Monday, March 21, 2016

இர்ஷாதுல் முஜ்தமஃ

எண்ணக்கருவும் மூலோபாயங்களும்

அறிமுகம்

இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது இஸ்லாமிய தஃவா பாரம்பரியத்தில் மூன்றாவது செயற்பரப்பைக் குறிக்கும் சொல்லாகும். தனிமனிதன்,  குடும்பம், சமூகம்,  நாடு, மனித குலம் என விரிந்து செல்லும் தஃவா பரப்புக்களில் சமூகம் என்ற பரப்பு முஜ்தமஃ என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. அங்கு நடைபெற வேண்டிய பணி என்ன என்பதை இரத்தினச் சுருக்கமாக விளங்கப்படுத்தும் சொல்லே இர்ஷாத் என்பதாகும்.

இங்கு இர்ஷாத் என்பதன் மொழி ரீதியான கருத்தைப் பார்க்கும்போது அதனுள்ளே ஒரு அற்புதமான கருத்து மறைந்திருக்கிறது. அறபுமொழியில் ருஷ்த்என்ற சொல் நல்லது என்ற கருத்தைக் குறிப்பது போலவே ஒருவித முதிர்ச்சி நிலையையும் குறிக்கிறது. மனிதன் சொத்துக்களை நிர்வகிக்கும் தகுதி நிலையை அல்குர்ஆன் ருஷ்த் என்றுதான் அழைத்தது. இதனால்தான் நல்லாட்சி என்ற கருத்தைக் குறிக்க ஹுக்ம் ரஷீத்என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நல்லாட்சியின் பொருள் பரப்பு வாசகர்கள் நன்கறிந்த ஒரு விடயம் என்பதால் ருஷ்த்என்ற சொல்லின் மூலக் கருத்தை அவர்கள் இலகுவில் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். அந்தவகையில் இர்ஷாத் என்பதன் மூலம் நல்லதை நோக்கி வழிநடாத்துதல் அல்லது சமூக முதிர்வு நிலையை நோக்கி வழிநடாத்துதல் என்று பொருள் கொள்ளலாம்.

இங்கு வழிநடாத்துதல்அல்லது வழிகாட்டுதல்என்ற பதப் பிரயோகங்களில் ஒரு வித மேலாதிக்கம் அல்லது திணிப்பு தொணிப்பதாக சில சமயங்களில் சிலர் நினைக்கின்றனர். அவர்களது இந்தப் புரிதலுக்கு ஒரு காரணமிருக்கிறது. அதாவது வழிகாட்டுதல்என்று சொல்லும் போது அது குறித்த ஒரு மனிதக் குழுமத்தின் பணி அல்லது குறித்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பணி என்று அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள். எனவே,  பிறருடைய சிறப்பியல்புகளைக் கருத்தில் கொள்ளாத ஒரு மேலாதிக்கம் அங்கு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் உண்மையில் வழிகாட்டுதல் என்பது அல்லாஹ்வின் பணி அல்லது அல்குர்ஆனுடைய பணி. அதனை மேற்கொள்ளும் முயற்சியையே ஒரு மனிதக் குழுமமோ அல்லது இஸ்லாமிய இயக்கமோ செய்கிறது. இந்த அடிப்படையில் புரிந்து கொள்கிற போது அங்கு மேலாதிக்கம் என்ற கருத்துக்கு இடமில்லை. அல்குர்ஆனின் அடிப்படைப் பணியே வழிகாட்டுதலாகும். அந்தவகையில் சமூகம் என்ற பரப்பின் மீதான அல்குர்ஆனின் பணி எத்தகையது என்பதே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் மூலம் விளங்கப்படுத்தப்படுகிறது.

பரிபாஷைக் கருத்து

மேற்கூறப்பட்ட மொழிப் பின்புல விளக்கத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது,  இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் பரிபாஷைக் கருத்தை இவ்வாறு விளக்கலாம். அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் இலக்குகளை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்காக அர்த்தபூர்வமான முயற்சியில் ஈடுபடுவதாகும். இது ஒரு மக்கள் குழுமத்தின் மீது செயற்படுத்தப்படும்.

இந்த வரைவிலக்கணம் இர்ஷாதுல் முஜ்தமஃ குறித்து சில அடிப்படைகளைக் கூறுகிறது. இர்ஷாதுல் முஜ்தமஃ எனும் செயற்பாட்டுக்கு இலக்குகள் இருக்கின்றன. அவற்றை அடைந்து கொள்வதற்கான மூலோபாயங்கள் இருக்கின்றன. நெறிப்படுத்துவதற்கான அணுகுமுறைகள் இருக்கின்றன. இதற்கு ஒரு இலக்குக் குழுவினர் காணப்படுகின்றனர். இதனை செயற்படுத்துவோர் இருக்கின்றனர்.

இலக்குகள்

இர்ஷாதுல் முஜ்தமஃஇன் பரிபாஷைக் கருத்தில் அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் இலக்குகள்என்ற ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “…தீனை நிலைநாட்டுங்கள். அதிலே பிரிவிணையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதைத்தான் இப்றாகீம்,  மூஸா,  ஈஸா (அலை) போன்றோருக்கு சொல்லப்பட்டதும், உங்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதுமாகும்…” (ஷுரா – 74)  இங்கு பொதுவாக நபிமார்கள் மூலம் மனித சமூகத்திடம் அல்லாஹ்தஆலா தீனை நிலைநாட்டுமாறும் அதில் கருத்தொற்றுமையுடன் காணப்படுமாறும் கேட்டுக் கொள்கிறான். 

இமாம் இப்னுல் கையிம் கூறுவது போல் தீன் நிலைநாட்டப்படுதல் என்பது உலகில் மனித நலன் காக்கப்படுகிறது என்று பொருளாகும்.
அந்த வகையில் குறித்த ஒரு மனிதக் குழுமத்தின் மீது அல்லது குறித்ததொரு நிலப் பிரதேசத்தில் தீன் நிலை நாட்டப்படுகிறது எனின்,  அதன் அடிப்படைப் பொருள் அங்கு மனித நலன்கள் மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றப்படுகின்றது அல்லது அங்கு சுபீட்சமான மனித வாழ்வுக்கு ஏற்ற சிறந்த சூழல் காணப்படுகின்றது என்பதாகும்.

இந்தக் கருத்தைப் பிரதிபளிக்கும் வகையிலேயே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் இலக்குகள் குறித்த இமாம் ஹஸனுல் பன்னாவின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன. இமாமவர்கள் கூறுகிறார் : அவர்கள் பரஸ்பர அன்பு கொண்ட சகோதரர்கள், அங்கு சமத்துவம் சிறந்து பேணப்படும். அவர்கள் குடும்பங்களில் சந்தோசம் வீற்றிருக்கும், உயர் பண்பும் ஆரோக்கியமும் கொண்ட சூழல் அது. பௌதீக உழைப்பும் அபிவிருத்தியும் அங்கு முனைப்புடன் காணப்படும். அந்த சமூகத்தில் நீதி நிலை நாட்டப்படும். மக்கள் தமது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பர். அங்கு பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டு முயற்சியும் மேலோங்கியிருக்கும். சத்தியத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் துணிவு கொண்ட மக்கள் அவர்கள் (ஜரீததுல் இஃவான் முஸ்லிமூன் - துல்கஃதா - ஹி 1352) என்பதாக இமாமவர்கள் இந்தக் கருத்தை விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் இமாமவர்களின் நேரடி வார்த்தைகளன்றி அவர் விரிவாகப் பேசிய விடயங்களின் சுருக்க வடிவமாகும்.

இதனை இன்னும் எளிமையாகக் கூறினால் சகோதரத்துவம்,  சமத்துவம்,  சந்தோசம்,  பண்பாடு,  ஆரோக்கியம்,  அபிவிருத்தி,  நீதி,  பொறுப்புணர்வு,  ஒத்துழைப்பு,  தஃவா போன்ற விழுமியங்களை அடைந்து கொள்வதே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் இலக்குகளாகும்.

