Thursday, March 7, 2013

தனிமனித உருவாக்கத்திற்கான அல்குர்ஆனின் உதாரணம்


ஒரு தடவை ஓர் ஆன்மீக அமர்வுக்கு தர்பிய்யா பற்றிப் பேசுவதற்காகத் திடீரென அழைக்கப்பட்டேன். உடனே என்ன பேசுவது என்று தீர்மானித்துக்கொள்ள முடியாமல் இருந்தது. ஆனாலும் பல சமயங்களில் திடீரென பாடங்கள் நடாத்திய அனுபவங்கள் இருந்ததால் பதற்றம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தேன். பல தடவைகள் தயாராகாமல் நடாத்திய பாடங்கள் உணர்வுபூர்வமாய்க் காணப்பட்டுள்ளன. நல்ல விளைவைத் தந்துள்ளன.

எல்லாவற்றையும்விட ஒரு புதிய இஜ்திஹாதாய் அமைந்த சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன. அத்தகைய ஒரு சந்தர்ப்பமாகத்தான் அன்றைய நாள் அமர்வும் காணப்பட்டது.

அன்றைய நாள் சூரத்துல் ஃபத்ஹின் இறுதி வசனங்களைத்தான் பேசு பொருளாய் எடுத்துக்கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸஹாபாக்கள் பற்றிய இன்ஜீலின் உதாரணம் பற்றித்தான் எனது கவனம் குவிந்தது.

இதற்கு முந்தைய வசனம், இந்த உலகின் எல்லா மார்க்கங்களையும் சிந்தனைகளையும் வெற்றிகொள்வதற்காய் இஸ்லாம் வந்திருக்கிறது. தூதுவர் அனுப்பப்பட்டது அதற்காகத்தான். அவர் கொண்டுவந்த சத்திய மார்க்கம்தான் அந்தப் பணிக்கான ஆயுதம் என்பதாய்க் குறிப்பிடுகின்றது.

அடுத்த வசனம் அதற்காக ஸஹாபாக்கள் எவ்வாறு தயார்படுத்தப்பட்டார்கள் என்பதைப் பேசுகிறது. அந்த தயார்படுத்தலை சித்தாpக்கும் வகையில்தான் அவர்கள் பற்றி இன்ஜீலின் உதாரணம் என அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. இன்ஜீலில் அவர்களுக்கான உதாரணம் அவர்கள் ஒரு தாவரத்தைப் போன்றவர்கள். அந்தத் தாவரம்; தனது கன்றை ஈன்றெடுக்கிறது. அதனைப் பலப்படுத்தி பக்கபலமாய் இருக்கிறது. அதனால் அந்தக் கன்றின் தண்டுகள் பலம் பெறுகின்றன. கன்று சொந்தக் காலில் நிற்கத் துவங்குகிறது. இப்போது பயிர் செய்தவன் சந்தோஷம் கொள்கிறான். இது காபிர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது. (சூரா அல்ஃபத்ஹ் - 29)

இங்கு, பயிர் செய்கையை அல்லது தாவர விருத்தியை ஸஹாபாக்களின் உருவாக்க முறைமைக்கான உதாரணமாய் அல்லாஹ்தஆலா சொல்கிறான்.

முதலில் ஒரு தாவரம் தனக்கான கன்றை உருவாக்குகிறது. தனிமனித உருவாக்கத்திலும் இதே முறைமை காணப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் உருவாக்கத்தில் ஈடுபட வேண்டும். இன்னும் ஒருவரையோ அல்லது பலரையோ தனது பராமாpப்பின்கீழ் வைத்து வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்த வசனத்தில் தனது கன்றை ஈன்றெடுத்தல் என்பது ஒரு கன்றையும் குறிக்கலாம் ஒன்றுக்கு மேற்பட்ட கன்றுகளையும் குறிக்கலாம். அந்த வகையில் உருவாக்கச் செயற்பாடு ஒரு உஸ்ராவாக அமைதல் இங்கு புலப்படும் ஒரு கருத்தாகும்.

அடுத்து ஈன்றெடுக்கப்பட்ட கன்றைப் பலப்படுத்தல். இதுதான் உருவாக்கத் தொழிற்பாட்டின் முக்கிய செயற்பாடு. இக்கருத்தைக் குறிப்பதற்காக அறபு மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பிரயோகம் ஆஸர என்பதாகும். இந்த சொல்லில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. அதாவது சுயமாய் செயற்படவிட்டு, அதற்குப் பக்கபலமாய் இருத்தல் என்பதே இந்தச் சொல் குறிக்கும் கருத்தாகும். 

அந்தவகையில் தனிமனித உருவாக்கத்தில் ஒரு பொறுப்பாளரின் பணி தனக்குக் கீழே உள்ளவர்களை சுயமாய் தன்னை வளர்த்துக்கொள்ள வழிசெய்தல் வேண்டும். மொத்தமாய்த் தானே அவர்களைச் சுமந்துகொள்ளக் கூடாது. அவர்கள் தாமே முன்னோக்கிச் செல்ல வழிகாட்ட வேண்டும். உந்து சக்தியாய் இருத்தல் வேண்டும். பக்கபலமாய்ச் செயற்படல் வேண்டும். பயிற்சி பெறுகின்றவர்களும் எனக்கு கட்டளையிடப்பட்டவை மட்டுமே நான் செய்வதற்குரியவை என்று நினைத்துவிடக்கூடாது.

தன்னில் ஒரு மாற்றம் நிகழ்வதற்கு நான்தான் பொறுப்பானவன், பொறுப்பாளர் அதற்குப் பக்க பலமாய் இருப்பவர்தான். நான் அவரில் மாத்திரமே முழுமையாய் எல்லாவிதமான சிறிய பெரிய விடயங்களுக்கும் தங்கி நிற்பவனாய் இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து, பலப்படுத்தல் தொழிற்பாட்டின் நோக்கம் பற்றிப் பேசுகிறது. தாவரத்தின் தண்டுகள் உறுதியடைகின்றன. அது ஒரு கன்று என்ற நிலையில் அதன் தண்டுகள் எவ்வாறு இருந்திருக்கும். சாதாரணமாக இரு விரல்களால் நசுக்கிவிட முடியுமாக இருந்திருக்கும். அதே கன்று ஒரு விருட்சமாய் வளர்ந்துவிட்டால் கைகளால் மாத்திரம் அதனை வீழ்த்த முடியாது. பெரும் பெரும் ஆயுதங்கள்தான் அதற்காகத் தேவைப்படுகிறது.

