ஹஜ்ஜின் மகாஸிதுகள்
ஹஜ்ஜின் மகாஸிதுகள்
என்ற இந்தக் கட்டுரை வெளிவரும் பொழுது சில சமயம் இவ்வருட ஹஜ் நிறைவு பெற்றிருக்கவும்
வாய்ப்பிருக்கிறது. ஏலவே ஹஜ்ஜாஜிகள் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள்,
எனவே கட்டுரை, காலம் கடந்து விட்டதாக அமைந்து விடப்போகிறது என்ற
ஒரு எண்ணம், இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும் போது மனதில்
வந்தது. ஆனாலும் மற்றொரு புறத்திலிருந்து ஒரு தைரியம் பலமாய் எட்டிப்பார்த்தது. காரணம்
நான் எழுதுவது மகாஸிதைப் பற்றி, அது காலம் கடந்ததல்ல, என்றும் நிலையானது. ஷரீஆவின் மூலம் இந்த உலகில் நிரந்தரமாக நிலைபெற வேண்டும் என்று
அல்லாஹ்தஆலா எதனை எதிர்பார்க்கின்றானோ அதனையே நாம் மகாஸித் என்போம். எனவே ஹஜ்ஜின் மகாஸிதுகள்
ஹஜ் காலத்திற்கு மாத்திரம் உரியவை அல்ல. இந்த உலகில் என்றும் நிலைத்திருக்க வேண்டியவை.
ஆகவே காலம் கடந்தேனும் எழுதப்படுவது யாவருக்கும் பயனளிக்கும்.
மாத்திரமன்றி இது ஒரு
அறிவூட்டல் நடவடிக்கை, அறிவூட்டல் குறித்த சந்தர்ப்பத்துடன் இணையும் பொழுது
விளைவு அதிகம் தான், ஆனாலும் சந்தர்ப்பம் மட்டும்தான் அறிவூட்டலுக்கான
பொழுது அல்ல.
இனி ஹஜ்ஜின் மகாஸிதுகளுக்குச்
செல்வோம், ஹஜ்ஜின் மகாஸிதுகள் பல கோணங்களில் பல எண்ணிக்கையில்
அணுகப்பட்டுள்ளன. ஓரளவுக்கு அவற்றின் சாரம்சமாய் நான் மூன்று மகாஸிதுகளை மாத்திரம்
இங்கு பரிமாறலாம் என்றிருக்கிறேன்.
முதலாவது,
மக்களை ஒன்றுதிரட்டுதல் : அதாவது
உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படல் வேண்டும் என்பது ஹஜ்ஜின் ஒரு மக்ஸத்.
அல் குர்ஆன் இதனை இவ்வாறு கூறுகிறது “ ஹஜ்ஜுக்கு வருமாறு மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுங்கள்,
அவர்கள் கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள், மிகத் தொலைவான ஒவ்வொரு பாதை வழியாகவும்
ஒவ்வொரு நலிந்த ஒட்டகங்கள் மீதும் வருவார்கள்” (ஹஜ் – 28). ஹஜ்ஜுக்கான பகிரங்கமான அழைப்பு ஏன் விடுக்கப்படுகிறது
எனின் மூலை முடுக்குகளில் இருந்தும் கூட மக்கள் அதற்கு வரவேண்டும், உலகின் எந்தப்பாகத்திலுள்ளவர்களும் வருவார்கள் என்பதையே தொலைவான ஒவ்வொரு பாதை வழியாகவும்
என்ற வார்த்தை குறித்து நிற்கிறது. பெரும் திரளான மக்கள் ஒன்று கூட்டப்பட வேண்டும்
என்பதையே இந்த வசனம் உணர்த்துகிறது.
மக்கள் ஒன்றுதிரட்டப்படுதல்
என்பது பொதுவாக இஸ்லாத்தின் எல்லா வணக்கவழிபாடுகளிலும் அவதானிக்கத்தக்க ஒரு உண்மையாகும்.
கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள், இஸ்லாம் ஜந்து அடிப்படைகள் மீது கட்டப்பட்டிருக்கிறது
என்ற ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் போது, கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்ற ஒவ்வொரு கடமையும் கட்டாயமாக நடைபெறவேண்டியவை, கூட்டுவடிவில் நடைபெறவேண்டியவை, திட்டமிட்ட ஒழுங்கில் நடைபெறவேண்டியவை என்கிறார்(1). எனவே பொதுவாக வணக்கவழிபாடுகள் கூட்டான வடிவில் ஒரு
ஒழுங்குமுறையில் நடைபெறுவதை இஸ்லாம் வழியுறுத்துகிறது. இவற்றில் ஹஜ்ஜைப் பொறுத்தவரை
ஏனைய எல்லா வணக்கவழிபாடுகளை விடவும் கூட்டு வடிவம் மிகவும் முக்கியம் பெறுகிறது. இங்கு
கூட்டுவடிவம் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு ஊரையோ மாத்திரம் உள்ளடக்காமல் முழு உலகையும்
உள்ளடக்கிய வகையில் அமைகிறது.
