Saturday, September 22, 2018

தஃவாவில் - கட்டிவளர்த்தலும் கட்டுடைத்தலும்


   ஒரு சமநிலைப் பார்வை 
(1)




இஸ்லாமிய தஃவாவில் கட்டிவளர்த்தல் மற்றும் கட்டுடைத்தல் என்ற இரு அணுகுமுறைகளும் மிகவும் முக்கியமானவை. இன்றைய தஃவாக் களத்தில் இவற்றைச் சுற்றிய விவாதம் முதலிடத்திலிருக்கிறது என்று சொன்னால் அது மிகையானது அல்ல என்று நினைக்கிறேன். பழைய தலைமுறையினர்க்கும் புதிய தலைமுறையினர்க்குமிடையிலான கருத்து வேறுபாட்டின் மையப் புள்ளிகளில் இதுவும் ஒன்று. மாத்திரமன்றி சில இடங்களில் சிலரது ஒதுங்குதல்களுக்கும் சிலரது மௌனங்களுக்கும் ஏன்?  உடைவுகளுக்கும் கூட இது காரணமாக இருந்திருக்கிறது. எனவே தஃவா பரப்பிற்குள்ளே இது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்ற வகையில் இத்தலைப்பை கீழ்வரும் கிளைத் தலைப்புக்கள் மூலம் அணுகலாம் என்று நினைக்கிறேன். அவற்றில் முதல் பகுதி மாத்திரமே இன்றைய பத்தியில் ஆராயப்படுகிறது.

1.            கட்டிவளர்த்தல் அணுகுமுறை என்றால் என்ன?
2.            கட்டிவளர்த்தல் அணுகுமுறையும் ஷாதிபியும் பன்னாவும்
3.            கட்டுடைத்தல் அணுகுமுறை என்றால் என்ன?
4.            சமநிலை எங்கே இருக்கிறது?

கட்டிவளர்த்தல் அணுகுமுறை என்றால் என்ன?

முதலில் கட்டிவளர்த்தல் என்ற சொல்லின் பொருளை சற்று விளங்கிக் கொள்ள முற்படுவோம். அறபு மொழியில் அல்பினாஃ என்ற சொல்லின் தமிழ் பதமே கட்டிவளர்த்தல் என்று விளங்கப்படுத்தப்படுகிறது. அல்பினாஃ என்பது நேரடிப் பொருளில் ஒரு கட்டடத்தைக் கட்டுதல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டாலும் சிலேடைப் பொருளில் ஒரு சிந்தனையையோ அல்லது ஒரு வேலைத்திட்டத்தையோ உருவாக்கி, வளர்த்து,  அபிவிருத்தி செய்தல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது,  (முஃஜமுல் மஆனி). 

இந்தக் மொழிக் கருத்தை மீள்வலியுறுத்தும் வகையிலேயே இதன் பிரயோகக் கருத்தும் அமைந்திருக்கிறது. பிரயோகக் கருத்து பிரதானமாக இரண்டு விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது. முதலாவது செயல் சார்ந்தது,  அதாவது மொழிக்கருத்தில் விளங்கப்படுத்தப்பட்டது போல் ஒரு செயல் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இங்கு தெளிவாக ஒரு செயல் தோற்றம் பெறுகிறது. பேச்சளவில் மாத்திரம் நிற்காமல் செயல்திட்டம் ஒன்று உருவாகிறது. ஏனெனில் செயல்தான் நிலைபேறானது,  தொட்டுணரும் பயனைத் தரக் கூடியது. 

இரண்டாவது உணர்வு சார்ந்தது,  அதாவது சாதகமான உளநிலை ஒன்று இங்கு வெளிப்படும். முடியும் என்ற நம்பிக்கை,  நல்லது நடக்கும் என்ற எண்ணம்,  செயற்பட வேண்டும் என்ற கடமையுணர்வு,  பொறுப்புடைமை போன்ற மனநிலைகள் இதில் உற்பொதிந்திருக்கும். இந்த சாதகமான உளநிலையும் செயலுருவாக்கமும் தான் கட்டிவளர்த்தல் அணுகுமுறை எனப்படுகிறது. 

அந்தவகையில் அல்பினாஃ அல்லது கட்டிவளர்த்தல் அணுகுமுறை என்பது ஒரு ஆக்க அணுகுமுறை அழிக்கும் அணுகுமுறையல்ல. ஒன்றை தோற்றுவிக்கும் செயற்பாடு இல்லாது செய்யும் செயற்பாடு அல்ல. ஒன்றை சேர்க்கும் வேலை பிரிக்கும் வேலையல்ல. ஒன்றை ஏற்கும் அணுகுமுறை மறுக்கும் அணுகுமுறையல்ல. ஒன்றைத் தூக்கி நிறுத்துவது வீழ்த்தி விடுவதல்ல. ஒன்றைத் தாங்கிப் பிடிப்பது கைவிடுவதல்ல.

கட்டிவளர்த்தல் அணுகுமுறையின் ஷரீஅத் பெறுமானம்

கட்டிவளர்த்தல் அணுகுமுறை இஸ்லாமிய ஷரீஆவில் மிகுந்து வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயம். உண்மையில் தனியான அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இக்கருத்தை விளக்குவதை விடவும் இஸ்லாம் சொல்லும் சில மொத்தத் தத்துவங்கள் இக்கருத்தை மிகவும் அழுத்தமாக பேசுகின்றன. அவ்வகையில் சில சிந்தனைகளை இங்கு பார்ப்போம்.

இஸ்லாமிய ஷரீஆவில் அமல் என்று ஒரு விடயம் பேசப்படுகிறது. அதாவது செயல்,  இந்த செயல்நிலையை ஷரீஅத் ஒரு விடயத்தின் பரிபூரணம்,  முழுமை என்கிறது. அதாவது ஒரு விடயம் சம்பூரணமாவதும் முழுமையடைவதும் செயல் இணைகின்ற பொழுதுதான். வெறுமனே வார்த்தைநிலையை மாத்திரம் இஸ்லாம் சம்பூரணமான ஒன்றாக அல்லது முழுமையான ஒன்றாக நோக்கவில்லை. அல்குர்ஆன் கூறுகிறது ஈமான் கொண்டவர்களே நீங்கள் செய்யாத ஒன்றை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்புக்குரியதாகும் (ஸப்-02). இந்த வசனத்தில் சொல்லுடன் செயலும் இணைவதே முழுமை என்று பார்க்கப்படுகிறது. வெறுமனே வார்த்தைநிலை மாத்திரம் அல்லாஹ்விடத்தில் எவ்வகையிலும் ஏற்புநிலையில் இல்லை என்பதைக் கூறுகிறது. வார்த்தை நிலையோடு மாத்திரம் நிற்றல் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய வெறுப்புக்குரியது என்று ஏன் கூறப்பட்டது? ஏனெனில் செயலில்லாத வார்த்தையாக மாத்திரம் மனிதனது நடத்தை ஒரு போதும் இருந்து விடக் கூடாது,  அதனால்தான் அல்லாஹ் தனது வெறுப்பை இந்த இடத்தில் வெளிப்படுத்தியுள்ளான். ஏனெனில் செயலில்லாத வார்த்தையால் விளைவது எதுவுமில்லை. செயலே உலகை அர்த்தப்படுத்துகிறது. பேசுதல் மாத்திரம் பிழையானது அல்ல,  ஆனால் அதனுடன் மாத்திரம் சுறுங்குவது பிழையானது. ஏனெனில் உலகிற்கு வேலைத்திட்டங்கள் தேவை,  செயற்படுத்துபவர்கள் தேவை,  அதனால்தான் இந்த வசனத்தில் செயலில்லாத பேச்சைக் கண்டித்த அல்லாஹ்தஆலா அடுத்த வசனத்தில் ஒரு முக்கிய வேலைத்திட்டத்தைப் பற்றிப் பேசுகின்றான். இறுக்கமாகக் கட்டப்பட்ட கட்டடத்தைப் போன்று ஒரே அணியாக அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்(ஸப்-03). இது ஒரு நீண்டகால வேலைத்திட்டம்.