இதே உண்மைதான் தனிமனித உருவாக்கத்திலும் பிரதிபலிக்கின்றது. அதன் நோக்கமும் எதிர்ப்புகளால் துவண்டுவிடாத கவர்ச்சிகளால் பலவீனப்படாத ஒரு முழுமையான முஸ்லிம் ஆளுமை உருவாக்கப்படுதலாகும். அவனுக்குச் சமானமான சக்திகளால் நிச்சயமாய் வீழ்த்தப்பட முடியாதவனாய் அவன் இருப்பான். ஏனெனில், ஓர் இறைநம்பிக்கையாளர் இரண்டு இறைமறுப்பாளர்களுக்குச் சமானமானவன் என்பது உயர்ந்தோன் அல்லாஹ் வகுத்துள்ள நியதி அல்லது விதி.

எனவே, அவனை வெற்றிகொள்ள அவனைவிட பல மடங்கு சக்தி பிரயோகிக்கப்பட வேண்டியிருக்கும். இதுதான் தனிமனித உருவாக்கம், ஒரு ஐதான தண்டு உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தச் செயற்பாடு ஒரே நாளில் நடப்பதில்லை. நீண்ட பல வருடங்கள் அவசியப்படுகின்றன என்பதே அல்லாஹுதஆலா வைத்துள்ள விதியாகும். மனித உருவாக்கத்திலும் காலத்திற்கு ஒரு பெறுமானம் இருக்கிறது. தாவரம் வகுத்துவைத்த ஒரு விதியின் அடிப்படையில் தொடர்ந்து வளர்ச்சி கண்டுகொண்டேயிருக்கும். ஆனால், மனிதன் அவ்வாறல்லன். ஒரு விதியின் அடிப்படையில் தொடரான வளர்ச்சியை அங்கு எதிர்பார்க்க முடியாது.

மனிதனின் ஈமான் சிலவேளை அதிகரித்துச் செல்லும். சிலவேளை குறைந்து செல்லும் என நபியவர்கள் கூறியது இந்த உண்மையைத்தான். அதனால் மனித உருவாக்கத்திற்கு வரையறுத்த காலத்தை சொல்வது சிரமமானது. அது குறுகிய காலமாகவும் இருக்கலாம். அதிகமான காலமாகவும் இருக்கலாம். ஆனாலும், இன்று ஆரம்பித்து நாளை விளைவை எதிர்பார்க்கும் அவசரத்தில் மனிதர்கள் உருவாகமாட்டார்கள்.

அடுத்து, ஐதான ஒரு தண்டு உறுதியடையும்போது, இடையில் எத்தனையோ பருவங்களைக் கடந்துவருகிறது. அது மிக உறுதியான நிலையை அடைய முன்னர் பல வித்தியாசப்பட்ட முதிர்ச்சி நிலைகள் அல்லது உறுதி நிலைகள் அதற்கு இருக்கின்றன. இந்த இடைநிலைகளில் சாதாரண ஒரு சக்தியாலும் அது வீழ்த்தப்பட முடியும். அப்போது நாம் மரத்தைக் குறை சொல்வதில்லை. அது இன்னும் பிஞ்சு மரம். எனவேதான் வீழ்ந்து விட்டது என்போம். அல்லது தாய் மரத்தைக் குறை சொல்வதுமில்லை. சரியாக வளர்க்கவில்லை என்று.

இந்த யதார்த்தத்தை தனிமனித உருவாக்கத்திலும் நாம் சீரணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தனிமனிதர்கள் கட்டம் கட்டமாகத்தான் உருவாக்கப்படுவார்கள். அதற்கென வகுக்கப்பட்ட முறைமைகளின் அடிப்படையில் உண்மையான முதிர்ச்சி ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்ற மதிப்பீடுகளுடன் மெதுவாகவே அந்த செயற்பாடு நகர்ந்துகொண்டிருக்கும். எதிர்பார்க்கப்படும் முதிர்ச்சி அடையப்பெற வேண்டும் என்பதே அதன் எதிர்பார்ப்பு. காலம் கடந்து விட்டது என்பது மட்டும் முதிர்ச்சிக்கான அடையாளமல்ல. அத்துடன் ஒரு பெரிய விருட்சமாக இருப்பினும், அது படிப்படியாகவே அந்த நிலையை அடைந்திருக்கும். தனிமனிதனும் படிப்படியாகவே விருட்சமாக மாறுவான். கட்டம் கட்டமாகவே மாற்றங்கள் நிகழ்த்தப்படும். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத கன்றுகள்தான் தாயை சந்தேகிக்கின்றன. ஏன் தாய் மட்டும் அதைச் செய்கிறது இதைச் செய்கிறது எங்களை மட்டும் செய்ய விடுவதில்லை என்று.

அதுபோல் தர்பிய்யத்தின் இடைநடுவில் ஒருவர் வீழ்ந்துவிடவும் முடியும். திசை மாறவும் முடியும். இது முறைமையில் உள்ள பலவீனம் காரணம் என்பதை விடவும், தர்பிய்யத் அளிக்கும் முரப்பியிடமுள்ள உள்ள பலவீனம் காரணம் என்பதைவிடவும் அவர் தர்பிய்யத்தின் பாதையில் இருக்கிறார். இன்னும் தண்டுகள் முறுக்கேறவில்லை. எனவே, சிறிய காற்றையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இங்கு இவரது வீழ்தலுக்கு முறைமையும் முரப்பியும் காரணமாக இருக்கவேமாட்டார்கள் என்றும் கூற முடியாது. முறைமை பலமாய் இருக்க வேண்டும். முரப்பி பாதுகாக்க வேண்டும்.