உண்மையில் உலக முஸ்லிம்களின்
இந்த ஒன்று கூடல் என்ன செய்தியைச் சொல்கிறது? இஸ்லாம் முழு மனித சமூகத்தையும் ஒன்று திரட்டும் சக்தி வாய்ந்தது என்ற செய்தியை
உலகிற்கு உரத்துச் சொல்கிறது. அதுவும் புறக்காரணிகளால் இந்த ஒன்றுகூடல் நிகழவில்லை.
ஆட்சியாளர்களோ தலைவர்களோ போட்ட கட்டளைகளால் அது நடைபெறவில்லை, மாற்றமாக ஹஜ்ஜுக்கு வரும் ஒவ்வொரு தனிமனிதனும் தனது உள்ளார்ந்த தூண்டுதலின் அடிப்படையிலேயே
வருகின்றான். நாளுக்கு நாள் அந்தத் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. எண்ணிக்கை வரையறைகள்
இட்டு கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமளவுக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே
இந்தப் பெரும் மக்கள் கூட்டம் ஒன்று திரண்டு கொண்டிருக்கிறது.
அல்லாஹ்தஆலா கூறுகிறான்
“ அல்லாஹ்வின் இந்தக் கிரியைகளை
யார் மகத்துவப் படுத்துகிறாரோ அது அவர்களது உள்ளங்களின் தக்வாவின் காரணமாகவே நிகழ்கிறது” (ஹஜ் – 32). தக்வா என்பது சுயதூண்டல். எனவே இஸ்லாம் எந்தவிதப்
புறக்காரணிகளும் இன்றி மக்களை இயல்பாக ஒன்று திரள வைக்கக் கூடியது.
இந்த வசனத்தில் கிரியைகள்
என்ற கருத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட அறபுச் சொல் “ஷஆயிர்” என்பதாகும். இதன்
பொருள் பற்றி கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் கூறும் பொழுது, இது அடையாளம் என்ற கருத்தைக் குறிக்கும்(2) எனவே ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஒரு அடையாளம்,
அதன் ஒரு வெளிப்பாடு. இந்த உலகில் இஸ்லாம் வாழ்கிறது, அது அழியவில்லை என்பதை உலக மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு
அது என்கிறார்.
இரண்டாவது,
பௌதீகப் பயன்களைப் பெற்றுக் கொள்ளுதல் : அல்குர்ஆன் ஹஜ்ஜுக்காக பகிரங்க அழைப்பு விடுங்கள்
பெரும் திரளானவர்கள் வருவார்கள் என்று கூறிவிட்டு நோக்கத்தை இவ்வாறு சொல்கிறது “தமக்கான பௌதீகப் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும்
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவுபடுத்தவதற்காகவும்” (ஹஜ் – 28) என்கிறது. பௌதீகப் பயன்கள் என்ற கருத்தைச் சொல்ல
“மனாபிஃ” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது அடிப்படையில் எல்லாவகையான பயன்களையும் குறிக்கப் பயன்படுகிறது. நேரடியான மறைமுகமான
பௌதீக ஆன்மீக எல்லாப் பயன்களும் இங்கு உள்ளடங்கும், ஆனாலும் ஆன்மீகப் பயன்கள் அதே வசனத்தில் அல்லாஹ்வை நினைவு படுத்தல் என்ற சொல்லின்
மூலம் அடையாளப்படுத்தப் பட்டிருப்பதால் இந்த இடத்தில் மனாபிஃ என்பது பௌதீகப் பயன்களையே
குறிப்பாக அடையாளப்படுத்துவதாகக் கொள்ள முடிகிறது.