அதுபோல் தனித்து உளநிலையை மாத்திரம் முழுமையானதாக இஸ்லாம் கருதவில்லை. உளநிலையுடன் செயலும் இணைய இணைய வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. ஈமானுக்கு இமாம்கள் முன்வைத்த வரைவிலக்கணம் மிகவும் பிரபல்யமானது வார்த்தையால் மொழிந்து உள்ளத்தால் ஏற்று உறுப்புக்களால் செயற்படுத்துவது என்றனர். (ஜிப்ரீல்,  ஹயாத் இப்னு முஹம்மத். அல்ஆதார் அல் வரிதா அன் உமரிப்னு அப்தில் அஸீஸ் பில் அகீதா. பாகம் 01,  பக்கம் 541.)  இந்த மூன்றும் இணைகின்ற பொழுதே அது ஈமானாக மாறுகிறது. எனவே வார்த்தையை மாத்திரம் அல்லது உளநிலையை மாத்திரம் இஸ்லாம் ஈமான் என்று கருதவில்லை. செயலும் சேர்கின்ற பொழுதே அது ஈமான்.
நபியவர்கள் கூறினார்கள் அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும் செல்வங்களையும் பார்ப்பதில்லை மாற்றமாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான் என்றார்கள்,  (முஸ்லிம்). இந்த ஹதீஸ் உள்ளத்தை மாத்திரம் பார்ப்பதாகக் கூறவில்லை,  உள்ளத்துடன் செயலையும் சேர்த்துப் பார்ப்பதாகவே நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே,  ஷரீஆவில் செயல் எனும் எண்ணக்கரு எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனின்,  ஒரு பொசிடிவ் கண்ணோட்டமே அங்கு வெளிப்படுகிறது. அதனை நடத்தையின் அல்லது ஷரீஆவின் முழுமையை அல்லது பரிபூரணத்தன்மையை பிரதிபலிக்கும் ஒன்றாக அடையாளம் காட்டுகிறது. அதனை ஆக்கத்தை நோக்கிய உந்துதலாகக் காட்டுகிறது. அதனை நிலைபேறான ஒரு வேலைத்திட்டம் உலகில் ஸ்தாபிக்கப்படுவதாய் விளங்கப்படுத்துகிறது. இதுதான் அல்பினாஃ எனும் கட்டிவளர்த்தல் அணுகுமுறை. இதனால்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது மக்களைப் பார்த்து செயற்படுமாறு நபியே நீங்கள் சொல்லுங்கள்,  உங்களது செயற்பாட்டை அல்லாஹ்வும் அவனது தூதரும் முஃமின்களும் காண்பார்கள்,  கற்புலனாகக் கூடியதையும் கற்புலனாகாததையும் அறிந்த அல்லாஹ்விடத்தில் நீங்கள் மீண்டு வருவீர்கள் அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தவை உங்களுக்கு அறிவிக்கப்படும் என்கிறது. (தௌபா 105). இங்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் முஃமின்களும் காண்பார்கள் என்பது,  அது உலகில் தொட்டுணரக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது.
இக்கருத்தை மற்றொரு அல்குர்ஆன் வசனம் இன்னும் தெளிவாக முன்வைக்கிறது. நுரை பயனின்றிப் போய்விடும்,  ஆனால் மக்களுக்குப் பயனளிக்கின்ற ஒன்று உலகில் என்றும் நிலைத்து நிற்கும் (ரஃத்-18). இங்கு மக்களுக்குப் பயனளிக்கும் ஒன்று நிலைத்து நிற்கும் என்கிறது. எனவே செயல் என்பது நிலையான ஒரு வேலைத்திட்டம் கட்டியெழுப்படுதல் என்பதையே இது குறிக்கிறது.

அந்தவகையில்,  ஷரீஆவில் செயல் என்ற எண்ணக்கரு பற்றிய விளக்கம் இஸ்லாத்தின் கட்டிவளர்த்தல் அணுகுமுறையை பறைசாட்டுகிறது.
அத்துடன்,  அல்குர்ஆனின் மற்றொரு சொற்பிரயோகம் கட்டிவளர்த்தல் அணுகுமுறையை விளங்கப்படுத்துகிறது. அதுதான் இகாமா எனும் சொல். சாதாரணமாக இச்சொல் நிலைநாட்டுதல் எனும் கருத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. அல்குர்ஆனில் அதிகமாக தொழுகையை நிலைநாட்டுதல் என்ற கருத்தில் இகாமா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது போல் தீனை நிலைநாட்டுதல்,  தௌராத்தை நிலைநாட்டுதல்,  நீதியான சமநிலையை நிலைநாட்டுதல்,  சாட்சியத்தை நிலைநாட்டுதல் போன்ற பல கருத்துக்களைச் சொல்வதற்கு; இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து இடங்களிலும் இகாமா எனும் சொல்லின் மூலம் குறித்த அந்த செயற்பாட்டை நிறைவேற்றுதல் என்ற கருத்தன்றி,  குறித்த அந்த செயற்பாடு இந்த உலகில் நிலைபெறுவதற்கான எல்லாவகையான ஏற்பாடுகளையும் செய்தல் என்ற கருத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

உதாரணமாக தொழுகையை நிலை நாட்டுதல் எனும் பொழுது,  அது அதன் புறவடிவங்கள் சரியாகப் பேணப்படுதல்,  பரிபூரண உள்ளச்சம் காணப்படுதல்,  அதன் நோக்கங்களை விளங்கித் தொழுதல்,  அது ஜமாஅத்துடன் நிறைவேற்றப்படுதல்,  அது கூட்டாக நிறைவேற்றப்படுவதற்கான புற ஏற்பாடுகள் காணப்படுதல்,  அது பற்றிய ஆர்வம் ஏற்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள்,  போன்ற பலவிடயங்களை உள்ளடக்கிய தொழிற்பாடுதான் இகாமதுஸ் ஸலாத் எனப்படுகிறது. இதனை மற்றொரு வகையில் கூறினால் தொழுகை மனிதவாழ்வில் இன்றியமையாத ஒரு அமல்,  அது ஒருபோதும் சமூக வாழ்வில் இல்லாது போகின்ற ஒரு நிலமை ஏற்பட்டுவிடக் கூடாது. அதற்கான எல்லா ஒழுங்கும் மேற்கொள்ளப்படுவதையே நாம் இகாமதுஸ் ஸலாத் என்கிறோம். இது உண்மையில் தொழுகை பற்றி வந்துள்ள ஒரு ஆயத் அல்லது ஒரு ஹதீஸின் மூலம் புரிந்து கொள்ளப்படும் கருத்தல்ல. மாற்றமாக தொழுகை பற்றி வந்துள்ள அனைத்து ஆயத்களையும் ஹதீஸ்களையும் தொகுத்து விளங்கும் போது பெறப்படும் கருத்தாகும். இகாமத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் இந்த வடிவத்தில் புரிந்து கொள்ளப்படுகின்ற பொழுது,  குறித்த செயல் பூமியில் நிலைநாட்டப்படுவதற்கான ஒரு ஏற்பாடு அங்கு பரிந்துரைக்கப்படுவதைக் கண்டு கொள்ளலாம்.

அந்தவகையில் இகாமா எனும் சொல் ஒரு நிலைபேறான வேலைத்திட்டம் கட்டமைக்கப்படுவதையே குறித்து நிற்கிறது. எனவே இகாமா என்பதன் மூலமும் கட்டிவளர்க்கும் அணுகுமுறை வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

அடுத்து,  ஷரிஆ பேசும் கேள்வி கேட்டல் மற்றும் விடையளிக்கும் அணுகுமுறையிலும் இந்தக் கட்டிவளர்த்தல் அணுகுமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆன் கூறுகிறது அவர்கள் உங்களிடம் பிறையைப் பற்றிக் கேட்கின்றனர்,  அது மக்களுக்குக் காலத்தைக் காட்டக் கூடியதும் ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதுமாகும் என்று கூறுங்கள்…” (பகரா-189). இமாம் ஷாதிபி அவர்கள் கூறுவது போல் இந்த இடத்தில் கேள்வி கேட்டவரது நோக்கம் பிறை ஏன் மெல்லியதாக ஆரம்பித்து பூரணவடிவம் பெற்று மீண்டும் மெல்லியதாக மாறுகிறது என்பதை அறிந்து கொள்வதாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ்தஆலா அவனுக்கு எது பயனுள்ள செயலாக இருக்குமோ அதனை மாத்திரம் விடையாக இங்கு தந்தான். (ஷாதிபி,  அல்முவாபகாத்,  பாகம் 01,  பக்கம் 46). இங்கு வினா கேட்பவர் ஆக்கசிந்தனையை நோக்கி வழிநடாத்தப்படுகிறார். அவர் வீணான ஒரு விடயத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. இது கட்டிவளர்க்கும் அணுகுமுறையாகும்.

நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து,  அல்லாஹ்வின் தூதரே மறுமை நாள் எப்போது? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அதற்காக நீங்கள் என்ன  தயார்படுத்தி வைத்திருக்கிறீர்கள்? என்று மறுகேள்வி கேட்டார்கள்…” (புஹாரி,  முஸ்லிம்). இந்த ஹதீஸிலும் மறுமை எப்பொழுது வரும் என்பதைத் தெரிந்து கொள்வதை விடவும் அதனை எதிர் கொள்வதற்கான தயார்படுத்தல்தான் முக்கியமானது என்பது வலியுறுத்தப்படுகிறது. ஏனெனில் அதுதான் மனிதனுக்குப் பயனுள்ளது. இந்த இடத்திலும் கேள்விக்கான விடையளிக்கப்படுவதை விடவும் ஆக்க சிந்தனையை நோக்கி மனிதன் வழிநடாத்தப்படுவதுதான் முக்கியமாக நடைபெறுகிறது. இதுவும் கட்டிவளர்க்கும் ஒரு அணுகுமுறைதான்.

அதுபோல்,  பயனுள்ள,  ஒரு ஆக்கத்தைக் கொண்டுவராத,  சாதகமான விளைவைத் தராத கேள்விகளையும் கூட இஸ்லாம் பெரியளவில் வரவேற்கவில்லை. அல்குர்ஆன் கூறுகிறது ஈமான் கொண்டவர்களே,  சில விடயங்களைப் பற்றிக் கேட்காதீர்கள்,  அவை உங்களுக்குத் தெரியவருவது உங்களுக்குத் தீங்காகவே அமையும்…” (மாஇதா-101). இதனால்தான் நபியவர்களிடம் தனது தந்தை யார் என்று கேள்வி கேட்ட மனிதனுக்கு நபியவர்கள் உனது தந்தை ஹுதாபா என்று பதில் தந்த போதிலும் நபியவர்கள்  கோபத்துடன் அவசியமற்ற விடயங்களை என்னிடம் கேட்காதீர்கள்,  உங்களுக்கு அவசியமானதை நான் சொல்வேன் என்றார்கள் (புஹாரி,  முஸ்லிம்). இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் அதிகரித்த கேள்விகள் கேட்கப்படுவதையும் தடுத்தார்கள் (புஹாரி). ஏனெனில் அதிகரித்த கேள்விகள் பயனற்ற விவகாரங்களை நோக்கி கலந்துரையாடலை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது.
நபியவர்கள் பயனற்ற கேள்வியையே தடுத்திருக்கிறார்கள்,  எனின் ஒரு கேள்வியின் மூலம் இருக்கின்ற ஒரு நலன் பாதிக்கப்படுகிறது எனின் கட்டாயமாக அந்தக் கேள்வி தடுக்கப்பட வேண்டியதாகும். நபியவர்கள் கூறினார்கள் மக்களில் மிகப்பெரிய குற்றம் செய்தவர் யார் எனின்,  ஹராமாக்கப்படாத ஒரு விடயம் பற்றிக் கேள்வி கேட்டு,  அவரது கேள்வியின் காரணமாக அவ்விடயம் ஹராமாக்கப்படுவதாகும் என்றார்கள்,  (புஹாரி,  முஸ்லிம்). இங்கு வலியுறுத்தப்படும் முக்கிய விடயம் என்னவெனின் கேள்வி கேட்டல் தடுக்கப்படுதல் என்பதை விடவும்,  மனிதவாழ்வில் முக்கியமாய் விதைக்கப்பட வேண்டியது எது என்பதுதான். வாழ்வில் நலன் உருவாக்கப்பட வேண்டும். இருக்கின்ற ஒரு நலன் சிதைக்கப்படக் கூடாது. இதுதான் முக்கியமானது. இதனைப் பாதிக்கும் காரணிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் அல்லது அவை குறித்து போதியளவு எச்சரிக்கப்பட வேண்டும். உண்மையில் கேள்வி  கேட்டல் குறித்து எச்சரிக்கை வழங்கப்பட்ட இந்த ஹதீஸ்கள் மூலம் மனித நலன் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற விடயமே வலியுறுத்தப்படுகிறது.

எனவே,  கேள்வி கேட்டல் மற்றும் விடையளித்தல் எனும் விவகாரத்தில் இஸ்லாம் பேசியுள்ள வரையறைகளும் எச்சரிக்கைகளும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய பின்புலம் இதுதான். கட்டிவளர்த்தல் எனும் பொசிடிவ்வான அணுகுமுறை சமூகத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது.

அடுத்து,  அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டடம் எனும் சொல் அல்லது கட்டுதல் எனும் சொல்,  ஒரு சமூக உருவாக்கத்தைக் குறிக்க அல்லது சமூகப்பிணைப்பைக் குறிக்க அல்லது சமூகத்தின் நீண்டகால இருப்பைக் குறிக்க பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த சொல்லுக்குள்ளேயே கட்டிவளர்த்தல் எனும் கருத்து மறைந்திருக்கிறது மாத்திரமன்றி குறித்த அந்த செயற்பாடுகளிலும் வெகுவாக இழையோடியிருக்கும் அம்சம் இந்த கட்டிவளர்த்தல் பொறிமுறையாகும். நபியவர்கள் கூறினார்கள் எனக்கும் எனக்கு முன்பு வாழ்ந்த நபிமார்களுக்குமான உதாரணம்,  ஒரு மனிதன் ஒரு கட்டடத்தைக் கட்டுகிறான்,  அதில் ஒரேயொரு செங்கல்லுக்குரிய இடத்தைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளையும் அழகிய வடிவில் பூரணப்படுத்தியிருக்கிறான்,  அந்தக் கட்டடத்தைக் கடந்து செல்லும் மனிதர்கள் சொல்வார்கள்,  இந்த ஒரு செங்கல்லுக்குரிய இடத்தைத் தவிர ஏனைய விடயங்களை வைத்துப் பார்த்தால் இதனை விடவும் அழகான ஒரு கட்டடத்தை நாம் பார்த்ததில்லை என்பார்கள்,  அறிந்து கொள்ளுங்கள் நான்தான் அந்த செங்கல் என்றார்கள் (புஹாரி,  முஸ்லிம்). இங்கு பேசப்படும் முக்கிய உண்மை என்னவெனின்,  இந்த தீன்,  குறித்த ஒரு காலப்பகுதியில் மாத்திரம் குறித்த ஒரு தூதுவரால் மாத்திரம் கட்டப்பட்ட ஒரு பணியல்ல,  மாற்றமாக மனிதவரலாற்றின் தோற்றம் முதல் மெதுவாக கட்டப்பட்டு வந்த ஒரு விடயம்,  அந்த வகையில் இது ஒரு தொடரான செயன்முறையாகவே இருந்திருக்கிறது. ஒன்றன் நீட்சியாக அதனை முழுமைப்படுத்தும் வகையிலேயே பிரிதொன்று வந்திருக்கிறது. அதன் இறுதி வடிவத்தை முகம்மத் (ஸல்) அவர்கள் முன்வைத்துப் பூரணப்படுத்தியிருக்கிறார்கள். இதனைத்தான் அல்குர்ஆன்இன்று உங்கள் மார்க்கத்தைப் ப10ரணப்படுத்தி விட்டேன்,  எனது அருளை சம்பூரமாக்கி விட்டேன், இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக ஏற்றுக் கொண்டு விட்டேன்…” (மாஇதா-03) என்கிறது. நபிமார்களது பணி குறித்த இந்த உவமை மிகவும் அழகாக கட்டிவளர்த்தல் அணுகுமுறையை பிரதிபளிப்பதைக் காணலாம்.