இங்கு மனித நலனை நிறைவேற்றக்கூடிய அனைத்து விழுமியங்களும் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பொருள் கொள்ளப்பட மாட்டாது. மாற்றமாக முதிர்வு நிலைச் சமூகம் ஒன்றைப் பற்றிய காட்சி வடிவம் ஒன்றை எடுத்துக் காட்டும் வகையிலேயே சில விழுமியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கு பிரதானமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனின்,  மனித நலன் நிறைவேற்றப்படுதல் என்பதுவே,  தீனை நிலை நாட்டுதல் என்பதாகும் அல்லது தீன் நிலை நாட்டப்படுவதால் மிகச் சரியாக மனித நலன் நிறைவேற்றப்படுகிறது. அந்தவகையில் எவையெல்லாம் மனித நலனாகக் காணப்படுகின்றதோ அந்த ஒவ்வொரு விடயமும் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற எண்ணக்கருவின் இலக்குகளாகக் காணப்படும்.

இந்தோனேஸிய அறிஞரான உஸ்தாத் அனீஸ் மத்தா அவர்கள் இது குறித்து முன்வைத்த ஒரு கருத்தையும் இங்கு பகிர்ந்து கொள்வது பொறுத்தம் என்று நினைக்கிறேன். பொதுவாக அல்லாஹ்வை நோக்கி மக்கள் அழைக்கப்படுதல் அடிப்படையானது. ஆனால் அதனை ஏற்பதில் அவர்களுக்கு தெரிவுச் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும் பொதுவாக சமூகத் தளத்தில் மக்கள் மார்க்க உணர்வு கொண்டவர்களாக,  மார்க்கத்துடன் நெருக்கமானவர்களாக வாழும் சூழல் காணப்படல் வேண்டும். இதற்காக உழைக்கும்போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. 

அதில் முதலாவதும் முக்கியமானதும் சுதந்திர சூழல். ஒவ்வொரு மனிதனும் தான் சுதந்திரமாக தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும் சூழல் காணப்படல் வேண்டும். ஒரு மனிதனிடத்தில் ஈமான் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது என்பது போல் குப்ரும் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது. குறித்த ஒரு அரசியல் போக்கு நிர்ப்பந்திக்கப்படக் கூடாது என்பது போல் குறித்த ஒரு அரசியல் போக்குக்கு எதிரான அடக்கு முறையும் காணப்படக் கூடாது.

இரண்டாவது பகுத்தறிவுச் சூழல். இஸ்லாம் தனது நம்பிக்கைகளையும் சரி ஏனைய போதனைகளையும் சரி ஏற்றுக் கொள்வதற்கான அல்லது சரி காண்பதற்கான நிபந்தனையாக பகுத்தறிவையே முன்வைக்கிறது. எந்தவொரு விடயத்தையும் கண்மூடித்தனமாக சரி காண வேண்டும் என இஸ்லாம் என்றைக்கும் போதித்தது கிடையாது. அந்தவகையில் பகுத்தறிவுச் சூழல் எந்தளவுக்கு அதிகரிக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு இஸ்லாத்தின் போதனைகளை நோக்கி மக்கள் வருவார்கள்.

மூன்றாவது வளமான பொருளாதாரச் சூழல். இதன் பொருள் மக்கள் பசியும் பயமும் இன்றி இருத்தலைக் குறிக்கின்றது. அல்குர்ஆன் இந்தக் கருத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றது. அவர்கள் இந்த ஆலயத்தின் இரட்சகனை வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு உணவளித்தான். அவன்தான் அவர்களது அச்ச சூழலிலிருந்து பாதுகாப்பளித்தான்” (குறைஷ்) இங்கு பசியும் பயமும் நீக்கப்பட்ட வளம் நிறைந்த ஒரு பொருளாதார சூழலிலேயே வணக்கம் சாத்தியப்படுவதாக அல்லாஹ்தஆலா கூறுகிறான்.
இந்த மூன்று அம்சங்களும் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டின் முக்கிய இலக்குகள் என்பதில் சந்தேகமில்லை. அந்தவகையில் தீன் எனும் மனித நலனை நோக்கிய பயணத்தில் சமூக மட்டத்தில் அடையப் பெற வேண்டிய முக்கிய இலக்குகளாக இவை காணப்படுகின்றன.

மூலோபாயங்கள்

இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி எவ்வாறு மேற்கொள்ளப்படல் வேண்டும்? அதற்கான பிரதான மூலோபாயங்கள் என்ன? என்பது தொடர்பில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் பேசும்போது பிரதானமாக நான்கு வகையான மூலோபாயங்களை முன்வைக்கின்றார்கள்.

முதலாவது நல்லவற்றை ஏவுதல் என்ற பரப்பு. அதனை இமாமவர்கள் பயனள்ளவை பரப்பப்படுதல்,  உயர்ந்த விடயங்கள் தூண்டுதல் அளிக்கப்படல்,  எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள் ஏவப்படல், என்று குறிப்பிட்டுள்ளார்கள். அல்குர்ஆன் முன்வைக்கும் அல்-அம்ரு பில் மஃரூப் என்ற கருத்தே இங்கு பேசப்பட்டுள்ளது.

இரண்டாவது தீமை தடுக்கப்படுதல் என்ற பரப்பு. இது குறித்து இமாமவர்கள் விளக்கும்போது எல்லோரும் வெறுக்கக்கூடிய விடயங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. அவற்றுக்கெதிரான ஒரு வேலைத்திட்டம்,  போராட்டம் எப்பொழுதும் காணப்படல் வேண்டும். அத்துடன் தாழ்ந்த விடயங்கள் அற்பமானவை அகற்றப்படல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்றாவது இஸ்லாமிய விழுமியங்களை நோக்கி பொதுக்கருத்து ஈர்க்கப்படுதல். இங்கு பொதுக் கருத்து என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பினரதும் கூட்டு நலனை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒரு பொதுநிலைப்பாட்டைக் குறிக்கும். இது பிரச்சினைகள்,  தேவைகள் என பல விடயங்கள் சம்பந்தப்பட்டதாகக் காணப்பட முடியும். இந்த பொது நிலைப்பாடுகள் இஸ்லாமிய சிந்தனைக்கும் விழுமியங்களும் முரணாக அமையாது அவற்றினடிப்படையில் அல்லது குறைந்தபட்சம் அவற்றிற்கு நெருக்கமானவையாக அமைவதற்காக எடுக்கப்படும் முயற்சியையே இது குறிக்கிறது.

நான்காவது செயல் வடிவங்கள் உருவாக்கப்படுதல். அதாவது இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டில் அடைய நினைக்கும் இலக்குகள் வெறுமனே கோட்பாட்டு வடிவமாக மாத்திரம் முன்வைக்கப்படுவதில் எந்த நேரடி மாற்றமும் சமூகத்தில் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மாற்றமாக அவற்றை சமூகத் தளத்தில் நிகழ்த்திக் காட்டுவதற்கான செயல்வடிவங்கள் உருவாக்கப்படுகின்ற பொழுதே நாம் எதிர்பார்க்கும் உண்மையான விளைவுகளைக் காண முடியும். நாம் அழைக்கும் அனைத்துப் பயனுள்ள நன்மையான விடயங்களுக்கும் மாதிரிகள் அவசியம். அதுபோல் நாம் அகற்ற நினைக்கும் அனைத்து தீமைகளுக்கும் மாற்றீடுகள் தேவை. இது மனித முன்மாதிரிகளாகவும் காணப்படலாம். முறைமைகளாகவும் இருக்கலாம். நிறுவனங்களாகவும் அமையலாம்.

இந்த இடத்தில் மற்றொரு முக்கிய விடயத்தையும் தொட்டுக் காட்டிச் செல்வது பொறுத்தம் என நினைக்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு சமூக சூழலில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டை முன்னெடுக்கும் போது அங்கு அவர்களது சிந்தனையில் நிகழ வேண்டிய ஒரு மூலோபாய மாற்றம் இருக்கிறது. அது இரண்டு பரப்புக்களில் நிகழ வேண்டியிருக்கிறது.