அடுத்து கன்று சொந்தக் காலில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இப்போதுதான் அது பிறர் தயவின்றி செயற்படும் நிலை ஏற்படுகிறது. தானும் ஒரு கன்றை ஈன்று பராமரிக்கும் சக்தியைப் பெறுகிறது. தனிமனித உருவாக்கத்தில் தனித்து செயற்பட அனுமதிக்கப்படும் நிலை இதுதான். தனது சொந்தக் காலில் நிற்றல் என்பது சுயமாக, பிறர் தயவின்றி ஒரு முழுமையான வேலைத் திட்டத்தைப் பொறுப்பேற்று வழிநடாத்திச் செல்லும் சக்தியைக் குறித்து நிற்கின்றது. இப்போது இவரும் ஒரு முரப்பியாகத் தொழிற்படுவார். தனக்குக் கீழே சிலரை வைத்து வளர்த்துவிடுவார். இந்தச் செயற்பாடு தொடரும். ஒரு வலைப் பின்னலாய்த் தொடரும்.

ஒரு தாவரம் இன்னொரு தாவரத்தை உருவாக்குகிறது. அது இன்னொன்றை உருவாக்குகிறது. அது இன்னொன்றை உருவாக்குகிறது. இவ்வாறு அந்த செயன்முறை தொடராக நடைபெறும் ஒரு வலைப்பின்னலாய் வியாபித்திருக்கும். இந்நிலைதான் தாவர உலகத்தில் ஒரு பெரும் காடாக வியாபித்திருக்கும். மனித உருவாக்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த வலைப்பின்னலாகக் காணப்படும்.

இந்த நிலையைப் பார்த்துத்தான் பயிர் செய்தவன் சந்தோஷம் அடைகிறான். அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள பயிர் செய்தவன் என்பது யாரைக் குறிக்கும் என்பதில் ஒரு கருத்து வேறுபாடு காணப்படுகிறது. சிலர், அது அல்லாஹ்வைக் குறிக்கும் என்றனர். வேறுசிலர், அது நபியவர்களைக் குறிக்கும் என்கின்றனர்.

நான் நினைக்கிறேன் தனமனித உருவாக்கத் தொழிற்பாட்டை வைத்து நோக்கும்போது, இரண்டாவது கருத்துத்தான் மிகச் சாpயானது என்று. காரணம் வசனத்தின் அடுத்த பகுதி இறைமறுப்பாளர்கள் இதனால் கோபம் கொள்கிறார்கள் என்று வருகிறது. அல்லாஹ் சந்தோஷம் கொள்கிறான். இறைமறுப்பாளர்கள் (காஃபிர்கள்) கோபம் கொள்கிறார்கள் என்பதைவிடவும் நபியவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். காபிர்கள் கோபப்படுகிறார்கள் என்பதே மிகவும் பொறுத்தமானதாக இருக்கிறது.

எனவே, இங்கு நபியவர்கள்தான் வித்திட்டவர்கள். மனித உருவாக்கத்திற்கு அவர்கள்தான் வித்திடுகிறார்கள். ஒரு மரத்தை நடுகிறார்கள். அதனை தான் எதிர்பார்க்கும் முறைமையில் எதிர்பார்க்கும் இலக்கு நோக்கி வளர்த்தெடுக்கிறார்கள். இப்போது அந்த மரம் தான் வளர்ந்த முறைமையில், தான் வளர்ந்த இலக்கை நோக்கி அடுத்த மரங்களை உருவாக்குகிறது. இந்த செயல்முறை தொடர்கிறது. அது பெருகி ஒரு சக்தியாய் மாறுகிறது. இதனைப் பார்க்கும் நபியவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

ஏன்? சந்தோஷம் ஏன் வருகிறது? தாம் இல்லாவிட்டாலும் இனி இந்த செயல்முறை தொடரும் என்ற நம்பிக்கை வரும்போதுதான் சந்தோஷம் வருகிறது. தாம் கொண்டுவந்த சிந்தனை இந்த உலகில் மறுமை வரை நிலைத்திருப்பதற்கான நிரந்தர ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. இனி அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இனிமேல் தான் மரணித்துவிட்டாலும் கொள்கை மரணிக்காது வாழும். அதற்கான ஏற்பாடு நடந்துவிட்டது. இதுதான் நபியவர்களைச் சந்தோஷப்பட வைத்த விடயம்.

இங்கு தர்பிய்யத் அளிக்கும் முரப்பிகளின் கவனத்தில் குவிய வேண்டிய ஒரு முக்கிய விடயம் இருக்கிறது. தனிமனித உருவாக்கச் செயற்பாடு என்பது நீண்டகால வேலைத்திட்டம். நாளைய இருப்புக்கான வேலைத்திட்டம். அது நடைபெறுவது நிகழ்காலத்தில்தான். ஆனால், அது நாளைய இருப்புக்கும் நாளைய வெற்றிக்குமான வேலைத்திட்டமாகக் காணப்படல் வேண்டும். இன்றைய பிரச்சினைகளில் மூழ்கிவிடுவதாய் அமைந்துவிடக் கூடாது.

ஒரு முறை இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

எனக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தொpயவில்லை என்றால் நான் உங்களுக்கு சாpயாக தர்பிய்யத் தரவில்லை என்று அர்த்தம் என்றார்கள்.

எனவே, தர்பிய்யத்தின் வேலைத்திட்டம் நிரந்தரமாக நடப்பதற்கான ஏற்பாடு என்ன என்பதுதான் மிக முக்கியமானது. அதுதான் கவனங்கள் அதிகம் குவிய வேண்டிய பகுதியாகும். அப்பொழுதுதான் நாளைய இருப்பும் வெற்றியும் உத்தரவாதப்படுத்தப்படும்.

