர்கொள்வதற்கு அவசியமான சட்டரீதியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும், எதிர்ப்பு நடவடிக்கைகளை இல்லாமல் செய்யும் நோக்கில் இலங்கை ஜம்இய்யதுல் உலமா, உள்நாட்டில் வியாபாரப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதை விட்டுக்கொடுத்தமையை மதிக்க வேண்டும் என்றும், இலங்கை முஸ்லிம்களை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.

  1. 5. நீதி சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் அமைந்த சகவாழ்வையும், பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் இலங்கையில் நிலைநாட்டும் நோக்கில், நிலைமைகளை நேரடியாகக் கண்டறிவதற்காகவும், இது குறித்து அரசாங்கத்துடனும், அறிஞர்களுடனும் கலந்தாலோசிப்பதற்காகவும் ஓர் உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்கிறது. ஏனெனில், சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் பரந்த அடிப்படையில் இந்த நாட்டின் நலனுக்காகவே செயற்பட நினைக்கிறது. அந்த வகையில் குடியுரிமையின் முழுமையான பயனை அனைத்துப் பிரஜைகளும் அனுபவிக்க வேண்டும் என்பதுடன், சம்பூரணமானதொரு அபிவிருத்தியை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்பதையே அது விரும்புகிறது. முஸ்லிம்கள், பௌத்தர்கள் என்றோ அரசாங்கம், பொதுமக்கள் என்றோ எந்த வேறுபாடுமின்றி அனைவரினதும் நலனையும் முன்னேற்றத்தையுமே சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் இதன் மூலம் எதிர்பார்க்கிறது.

  1. அல்குர்ஆன் கூறுகிறது: நீங்கள் நன்மையான விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பை வழங்கிக்கொள்ளுங்கள். தீமையான விடயங்களில் ஒத்துழைப்பு வழங்காதீர்கள். அல்லாஹ்வை  அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்மாஇதா- 02)


கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி
தலைவர்
கலாநிதி அலி கரதாகி
பொதுச் செயலாளர்


தோஹா22, ஜமாதுல் அவ்வல் - 1434
03-04-2013