ஒன்று சிறுபான்மை என்பது ஒரு பலவீனமல்ல. மிகப் பெரும்பாலும் நாம் சிறுபான்மை என்பதை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே வரையறை செய்கிறோம். இதனால்தான் நாம் சிறிய தொகையினர். எம்மால் எதுவும் செய்ய முடியாது. நாம் பலவீனமானவர்கள் என்று எம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்கிறோம். இங்கு ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மை,  பெரும்பான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது மாத்திரமல்ல அது அரசியல், கல்வி,  பொருளாதாரம்,  தொடர்புகள் போன்ற பல காரணிகளை உள்ளடக்கிய ஒரு விடயம். அந்தவகையில் எண்ணிக்கையில் குறைவு என்பது பலவீனத்தின் அடையாளமல்ல. குறைந்த எண்ணிக்கையுடன் ஏனைய காரணிகளின் பலம் ஒரு சமூகத்தின் முக்கியத்துவத்தை உயர்த்துவதற்குப் போதுமானதாகும். 

அல்குர்ஆன் கூறுகிறது பூமியில் பலவீனர்களாய் ஆக்கப்பட்டவர்களுக்கு நாம் அருள்பாலிக்க விரும்புகிறோம். அவர்களை தலைவர்களாகவும்,  வாரிசுகளாகவும் நாம் மாற்றுவோம்” (கஸஸ் - 05)
இந்த வசனம்,  குறைந்த எண்ணிக்கை ஒரு பலவீனமல்ல என்ற நம்பிக்கையைத் தருகிறது. 

ஆனால் இங்கு ஒரு முக்கிய நிபந்தனை இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையினர் அல்லது சிறுபான்மையினர் பொது இலக்கும் ஒருமைப்பாடும் அற்ற சிதறிய சமூகமாகக் காணப்படுவார்கள் எனின்,  நிச்சயமாக அவர்கள் பலவீனமானவர்கள்தான். இக்கருத்தையே மேற்கூறப்பட்ட வசனத்திற்கு முன்னைய வசனத்தில் பிர்அவ்ன் பனூ இஸ்ரவேலர்களை பொது இலக்கற்ற பல குழுக்களாகப் பிரித்துவிட்டான். அதனாலேயே அவர்கள் பலவீனமடைந்தார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது.

எனவே,  சிறுபான்மைச் சூழல் ஒன்றில் இர்ஷாதுல் முஜ்தமஃ பணி வெற்றி பெற வேண்டும் எனின் அங்கு பொது இலக்கும் ஒருமைப்பாடும் முக்கியமானவை. அதுதான் அவர்களை எண்ணிக்கையைத் தாண்டி பலம் பெறச் செய்யும் காரணியாகும்.

இரண்டாவது,  நாம் செயற்படும் எல்லை குறித்த பார்வை,  குறித்த ஒரு நிலப் பிரதேசத்தில் செயற்படுகின்ற பொழுது அந்த முழு நில எல்லையும் நாம் செயற்படுவதற்கான தளம் என்ற பார்வை முக்கியமானது. அதாவது எமது தாயகத்தில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது இலங்கை வாழ் அனைத்து மக்களுக்குமான ஒரு செயற்திட்டமாகும். அது முஸ்லிம்களை மாத்திரம் இலக்கு வைத்த ஒரு வேலைத்திட்டமல்ல. 

இங்கு முதன்மைப்படுத்தல்கள்,  திட்டப் பரப்புக்கள் என்பன காலத்திற்கும் தேவைக்கும் இயலுமைக்கும் ஏற்ப மாற்றமுற முடியும். அது படிப்படியாக வளர்ச்சி காண வேண்டிய ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால் எமது தஃவாப் பார்வை முழு நிலப் பிரதேசத்தையும் ஒருமித்து நோக்குவதாகக் காணப்படல் வேண்டும்.

அணுகுமுறைகள்

எந்தவொரு பணியும் மிகச் சிறந்த அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பது அல்குர்ஆனினதும் சுன்னாவினதும் வழிகாட்டல். ஒரு செயற்திட்டத்தை நெறிப்படுத்தி,  அதனை முன்னோக்கித் தள்ளும் உந்து சக்தியாகத் தொழிற்படக் கூடியவை மிகச் சிறந்த அணுகுமுறைகளாகும். அந்தவகையில் இர்ஷாதுல் முஜ்தமஃ எனும் பாரியதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்போது,  அதனை அழகுபடுத்தும். அதன் வெற்றியை உத்தரவாதப்படுத்தும் அணுகுமுறைகள் காணப்படுகின்றன.

முதலாவது பங்கு கொள்ளல் அணுகுமுறை,  தஃவாவில் தவறாகப் புரியப்பட்ட அல்லது தவறாக வியாக்கியானப்படுத்தப்பட்ட விடயங்களில் ஒன்று என்னவெனில்,  இஸ்லாமிய தஃவாவின் இலக்கு பிரத்தியேகமான ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதாகும் என்ற விளக்கம். அதாவது அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்புக்குப் புறம்பான அல்லது அதனை மறுதலித்துவிட்டு புதிய ஒரு சமூகக் கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய இஸ்லாமிய இயக்கங்களின் பிரதான அழைப்பு என்ற ஒரு தவறான விமர்சனம் முன்வைக்கப்படுவதைக் காண்கிறோம். உண்மையில் இது எந்த அடிப்படையும் அற்ற ஒரு விமர்சனம். நடுநிலை இஸ்லாமிய சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த இஸ்லாமிய இயக்கங்களும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.

மாற்றமாக அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்பினுள்ளே முழுமையான பங்கு கொள்ளலின் அடிப்படையிலேயே எதிர்பார்க்கப்படும் இலக்குகள் அடையப் பெற வேண்டும் என்பதே அவற்றின் நிலைப்பாடாகும். இதனை உணர்த்தும் வகையிலேயே சமூக மாற்ற செயற்பாட்டுக்கு இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பரிபாஷைப் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இர்ஷாத் என்பது வழிநடாத்துதல் என்று பொருள் கொள்ளப்படுமேயன்றி,  ஒன்றை அழித்துவிட்டு புதிய ஒன்றை உருவாக்குதல் என்று பொருள் கொள்ளப்பட மாட்டாது. இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் சமூகத்துடன் என்றும் திறந்த அணுகுமுறையையே கடைபிடித்துள்ளார்கள். மூடிய அணுகுமுறையைக் கடைபிடிக்கவில்லை.

மற்றோர் புறத்தில் நாம் வாழும் சமூகக் கட்டமைப்பு தீமைகள் நிறைந்தது. அதனுடன் இரண்டறக் கலந்து விடுவது ஈமானைப் பாதித்து விடக்கூடியது என்ற நியாயத்தின் அடிப்படையிலும் சமூகத்த விட்டு ஒதுங்கிய ஒரு அணுகுமுறையை நோக்கி சிலர் செல்ல முற்படுகின்றனர். உண்மையில் இதுவும் சமூகம் குறித்த நுணுக்கமான ஒரு மதிப்பீடு அல்ல. நாம் செயற்பட வேண்டிய அடிப்படைத்தளமே அந்த சமூகம்தான் என்ற வகையில் ஒதுங்கிச் செல்வதற்கான நியாயங்களை நாம் காண முடியாது.
எனவே,  இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்பில் பங்கு கொண்டு மாற்றத்தை நோக்கிச் செல்லும் ஒரு பயணத்தையே குறித்து நிற்கின்றது.

இரண்டாவது,  கட்டம் கட்டமான செயற்பாட்டு அணுகுமுறை,  எந்தவொரு மாற்றமும் உடனடியாக நடந்து விடுவதில்லை. அல்குர்ஆன் கூறியது போல் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் இல்லாதிருக்கும் எனின் அவர்களுக்குத் தண்டனை வந்திருக்கும்” (  ஹஜ் 47  ) எனவே ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் இருக்கிறது,  இது ஒரு பிரபஞ்ச விதி. இந்த விதிமுறைகளை மீறி ஒரே பாய்ச்சலில் சமூக இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது. பாய்ச்சலில் காணும் அடைவுகள் நீண்ட காலம் நிலைத்திருப்பதுமில்லை. இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது ஒரு சமூக செயற்பாடு. நீண்ட இலக்குகளுடன் பயணிக்கும் ஒரு செயற்பாடு. எனவே,  அங்கு கண்டிப்பாக இந்த கட்டம் கட்டமான அணுகுமுறை இன்றியமையாததாகும்.