அடுத்து, இந்தச் செயற்பாடு இறைமறுப்பாளர்களைக் கோபம் கொள்ள வைப்பதாய்க் காணப்படும் என்கின்றது. இன்று உலகில் இஸ்லாத்திற்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான உண்மையான போராட்டம் எது என்பதை உன்னிப்பாய் கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

உலகை ஆளும் ஒழுங்கு எது? இஸ்லாம் கூறும் ஓழுங்கா? அல்லது மேற்கு முன்வைக்கும் ஒழுங்கா? இன்றைய மேற்கின் ஆதிக்கம் இல்லாமல் ஆக்க எதனால் முடியும்? மேற்குக்குப் புறம்பான ஒரு முழுமையான சமூக ஒழுங்கை கட்டியெழுப்புவதனால்தான் உலக அரங்கிலிருந்து மேற்கு படிப்படியாய் பின்வாங்க வேண்டியேற்படும். மேற்குக்குப் புறம்பான இஸ்லாமிய சமூக ஒழுங்கு, மேற்சொன்ன அமைதியான மனித உருவாக்கத்தினூடாகத்தான் கட்டியெழுப்பப்படுகிறது.

எனவே, இஸ்லாத்தின் எதிரிகளை அச்சமூட்டுகின்ற கோபப்படுத்துகின்ற உண்மையான செயற்பாடு எது எனின், அது கட்டம் கட்டமான மனித உருவாக்கம்தான். செடியாய் இருப்பவர்கள் விருட்சமாய் மாற்றப்படும் செயற்பாடுதான். காபிர்களைப் பொறுத்தவரையில் நீண்டகாலத்தில் அபாயமான, அவர்களது இருப்பையும் ஆதிக்கத்தையும் உலகிலிருந்து முற்று முழுதாய் துடைத்தெரியும் வேலைத்திட்டம் இதுதான். எனவேதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

இங்கு ஒரு விடயம் புலப்படுகிறது. சந்தோஷம் அடைவதும், கோபம் கொள்வதும் எதிர்காலத்தை மையப்படுத்தியே நடைபெறுகிறது. அந்த வகையில் உருவாக்கச் செயற்பாடு எதிர்காலத்தை மையப்படுத்தியது. அதனை நபியவர்கள் மிகச் சாpயாய் நிறைவேற்றினார்கள்.

இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) மிகச் சாpயாக அப்பணியைத் தொடர்ந்தார்கள். எனவேதான், இஸ்லாமும், அதனுள்ளே இஃவான்களும் விருட்சமாய் எழுந்து நிற்கிறார்கள். அதேபோல் இன்று எதிரிகளின் போராட்டம் யாரை நோக்கி குவிந்திருக்கிறது. பொதுவாக இஸ்லாத்தை நோக்கியும் குறிப்பாக இஃவான்களை நோக்கியும் குவிந்திருப்பதை அவதானிக்கலாம்.

ஏனெனில், நிதானமான உருவாக்கச் செயற்பாடு இங்குதான் வாழ்கிறது. அதனூடாகத்தான் இஸ்லாத்தின் இருப்பும் வெற்றியும் உத்தரவாதப்படுத்தப்படுகிறது. எதிரிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகிறது. எனவே நாம் எமது பணியில் மீள வேண்டிய இடம் எது என்பது புரிகிறது.

அல்லாஹ் எம்மை அங்கீகாpக்கட்டும்.


Sunday, February 24, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களுக்காக... (சகோதர, சகோதரிகளுக்கு...)



சகோதரர்களே!

உங்கள் வாழ்வின் பொக்கிஷம் எது என்பதை அறிவீர்களா? அது தங்கமா? வெள்ளியா? அல்லது சொத்துக்களா? நிச்சயமாக இல்லை. இவற்றுக்கப்பால் விலை மதிப்பற்ற ஒரு பொக்கிஷம் இருக்கிறது.

நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபியவர்கள் உமர் (றழி) அவர்களிடம் கூறுகிறார்கள்: ஒரு மனிதன் பெற்றுக்கொள்ளும் மிகச் சிறந்த பொக்கிஷம் எது என்பதைக் கூறட்டுமா? அதுதான் ஸாலிஹான மனைவி. அவளைப் பார்த்தாலேயே சந்தோஷம் ஏற்படும். கட்டளையிட்டால் முழுமையாகக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாத சந்தர்ப்பங்களில் அவளைப் பாதுகாப்பாள் (அபூதாவூத்).

ஸாலிஹான மனைவி, அவள்தான் ஓர் ஆணின் பொக்கிஷம். மனைவி ஸாலிஹானவளாக உள்ளபோதுதான் அவள் பொக்கிஷமாய் இருப்பான். பொக்கிஷம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய, பெறுமதிமிக்க ஒரு பொருள். அது அவளது வாழ்வையே மாற்றிவிடக்கூடியது. மனைவியும் அத்தகையவள் தான். பார்வையிலேயே சந்தோஷமளிப்பவள், கட்டுப்படுபவள், உடனில்லாதபோதும் அவளைநெஞ்சினில் பூட்டிப் பாதுகாப்பவள்.

சகோதரர்களே!

பொக்கிஷத்தை இலகுவாகக் கண்டுகொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. கடுமையான உழைப்பு, கவனமான தேடல் மூலமாகத்தான் கண்டுகொள்ள முடியும். இங்குதான் மிகச் சரியான தெரிவு அவசியப்படுகிறது. தெரிவு சரியாக அமைகிறபோதுதான் உனக்கான உள்ளம், உனக்கான சந்தோஷம், உனக்காக வாழ்பவள் கிடைப்பாள். அவள்தான் பொக்கிஷம்.

சகோதரனே!

நீ தேடுவது உனக்கான ஒரு வீட்டையா? இல்லையல்லவா? நீ ஏற்கனவே ஒரு வீட்டில்தான் வாழ்கிறாய். அங்கு உனக்கு உறவுகள் இருக்கின்றன. நீ தேடுவது உனக்கு பணிவிடைகள் செய்வதற்குரிய ஒருவரையா? நிச்சயமாக இல்லை. ஏற்கனவே அதற்காகப் பலர் இருக்கிறார்கள்.