மற்றொரு சமயத்தில் நபியவர்கள் கூறினார்கள்,  ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கட்டடத்தைப் போன்றவன். ஒருவர் மற்றவரை பிணைத்து வைத்திருப்பார் என்றார்கள்,  (புஹாரி,  முஸ்லிம்). அல்குர்ஆன் கூறுகிறது இறுக்கமான கட்டடத்தைப் போன்று ஒரேயணியாக இருந்து அல்லாஹ்வின் பாதையில் போராடுகின்றவர்களை அவன் விரும்புகின்றான் (ஸப்-04). ஒரு சமூகத்தின் இருப்பு அதன் வெற்றி போன்றன அந்த சமூகத்தின் ஆழமான அத்திவாரம்,  இறுக்கமான பிணைப்பு போன்றனவற்றிலேயே தங்கியிருக்கிறது. சமூகக் கட்டமைப்பு குறித்த இந்தப் பார்வை,  கட்டிவளர்த்தல் அணுகுமுறையையே மறைமுகமாக வலியுறுத்துகிறது. இதனால்தான் நபியவர்களின் சமூக உருவாக்கப் பொறிமுறையை அல்குர்ஆன் அமைதியாக நிதானமாக நடைபெறவேண்டிய ஒரு பயிர்செய்கைக்கு ஒப்பிட்டிருக்கின்றது. அல்குர்ஆன் கூறுகிறது இன்ஜீலில் அவர்களுக்கான உதாரணம்,  ஒரு பயிர் தனது கன்றை ஈன்றெடுத்து அதற்குப் பக்கலமாய் இருக்கிறது,  கன்று வலுவடைந்து தனது சொந்தக்காலில் நிற்கின்ற பொழுது,  பயிர்செய்தவர்களை அது சந்தோசப்படுத்துகின்றது. காபிர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது (பத்ஹ்-29). இங்கு நபியவர்கள் ஸஹாபா சமூகத்தை கட்டிவளர்த்தமை,  ஒரு வலைப்பின்னல் அமைப்பில் அமைதியாக நடைபெற்றிருக்கிறது. அதிலும் உருவாக்கி,  பலப்படுத்தி,  சொந்தக்காலில் நிற்கும் வரை அந்தப் பணி தொடர்ந்திருக்கிறது. இங்கு மிகத் தெளிவாக கட்டிவளர்க்கும் அணுகுமுறை பிரதிபளிக்கிறது.

மேற்கூறப்பட்ட ஆதாரங்களை மையப்படுத்திப் பார்க்கின்ற பொழுது,  கட்டிவளர்த்தல் எனும் அணுகுமுறை இஸ்லாமிய ஷரீஆவின் ஒரு அடிப்படைப் பெறுமானமாக,  அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரதிபளித்துக் காணப்படுவதை அவதானிக்கலாம். அந்தவகையில் கட்டிவளர்த்தல் அணுகுமுறை என்பது ஷரீஆவின் மகாஸிதுகளில் ஒன்று என்பது இங்கு நிறுவப்பட முடியும். ஏனெனில் கட்டிவளர்த்தல் எனும் செயற்பாடு ஒரு அடிப்படையான செயற்பாடு,  காலத்தால் அவசியமற்றுப் போகின்ற ஒன்று அல்ல. எல்லாக் காலங்களுக்கும் இடங்களுக்கும் உரிய ஒன்று.

உசாத்துணைகள்
1.            அஷ்ஷாதிபி,  அபூ இஸ்ஹாக். (1975). அல்முவாபகாத் பீ உஸுலிஷ் ஷரீஆ. தாருல் பிக்ரில் அரபி.
2.            அல்கர்ளாவி,  யூசுப் அப்துல்லாஹ். (2004). கைப நதஆமலு மஅத் துராஸ் வத்தமத்ஹுப் வல் இக்திலாப். கெய்ரோ: மக்தபது வஹ்பா.
3.            ஜும்ஆ,  அப்துல் ரஹ்மான்.(2007). துரூஸுன் பில் பஹ்மி வல் அமல் ஜௌலாதுன் ஹெளலல் உஸுல் அல் இஷ்ரீன். கெய்ரோ,  எகிப்து : தாருன் நஷ்ர் லில் ஜாமிஆத்.
4.            அப்துல் அஸீஸ்,  அமீன் ஜும்ஆ. (2005). பஹ்முல் இஸ்லாம் பீ ழிலாலில் உஸுலில் இஷ்ரீன். இஸ்கந்தரிய்யா,  எகிப்து : தாருத் தஃவா லித்தபஃ வந்நஷ்ர் வத்தௌஸீஃ.
5.            ஜிப்ரீல்,  ஹயாத் இப்னு முஹம்மத். (2002). அல்ஆதார் அல் வரிதா அன் உமரிப்னு அப்தில் அஸீஸ் பில் அகீதா. மதீனா முனவ்வரா,  சவூதி அரேபியா: இமாதுல் பஹ்ஸ் அல் இல்மி பில் ஜாமிஆ அல் இஸ்லாமிய்யா.

Saturday, July 14, 2018

மறுமை வெற்றி


தனிமனித உருவாக்கம் - நோக்கங்கள் - 05



மறுமை வெற்றி என்பது தனிமனித உருவாக்கத்தின் முக்கியதொரு நோக்கம். இதனை இரண்டு உண்மைகளின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். ஒன்று தனிமனித உருவாக்கப் பணி ஒரு மார்க்கக் கடமை. இரண்டு தனிமனித சீர்மை மறுமை வெற்றியின் முக்கிய நிபந்தனை.

தனிமனித உருவாக்கச் செயற்பாடு இஸ்லாமிய தஃவா மரபில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இது நாம் எல்லோரும் ஒத்துக் கொள்கின்ற ஒரு அடிப்படையான உண்மை. ஆனால் சில சமயங்களில் தனிமனித உருவாக்கச் செயற்பாட்டை தனித்து,  தஃவாவின் ஒரு மூலோபாயமாக மாத்திரம் புரிந்த கொள்கின்ற நிலை காணப்படுகின்றது. உண்மையில் இது தவறானது. தனி மனித உருவாக்கம் என்பது ஒரு இஸ்லாமியப் பெறுமானம் என்பதும் நாம் மனம் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய உண்மை. அதாவது தனிமனித உருவாக்கம் என்பது முக்கியமானது கட்டாயம் தேவை என்பது ஒத்துக் கொள்ளப்பட்டாலும்,  அது தனித்து ஒரு உலகியல் மூலோபாயம் மாத்திரமே. அதற்கு மார்க்க ரீதியான பெறுமானம் ஒன்று கிடையாது என்று சிலர் நினைக்கின்றனர். 

உண்மையில் தனிமனித உருவாக்கம் என்பது ஒரு உலகியல் மூலோபாயம் என்பதுடன்,  ஒரு மார்க்க பெறுமானம்,  ஆன்மீக விழுமியம்,  அல்குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்திய ஒரு உண்மை என்பதும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும். அந்தவகையில் உலகில் அந்தச் செயற்பாட்டில் ஈடுபடுவது ஒரு மார்க்கக் கடமை. எனவே இந்த மார்க்கக் கடமை ஒருவரது மறுமை வெற்றிக்குக் காரணமாகிறது.
அத்துடன் ஒரு தனிமனிதன் தன்னை சீர்திருத்துவது அவசியமானது,  அவனது சீர்மையின் ஊடாகவே அவன் மறுமையில் வெற்றி பெற முடியும். இது அல்குர்ஆன் வலியுறுத்தும் ஒரு சிந்தனை. தனிமனித உருவாக்கம் என்பது ஒரு தனிமனிதனை சீர்திருத்தும் ஒரு முயற்சி,  அவனிடத்தில் இஸ்லாமிய விழுமியங்களை கொண்டுவருவதற்கான ஒரு ஏற்பாடு. அதன் மூலமும் மறுமை வெற்றி நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. 

முன்பொரு தடவை ஒரு இஸ்லாமிய செயற்பாட்டாளரிடம் ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் செயற்படும் இஸ்லாமிய இயக்கம் வெற்றி பெறும் என்று நம்புகிறீர்களா? அதாவது அந்த இயக்கம் தனது இலக்குகளாகத் தீர்மானித்துள்ளவற்றை அடைந்து கொள்ளுமா? என்று கேட்டேன். அதற்கவர் சொன்னார் இந்த இயக்கம் வெற்றி பெற்றாலும் சரி வெற்றி பெறாவிட்டாலும் சரி,  இந்த இயக்கத்தில் இருந்து செயற்படுவதால் நான் மறுமையில் வெற்றி பெறுவேன் என்பதை மட்டும் நன்குணர்கின்றேன் என்றார். நான் ஒரு ஸாலிஹான மனிதனாக வாழுவதற்கான பயிற்சியும் சூழலும் இங்கு எனக்கு அமைகிறது,  மட்டுமன்றி இயக்கம் தவறான ஒரு பாதையில் இல்லை என்பதையும் உணர்கிறேன் என்றார். என்னை மிகவும் பாதித்த வார்த்தைகள் அவை. இந்த உண்மையைத்தான் கலாநிதி முனீர் ஷபீக் அவர்கள்,  குகைவாசிகளை அந்தக் குகை எவ்வாறு பாவசூழலில் இருந்து பாதுகாத்ததோ அதுபோல் இன்றைய ஜாஹிலிய்ய சூழலிருந்து மக்களைப் பாதுகாப்பனதான் இஸ்லாமிய இயக்கங்கள் என்றார்கள்.