இங்கு ஒரு விடயத்தை நாம் முக்கியமாக மனம் கொள்ள வேண்டும். ஒரே பாய்ச்சலில் இலக்கை அடைய நினைப்பது எந்தளவு தவறானதோ அதேபோல் அமுலில் உள்ள சமூக ஒழுங்கினுள் நுழைந்து அடிப்படை இலக்குகளை மறந்து போவதும் தவறானதாகும். இந்த இரண்டு நிலைகளும் சமநிலை தவறிய நிலைகள் என்பது போல் இலக்குகளை நோக்கி நகராத ஒரு பயணமாகவும் இவை காணப்படுகின்றன.

யார் மீது கடமை?

கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் குறிப்பிடுவது போல், அல்லாஹ்தஆலா கூட்டுக் கடமைகளை சமூகத்தின் மீதே பொறுப்பாக அமைத்திருக்கிறான். அரசு என்பது சமூகத்திலிருந்து தோன்றுகின்ற,  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு அலகு. அந்தவகையில் ஒரு சமூகத்தில் நிகழ வேண்டிய அனைத்து மாற்றங்களுக்கும் அரசை மாத்திரம் பொறுப்பாக்கி விட்டு,  சமூகம் மௌனமாக இருந்து விட முடியாது. அரசும் தனது அதிகாரத்தை சமூகத்திடமிருந்தே பெற்றுக் கொள்கிறது. எனவே,  சமூகத்திற்கே அடிப்படைப் பொறுப்பு காணப்படுகின்றது.

அந்தவகையில்,  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒவ்வொரு அமைப்பினதும் நிறுவனத்தினதும் தவிர்க்க முடியாத கடமையாக இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி மாறுகின்றது. சமூகத்தின் இயங்கு சக்தியாகத் தொழிற்படுகின்ற இஸ்லாமிய இயக்கங்களின் பொறுப்பு இங்கு இரட்டிப்பாக மாறுகின்றது. யார் தொழிற்பட்டாலும் தொழிற்படாவிட்டாலும்,  யார் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் இஸ்லாமிய இயக்கம் இந்தப் பணியிலிருந்து பின்வாங்க முடியாது. இது ஒரு அடிப்படைக் கடமை. இது சமூக மட்டத்தில் கூட்டு வடிவில் தோன்றுகின்ற கடமை.

இந்நிலைக்கப்பால் இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் கடமை. ஒரு இயக்கத்தையோ நிறுவனத்தையோ சார்ந்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனிமனித வடிவில் ஒவவொரு முஸ்லிம் மீதும் கடமையான ஒரு பணி இது. இயக்கங்களை அல்லது நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் சில சமயங்களில் இயக்கம் செய்யட்டும் நிறுவனம் செய்யட்டும் என்று சும்மா இருந்து விடுகின்றனர். குறித்த சூழலில் தனக்கு இருக்கும் தனிமனிதக் கடமையை உணரத் தவறி விடுகின்றனர். இது ஆரோக்கியமான நிலையன்று. இஸ்லாமிய தஃவா என்பது ஈமானின் விளைவாகத் தோன்றுகின்ற கடமை. அதற்கு ஒரு கூட்டு வடிவம் காணப்படாத போதும் தனிமனிதனாக எந்த நிலையிலும் தன் மீது ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.


அந்தவகையில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி கூட்டு வடிவில் சமூகத்தின் மீதும்,  தனித்த வடிவில் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானது. இப்பணியை சிறந்த முறையில் மேற்கொள்பவர்களாக அல்லாஹ் எம்மை ஆக்குவானாக. 

Thursday, March 10, 2016

துணைத் தெரிவு எவ்வாறு நடைபெறல் வேண்டும்?

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் விடை தேட வேண்டிய கேள்விகளுள் மூன்றாவது கேள்வி யார்? என்ற கேள்வி. அதற்கான மற்றொரு பதிலை இந்தப் பத்தி பேசுகிறது.

மனித நடத்தை குறித்த ஆய்வுகளின் அடிப்படையில், துணைத் தெரிவின் போது மனித நடத்தை எவ்வாறு தொழிற்படுகிறது என்பது பற்றி பிரபல குடும்பவியல் அறிஞர் கலாநிதி ஜாஸிம் முதவ்வஃ அவர்கள் குறிப்பிடும்போது,  பொதுவாக ஒரு இளைஞன் தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போதும் சரி,  ஒரு யுவதி தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போதும் சரி எதுவித விதிமுறைகளும் அடிப்படைகளும் இன்றி தெரிவு நடைபெறுவதில்லை. அவர்கள் தமக்கென ஏதேனும் ஒரு விதியை வைத்தே தெரிவை மேற்கொள்கிறார்கள். பொதுவாக மனித நடத்தை இவ்வாறே தொழிற்படுகிறது என்கிறார்கள்.

துணைத் தெரிவு குறித்த மனித நடத்தையை அவதானிக்கும் போது சுமார் ஆறு வகையான விதிகளின் அடிப்படையில் இத்தொழிற்பாடு நடைபெறுகிறது என்கிறார். அவை குறித்த ஒரு சுருக்கமான பார்வையை அடுத்து நோக்குவோம்.

முதலாவது விதி : பெறுமானங்கள் - ஒருவரிடத்தில் தான் வாழும் சூழல்,  குடும்பப் பின்புலம்,  பெற்ற கல்வி போன்ற பல காரணங்களினால்,  தான் என்றும் மதிக்கும்,  எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க நினைக்காத சில பெறுமானங்கள் தோற்றம் பெற்றிருக்கும். உதாரணமாக,  இயற்கையை நேசித்தல்,  உயிரினங்களை நேசித்தல்,  சுத்தம்,  நேர்த்தி,  நேரம் தவறாமை போன்றன. இங்கு துணைத் தேடல் என்பது தான் மதிக்கும் பெறுமானத்தின் தேடலாகவே காணப்படும். தான் மதிக்கும் பெறுமானத்தைக் கடைபிடிக்கும் ஒரு இளைஞனை அல்லது ஒரு யுவதியைக் சந்திக்கும் போது அந்தத் தேடல் சம்பூரணமடைகிறது.

இரண்டாவது விதி : ஒத்திருத்தல் - தன்னைப் போன்ற பண்புகள்,  குணங்களைக் கொண்ட ஒருவரின் தேடலை இது குறிக்கும். இங்கு நல்ல பண்புகள் ஒன்று போல் இருத்தல் என்ற அடிப்படையில் மாத்திரம் தேடல் நடைபெற மாட்டாது. மாற்றமாக,  எதிர்மறையான பண்புகள் ஒன்று போல் இருப்பதும் கூட இங்கு தேடலின் அடிப்படையாகக் காணப்படும். அல்குர்ஆனில் சூரதுன் நூரில் நல்லவர்களுக்கு நல்லவர்கள்,  மோசமானவர்களுக்கு மோசமானவர்கள் என்று அல்லாஹ்தஆலா கூறிய விதியும் ஓரளவுக்கு இந்த ஒத்திருத்தல்விதியை வலியுறுத்துவதாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தனது பண்புகள் குணங்களுடன் இயைந்து செல்லக்கூடிய ஒருவரைத் தேடுகிறார். உதாரணமாக அமைதியான ஒருவர் அதே போன்ற அமைதியைத் தேடுகிறார். முற்போக்கான ஒருவர் தன்னைப் போன்று முற்போக்கானவரை எதிர்பார்க்கிறார். அதேபோல் உணர்ச்சி வசப்படுகின்ற ஒருவர் தன்னைப் போன்று உணர்ச்சி வசப்படுகின்ற ஒருவரைக் காணும் போது,  அவர் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது விதி : முழுமைப்படுத்தல் - தன்னிடமிருக்கும் ஒரு குறைபாட்டை அல்லது போதாமையை தனது துணையின்மூலம் முழுமைப்படுத்திக் கொள்ள நினைக்கும் தேடலை இது குறிக்கிறது. உதாரணமாக உடல் பருமனான ஒருவர் உடல் மெலிந்த ஒருவரைத் தேடுவார் அல்லது எப்பொழுதும் சீரியஸான இயல்பு கொண்ட ஒருவர் சுவாரஸ்யமான நகைச் சுவையான ஒருவரைத் தேடுவார். இங்கு தன்னை முழுமைப்படுத்துவதற்கான முயற்சி இந்தத் தேடலில் நடைபெறுகிறது.