உனது தேடல் இதுவல்ல. நீ தேடுவது ஒரு மனைவியை உனக்கான ஒரு மனைவியை அவள் யார்? அந்தத் தேடல் என்ன?

நீண்ட பயணத்திற்குப்பின் நங்கூரமிட ஒரு கரையைத் தேடுகிறாயா? சுட்டெரிக்கும் பாலைவனத்தில் குளிர்ந்த நீர், நிழல் தரும் மரம், ஓ... ஒரு சோலையைத் தேடுகிறாயா?

உனது சுமைகளை இறக்கிவைக்க ஒரு தோள். உனது கவலைகளை சுமந்துகொள்ள ஓர் இதயம். இதுதான் உனது தேவையல்லவா? இது அல்லாஹ்வின் மிகப்பெரிய அத்தாட்சி.

அவன் கூறுகிறான்: அவனது அத்தாட்சிகளில் ஒன்று, உங்களிலிருந்தே உங்களுக்கான சோடியைப் படைத்தான். நீங்கள் அமைதியடைய வேண்டும் என்பதற்காக உங்கள் இருவருக்கும் மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தினான்... (அர்ரூம் - 21)

நீ தேடுவது அமைதியை!

வாழ்வில் பாதைகள் சிதறும்போது, பாதங்கள் தடுமாறும்போது, எதிர்காலம் ஒளியற்றுப் போகும்போது உள்ளத்திற்கு ஆறுதலும் அமைதியும் தேவை. அதனை உடனிருக்கும் துணைதான் உன்னதமாய் வழங்க முடியும்.

நீ தேடுவது கண்குளிர்ச்சியை!


ரஹ்மானின் அடியார்களது துஆவைப் பாருங்கள். அவர்கள் கூறுவார்கள் எமது இரட்சகனே! எமது மனைவிமார்கள் மூலமும் பிள்ளைகள் மூலமும் எமக்குக் கண்குளிர்ச்சியை அருள்வாயாக. இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாக எம்மை ஆக்குவாயாக. (அல்புர்கான் - 74).

கண்குளிர்ச்சி என்பது ஓய்வு. கண்குளிர்ச்சி என்பது வாழ்வும் நேரமும் ஒழுங்குபடுத்தப்படுதல். கண்குளிர்ச்சி என்பது மகிழ்ச்சி.

மனைவி, பிள்ளைகள், குடும்ப வாழ்க்கை என்பது ஓய்வும் சந்தோஷமும், வாழ்வின் நடவடிக்கைகளும் நேரங்களும் வெற்றியை நோக்கி ஒழுங்குபடுத்தப்படுதலும் ஆகும். இதனால்தான் அந்த ரஹ்மானின் அடியார்கள் தலைவர்களாக மாறுகிறார்கள். சமூகத்திற்குத் தலைமை வழங்குபவனின் குடும்பவாழ்க்கை கண்குளிர்ச்சியாய்க் காணப்படல் வேண்டும்.

நீ தேடுவது உன் வீட்டு எஜமானியை


நபியவர்கள் கூறினார்கள்: பெண் தனது கணவனின் வீட்டில் எஜமானியாவாள், நிர்வாகியாவாள், அவளது நிர்வாகத்திற்கு அவளே பொறுப்பாவாள்” (ஸஹீஹுல் புகாரீ)

அவள் உன் வீட்டு எஜமானி. உனது அனைத்து விடயங்களையும் அவள்தான் நிர்வகிக்கிறாள். உனது நேரங்கள், உனது தேவைகள், உனது நலன்கள், உனது வீடு அனைத்தையும் நிர்வகிப்பவள் அவள்தான். எனவே, உன் வீட்டுப் பொறுப்புகளை சுமக்கத் தகுதியான ஒருத்தியே உனது தேடல்.

நீ தேடுவது ஒரு பாதுகாவலரை

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஸாலிஹான பெண்கள், அல்லாஹ்வுக்கு முழுமையாய் தன்னை அர்ப்பணித்து இபாதத்தில் ஈடுபடுவர். அல்லாஹ் பாதுகாத்த மறைவான விடயங்களை எப்பொழுதும் காப்பவர்களாக இருப்பார்கள்(அந்நிஸா - 34).


நபியவர்கள், ஸாலிஹான மனைவி என்பவள்... நீ இல்லாத சமயத்தில் உனது மானத்தையும் செல்வத்தையும் காப்பவள்என்று தெரிவித்தார்கள். (சுனனுந் நஸாஈ)

ஒரு விடயம் புரிகிறது. பாதுகாத்தல் என்பது சொத்துகளைப் பாதுகாத்தல் மட்டுமல்லாது, ஆணுடைய மானத்தை, கண்ணியத்தை, கௌரவத்தைப் பாதுகாத்தல் என்பவையும் அடங்கும். இத்தகைய ஒரு பாதுகாவலர் அமைகிறபோது உள்ளத்தில் எவ்வளவு நிம்மதி இருக்கும்...?

நீ தேடுவது ஓர் அன்பானவளை

அல்குர்ஆன் கூறுகின்றது: உங்கள் இருவருக்கும் இடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தி வைத்தான் (அர்ரூம் - 21)

நபியவர்கள் கூறினார்கள்: மிகவும் அன்பு செலுத்தக்கூடியவளை, அதிக பிள்ளைகளைப் பெறக்கூடிய பெண்ணைத் திருமணம் செய்யுங்கள்...

அன்பானவள் உனது எல்லா நிலைகளிலும் உன்னை அரவணைப்பவள். அவள்தான் உன்னையும் உனது வாழ்வையும் உனது எதிர்காலத்தையும் உனது ஆசைகளையும் கனவுகளையும், உனது சிந்தனைகளையும் நேசிப்பவள். இவற்றுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்துபவள். உனது வாழ்வை பொறுப்புள்ளதாய் மாற்றுபவள். அவள்தான் உனது தேடல்.