ஹஜ் ஒரு வணக்கம்,
உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வணக்கம், எனவே அந்த வணக்கத்தின் போது வெறுமனே ஆன்மீக விளைவுகள் மாத்திரமன்றி, ஒன்று திரள்வதன் பௌதீக விளைவுகளை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பையும் அல்லாஹ்தஆலா
ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். உண்மையில் அதனை ஒரு வாய்ப்பு என்பதை விடவும் கட்டாயம்
அடைந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்காகவே அல்குர்ஆன் அடையாளப்படுத்தியிருக்கிறது. பௌதீகப்
பயன்களை அடைந்து கொள்ளல் என்பது ஹஜ்ஜின் ஒரு மக்ஸத்,
அந்தவகையில் ஹஜ்ஜுக்கான திட்டமிடல் வெறுமனே ஹஜ் என்ற கிரியையை நிறைவேற்றுவதற்கான
ஏற்பாடாக மாத்திரம் அமையக் கூடாது, முழு மனித சமூகத்திற்கும் பயனளிக்கக் கூடிய, சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களுக்கான ஒரு களமாக ஹஜ்ஜை மாற்றிக்
கொள்வதற்கான ஏற்பாடே மிகவும் பொறுத்தமானது. இங்கு உதாரணத்திற்காக இரண்டு விடயங்களை
மாத்திரம் அடையாளப்படுத்துகிறேன்.
1. பொருளாதார நலன்கள்: கலாநிதி யூசுப் அல்கர்ளாவி அவர்கள்
பொருளாதார நலன்களை தனியானதொரு மக்ஸதாகவே விளங்கப்படுத்தியுள்ளார்(3). இப்னு அப்பாஸ் ரழியவர்கள் குறிப்பிடுகிறார்கள்,
ஜாஹிலிய்யாக் காலத்தில் உக்காஸ், மஜன்னா, துல் மஜாஸ் போன்ற சந்தைகள் காணப்பட்டன. ஹஜ் காலப்பகுதியில்
வியாபாரம் செய்வதை மக்கள் பாவமாகக் கருதி சங்கடப்பட்டார்கள். நபியவர்களிடம் இது பற்றி
வினவிய போது கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் இறங்கியது “உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும்
பேறுகளை (செல்வம்) நீங்கள் எதிர்பார்ப்பதில் எந்தக் குற்றமும் இல்லை” (அல்பகரா –
198), என்றார்கள் (புஹாரி). எனவே ஹஜ் காலப்பகுதி வியாபார நடவடிக்கைகளில்
ஈடுபடுவதற்குரிய ஒரு காலம். முஸ்லிம்கள் ஒன்று திரண்டு செல்வவிருத்தியில் ஈடுபடுவதற்கான
ஒரு சந்தர்ப்பம். உலகப் பொருளாதாரத்தின் திசையையும் போக்கையும் தீர்மானிப்பதற்கான சக்தியாக
முஸ்லிம் உம்மாவை மாற்றுவதற்கான ஒரு நிகழ்வு.
2. உலக சமாதானத்தைத் தீர்மானிப்பதற்கான காலம்: அஷ்ஹுருல்
ஹுரும் எனும் துல் கஃதா, துல் ஹஜ், முஹர்ரம், ரஜப் என்ற நான்கு மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தில்
ஹஜ் கடமையை அல்லாஹ் வைத்திருக்கிறான், இந்த மாதங்களில் யுத்தம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது, பொதுவாக இந்தக் காலப்பகுதியில் நோன்பு நோற்றல் சிறப்புக்குரியது.
மக்கா மதீனா பிரதேசங்களை ஹரம் எனும் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக இஸ்லாம் கருதுகிறது,
ஹஜ் காலப்பகுதியில் இப்பிரதேசத்தின் மரங்கள் வெட்டப்படக் கூடாது, மிருகங்கள் வேட்டையாடப்படக் கூடாது. அடுத்து ஹஜ் கடமையின் பொதுத் தோற்றத்தைப் பார்த்தாலும்
அங்கு முஸ்லிம்களில் பெரும் திரளானவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது,
ஷெய்த்தானை தன்னை விட்டு, அப்பால் விரட்டுவதற்கான ஏற்பாடு இருக்கிறது,
மனித மனங்களை வலிந்து கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு இருக்கிறது.
இந்த அனைத்து ஏற்பாடுகளையும்
அல்லாஹ் ஏன் வைத்திருக்கிறான்? என்ற ஒரு கேள்வி கேட்டுப்பார்தால், சாதாரணமாகவே புரிந்து கொள்ள முடியுமான உண்மைதான், உலக சமாதானத்தை முஸ்லிம்கள் முன்னெடுப்பதற்கான ஒரு
சந்தர்ப்பம் இருக்கிறது. முதலில் தமக்கு மத்தியிலான முரண்பாடுகளை பேசித் தீர்த்துக்
கொள்ளவும், உடன்பாடுகளை எட்டவும் முடியும். நான்கு மாதங்கள்
யுத்தம் செய்யத் தடுக்கப்பட்டமை என்பது நிர்ப்பந்தமாக சமாதான மேசைக்கு அழைத்து வருவதற்கான
ஒரு ஏற்பாடு, ஏனெனில் சமாதான வாழ்வுதான் அடிப்படை, யுத்த வாழ்வு அல்ல. நபியவர்கள் ஹஜ்ஜிலே ஆற்றிய இறுதியுரை வெறுமனே ஒரு வணக்கம் மட்டுமல்ல,
மாற்றமாக அது ஒரு மாநாட்டுரை, அதன் உள்ளடக்கம் உலக சமாதானத்துக்கான ஒரு அழைப்பு,
மனித உரிமைகள் காக்கப்படுவதற்கான ஒரு அழைப்பு.