மேற்கூறப்பட்ட இரு உண்மைகளையும் ஆதாரம் சொல்லி நிரூபிக்க வேண்டிய பெரிய அவசியம் இல்லாவிட்டாலும்,  அவற்றை ஆதாரப்படுத்தும் வகையில் சில சிந்தனைகளை இங்கு பரிமாறிக் கொள்கிறோம்.

தனிமனித உருவாக்கம் குறித்த அடிப்படையான சில சிந்தனைகளை அல்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்துகிறது. அல்குர்ஆன் கூறுகிறது எழுத வாசிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில்,  அவர்களில் இருந்தே ஒரு தூதுவரை அவன்தான் அனுப்பி வைத்தான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வின ஆயத்களை ஓதிக் காண்பிக்கின்றார். அவர்களை தூய்மைப்படுத்துகின்றார். அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கின்றார். அவர்கள் இதற்கு முன்னர் தெளிவான வழிகேட்டில் இருந்தனர். இவர்களுடன் இன்னும் இணையாத இன்னும் பலருக்கும் இதே பணி நடைபெறல் வேண்டும். அவன் கண்ணியமானவன்,  ஞானமுள்ளவன். இது அல்லாஹ் தாம் விரும்புகின்றவர்களுக்கு வழங்குகின்ற ஒரு சிறப்பருள். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன். தௌராத் வழங்கப்பட்டோருக்கான உதாரணம்,  அவர்கள் உண்மையில் தௌராத்தை சுமக்கவில்லை. அவர்கள் புத்தகம் சுமந்த கழுதைகள் போன்றவர்கள். இதுதான் அல்லாஹ்வின் ஆயத்களை பொய்ப்படுத்திய சமூகத்திற்கான மோசமான உதாரணம். அல்லாஹ் அநியாயக் காரர்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான் (ஜும்ஆ 2-5)

இந்த அல்குர்ஆன் வசனங்கள் தனிமனித உருவாக்கம் தொடர்பில் சில முக்கிய சிந்தனைகளைச் சொல்கின்றன. முதலாவது,  தனிமனித உருவாக்கம் என்பது ஒரு தூதுத்துவப் பணி,  நபிமார்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு பணி,  இங்கு எழுத்தறிவு, ஆளுமை விருத்தி,  அல்குர்ஆன் சுன்னா பற்றிய அறிவு ஆகிய மூன்றையும் தூதுவர் தனது சமூகத்திற்கு வழங்குகிறார். அந்த சமூகம் எழுத்தறிவற்ற சமூகம். எனவே, அந்த நிலையில் இருந்த சமூகத்தை தகுதிபடுத்தும்; பணிக்காகத்தான் தூதுவர் அனுப்பப்பட்டதாக இந்த வசனம் சொல்கிறது. இது ஒரு மனித உருவாக்கம். அது தூதுவரின் பணி என்பதும் குறித்துக் காட்டப்படுகிறது.

இரண்டாவது,  இங்கு குறித்த சமூகம் பற்றி இரண்டு வகையில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அது எழுத்தறிவற்ற சமூகம். இரண்டு வழிகேட்டில் இருந்த சமூகம். எனவே,  அவர்களை நோக்கிய உருவாக்கம் இரண்டு அடைவுகளை இலக்காகக் கொண்டது. ஒன்று அவர்களை அறிவு ரீதியாகத் தகுதிப்படுத்துதல் இரண்டு அவர்களுக்கு சத்தியத்தை உணரச் செய்தல். அந்தவகையில் மனிதஉருவாக்கத்தின் இரண்டு பரப்புக்கள் இங்கு அடையாளம் காட்டப்படுகிறது. ஒன்று ஸாலிஹான முஸ்லிமாக ஒரு தனிமனிதன் உருவாக்கப்படல். இதுதான் சத்தியத்தை உணரும் நிலை. இரண்டு உலகை வெற்றிகொள்ளும் அறிவாளுமையாக ஒரு தனிமனிதன் தயார் செய்யப்படல். ஒரு தனிமனிதனில் இந்த இரண்டு அடைவுகளும் இணைந்துதான் அவனை மறுமை வெற்றிக்குரியவனாக மாற்றுகிறது.

மூன்றாவது,  இந்த உருவாக்கப் பணி நபிமார்களுடன் முற்றுப்பெறும் ஒரு பணியல்ல. மறுமை வரையில் எல்லா சமூகங்களிலும் நடைபெற வேண்டியது. இதனைத்தான் இன்னும் இணையாத பலர் என்பதன் மூலம் அல்குர்ஆன் உணர்த்துகிறது. இமாம் முஜாஹித் அவர்கள் இது ஏனைய சமூகங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளார். அந்தவகையில் உருவாக்கம் எனும் பணி எல்லா சமூகங்களுக்கும் அவசியமான நிலையான ஒரு பணி என்பது விளங்கப்படுகிறது. மாத்திரமன்றி நபிமார்களது அந்தப்பணியை தொடரும் கடமை மறுமை வரையில் தொடர்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்திற்கும் காணப்படுகிறது.

நான்காவது,  உருவாக்கம் எனும் பணி,  அது உருவாக்கப்படுதலாக இருந்தாலும் உருவாக்குதலாக இருந்தாலும்,  அல்லாஹ்வின் ஒரு அருள். அவன் வழங்கும் ஒரு சிறப்பு. அதனை அவன் விரும்புகின்றவர்களுக்கு வழங்குவான். ஏனெனில் அது வெறுமனே உலகை வெற்றி கொள்வதற்கான பொறிமுறை மாத்திரமன்றி மறுமையை வெற்றி கொள்வதற்குமான பொறிமுறையாகும்.

ஐந்தாவது,  உருவாக்கப் பணியை மேற்கொள்ளாமை என்பது,  புத்தகம் சுமந்த கழுதைக்கு நிகரானது என்கிறது அல்குர்ஆன். யூத சமூகத்திற்கு தெளிவான தூதுத்துவ வழிகாட்டல் கிடைக்கப் பெற்றதன் பின்னரும் அவர்கள் அந்த உருவாக்கப் பணியை தொடர்ந்தும் மேற்கொள்ளாமை வெறுமனே ஏட்டை மட்டும் சுமந்து செல்லும் கழுதைக்கு ஒப்பானது. அதாவது,  வேதத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மனிதர்கள் தயார்படுத்தப்படுவது என்பது மிகவும் முக்கியமானது. அப்பொழுது மாத்திரமே அந்த வேதம் இவ்வுலகில் வாழும். அதனை சுமந்தவர்கள் மறுமையில் வெற்றி பெறுவார்கள். வேதத்தின் அடிப்படையில் உருவாக்கம் நடைபெறாமல் வேதத்தை தூக்கி வைத்துக் கொண்டு பெருமை பாராட்டுவதில் மாத்திரம் எந்த அர்த்தமும் இல்லை. இதனைத்தான் புத்தகம் சுமந்த கழுதையும் செய்கிறது. தான் சுமந்திருக்கும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை கழுதை ஒருபோதும் தெரிந்து கொள்ளப் போவதில்லை. உருவாக்கம் நடைபெறாமையின் பாரதூரத்தை விளக்குவதற்கு இதனை விடவும் வேறு உதாரணம் கிடையாது. உருவாக்கத்தை மேற்கொள்ளாமலிருத்தல் ஒரு மோசமான செயல் மாத்திரமன்றி,  ஒரு பெரும் அநியாயம் என்பதையும் இந்த வசனங்கள் சொல்கின்றன.

