Friday, April 5, 2013

சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின் அறிக்கை


இலங்கைச் சூழ்நிலை குறித்த சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வஅறிக்கை.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தார், அவர்களைப் பின்பற்றுவோர் அனைவர்மீதும் உண்டாவதாக

இன்று இலங்கையின் பல பாகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு வரும் இனமுறுகல் நிலைகள் தொடர்பாக வெளிவரும் தொடர்ச்சியான செய்திகள், அறிக்கைகளை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் மிகுந்த கவலையுடன் அவதானித்து வருகிறது.

குறிப்பாக, முஸ்லிம்கள் மிகுதியாக வாழ்நதுவரும் மத்தியப் பகுதிகளில் இந்நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளில் தாக்கத்தை விளைவித்துள்ளதுடன், பொருளாதார நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், நாட்டின் சில உயர்மட்டத் தலைவர்களின் அணுசரனையுடன் இயங்கிவரும் சில பௌத்த தீவிரவாதக் குழுக்களின் செயற்பாடுகளையும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் அவதானித்தே வருகிறது. பள்ளிவாசல்கள்மீதான தாக்குதல்கள், அவற்றை அகற்றுவதற்கான முயற்சிகள், முஸ்லிம் இளைஞர்கள்மீதான கெடுபிடிகள், முஸ்லிம் பெண்களுக்கு, பிறர் முன்னிலையில் இஸ்லாம் கடமையாக்கிய ஹிஜாப் ஆடை மீதான அத்துமீறல்கள் இவற்றில் சிலவாகும். இது மிகத் தெளிவாக நம்பிக்கை, மத அனுஷ்டானங்களின் மீதான சுதந்திரத்திற்கெதிரான அத்துமீறலாகும்.

அத்துடன், முஸ்லிம்கள் குறித்தும் அவர்களது இருப்பு குறித்தும் அவர்கள் பௌத்தர்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்ற தவறான கருதுகோளின் அடிப்படையில் பரப்பப்படும் வீண்வதந்திகள் குறித்தும், சில தீவிரக் குழுக்களால் முஸ்லிம் வியாபார நிலையங்கள்மீதும் அவர்களின் பொருளாதாரத்தின் மீதும் தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறது.

இலங்கையில் சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக சில இனவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தீவரவாத நடவடிக்கைகள் குறித்து சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கீழ்க்காணும் விடயங்களை வலியுறுத்துகிறது:

1. சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் பின்வருமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது:

சூழ்நிலையை அமைதிப்படுத்தப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். ஒரே தேசத்தின் மக்கள் என்ற வகையில் அவர்களிடையே உண்மையான பங்குபற்றலை உத்தரவாதப்படுத்துவதுடன், அவர்களிடையே சமூக அமைதியை பலமடையச் செய்தல் வேண்டும். இலங்கையின் சமூகக் கூறுகளிடையே உரிமைகளிலும், கடமைகளிலும், சமத்துவம் பற்றிய பிரக்ஞையை மேலோங்கச்செய்வதுடன், இனரீதியாகவோ மதரீதியாகவோ அவற்றுக்கிடையில் பாகுபாடு உருவாவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தக் கூடாது. மதரீதியான வெறுப்புணர்வுகளை தூண்டி விடுபவர்களுக்கெதிராகவும், இனரீதியான குழப்பங்களை உருவாக்குபவர்களுக்கெதிராகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் அமைதியும் பாதுகாப்பும் சிறந்த முறையில் காணப்பட்ட ஒரு சூழ்நிலை காணப்பட்டிருக்கிறது. எனவே, சர்வதேச சட்டங்களும், எல்லா மதங்களின் வழிகாட்டல்களும் வலியுறுத்துவது போல், அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதும் அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். குழப்பங்கள் தோன்றி, அவை தலைதூக்காமல் இருப்பதில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடனும் உறுதியுடனும் செயற்பட வேண்டும். ஏனெனில், இதனால் விளையும் நஷ்டம் இலங்கையின் அனைத்துத் தரப்பினர்க்கும் உரியதாகும்.



  1. 2. அத்துடன் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் இதுபற்றிப் பேச வேண்டும் எனவும், முஸ்லிம் தரப்பையும் பௌத்த அமைப்புக்களையும் இணைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான குழுக்களை அமைத்து செயற்பட வேண்டுமென்றும், அதன் மூலம் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடியதொரு நிரந்தர சகவாழ்வுக்கான வழிவகைகளைக் காண வேண்டுமென்றும், சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.


  1. 3. இலங்கை முஸ்லிம்களின் இருப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை வழங்குமாறு முஸ்லிம் நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்புக் கூட்டமைப்பையும், ஏனைய எல்லா சிவில் சமூக, தனியார், மனித உரிமை ஸ்தாபனங்களையும் சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கேட்டுக்கொள்வதுடன், இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமைகள் விடயத்தில், தாம் அதிக அக்கறையுடன் காணப்படுகிறோம் என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்தும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

  1. 4. இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றும், ஒரேயணியாக நிற்க வேண்டும் என்றும், வன்முறையைத் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், சவால்களை எதிர்கொள்வதற்கு அவசியமான சட்டரீதியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும், எதிர்ப்பு நடவடிக்கைகளை இல்லாமல் செய்யும் நோக்கில் இலங்கை ஜம்இய்யதுல் உலமா, உள்நாட்டில் வியாபாரப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவதை விட்டுக்கொடுத்தமையை மதிக்க வேண்டும் என்றும், இலங்கை முஸ்லிம்களை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.

  1. 5. நீதி சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் அமைந்த சகவாழ்வையும், பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் இலங்கையில் நிலைநாட்டும் நோக்கில், நிலைமைகளை நேரடியாகக் கண்டறிவதற்காகவும், இது குறித்து அரசாங்கத்துடனும், அறிஞர்களுடனும் கலந்தாலோசிப்பதற்காகவும் ஓர் உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதை சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்கிறது. ஏனெனில், சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் பரந்த அடிப்படையில் இந்த நாட்டின் நலனுக்காகவே செயற்பட நினைக்கிறது. அந்த வகையில் குடியுரிமையின் முழுமையான பயனை அனைத்துப் பிரஜைகளும் அனுபவிக்க வேண்டும் என்பதுடன், சம்பூரணமானதொரு அபிவிருத்தியை நோக்கி நாடு செல்ல வேண்டும் என்பதையே அது விரும்புகிறது. முஸ்லிம்கள், பௌத்தர்கள் என்றோ அரசாங்கம், பொதுமக்கள் என்றோ எந்த வேறுபாடுமின்றி அனைவரினதும் நலனையும் முன்னேற்றத்தையுமே சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம் இதன் மூலம் எதிர்பார்க்கிறது.

  1. அல்குர்ஆன் கூறுகிறது: நீங்கள் நன்மையான விடயங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பை வழங்கிக்கொள்ளுங்கள். தீமையான விடயங்களில் ஒத்துழைப்பு வழங்காதீர்கள். அல்லாஹ்வை  அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்மாஇதா- 02)


கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி
தலைவர்
கலாநிதி அலி கரதாகி
பொதுச் செயலாளர்


தோஹா22, ஜமாதுல் அவ்வல் - 1434
03-04-2013

No comments:

Post a Comment