நீ தேடுவது அன்பாய் அடிபணிபவளை

சொர்க்கத்தில் மனிதனுக்குத் தயார்படுத்தப்பட்டிருக்கும் பெண் பற்றி அல்குர்ஆன் கூறும்போது,

அவர்களை நாம் முன்மாதிரியின்றி படைத்தோம். அவர்கள் கன்னிப் பெண்கள், அவர்கள் கணவனுக்கு அன்போடு கட்டுப்படுபவர்கள். அவர்கள் சமவயதினர்கள் (அல்வாகிஆ – 35 - 37)

அன்போடு கட்டுப்படுபவள்; பயத்தினால் கட்டுப்படுபவளல்ல. வெறுப்போடு கட்டுப்படுபவளல்ல. சம்பிரதாயபூர்வமாகக் கட்டுப்படுபவளல்ல. அவள் கணவனை நேசிப்பவள். அவளை எப்பொழுதும் நெருங்கிநிற்பவள். அவன் கோபப்பட்டால் நீங்கள் திருப்தியுடன் மன்னிக்காதவரை என் கண்கள் தூங்கமாட்டாது என்று சொல்பவள். தனது நெஞ்சிலும் சிந்தனையிலும் அவனை மாத்திரம் சுமப்பவள். இப்பொழுது அவனது கட்டளை வந்தால், அந்தக் கட்டளைக்கு முன்னால் அவள் எப்படி இருப்பாள்? விருப்பத்துடன் கட்டுப்படுவாள். கட்டுப்பாட்டில் அன்பே பிரதிபலிக்கும். இத்தகையவள் மூலம்தான் உனதுவாழ்வின் சந்தோஷம் முழுமையடைகிறது.

சந்தன வியாபாரியா? இரும்பு உலை ஊதுபவனா?

சகோதரிகளே!

உங்கள் வாழ்க்கைப் பயணம் மிகவும் நீண்டது. அதில் உடன் வரக்கூடிய தோழன் யார்? அவனைத் தெரிவு செய்துவிட்டீர்களா? அவன் சந்தன வியாபாரியா? அல்லது இரும்பு உலை ஊதுபவனா?


நபியவர்கள் கூறிய உதாரணம் உங்களுக்கும் பொருந்தும். நல்ல தோழனுக்கும் மோசமான தோழனுக்கும் உரிய உதாரணம் சந்தன வியாபாரிக்கும், இரும்பு உலை ஊதுபவனுக்கும் ஒப்பானதாகும். சந்தன வியாபாரி, சந்தனத்தை உனக்குத் தரலாம் அல்லது உனக்கு விற்பனை செய்யலாம் அல்லது அதன் வாசனையையேனும் நீபெற்றுக்கொள்ளலாம். இரும்பு உலை ஊதுபவன் உனது ஆடையை எரித்துவிடலாம் அல்லது மோசமான வாசனையை நீ பெற்றுக்கொள்ளலாம்” (ஸஹீஹ் முஸ்லிம்)

உங்கள் வாழ்க்கையின் இறுதிவரை வரப்போகும் தோழன் உங்களுக்குப் பயனளிப்பவனாய் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை வாசனையால் நிரப்பிவிடுகின்றவனாய் இருக்க வேண்டும். வாழ்வை எரித்துவிடுகின்றவன் அல்லன். அதனை துர்நாற்றத்தால் நிரப்பிவிடுபவன் அல்லன்.

எனவே, மிகச் சரியான தெரிவு முக்கியமானது. வாழ்க்கையின் மிக முக்கியமான தீர்மானம் இது.

சகோதரியே! உன்னையே நீ கேட்டுப் பார்த்துக்கொள்!


  • எனது வாழ்வின் தோழன் யார்?
  • எனது வாழ்வில் மனம் பரப்பப்போகின்றவன் யார்?
  • எனது அன்புப் பிரவாகத்தில் நனையப்போகும் அந்த மனிதன் யார்?
  • எனது கவலைகளையெல்லாம் இறக்கிவைப்பதற்குரிய அந்த இதயம் எது? 
  • எனது பெண்மையின் இதழ்களை முகர்ந்து பார்க்க நான் யாரை அனுமதிக்கப்போகிறேன்? 
  • எனது வாழ்க்கைப் பாதைகளில், ஒளியேற்றி வழிகாட்டும் அந்த ஆலோசகன் யார்? 
  • எனது வாழ்வின் கொடியைக் கையளிக்கப்போகும் அந்தத் தளபதி யார்? 
  • என்னை சொர்க்கத்திற்கு எடுத்துச்செல்லும் அந்த நம்பிக்கையாளன் யார்?

அவனை அல்லது அவளைத் தேடிய ஒரு பயணத்தைத்தான் நாங்கள் போக இருக்கிறோம்.

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதர, சகோதரிகளே!

என்னுடன் இந்தப் பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள். அவசரப்படாமல் அமைதியாய் பொறுமையா எமது தேடல் அமையட்டும்.

எமது தேடல் ஐந்து கேள்விகளுக்குப் பதில் சொல்வதாய் அமையப்போகிறது.

1. எப்போது? 
2. ஏன்? 
3. யார்?  
4. எங்கே? 
5. எவ்வாறு?


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அமர்வுகளில் இந்தக் கேள்விகளுக்கு விடைகாண்போம். அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

Friday, February 15, 2013

தனிமனித உருவாக்கத்தின் மூன்று பரப்புகள்


முதல் பரப்பு:-


இஸ்லாமிய சமூக மாற்றம் குறித்துப் பேசுகின்ற பொழுது, தனிமனித உருவாக்கம் அங்கு முக்கியம் பெறுவதை நாம் அறிவோம். இன்றைய வேகமான உலக மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் தனிமனித உருவாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் நாம் அறிவோம்.

அந்தவகையில் உலகை ஆளவல்ல மனித உருவாக்கம் குறித்த சில பார்வைகளை இங்கு முன்வைக்கிறோம். 

தனிமனித உருவாக்கத்தின் முதல் பரப்பு ஒரு சிறந்த முஸ்லிமை உருவாக்குதல் என்பதாகும். இந்த முஸ்லிமை அடையாளப்படுத்தும்போதுதான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பத்துப் பண்புகள் குறித்துப் பேசினார்கள்.