அடுத்து,  நபியவர்கள் ஒரு தடவை தனது பணி குறித்துக் கூறிய ஒரு உதாரணத்தைப் பாருங்கள். உங்களுக்கும் எனக்குமான உதாரணம்,  ஒரு மனிதன் ஒரு தீயை மூட்டுகிறான். விட்டில்களும்,  பூச்சிகளும்,  அவன் எவ்வளவு தடுத்தும்,  அந்தத் தீயில் வந்து விழுகின்றன. நான் நரகை விட்டும் உங்களை இறுகப் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் என்னை உதறிவிட்டு நரகில் போய் விழப் பார்க்கிறீர்கள் என்றார்கள் (முஸ்லிம்). மனித சமூகத்தை ஒரு பேராபத்திலிருந்து காப்பாற்றும் பணியைத்தான் தூதுத்துவம் செய்வதாக இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது. அந்தப் பேராபத்து வெறுமனே உலகம் சம்பந்தப்பட்டது மாத்திரமன்று,  மாற்றமாக முக்கியமாக மறுமை சம்பந்தப்பட்டது. அந்தவகையில் தூதுத்துவப் பணியின் மனித உருவாக்கச் செயற்பாடு வெறுமனே உலகை வெற்றி கொள்வதற்கான மூலோபாயம் ஒன்று மாத்திரமன்றி மறுமையில் ஒவ்வொரு தனிமனிதனும் வெற்றி பெறுவதற்கான அடிப்படையாகவுமே வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து,  தூதுத்துவத்தின் உருவாக்கப்பணி தொடர்பில் அல்குர்ஆன் முன்வைத்த ஒரு உதாரணத்தைப் பாருங்கள். “… இன்ஜீலில் அவர்களுக்கான உதாரணம் ஒரு பயிர் தனது கன்றை ஈன்றெடுக்கிறது, அதனைப் பலப்படுத்துகிறது,  கன்று பலமடைந்து தனது சொந்தக் காலில் நிற்கிறது,  இது பயிர்செய்தவர்களை சந்தோசப்படுத்தும்,  அவர்களைப் பார்த்து காபிர்கள் கோபம் கொள்வார்கள்,  அவர்களில் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்வோருக்கு அல்;லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான் – (பத்ஹ் 29).

இந்த அல்குர்ஆன் வசனமும் உருவாக்கம் குறித்து சில உண்மைகளைச் சொல்கின்றது. 

முதலாவது,  உருவாக்கம் என்பது, அமைதியான ஆரவாரமில்லாத நீண்டகால வேலைத்திட்டம்,  அது இங்கே பயிர்செய்கையுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. பயிர்செய்கை அமைதியான ஆரவாரமில்லாத நீண்ட கால வேலைத்திட்டம். இஸ்லாத்தின் பரவல் என்பது இது போன்றதொரு உருவாக்கத்தின் மூலமே நிகழவேண்டும். அப்பொழுதுதான் அது நிலையானதாகக் காணப்படும்.

இரண்டாவது,  உருவாக்கம் என்பது  சங்கிலித்தொடராக நடைபெற வேண்டிய ஒரு பொறிமுறை. ஒரு மனிதர் மாத்திரம் இருந்து கொண்டு மேற்கொள்ளும் ஒரு பணியல்ல. ஒவ்வொரு பயிரும் தனது கன்றை ஈன்டெடுத்து  அதனை வளர்த்து விடுகிறது,  பின்னர் அது வாழையடி வாழையாகத் தொடர்கிறது. உருவாக்கப்பணியை நபியவர்கள் மாத்திரம் நேரடியாக மேற்கொள்ளவில்லை,  ஸஹாபாக்களும் இணைந்துதான் மேற்கொண்டனர். அல்குர்ஆன் பயிர்செய்தவர்களைச் சந்தோசப்படுத்தும் என்று பன்மையில் குறிப்பிட்டமை இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.

முன்றாவது,  உருவாக்கத்திற்கு உற்படுவோர் அந்த உருவாக்கத்தைச் சிறந்த முறையில் பிரயோகிக்கின்ற பொழுதுதான் அவர்கள் மறுமையில் வெற்றியடைகிறார்கள். அந்தவகையில் உருவாக்கம் என்பது வெற்றிக்காகவும் நிகழ்கின்ற ஒரு தொழிற்பாடு என்பதைப் புரியலாம்.
அடுத்து,  மற்றோர் அல்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,  அல்குர்ஆன் கூறுகிறது யார் அல்லாஹ்வை ஈமான் கொண்டு,  ஸாலிஹான அமல்களில் ஈடுபடுகிறாரோ,  அவை அவரது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆக்கப்படும். அவர் ஆறுகள் ஓடும் சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுவார். அதில் நிரந்தரமாக அவர் வாழுவார். இதுதான் மிகப் பெரிய வெற்றியாகும்.” (தகாபுன் - 09). உலகில் ஒரு மனிதனது சீர்மைதான் மறுமையில் அவனது இடத்தைத் தீர்மானிக்கிறது. அவனது ஈமானினதும் செயற்பாடுகளினதும் பரிமாணத்திற்கு ஏற்ப தான் அவனது மறுமை வாழ்வின் அந்தஸ்த்து தீர்மானிக்கப்படுகிறது என்பதை இந்த வசனம் பேசுகிறது.

இந்த உண்மையின் பின்புலத்தில் நின்றுதான்,  தஃவா மரபில் தனிமனித உருவாக்கத்திற்கு பிரதானமாக மூன்று இலக்குகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. முதலாவது ஒரு ஸாலிஹான முஸ்லிமை உருவாக்குதல்,  இரண்டாவது ஒரு தாஇயை உருவாக்குதல்,  மூன்றாவது துறைசார் தலைமையை உருவாக்குதல். இந்த மூன்று பரப்புகளும் உலக மறுமை நலன்கள் அனைத்தையும் உள்ளடக்கி இருந்தாலும்,  குறிப்பாக ஒரு மனிதன் ஸாலிஹான முஸ்லிமாக உருவாக்கப்படுவதன் முக்கியத்துவம் என்ன என்பதில் மறுமை வெற்றி பிரதானமான இடத்தைப் பெறுகிறது. ஏனெனில் ஒரு முஸ்லிம் உருவாக்கம் என்பது அவனது நம்பிக்கை,  சிந்தனை,  நடத்தைகள் அனைத்தும் சீரமைக்கப்படுவதைக் குறிக்கின்றது. இந்தச் சீராக்கம்தான் அவனது மறுமை வெற்றியை உத்தரவாதப்படுத்துகிறது.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.


Friday, June 22, 2018

மகாஸித் தேடல்கள் (10)


ஒரு தலைப்பின் மகாஸிதுகளை அடையாளம் காண்பதற்கான கேள்விகள்



மகாஸிதுஷ் ஷரீஆ என்பது,  உலகில் ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான நோக்கங்கள். அவை முழுமையாக மனித நலன் சம்பந்தப்பட்டவை. அவை இலக்கு வடிவிலும் காணப்பட முடியும் மூலோபாய வடிவிலும் காணப்பட முடியும். உலகம் சம்பந்தப்பட்ட மகாஸிதுகளும் உண்டு,  மறுமை சம்பந்தப்பட்ட மகாஸிதுகளும் உண்டு. இது மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன என்பதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளும் பொதுக் கருத்தாகும்.

 இதன் மூலம் ஷரீஆவுக்கு மொத்தமான நோக்கங்கள் மாத்திரமே காணப்படுகின்றன என்று எவரும் நினைத்து விடக் கூடாது. மாற்றமாக ஷரீஆவின் ஒவ்வொரு கிளைப்பகுதிக்கும் அதுபோல் ஒவ்வொரு சட்டத்திற்கும் கூட தனியாக மகாஸிதுகள் இனம்காணப்பட முடியும்.

 அந்தவகையில் மகாஸித் எனும் சொல்லை நாம் ஷரீஆவின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பிரயோகிக்கவும் முடியும். அதாவது மகாஸிதுல் உஸ்ரா - குடும்பத்தின் மகாஸிதுகள்,  மகாஸிதுல் இபாதாத் - வணக்கவழிபாடுகளின் மகாஸிதுகள்,  மகாஸிதுஸ் ஸலாத் - தொழுகையின் மகாஸிதுகள்,  மகாஸிதுஸ் ஸுஜுத் - ஸுஜுதின் மகாஸிதுகள் என ஷரீஅத்தின் பெரிய பரப்பு முதல் மிகச்சிறிய பரப்பு வரை ஒவ்வொன்றுக்கும் பிரயோகிக்க முடியும்.