நான்காவது விதி : உளப் பகுப்பாய்வு - இது ஒருவரது உள்ளத்தில் குறித்ததொரு ஆளுமை உயர்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் போது,  அந்த ஆளுமையைப் போன்றிருக்கும் ஒருவரின் தேடலைக் குறிக்கும். அநேகமாக தனது தந்தையைப் போன்ற கணவனைத் தேடுவதாகவும் தாயைப் போன்ற மனைவியைத் தேடுவதாகவும் இது அமைகிறது. இங்கு ஏற்கனவே உள்ளத்திற்குப் பிடித்தமான ஒரு ஆளுமையுடன் பகுப்பாய்வு செய்து,  அது போன்று அமைவதை தெரிவு செய்தல் நடைபெறுகிறது. ஒரு வகையில் இது ஒரு தற்காப்பு அணுகுமுறையாகும்.

ஐந்தாவது விதி : இடரீதியான நெருக்கம் - ஒருவர் தனது வாழிடம் தொழிலிடம் போன்றவற்றிற்கு ஏதுவாக அமையும் வண்ணம் காணப்படும் தேடலை இது குறிக்கிறது. ஒரே ஊர் அல்லது ஒரே பிரதேசம் அல்லது ஒரே அலுவலகம் அல்லது தனது ஊர்,  அலுவலகம் போன்றவற்றிற்கு அண்மையில் அமைந்துள்ள இடம் போன்ற காரணங்களாலும் தெரிவுகள் நடைபெறுகின்றன. திருமணத்தின் பின்னர் முக்கோண நாற்கோண வாழ்க்கை வாழ்வதை விடவும் தெரிவின் போதே இடரீதியான நெருக்கத்தை கவனத்தில் கொள்வது சிறந்தது என சிலர் நினைக்கின்றனர்.

ஆறாவது விதி : உடல் கவர்ச்சி பௌதீக உடம்பு,  புறத்தோற்றம் என்பவற்றின் மீதான ஈர்ப்பின் அடிப்படையில் அமையும் தெரிவை இது குறிக்கிறது. இன்று உலகில் அதிகமான இளைஞர்களின் தெரிவிற்கான பிரதான விதி இதுதான். கலாநிதி ஜாஸிம் முதவ்வஃ கூறுவது போல் இன்று அரசியல்,  பொருளாதார பூகோள மயமாக்கல் மாத்திரமன்றி உடன் கவர்ச்சிப் பூகோள மயமாக்கலும் நடைபெறுகிறது. அதன் பாதிப்பு குடும்ப வாழ்வின் தெரிவில் பெரிதும் தாக்கம் செலுத்தியிருக்கிறது.

இந்த ஆறு விதிகளிலும் எந்த விதி மிகவும் சிறந்தது? எந்த விதியின் அடிப்படையில் தொழிற்படுவது குடும்ப வாழ்வின் சந்தோசத்திற்கு வழியமைக்கும் என்ற கேள்வி உங்களுக்கு எழ முடியும்

உண்மையில் இங்கு எந்த விதியையும் ஒன்று சரியானது,  மற்றையது தவறானது என்று வகைப்படுத்த முடியாது. மாற்றமாக இந்த விதிகளுடன் இன்னும் சில விடயங்கள் இணைகின்ற பொழுதுதான் அவற்றின் பொறுத்தப்பாட்டை நாம் உறுதிப்படுத்த முடியும். அதாவது நபியவர்களது அணுகுமுறை இவற்றில் எந்த விதியுடனும் இணைந்து அமைகின்ற பொழுது அதுவே மிகவும் சரியான, பொருத்தமான தெரிவுமுறையாகக் காணப்படும்.

நபியவர்கள் இளைஞர்களுக்கு ஒரு வடிவிலும் யுவதிகளுக்கு மற்றொரு வடிவிலும் தெரிவணுகுமுறையை விளக்கினார்கள். இளைஞர்களைப் பார்த்துக் கூறினார்கள் ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள். அவளது அழகு, பரம்பரை,  செல்வம்,  மார்க்கம். மார்க்கப் பண்புள்ள பெண்ணை அடைந்து கொள். இல்லாதபோது நஷ்டமடைந்து விடுவாய்என்றார்கள். 

யுவதிகளைப் பார்த்து அல்லது அவர்களது பொறுப்பாளர்களைப் பார்த்துக் கூறினார்கள் மார்க்கம்,  பண்பாடு என்பவற்றில் நீங்கள் திருப்தி காணக்கூடிய ஒருவர் உங்களிடத்தில் பெண் கேட்டு வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள்என்றார்கள்.

இந்த இரண்டு ஹதீஸ்களும் சில உண்மைகளை வலியுறுத்துகின்றன.
இங்கு நபியவர்கள் அழகு,  பரம்பரை,  செல்வம் போன்ற அடிப்படைகளின் மீது தெரிவு அமைவதை தடை செய்யவில்லை. மாற்றமாக அந்த அடிப்படைகளுடன் மார்க்கம் என்ற அடிப்படையும் இணைந்து காணப்படல் வேண்டும் என்பதே நபியவர்களது வழிகாட்டலாகும். மார்க்கம் எனும் அடிப்படையைத் தவிர்த்து,  தனித்து அழகு,  பரம்பரை,  செல்வம் என்ற காரணிகளின் மீது மாத்திரம் தெரிவு அமையும் எனின்,  அங்கு குடும்ப வாழ்வின் நோக்கத்தை விட்டும் திசைமாறிய ஒரு நிலை ஏற்படுகிறது. இதனால்தான் அதனை நபியவர்கள் நஷ்டம் என்று அடையாளப்படுத்தினார்கள். மாத்திரமன்றி வேறு சில அறிவிப்புக்களில் எதிர்பார்ப்புக்கு மாற்றமான நிலை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தவகையில் தெரிவில் நபியவர்களது அணுகுமுறை என்பது,  மார்க்கம் என்ற அடிப்படையை மையப் புள்ளியாகக் கொண்டு ஏனைய அடிப்படைகள் அதனைச் சுற்றிச் சுழல்கின்ற வடிவில் அமைய வேண்டும். மார்க்கம் தவிர்ந்த வேறு ஒரு காரணி மையப் புள்ளி எனும் இடத்தைப் பெற முடியாது. அந்தவகையில் தெரிவின் போது மார்க்கத்துக்கு அதிகூடிய முக்கியத்துவமும் ஏனைய அம்சங்களுக்கு அவற்றிற்கு உரிய முக்கியத்துவமும் வழங்கப்படல் வேண்டும். ஏனைய ஒவ்வொரு அம்சத்திற்கும் வழங்கும் முக்கியத்துவம் தேவைக்கு ஏற்ப மாற்றமுற முடியும்.

இந்த உண்மையை விளக்கும் வகையிலேயே இமாம் ஹஸன் பின் அலியின் உபதேசமும் அமைந்திருக்கிறது. ஒரு தடவை அவரிடத்தில் ஒருவர் வந்து எனது மகளை பலர் திருமணம் பேசி வந்துள்ளனர். யாருக்கு முடித்துக் கொடுப்பது நல்லது என்று கேட்டார். அதற்கவர் அவர்களில் அதிகம் அல்லாஹ்வைப் பயந்தவனுக்கு திருமணம் செய்து வையுங்கள். ஏனெனில் அவன் அவளை நேசித்தால் கண்ணியப்படுத்துவான். வெறுத்தாலும் அநியாயம் இழைக்க மாட்டான் என்றார்கள்.

நபியவர்களது இந்த தெரிவணுகுமுறையுடன் ஏற்கனவே பேசிய விதிகள் இணைவதில் எந்தவித தவறும் இல்லை. மார்க்கமும் பண்பாடும் மையப் புள்ளியாக அமைந்த நிலையில் மேற்கூறப்பட்ட எந்த விதியின் அடிப்படையில் தெரிவு அமைவதும் சரியானதே.

அடுத்து இந்த இரண்டு ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது மற்றொரு உண்மையும் புலப்படுகிறது. ஆண்களை நோக்கிப் பேசும்போது அழகு,  செல்வம்,  பரம்பரை போன்ற காரணிகளை மார்க்கத்துடன் இணைத்துப் பேசப்பட்டுள்ளது. ஆனால் பெண்களை நோக்கிப் பேசும் போது அக்காரணிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மார்க்கமும் பண்பாடும் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வேறுபாட்டின் உளவியல் இரகசியம் என்ன?