குலபாஉர் ராஷிதூன்கள்
தமது ஆட்சிக் காலத்தில் தமது கவர்னர்களது பணியினை மதிப்பீடு செய்வதற்கான காலமாக இதனைப்
பயனபடுத்தினார்கள், மக்களது குறைகளைக் கேட்பதற்கான காலமாக இதனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கலீபா உஸ்மான் றழியவர்கள்
எல்லாப் பிரதேசங்களுக்கும் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தைப்
பாருங்கள். ”ஹஜ் காலப்பகுதியில்
எனது ஒவ்வொரு கவர்னரும் தனது அறிக்கையை என்னிடத்தில் எடுத்து வரவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்,
நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் நான் மக்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறேன்,
எனக்கோ அல்லது எனது கவர்னர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்த முறைப்பாட்டுக்கும்
தீர்வு வழங்கப்படும், என்னிடத்திலோ எனது கவர்னர்களிடத்திலோ மக்களுக்குச்
சேரவேண்டிய ஒரு உரிமை இருந்தால் அது உடனடியாக மக்களுக்கு வழங்கப்படும், சில மனிதர்கள் ஏசப்படுகிறார்கள் அடிக்கப்படுகிறார்கள் என்று மதீனாவாசிகள் என்னிடத்தில்
ஒரு முறைப்பாட்டை வைத்திருக்கிறார்கள், இவை போன்ற முறைப்பாடுகள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்கள் ஹஜ் காலப்பகுதியில் உரிய
ஆவணங்களுடன் வந்து, என்னிடமிருந்தோ அல்லது தமது கவர்னர்களிடமிருந்தோ
தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளட்டும் அல்லது
அவற்றை தானம் செய்து விடட்டும், அல்லாஹ் தானம் செய்பவர்களை விரும்புகிறான்” (4).
மேற்சொல்லப்பட்ட இரு
உதாரணங்களிலும் முக்கியமாக வலியுறுத்தப்படும் உண்மை என்னவெனின், முஸ்லிம் உம்மத் தனது சர்வதேசப்பணியை செய்வதற்கு கிலாபத் போன்றதொரு அரசியல் உடன்பாடு
எட்டப்படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஹஜ் கடமையின் போதே சிறந்த திட்டமிடலின் மூலம் தமது சர்வதேசப் பங்களிப்பை வழங்க
முடியும். இஸ்லாம் என்பது உலகிற்கு ஒரு அருள் என்பதை செயல்வடிவில் கொண்டுவர முடியும்.
மூன்றாவது,
ஹஜ் ஒரு செறிவான ஆன்மீகப் பயிற்சி நெறி: அல்குர்ஆனில் உள்ள ஹஜ் பற்றிய வசனங்களை பொதுவில்
பார்க்கின்ற பொழுது, “திக்ர்” எனும் அல்லாஹ்வை நினைவு
கூர்தல் பற்றி அடிக்கடி பேசியிருப்பதை அவதானிக்கலாம். உதாரணமான “ நீங்கள் அறபாவிலிருந்து திரும்பி வந்தால் அல்லாஹ்வை
நினைவுபடுத்துங்கள்;… அல்லாஹ் உங்களுக்கு
காட்டித் தந்தது போல் நினைவு படுத்துங்கள்;… உங்கள் கிரியைகளை முடித்துவிட்டால் உங்கள் பெற்றோரை
நினைவுபடுத்துவது போல் அல்லது அதனை விடவும் கடுமையாக அல்லாஹ்வை நினைபடுத்துங்கள்” (பகரா –
198, 199, 200). அதே போன்று மற்றோர்
இடத்தில் ஹஜ்ஜின் நோக்கமாகவே திக்ரைக் குறிப்பிடுகிறது, “தமக்கான பௌதீகப் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை
நினைவுபடுத்தவதற்காகவும்” (ஹஜ் – 28).