ஆனால் இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி என்னவெனின்,  குறித்த ஒரு தலைப்பின் மகாஸித்கள் எவை என்பதை அடையாளம் காண்பது எவ்வாறு? என்பதுதான். இந்தக் கேள்விக்கான எளிமையானதொரு பதிலை வழங்குவதுதான் இந்தப் பத்தியின் நோக்கம்.
குறித்த ஒரு தலைப்பின் அல்லது துறையின் அல்லது சட்டத்தின் மகாஸிதுகளை அறிந்து கொள்வதற்கு முக்கியமாக மூன்று கேள்விகளுக்குப் பதில் காண்பது அவசியமாகிறது.

1.            ஏன்?
2.            என்ன விளைவுகள் அடையப் பெற வேண்டும்?
3.            எதன் மீது எழுந்து நிற்கின்றது?

இந்த மூன்று கேள்விகளுக்கும் அளிக்கப்படும் பதில்கள்தான் குறித்த தலைப்பின் மகாஸிதுகளாக அமையும். இந்த ஒவ்வொரு கேள்வியையும் தனித்தனியாக விளங்கப்படுத்த முன்னர் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது,  மகாஸித்களை இனம்காண்பதற்கு இந்த மூன்று கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று ஆரம்ப கால மகாஸித் அறிஞர்களும் சரி நவீன கால மகாஸித் அறிஞர்களும் சரி தனித்துக் கூறியது கிடையாது. ஆனால் மகாஸித் பற்றிய ஆய்வுகளை தொகுத்து நோக்கும் பொழுது,  அறிஞர்கள் எவற்றை எல்லாம் மகாஸித் என்று அடையாளம் காட்டியிருக்கிறார்கள் எனின்,  அவை மிகப்பெரும்பாலும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களாகவே காணப்படுகின்றன. அந்தவகையில் இது எனது தனிப்பட்டதொரு இஜ்திஹாத் என்றே சொல்ல வேண்டும். மகாஸித் பற்றிய ஆய்வுகள் எல்லாமே மாற்றுப் பார்வைகளுக்கு இடம் வைத்துள்ளவை என்ற வகையில் எனது இந்த இஜ்திஹாதிலும் அதே இடம் இருக்கிறது என்பதை முதலில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

ஏன்?

ஏன் என்பது எந்தவொரு விடயத்தினதும் மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான ஒரு கேள்வியாகும். இது குறித்து விரிவாகப் பேசிய நவீன அறிஞர்களில் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் முதன்மையானவர். அவர் குறிப்பிடுவது போல்(1) ஏன் என்ற கேள்வி வரலாற்று நெடுகிலும் மனிதன் கேட்டுவந்த கேள்விதான். அந்தக் கேள்விதான் உலகில் தத்துவ சிந்தனையை உருவாக்கியது. இஸ்லாமிய பாரம்பரியத்திற்குள்ளே அல்லாஹ்வின் சட்டங்களுக்கும் செயல்களுக்கும் இந்தக் கேள்வி தொடுக்கப்படுகின்ற பொழுதுதான் மகாஸிதுகள் தோற்றம் பெறுகின்றன. 

கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்கள் குறிப்பிடுவது போல்(2) அல்லாஹ்வின் அடிப்படையான பண்புகளில் ஒன்று அவன் ஹகீம் என்பதாகும். எந்த ஒன்றையும் ஒரு நியாயம்,  காரணத்துடனேயே செய்பவன் என்பதே இதன் பொருள். எனவே அல்லாஹ்வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கிறது.  இங்குதான் அல்லாஹ்வின் நடவடிக்கைகள் குறித்து ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதற்கான நியாயம் உருவாகிறது.

ஏன்? என்ற கேள்வியின் மூலம் ஒரு விடயத்தின் இருப்புக்கான நியாயம் என்ன என்பதுதான் முக்கியமாகத் தேடப்படுகிறது. இப்படி ஒரு விடயம் ஏன் இருக்கிறது? அல்லாஹ் ஏன் இவ்வாறு ஒரு செயலை வைத்திருக்கிறான்?  உதாரணமாக குடும்பம் என்ற ஒரு முறைமையை அல்லாஹ் இந்த உலகில் ஏன் வைத்துள்ளான்? உலகில் மனித இனத்தின் இருப்பும்,  அதன் கௌரவமும் பாதுகாக்கப்படுதல். இதுதான் குடும்பம் ஏன்? என்ற கேள்விக்கான பதில். இதனைத்தான் இமாம்கள் ஹிப்ழுன் நஸ்ல் எனும் கலைச் சொல் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதுபோல் தஃவா ஏன்? உலகிலும் மறுமையிலும் மனித இனத்தின் விமோசனம். உலகில் மனித இனம் அழிவிலிருந்து காக்கப்படல். இதுதான் ஏன் என்ற கேள்விக்கான பதில். இந்தப் பதில்களும் மகாஸிதுகளில் ஒன்று என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

என்ன விளைவுகள்அடையப் பெற வேண்டும்?

இது மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மற்றொரு கேள்வி. ஒரு விடயத்தை அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை இது குறித்து நிற்கின்றது. இது மிகப்பெரும்பாலும் குறித்த தலைப்புடன் சம்பந்தப்பட்ட வகையில் உலகத்தில் நடைபெறவேண்டிய மாற்றங்களையும் மறுமையின் பேறுகளையும் உள்ளடக்கியிருக்கும். மற்றொரு வகையில் சொன்னால் நாம் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எதனை சாதிக்க விரும்புகிறோம்? எதனை விளைவாகக் கொண்டுவரப் போகிறோம்? என்ற கேள்விகளுக்கான பதில்களாக அமையும்.

முதலில் கேட்கப்பட்ட ஏன் என்ற கேள்விக்கும் இந்தக் கேள்விக்குமிடையிலான அடிப்படை வேறுபாடு என்னவெனின்,  ஏன் என்ற கேள்வியின் பதில் குறித்த விடயத்தின் இருப்பு சம்பந்தப்பட்டது,  இந்தக் கேள்வியின் பதில் குறித்த விடயத்தின் விளைவு சம்பந்தப்பட்டது.
உதாரணமாக,  குடும்ப வாழ்வின் மூலம் என்ன விளைவுகள் அடையப்பெற வேண்டும்? என்ற கேள்விக்கு,  அல்குர்ஆன் குறித்துக் காட்டுவது போல்(3) “ஸகன் எனும் அமைதியைப் பெற்றுக் கொள்ளுதல்,  ஆறுதலை அடைந்து கொள்ளுதல்,  என்ற பதிலும் ஒன்றாகும். இது குடும்ப வாழ்வின் மூலம் அடையப்பெறும் ஒரு விளைவு என்றவகையில்,  இதுவும் குடும்ப வாழ்வின் மகாஸிதுகளில் ஒன்றாக மாறுகிறது. அதுபோல் தஃவாவின் மூலம் என்ன விளைவுகள் அடையப்பெற வேண்டும்? என்றொரு கேள்வி கேட்கப்பட்டால்,  பௌதீக ரீதியாகவும் சரி சிந்தனை ரீதியாகவும் சரி,  உலகில் அடிமைத்துவம் அகற்றப்பட்டு சுதந்திர சூழல் ஏற்படுத்தப்படல் என்பதும் ஒரு பதிலாக அமையும். இது தஃவாவின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய ஒரு விளைவு. எனவே இதுவும் தஃவாவின் மகாஸிதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தக் கேள்வி மகாஸிதை அறிந்து கொள்வதற்கான கேள்விகளுள் ஒன்று என்பதை முதலில் நாம் அல்குர்ஆனில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அல்குர்ஆன் பலசமயங்களில் ஒன்றன் விளைவை அதன் நோக்கமாகக் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம். உதாரணமாக தொழுகை பற்றிப் பேசும் பொழுது,  “…தொழுகை பாலியல் பாவங்களையும் ஏனைய குற்றங்களையும் விட்டுத் தடுக்கிறது…” என்கிறது. (அன்கபூத் - 45). இங்கு தொழுகை நிறைவேற்றப்படும் பொழுது,  அது தனிமனிதனிலும் சரி சமூகத்திலும் சரி பாவச் செயல்களைக் குறைக்கும் விளைவைக் கொண்டு வருகிறது.