அழகு என்பதை ஆண் அதிகமாக புற அழகாகப் பார்க்கிறான். அதாவது புற அழகில் அவன் அதிகம் திருப்தி காண்கிறான். ஆனால் பெண்ணின் அழகு பற்றிய பார்வை சற்று வித்தியாசமானது. அவள் புற அழகைத் தாண்டிய நடத்தை அழகையும் குண அழகையும் அதிகம் பார்க்கிறாள். இவற்றில் அவள் பெரிதும் திருப்தி கொள்கிறாள். இதனால்தான் மார்க்கமும் பண்பாடும் உள்ள ஒருவன் அவளது வாழ்வுக்கு சந்தோசம் தர முடியும் என நபியவர்கள் கருதினார்கள்.

அத்துடன் ஒரு ஆண் தனது வாழ்வை,  ஒரு பொறுப்பாகவும்,  பணியாகவும் பார்க்கின்றான். எனவே அங்கு செல்வமும் சமூக அந்தஸ்தும் முக்கியம் பெறுகிறது. எனவேதான் குடும்ப வாழ்வு பற்றிய தெரிவின் போதும் அவனிடத்தில் இந்த விடயங்கள் தொடர்பிலும் ஒரு கவனம் இருக்கிறது. ஆனால் பெண்ணைப் பொறுத்தவரை மேற்குறித்த விடயங்களில் மிகப் பெரும்பாலும் தனித்து நிற்பதை விடவும் ஆணுடன் இணைந்து நிற்பதையே விரும்புகிறாள். தான் பொறுப்பாக இருக்கிறேன் என்பதற்கு மேலாக தனக்கு ஒருவன் பொறுப்பாக இருக்கிறான் என்பது அவளுக்கு அமைதியைத் தருகிறது.


இறுதியாக எமது தெரிவணுகுமுறை எது என்பதை விடவும்,  அந்த அணுகு முறை எந்தளவு நபியவர்கள் காட்டித் தந்த மூலப் பெறுமானங்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதுவே இங்கு மிகவும் முக்கியமானது. எனவே தெரிவின் போது இந்த இடத்தில் சறுக்கி விடாதிருக்க அல்லாஹ் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.

Monday, March 7, 2016

சிந்தனைப் பாரம்பரியங்களுக்கிடையே சமநிலை காணுதல்

இமாம் ஷாபியும் இமாம் ஹஸனுல் பன்னாவும் 

இது ஆய்வுக்குரிய ஒரு தலைப்பு. ஆனாலும் இங்கு நான் ஆய்வொன்றை மேற்கொள்ளவில்லை. மாற்றமாக அடிக்கடி என்னில் தோன்றி மறைந்த, சிந்தனை உதிப்பொன்றை மாத்திரமே பரிமாறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இஸ்லாமிய சட்டக்கலையைக் கற்பிக்கத் தொடங்கிய நாள் முதல் அதிலும் குறிப்பாக மத்ஹபுகள் பற்றி அண்மையில் அடிக்கடி விரிவுரைகள் நடாத்திய வேளைகளில் மனதில் இந்த விடயம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

இமாம் ஷாபியின் சட்ட சிந்தனையைப் பற்றி எழுதியுள்ள நவீன ஆய்வாளர்கள் எல்லாம் ஒருமித்துப் பேசிய ஒரு உண்மை என்னவெனின்,  இமாம் ஷாபியின் சட்ட சிந்தனை,  அதற்கு முன்னர் தோன்றி வளர்ந்த ஹிஜாஸிய சட்ட சிந்தனையையும் கூபா சட்ட சிந்தனையையும் இணைத்த தனித்துவமான ஒரு சட்ட சிந்தனை என்பதாகும். இந்தக் கருத்து பல நூல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது,  அந்தப் புள்ளியின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அதன் இரகசியம் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள சிறியதொரு முயற்சி செய்தேன்.

உண்மையில் இமாம் ஷாபியுடைய பணியை சற்று ஆழ்ந்து பார்க்கின்ற பொழுது,  கிளைச் சட்டங்களைப் பெறுதல்,  அவற்றைக் கற்பித்தல்,  விளக்கமளித்தல் என்ற எல்லைகளைத் தாண்டி,  அல்குர்ஆனையும் சுன்னாவையும் மையப்படுத்திய சட்டவாக்கத்திற்கான பொதுச் சிந்தனை ஒன்றை இமாம் ஷாபி முன்வைத்திருக்கிறார். அதாவது இமாம் ஷாபி அவர்கள் கிளைச்சட்டங்களை மக்களுக்குப் போதிக்கும் ஒரு சட்ட அறிஞருடைய எல்லையுடன் மாத்திரம் தனது பணியை சுறுக்கிக் கொள்ளவில்லை,  அதற்கப்பால் சென்று கிளைச்சட்டங்கள் மூலாதாரங்களிலிருந்து பெறப்படுவதற்கான பொது விதிகளையும் அடிப்படைகளையும் இட்டார்,  

அப்பொது விதிகள் அவருக்கு முன்னைய மரபுகளை இணைக்கும் பாலமாக அமைந்திருந்தது. அர்ரிஸாலாஎனும் அவரது நூல் இதற்கான முதல் முயற்சியாகும். இஸ்லாமிய சட்ட சிந்தனைகளின் அடிப்படைகளைப் பேசும் முதல் நூலாக ரிஸாலா இனம் காணப்படுகிறது. ரிஸாலாவுக்கு வெளியில் இன்னும் பல நூல்களிலும் சட்டவாக்கத்திற்கான பொதுச் சிந்தனையை அவர் விளங்கப்படுத்தியுள்ளார்.

இமாம் ஷாபி அவர்கள் இத்தகைய ஒரு முயற்சியை மேற்கொண்டதன் பின்புலம் என்ன என்பதை நோக்கினால்,  ஏற்கனவே குறித்துக் காட்டப்பட்ட ஹிஜாஸிய,  கூபா சட்ட சிந்தனைகள் இரண்டும்,  அன்றைய நாட்களில் அல்குர்ஆனையும் சுன்னாவையும் மையப்படுத்திய சட்டவாக்கத்திற்கான பிரதானமான இரு அணுகுமுறைகளாகக் காணப்பட்டன. ஹிஜாஸ், கூபா என்ற நில எல்லைகளைத் தாண்டி இரு வகையான சட்ட அணுகுமுறைகளும் இஸ்லாமிய சாம்ராஜ்ய நிலப் பரப்பு எங்கும் பரந்து காணப்பட்டன என்பதே உண்மையாகும். 

அவற்றில் ஒன்று பகுத்தறிவுவாத அணுகுமுறை. இதனைத்தான் கூபா சட்ட சிந்தனை என்கிறோம். உண்மையில் பகுத்தறிவுவாதம் கூபாவில் மாத்திரம் காணப்பட்ட ஒன்றல்ல. பிரதானமாக இந்த அணுகுமுறை கூபாவை மையப்படுத்தியிருந்தது. அடுத்தது வாக்கியவாத அணுகுமுறை. இதனைத்தான் ஹிஜாஸ் சட்ட சிந்தனை என்கிறோம். வாக்கியவாதமும் ஹிஜாஸில் மையம் கொண்டிருந்தாலும் ஏனைய இடங்களிலும் பரவியிருந்தது.

பகுத்தறிவு வாத,  வாக்கியவாத அணுகுமுறைகளின் வேறுபாட்டு மையம் எது எனின் அல்குர்ஆனையும் சுன்னாவையும் விளங்க முற்படும்போது அல்லது அவற்றினை மையப்படுத்தி சட்டவாக்கத்தில் ஈடுபடும் பொழுது,  ‘தஃலீல்எனும் காரணங்களைக் கண்டறிந்து அதனடிப்படையில் சட்டவாக்கம் மேற்கொள்ளப்படல் வேண்டுமா? அல்லது காரணங்களைக் கண்டறியும் முயற்சியைத் தவிர்த்து நேரடியாக சட்ட வசனங்கள் பேசும் கருத்தில் நின்று மாத்திரம் சட்டவாக்கம் மேற்கொள்ளப்படல் வேண்டுமா? என்ற இந்த மையப் புள்ளியில் நின்று தான் இந்த இரு அணுகு முறைகளினதும் வேறுபாட்டுப் பரிமாணங்கள் அனைத்தும் எழுகின்றன.