அதே போன்று பாவங்கள்,
வீண்தர்க்கங்களில் ஈடுபடக் கூடாது என்றும் தக்வாவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும்
அல்குர்ஆன் கூறுகிறது “ஹஜ் சில குறிப்பிட்ட
மாதங்களுக்குரியது, அந்த மாதங்களில் ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் மனைவியுடன்
உறவு கொள்ள வேண்டாம், பாவம் செய்ய வேண்டாம், வீண்தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம், நீங்கள் செய்யும் நற்கருமங்களை அல்லாஹ் நன்கறிவான், ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களை தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், மிகச் சிறந்த தயார்நிலை தக்வாவாகும்”
(பகரா – 197). இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் நபியவர்கள் கூறினார்கள்
“யார் மனைவியுடன் உறவு கொள்ளாது,
பாவங்களில் ஈடுபாடாது, ஹஜ்ஜை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பெற்றெடுக்கப்பட்ட
குழந்தை போன்று பாவங்கள் அற்றவராக மாறுவார்” என்றார்கள்,
(புஹாரி).
மேற்குறித்த அல்குர்ஆன்
வசனங்கள் ஹதீஸ்களைப் பார்க்கின்ற பொழுது, ஹஜ் என்பது குறிப்பிட்ட காலம் ஓரிடத்தில் மனிதர்களை ஒன்றிணைத்து வழங்கப்படுகின்ற
செறிவானதொரு ஆன்மீகப் பயிற்சி நெறி என்பது புலனாகின்றது. இத்தகைய செறிவானதொரு பயிற்சி
நெறிக்கு மனிதன் உற்பட வேண்டும் என்பது ஹஜ்ஜின் ஒரு மக்ஸத். அதாவது பல்வேறு வித்தியாசப்பட்ட
செயற்பாடுகளுடன், மனித நடத்தைகளையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்தி,
அல்லாஹ்வுடன் அவனை சங்கமிக்க வைக்கின்ற ஒரு வேலை நடை பெறவேண்டும். இதனை கலாநிதி
ரைஸுனி அவர்கள் “தௌரா தர்பவிய்யா” தர்பியா பயிற்சி நெறி என்றார்கள்(5). கலாநிதி கர்ளாவி அவர்கள் “ஷுஹ்னா ரூஹிய்யா” ஆன்மீக சார்ஜ் பண்ணுதல் என்றார்கள் (6).
இக்கருத்தை இன்னும்
தெளிவு படுத்தும் வகையில், கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் கூறுகிறார்கள்,
ஹஜ் என்பது ஏனைய எல்லா இபாதத்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான இபாதத்தாகும்,
அதில் அவனது உடம்புக்கும் உள்ளத்திற்கும் அறிவுக்கும் செல்வத்திற்கும் நேரத்திற்கும்
எல்லாவற்றிற்குமான பயிற்சி நடைபெறுகின்றது, ஹஜ்ஜில் சிரமம், போராட்டம், பிரார்த்தனை, திக்ர், சிந்தனை, பொறுமை, தியாகம், செலவழித்தல் என அனைத்தும் உள்ளடங்கியிருக்கிறது என்கிறார்(7).
(1). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,
கட்டுரை, அல் அமலுல் இஸ்லாமி பைனஸ் ஸியக் அத்தன்லீமிய்யா
வல் முபாதராத் அல் அபவிய்யா, அல் இஸ்லாஹ் வெப்தளம், 13 மே 2017.
(2). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,
மகாஸிதுல் இபாதாத் விரிவுரைத் தொடர், 10 வது அமர்வு, அல்மகாரிபிய்யா தொலைக்காட்சிச் சேவை, 2016.
(3). கலாநிதி யூசுப் அல்கர்ளாவி,
அல் இபாதா பில் இஸ்லாம், மக்தபது வஹ்பா, கெய்ரோ, 24ம் பதிப்பு, 1995, பக்கம் 304.
(4). கலாநிதி யூசுப் அல்கர்ளாவி,
அல் இபாதா பில் இஸ்லாம், மக்தபது வஹ்பா, கெய்ரோ, 24ம் பதிப்பு, 1995, பக்கம் 309.
(5). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,
மகாஸிதுல் இபாதாத் விரிவுரைத் தொடர், 10 வது அமர்வு, அல்மகாரிபிய்யா தொலைக்காட்சிச் சேவை, 2016.
(6). கலாநிதி யூசுப் அல்கர்ளாவி,
அல் இபாதா பில் இஸ்லாம், மக்தபது வஹ்பா, கெய்ரோ, 24ம் பதிப்பு, 1995, பக்கம் 302.
(7). கலாநிதி அஹ்மத் ரைஸுனி,
மகாஸிதுல் ஹஜ் வல் உம்ரா, கட்டுரை, ஷபகா அல் பிக்ஹிய்யா இணையத்தளம், 2008.