அதுபோல் பல்வேறு மகாஸித் ஆய்வுகளிலும் இந்த அணுகுமுறையைக் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் நோன்பின் மகாஸிதுகளைக் குறிப்பிடும் பொழுது,  தக்வா எனும் உளநிலையை அடைந்து கொள்ளுதல் என்பார்(4). இது நோன்பு நோற்பதால் ஒவ்வொருவரிலும் ஏற்பட முடியுமான விளைவு.

எதன் மீது எழுந்து நிற்கின்றது?

மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மற்றொரு கேள்வி இது. இங்கு இருப்பு,  விளைவு என்ற பரப்புக்கள் அன்றி,  ஒரு குறித்த விடயத்தினை தாங்கி நிற்கும் காரணி எது? என்ற தேடல் காணப்படுகின்றது. இதனை மற்றொரு வகையில் கூறினால் ஒரு விடயத்தின் இருப்பு அல்லது விளைவு பிறிதொன்றில் தங்கியிருக்குமாக இருப்பின் அந்தப் பிறிதொன்றும் கூட குறித்த விடயத்தின் மகாஸிதுகளில் ஒன்றாகக் கருதப்படும்.

உதாரணமாக,  குடும்ப வாழ்வு எதன் மீது எழுந்து நிற்கின்றது? என்ற கேள்விக்கு அல்குர்ஆன் வழங்கும் பதில்,  அன்பும் அருளும் என்பதாகும்(5). இதனால்தான் அதிகம் அன்பு செலுத்தக் கூடிய பெண்ணைத் தேர்வு செய்து திருமணம் செய்யுமாறு நபியவர்கள் இளைஞர்களுக்கு ஆலோசணை வழங்கியுள்ளார்கள்(6). இது குடும்ப வாழ்வு எழுந்து நிற்கும் காரணிகளில் ஒன்றைப் பேசுகிறது. குடும்ப வாழ்வுக்கு இந்தக் காரணி பிரதானமானது என்றவகையில் இதுவும் குடும்ப வாழ்வின் மகாஸிதுகளில் ஒன்றாகிறது.

அதுபோல் தஃவா எதன் மீது எழுந்து நிற்கிறது? என்ற கேள்விக்கு மனிதவளம்,  பொருளாதார வளம்,  ஹிக்மா எனும் ஞான அணுகுமுறை போன்ற பல காரணிகள் அல்குர்ஆனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன(7). இந்தக் காரணிகள் ஒவ்வொன்றும் தஃவாவின் நீடித்த இருப்புக்கும் விளைவுக்கும் அத்தியவசியமானவை என்றவகையில் இவையும் தஃவாவின் மகாஸிதுகளில் அடங்குகின்றன.

ஒன்றைத் தாங்கி நிற்கும் காரணியும் அதே தரத்திலேயே முக்கியத்துவம் பெறுகின்றமையை வலியுறுத்தும் ஒரு சட்டவிதி இப்படிச் சொல்கிறது. ஒரு வாஜிப் முழுமை பெறுவது பிறிதொன்றில் தங்கியிருப்பின் அவ்விடயமும் வாஜிபாக அமையும் (மஃலமது ஸாயித் லில்கவாயித் அல்பிக்ஹிய்யா வல் உஸுலிய்யா,  விதி இல:1836).

கலாநிதி இஸாம் பஷீர் அவர்கள் தஃவாவின் மகாஸிதுகள் பற்றிப் பேசுகின்ற பொழுது,  ஹிக்மா எனும் ஞான அணுகுமுறையையும்,  ததர்ருஜ் எனும் படிமுறை அமைப்பையும் அதன் மகாஸிதுகளாக அடையாளப்படுத்துகிறார்கள்(8). உண்மையில் இவையிரண்டும் தஃவாவின் இருப்புக்கான நியாயங்களோ அல்லது தஃவாவின் மூலம் அடையப்பெறும் விளைவுகளோ அல்ல. மாற்றமாக தஃவா என்ற செயற்பாட்டின் விளைவுகள் சிறந்த முறையில் எய்தப்படுவதற்கு இந்த அணுகுமுறைகள் இன்றியமையாதவை. அந்தப்பின்புலத்திலேயே அவை இங்கு மகாஸிதுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இறுதியாக இப்பத்தியை நிறைவு செய்ய முன்னர்,  முன்னைய பத்திகளில் கூறப்பட்ட ஒரு விடயத்தை மீள்வலியுறுத்திவிட்டுச் செல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன். இங்கு சொல்லப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்குமான பதில்கள் மூலம் ஒரு விடயத்தின் மகாஸிதுகளை அடையாளம் காணமுடியும் என்று சொல்லும் போது,  அதன் பொருள் மகாஸிதுகள் ஒவ்வொருவரதும் மனோவிருப்பங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட முடியும் என்பதல்ல,  மாற்றமாக இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற பொழுது மாத்திரமே அவை மகாஸித் என்று கருதப்படும். அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசப்படாத ஒரு விடயம் ஒருபொழுதும் மகாஸிதாக அடையாளப்படுத்தப்பட முடியாது. இது மகாஸித் அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. இங்கு முக்கியமாக வலியுறுத்தப்படும் விடயம் என்னவெனின்,  ஒரு தலைப்பின் அல்லது சட்டத்தின் மகாஸிதுகள் என்ன என்பதை அல்குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் நாம் அடையாளம் கண்டு கொள்வதற்கான பொறிமுறை என்ன என்பது பற்றியே கருத்துரைக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

அடிக்குறிப்புக்கள்

1.            அவ்தா,  ஜாஸிர். (2012). மகாஸிதுஷ் ஷரீஆ கபல்ஸபா லித்தஷரீஃ அல்இஸ்லாமி,  ருஃயா மன்ழுமிய்யா. வெர்ஜீனிய்யா,  அமெரிக்கா: அல்மஃஹதுல் ஆலமி லில்பிக்ரில் இஸ்லாமி. பக்கம்: 65 – 109. - (2011). மகாஸிதுஷ் ஷரீஆ தலீலுன் லில்முப்ததிஈன். வெர்ஜீனிய்யா, அமெரிக்கா: அல்மஃஹதுல் ஆலமி லில்பிக்ரில் இஸ்லாமி. பக்கம் : 9 – 14.

2.            அபூஸைத்,  வஸ்பி ஆஷுர். (2014). அஹ்காமுஷ் ஷரீஆ பைனத் தஅப்புத் வத்தஃலீல். ஆய்வுகளின் தொகுப்பு. இஃமாலுல் மகாஸித் பைனத் தஹய்யுப் வத்தஸய்யுப். லண்டன்: முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி,  மர்கஸ் திராஸாதில் மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா. பக்கம் 203.

3.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களில் இருந்தே உங்களுக்குரிய சோடியைப் படைத்தமை அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் ஒன்று,  நீங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காக…” (ரூம் -21).

4.            ரைஸுனி,  அஹ்மத் அப்துஸ் ஸலாம். (2016). மகாஸிதுல் இபாதா. தொலைக்காட்சி உரை. வெளியீடு: அல்கனாத் அல்மக்ரிபிய்யா. உரை இல: 03.

5.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களில் இருந்தே உங்களுக்குரிய சோடியைப் படைத்தமை அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் ஒன்று,  நீங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காக உங்களுக்கு மத்தியில் அன்மையும் அருளையும் ஏற்படுத்தினான்…” (ரூம் -21).

6.            நபியவர்கள் கூறினார்கள் அதிகம் அன்பு செலுத்தக் கூடிய அதிகம் பிள்ளைகள் பெறக் கூடிய பெண்களைத் திருமணம் செய்யுங்கள்…” (அபூதாவுத்,  நஸாஇ).

7.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களுக்குத் சுவர்க்கத்தைத்  தருவதாய் அல்லாஹ் உங்களையும் உங்கள் செல்வங்களையும் வாங்கிக் கொண்டான்…” (தௌபா – 111),  அல்குர்ஆன் கூறுகிறது,  உங்கள் இரட்சகனின் பாதைக்கு ஞான அணுகுமுறையைக் கொண்டு அழையுங்கள்…” (நஹ்ல்-125).

8.            அல்பஷீர்,  இஸாம் அஹ்மத். (2016). மக்ஸதா அத்ததர்ருஜ் வல்ஹிக்மா. ஆய்வுகளின் தொகுப்பு. இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி. லண்டன்: முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி,  மர்கஸ் திராஸாதில் மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா. பக்கம் 53-79.