தஃலீல்எனும் காரணம் கண்டறியப்படும் பொழுது,  அந்தப் காரணமே மையப் பொருளாக இருக்கும். காரணத்தை மையப்படுத்தியே சட்டங்களில் மாற்றங்கள் நிகழும். சில சமயங்களில் நேரடி வாக்கியக் கருத்துக்கு மாற்றமாகவும் சட்டங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் வணக்க வழிபாடுகளைப் பொறுத்தவரையில் அவற்றிற்கும் அல்லாஹ் காரணங்களை வைத்திருந்தாலும் கூட,  அவற்றினடிப்படையில் தொழிற்படுவதை விடவும் நேரடி வாக்கியப் பொருள் விளக்கத்தின் அடிப்படையிலேயே தொழிற்படல் வேண்டும் என பகுத்தறிவாத அணுகுமுறையாளர்கள் கருதுவர். காரணங்கள் கண்டறியப்படுதல் தவிர்க்கப்படும்பொழுது,  நேரடி சட்ட வசனங்களே மையப் பொருளாக இருக்கும். அவற்றின் நேரடி பொருள் விளக்கமே சட்டமாக அமையும்.

இங்கு பகுத்தறிவுவாத அணுகுமுறை காரணத்தைக் கண்டறிவதன் அடிப்படையில் சட்டவாக்கத்தை மேற்கொண்டது. அதேவேளை வாக்கியவாத அணுகுமுறை காரணத்தைக் கண்டறிவதைத் தவிர்த்து நேரடி பொருள் விளக்கத்தின் அடிப்படையில் சட்டவாக்கத்தை மேற்கொண்டது. இந்த இரு அணுகுமுறைகளுக்குள்ளேயும் மிதவாதப் போக்கும் இருந்தது. தீவிரவாதப் போக்கும் இருந்தது. அதாவது மற்ற அணுகுமுறைக்கு நெருக்கமான போக்கைக் கடைபிடித்தவர்களும் இருந்தார்கள். மற்ற அணுகுமுறையை விட்டும் மிகவும் தூரமான அணுகுமுறையைக் கடைபிடித்தவர்களும் இருந்தார்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலே குறிப்பிடப்பட்ட பகுத்தறிவுவாத,  வாக்கியவாத அணுகுமுறைகளைப் பொறுத்தவரை,  அவை முறையானதொரு ஒழுங்கில் காணப்பட்டது என்று சொல்வதற்கில்லை. அங்கு விதிகளும் முறைமைகளும் இருந்தன. ஆனால் அவற்றிற்கு தெளிவான வரையறைகள் இருக்கவில்லை. இமாம்களது மூளைகளில்தான் அவை வாழ்ந்தன. தெளிவாக எழுத்துருப் பெற்றிருக்கவில்லை. 

இதனால் ஒரு புதிய சட்ட விளக்கத்தை முன்வைப்பதற்கு ஒரு பொது முறைமை பேணப்படவில்லை. எனவே இரு அணுகுமுறைக்குள்ளேயும் மிதவாத,  தீவிரவாத நிலைகள் இயல்பாகவே தோற்றம் பெற்றன. இந்த இடத்தில்தான் இமாம் ஷாபிஈ யின் வகிபங்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சட்டவாக்க விதிகளில்,  முறைமைகளில் வரையறையற்ற நிலை சட்டவாக்கத் தொழிற்பாட்டில் பாரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட முடியும். இங்குதான் இமாம் ஷாபி அவர்கள் சட்டவாக்கத்திற்கான பொது சிந்தனையை ரிஸாலாவின் மூலம் முன்வைக்கிறார்கள். அதன் மூலம் பகுத்தறிவுவாதத்தின் தீவிர நிலைகள் கட்டுப்படுத்தப்பட்டதுடன்,  வாக்கியவாதத்தின் தீவிர நிலைகளும் கட்டுப்படுத்தப்பட்டன.

இமாம் ஷாபியின் இந்த முன்வைப்பு சூன்யத்திலிருந்து தோன்றவில்லை. மாற்றமாக நீண்டகால சட்டத்துறை அனுபவத்திலிருந்து தோன்றியது. இமாம் ஷாபி அவர்கள் மேற்சொன்ன இரு அணுகுமுறைகளையும் கற்றவர்,  மக்கா,  மதீனா நகரங்களில் இமாம் மாலிக் போன்றவர்களிடம் கற்றது போல் கூபாவில் இமாம் முஹம்மத் இப்னுல் ஹஸன் அஷ்ஷைபானி போன்றோரிடமும் கற்றார்கள். உண்மையில் அவர் கூபா சென்று திரும்பியதன் பின்னர் தான் ரிஸாலாஎன்ற நூலை எழுதியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் மூலம் இரண்டு அணுகுமுறைகளினது நல்ல விடயங்களைப் பாதுகாத்து,  தீவிரங்களைத் தவிர்த்து,  ஒரு புதிய சிந்தனையை நோக்கி இமாம் ஷாபி அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள்.

இங்கு இமாம் ஷாபி அவர்கள் நடைமுறையில் வாழ்ந்த இரண்டு சிந்தனைப் பாரம்பரியங்களிடையே சமநிலை கண்டிருக்கிறார்கள். அங்கு அவர் எந்தப் பாரம்பரியத்தையும் அடிப்படையில் பிழை காணவில்லை. இரண்டு பாரம்பரியங்களும் சந்திக்கும் புள்ளிகளை இனம் கண்டார். அவை இரண்டினதும் தீவிர நிலைகளை மறுதலித்தார். அதன் மூலம் இஸ்லாமிய சட்டவாக்கத்தை நெறிபிறழ்விலிருந்து பாதுகாத்தார்.

இதே வகையானதொரு பங்களிப்பைத்தான்,  இமாம் ஹஸனுல் பன்னாவிலும் நான் காண்கிறேன். இருவேறுபட்ட சிந்தனைப் பாரம்பரியங்கள், அணுகுமுறைகளுக்கிடையே சமநிலையைக் காண்பதில் இருபதாம் நூற்றாண்டில் வெற்றி கண்டவர்களில் இமாம் ஹஸனுல் பன்னாவுக்கு தனியானதொரு இடமிருக்கிறது. நம்பிக்கை மற்றும் பண்பாட்டியல் தளத்தில் சூபித்துவ அணுகுமுறைக்கும்,  ஸலபிய அணுகுமுறைக்குமிடையே சமநிலை காண்பதிலும் சரி,  சட்ட சிந்தனைத் தளத்தில் மத்ஹப்சார் அணுகுமுறைக்கும் குர்ஆன் சுன்னா சார் அணுகுமுறைக்குமிடையே சமநிலை காண்பதிலும் சரி இமாம் ஹஸனுல் பன்னா பெரிதும் வெற்றி கண்டிருக்கிறார்கள். 

இது குறித்து முன்னர் பல தடவைகள் எழுதப்பட்டிருந்தாலும் (பார்க்க : இருபது அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல்,  பயணம். இதழ் 46 ) இங்கு ஒரு சில விடயங்களைக் கோடிட்டுக் காட்டலாம் என நினைக்கிறேன். 

நம்பிக்கை மற்றும் பண்பாட்டியல் தளத்தில் சூபித்துவ பாரம்பரியத்திற்கும்,  ஸலபிய பாரம்பரியத்திற்கும் இடையே நீண்ட கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. அல்லாஹ் எங்கிருக்கிறான்?  அவனது பண்புகளைப் புரிந்து கொள்வது எவ்வாறு?  இல்ஹாம்,  கஷ்ப் போன்ற விடயங்களை எவ்வாறு நோக்குவது?  தாயத்து,  மந்திரித்தல் என்பன ஆகுமா?  வஸீலா தேடுதல்,  கபுருகளைத் தரிசித்தல், ஸாலிஹான மனிதர்களை நேசித்தல் போன்றவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது?  போன்ற பல்வேறு விவகாரங்களில் குறித்த இரு பாரம்பரியங்களும் ஏற்பு மறுப்பு என்ற இருதுருவங்களில் நிற்பதைக் காணலாம். இங்குதான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இத்தகைய விவகாரங்களைக் கையாள்வதற்கான பொதுச் சிந்தனையை முன்வைத்தார்கள். இந்த இடத்தில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இந்த இரு பாரம்பரியங்களையும் அடிப்படையில் மறுதலிக்கவில்லை. அவற்றிடையே சந்திக்கும் புள்ளிகளை அழகாக எடுத்துக் காட்டினார்கள். இதற்கான சான்றினை அவரது  மஜ்மூஅதுர் ரஸாஇல் எனும் கட்டுரைத் தொகுப்பிலே மிகத் தெளிவாகக் காணலாம்.