  1. பலமான உடலும்
  2. உறுதிமிக்க பண்பாடுகளும்
  3. ஆழ்ந்தசிந்தனையும்
  4. சுயமாய் உழைக்கும் திறனும்
  5. மாசற்றஅகீதாவும்
  6. குறைபாடுகளற்ற இபாதாவும்
  7. உளப்போராட்டமும்
  8. ஒழுங்குபடுத்தப்பட்டவாழ்க்கையும்
  9. நேரத்தை உச்ச பயன் அளிக்கும் வகையில் பயன்படுத்தலும் பிறர்க்குபயனளித்தலும்


என்ற பத்து வகைப் பண்புகளை ஒரு சிறந்த இஸ்லாமிய ஆளுமைப் பண்புகளாய் இமாம் அவர்கள் குறித்துக் காட்டினார்கள். இவற்றின் மீதான உருவாக்கம், இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தின் முதல் பரப்பாகும்.

இரண்டாம் பரப்பு:-


அடுத்து இஸ்லாமிய சமூக மாற்றத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரு போராளியை உருவாக்கல் தனிமனித உருவாக்கத்தின் இரண்டாவது பரப்பாகும். இங்கு இஸ்லாமிய சமூக மாற்றம் என்பது முஸ்லிம் உம்மத்தின் நிரந்தரமான பணியின் அடிப்படையில் எழுகிறது. மனித இனத்திற்கு வழிகாட்டுதலும் அதற்குத தலைமை வழங்குதலும் முஸ்லிம் உம்மத்தின் பணியாகும். அந்த வழிகாட்டும் பணியைத்தான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் “உஸ்தாதிய்யதுல் ஆலம்” என்றார்கள்.

இந்தப் பணியை உலகில் அதிகாரபூர்வமாக மேற்கொள்ளக்கூடிய அலகு எது என்றால், அதையே நாம் இஸ்லாமிய கிலாபத் என்கிறோம். அதை நோக்கிய பயணம்,தனிமனிதனில் இருந்து ஆரம்பித்து, குடும்பம், சமூகம், அரசு, தாயகம் என்ற கட்டங்களைக் கடந்துசெல்கிறது.

இந்தப் பாதை நபியவர்கள் வரைந்த பாதை. இது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு ஜமாஅத்தின் இஜ்திஹாதல்ல. அந்த வகையில் இப்பணிக்கு ஒரு இஸ்லாமியப் பெறுமானம் கிடைக்கிறது.

அந்த இலக்கை நோக்கி இந்தப் பாதையில் தளர்வின்றி,சலனமின்றி ஒரு ஜமாஅத்தாகப் பயணிப்பவர்களையே இங்கு போராளிகள் என்கிறோம். இந்த இலக்கையும் பாதையையும் ஆழ்ந்து விசுவாசித்து, இது தனிமனிதப் பயணமல்ல, ஒரு உம்மத்தின் பயணம், இது தனிமனித ஆயுளில் அடையும் இலக்கல்ல, ஒரு உம்மத்தின் ஆயுளில் அடையும் இலக்கு என்பதைப் புரிந்து, நம்பிக்கையிழக்காமல், பாதை தவறாமல் தனது கடமையை தொடர்தேர்ச்சியாக மேற்கொள்ளக்கூடிய ஒருவனின் உருவாக்கம் தேவை.

இந்தஉருவாக்கப் பரப்பைத்தான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் இன்னும் பத்து அம்சங்களால் அடையாளப்படுத்திக் காட்டினார்கள். அவற்றில் முதலாவது மிகச் சரியானபுரிதல். இது இருபது அடிப்படைகளின் பின்புலத்தில் அமைய வேண்டும். இந்த இருபது அடிப்படைகள்,  இஸ்லாமிய சமூக மாற்றத்தை மேற்கொள்ளும் போது,அந்த உயர் இலக்கை அடைவதற்காக முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பல்வேறு சிந்தனை முகாம்களையும் ஒன்றிணைக்கும் பாலமாகக் காணப்படுகின்றது. இங்கு அனைத்து சிந்தனை முகாம்களும் ஒரே முகாமாக மாற்றப்படுதல் நோக்கமல்ல.

மாறாக, அனைவரும் உடன்பட முடியுமான இடங்களை இனம் கண்டு, அவற்றின் மீதான உடன்பாட்டுடன் அனைவரும் இணைந்து செயற்படுதலே இங்கு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மிகச் சரியான புரிதல் என்பது இஸ்லாமிய சமூக மாற்றப் பணியை மேற்கொள்ளும் எல்லோரையும் இணைத்துச் செல்லும் வகையில், இஸ்லாமிய சிந்தனையின் உடன்பாடான பகுதிகள் பற்றிய தெளிவுடன் காணப்படுதலாகும்.

இரண்டாவது இஃலாஸ். மூன்றாவது செயல், இங்கு செயல் என்பதன் மூலம், ஏற்கனவே நாம் கூறிய சமூக மாற்றக் கட்டங்களின் அடிப்படையில் செயற்படுதலைக் குறிக்கின்றது. அத்துடன் முறைமை குறித்த வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் குறித்த ஒரு முறைமையின் அடிப்படையிலான உறுதியான செயல் முக்கியமானது. பல சமயங்களில் எவ்வாறு செய்வது என்ற வாதங்களில் காலம் கடந்துபோய் விட்டிருக்கும் எதையும் செய்திருக்கமாட்டோம். இந்தத் தவறை செய்யாத மனிதன் தேவை. அதே நேரம் தனது பாதையை திரும்பித் பார்த்து திருத்தங்களுடன் முன்னே செல்பவனாயும் இருத்தல் வேண்டும்.