இதே அணுகுமுறையை சட்ட சிந்தனைத் தளத்திலும் காணலாம். மத்ஹப் சார் பாரம்பரியத்தையும் குர்ஆன் சுன்னா சார் பாரம்பரியத்தையும் இணைக்கும் பொதுச் சிந்தனையை,  இமாம்கள்,  கருத்து வேறுபாடுகள்,  இஜ்திஹாத், தக்லீத் போன்ற பல்வேறு விவகாரங்களை மையப்படுத்தி இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் விளங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

இங்கு பொதுச் சிந்தனை முன்வைப்பின் போது இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் குறித்த எந்தப் பாரம்பரியத்தையும்,  அணுகுமுறையையும் மறுதலிக்கவுமில்லை. இரத்துச் செய்யவுமில்லை. மாற்றமாக இரண்டையும் ஏற்று அதன் தனித்தன்மைகளை அங்கீகரித்து,  அவற்றின் தீவிரங்களைக் களைந்து பொது உடன்பாட்டுப் புள்ளிகளுக்கு வருவதே அவரது அணுகுமுறையாக இருந்திருக்கிறது.

எனவே,  பாரம்பரியங்களுக்கிடையே சமநிலை காணுதல் எனும் சிரமமான ஆனால் உன்னதமான ஒரு பணி இமாம் ஷாபி,  இமாம் ஹஸனுல் பன்னா ஆகிய ஆரம்ப கால,  நவீன கால இரு இமாம்கள் மூலம் நடைபெற்றிருக்கின்றமை அவர்களிடையேயான சிந்தனை ஒற்றுமையைப் பிரதிபளிக்கின்றது.

இத்தகைய ஒரு பணியை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?  என்ற ஒரு கேள்வியை நான் கேட்டுப் பார்க்கிறேன். இதற்குப் பலநூறு பதில்கள் அளிக்கப்பட முடியும் என்றிருப்பினும் எனக்கு மிகவும் ஹைலைட்டாகத் தோன்றிய இரு விடயங்களை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முதலாவது,  சமூகத்தின் வித்தியாசப்பட்ட போக்குகளிடையே சமநிலை காணுதல் என்பது ஷரீஆவின் பொது மகாஷிதுகளை அடைந்து கொள்வதற்கான வழியாகும். இமாம் ஷாபி,  இமாம் ஹஸனுல் பன்னா ஆகிய இருவரது முயற்சிகளையும் அடைவுகளையும் பார்க்கும் பொழுது அவர்கள் மிகத் தெளிவாக ஷரீஆவின் மகாஷிதுகளை அடையும் வகையிலே இந்த சமநிலைப்படுத்தலைக் கையாண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. 

உதாரணமாக நம்பிக்கை மற்றும் பண்பாட்டியல் தளத்தில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் செயலைத் தூண்டும் நம்பிக்கை குறித்துப் பேசியிருக்கிறார்கள். உள்ளத்தை உயிர்ப்பித்தலைப் பேசியிருக்கிறார்கள். உளப் போராட்டம்,  தொடர்ந்த செயற்பாடு,  இயங்குதன்மை போன்ற பல விடயங்களைக் குறித்துக் காட்டியிருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் நம்பிக்கை மற்றும் பண்பாடு சார் மகாஷிதுகள் என்பதில் சந்தேகமில்லை. இவைகளை அடைந்து கொள்ளும் வகையிலேயே உடன்பாட்டுப் புள்ளிகளை இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இனம் காட்டியிருக்கிறார்கள்.

அதுபோல் முன்னோர்கள் பற்றிய நல்லெண்ணம்,  தஜ்தீத் எனும் புனர்நிர்மாணம்,  சமூக ஒற்றுமை,  பரஸ்பர ஒத்துழைப்பு,  கூட்டு செயற்பாடு,  சிந்தனைச் சுதந்திரம் போன்ற பல்வேறு மகாஷிதுகளை அடையும் வகையிலேயே சட்ட சிந்தனைகள் தொடர்பிலான பொது சிந்தனை முன்வைப்பு காணப்படுகிறது.

எனவே,  சிந்தனைப் பாரம்பரியங்களுக்கிடயே சமநிலை காணுதல் என்பது ஒரு சூழ்நிலை சார் தேவையோ அல்லது ஒருவரது தனிப்பட்ட விருப்புகள் சார்ந்ததோ அல்ல. மாற்றமாக இஸ்லாமிய ஷரீஆவின் மகாஷிதுகளை அடைந்து கொள்ளும் ஒரு செயற்பாடாகும். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இரு இமாம்களினதும் முயற்சியும் பணியும் அமைந்திருந்தன.

இரண்டாவது,  கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போல்,  ‘தர்ஷீத்எனும் சமூக வழிநடாத்தல் என்பதன் பொருளே என்னவெனின் வேறுபட்ட சிந்தனைப் பாரம்பரியங்களுக்கிடையே சமநிலை வாழ்வைக் கற்றுக் கொடுப்பதாகும். அந்தவகையில் இது ஒரு அடிப்படைப் பணி. அறிஞர்கள் மீது கடமையான ஒரு பணி. அதனைத்தான் இமாம் ஷாபியும் இமாம் ஹஸனுல் பன்னாவும் செய்திருக்கிறார்கள். ஒரு சமூகம் இவ்வாறுதான் வழிநடாத்தப்படல் வேண்டும். ஒருபோதும் ஒரு தீவிரத்தை மறுதலித்து மற்றோர் தீவிரத்தை நோக்கி சமூகத்தை இழுத்துச் சென்றுவிடக் கூடாது. சமூகத்தைக் காப்பாற்றுகிறோம்,  சமூகத்திற்கு நன்மை செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு பலர் தவறு விடுகின்ற இடம் இதுதான். எனவே,  சமநிலை காணுதல் ஒரு அடிப்படையான சமூக வழிகாட்டுதல் அணுகுமுறை என்ற வகையிலேயே இரு இமாம்களும் இந்த அணுகுமுறையைக் கடைபிடித்திருக்கிறார்கள்.

இறுதியாக,  ஒரு சிறு ஆலோசனையுடன் இந்தப் பத்தியை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன். இங்கு இந்த இரு இமாம்களினதும் அணுகுமுறை குறித்துப் பேசப்பட்டமை வெறுமனே ஒரு சிலாகிப்புக்கு அல்ல,  அல்லது ஒரு சிந்தனைச் சுவைக்கு அல்ல. மாற்றமாக இன்றைய எமது சிந்தனை,  பண்பாடு மற்றும் தஃவா தளத்தில் இந்த அணுகுமுறையின் அவசியத்தை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனை நோக்கிய காத்திரமான செயல்சார் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதற்காகவே,  இது குறித்து இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. இன்றைய சிந்தனைச் சமர்களுக்குள்ளே பல்வேறு சிந்தனைப் பாரம்பரியங்கள் முட்டி மோதுகின்றன. இவை ஒன்றை ஒன்று எதிரியாக நோக்குகின்ற நிலையிலிருந்து மீண்டு வர வேண்டும். ஒரு கருத்தியலின் இருவேறு தீவிர நிலைகள், பல சமயங்களில் அவைதான் மிகவும் சரியானவை என்பது போல் விவாதிக்கப்படுகின்றன. அவ்வாறன்றி நிதானமாக நின்று எல்லாப் பாரம்பரியங்களிலும் உள்ள தீவிரங்கள் தவிர்க்கப்பட்டு,  இணைப்புப் புள்ளிகள் இனம் காணப்படல் வேண்டும். அதனை நோக்கி மக்கள் வழி நடாத்தப்படல் வேண்டும். 

இன்றைய சகவாழ்வு சிந்தனையினதும் தனித்துவச் சிந்தனையினதும் சமநிலை தேடல் வேண்டும். தேசத்தினதும் உம்மத்தினதும் மத்தியத்துவம் எது என்று பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் எங்களுக்கு ஷாபீக்களும் பன்னாக்களும் வேண்டும். சிந்திக்கக் கடவுக.


அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.