நான்காவது ஜிஹாத், எனினும் இடையுறாத போராட்டம், ஜிஹாத் என்றவுடனேயே பலருடைய ஞாபகத்தில் முதலில் தோன்றுவது ஆயுதம் ஏந்திய போராட்டம்தான். ஆனால், இங்கு ஜிஹாத் என்பதன் மூலம் ஒரு மாற்றத்தை நோக்கிய தொடர்ந்த உழைப்பு நாடப்படுகிறது. அடுத்து விட்டுக் கொடுப்புகளும் தளர்வுகளும் பேரம் பேசல்களுமின்றிய போராட்டம் நாடப்படுகிறது. அது ஆயுதம் ஏந்தும் எல்லை வரை செல்வதையும் இஸ்லாம் மறுதலிக்கவில்லை. ஐந்தாவது தியாகம். மேற்சொன்ன தொடர்ந்த போராட்டத்திற்கு இது அவசியம்.

ஆறாவது கட்டுப்பாடு, ஏழாவது பாதை தவறாமை, நிலைகுலையாமை, சோதனைகள் எந்த வடிவில் வந்தாலும் இழப்புகள் எத்தனை சந்திக்க நேர்ந்தாலும், காலம் எவ்வளவு நீண்டு சென்றாலும் நம்பிக்கையீனத்தை தோற்றுவிக்கும். விமர்சனங்கள் எத்தனை வந்தாலும் தனது பாதையில் உறுதியாய் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் செயலாற்றல். இதுதான் நிலை குலையாமைஎனப்படுகிறது. 

எட்டாவது, தனது விசுவாசமும், தொடர்புகளும் உறவுகளும், செயற்பாடும், சிந்தனையும் தனது பாதைக்குரியதாய் மாத்திரம் அமைதல், ஒரே நேரத்தில் பல விசுவாசங்களுடன் பல திசைகளில் பயணிப்பதாய் அமைதல் கூடாது. ஒன்பதாவது சகோதரத்துவம். பத்தாவது நம்பிக்கை. அது இந்தப் பாதையின் மீதான நம்பிக்கை,அதன் தலைமை மீதான நம்பிக்கை,உடன் வருபவர்கள் மீதான நம்பிக்கை.

இந்த பத்து அம்சங்களின் மீதான உருவாக்கம், இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தின் இரண்டாவது பரப்பாகும். இங்கு ஒரு விடயத்தை அவதானிக்கலாம். இந்த பத்து அம்சங்களும் தனிமனித உழைப்பைவிடவும், கூட்டு உழைப்பின்போது அவசியமான பண்புகளாகவே காணப்படுகின்றன. ஏனெனில் இஸ்லாமிய சமூகமாற்றம் என்பது ஒரு தனிமனிதப் பயணமல்ல. ஓர் உம்மத்தின் பயணம். 

மூன்றாம் பரப்பு:-


இனி, அதன் மூன்றாம் பரப்புக்கு வருவோம். இது தலைமை வழங்குபவனை, தனது துறையில் நிபுணத்துவத்துடன் முன்னோடியாய் செயல்படுபவனை உருவாக்குதல் என்ற பகுதி

இஸ்லாம் மனிதனிடம் இந்த உலகில் எதிர்பார்க்கும் ஓர் அடிப்படை கடமை காணப்படுகிறது. அதுதான் ‘இமாரதுல் அர்ழ்’ எனும் பூமியை வளப்படுத்தும் பணி. இது மனிதன் என்ற வகையில் முஸ்லிம் - காஃபிர், ஆண் - பெண் என சகல தரப்பினரிடமும் எதிர்பார்க்கப்படுகின்ற பணியாகும்.

இந்த இடத்தில் முஸ்லிமை வேறுபடுத்தும் முக்கிய இடம் எதுவென்றால், அவன் இந்த விடயத்தில் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ வேண்டும். முன்னோடியாய் காணப்படல் வேண்டும்.

அல்லாஹு தஆலா ஒவ்வொரு மனிதனையும் குறைந்தபட்சம் ஒரு விஷேட ஆற்றலுடன் படைத்திருக்கின்றான். அதனை மிகச் சரியாக இனம் கண்டு வளர்த்து உலகின் ‘இமாரதுல் அர்ழ்’ எனும் பணியை நிறைவேற்றும் வகையில் அதனைப் பயன்படுத்த வேண்டும். அந்தத் துறையில் நிபுணத்துவத்துடன் முன்னோடியாகத் திகழ்பவனே முஸ்லிம்.

ஏனெனில், அவன் மனிதகுலத்திற்கான வழிகாட்டி. மனிதகுலத்திற்கு தலைமை வழங்கி சீரான உலக வாழ்க்கைக்கு காரணமாய் இருப்பவன். இது தனிமனித உருவாக்கத்தின் மூன்றாவதும் முக்கியமானதுமான பரப்பு. இங்கு துறைவாரியான நிபுணத்துவ வழிகாட்டிகள் உருவாக்கப்படுகிறார்கள். மனித வாழ்வை அதன் எல்லாத் துறைகளுடனும் வழிநடாத்தும் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு ஜமாஅத்தை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;அல்லது ஒரு நாட்டை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;அல்லது முஸ்லிம் உம்மத்தை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;முழு மனித இனத்தையும் வழிநடாத்துபவர்கள். இப்பொழுதுதான் உலகில் இஸ்லாமிய வாழ்வு நிலைக்கிறது. 

எனவே, இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தில் ஒரு முஸ்லிம் ரப்பானி உருவாகிறான். இஸ்லாமிய சமூகமாற்ற முறைமையில் செயலாற்றும் ஒரு போராளி உருவாகிறான். ஒரு நிபுணத்துவத் தலைவன் உருவாகிறான். இவன் உலகின் எந்த சூழலையும் எதிர்கொள்ளவல்லவன். எந்தப் பொறுப்பையும் சுமக்கவல்லவன். இதுவே ஒரு ஜமாஅத்தாக இருந்தால் அவர்கள் எந்த நாட்டையும் ஆளத் தகுந்தவர்கள். உலகின் தலைமையை நோக்கிச் செல்லத் தகுதியானவர்கள். அதனை சுமக்கவும் தகுதியானவர்கள். அல்லாஹ் எங்களையும் இத்தகைய உருவாக்கத்தில் ஒருவனாய் மாற்ற பிரார்த்தித்து விடைபெறுகிறோம்.