Friday, July 31, 2015

ஸாலிஹான வாழ்க்கைத் துணையை அடைந்து கொள்ளும் வழிகள்

துணையைத் தேடுதல் விடயத்தில் ஒரு முக்கிய ஆன்மீகப் பெறுமானம் குறித்து கடந்த அமர்வில் கலந்துரையாடினோம். ஸாலிஹான துணையை அடைந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் தானும் ஸாலிஹான ஒருவராக வாழுவது முக்கியமானது. அப்பொழுதே தனக்குரிய துணையும் அதேபோன்று ஸாலிஹான ஒருவராக அமைவார். இது அல்லாஹ்வின் விதி. இதன் அடிப்படையிலேயே சோடி சேர்த்தல் நடைபெறுகிறது.

இது ஒரு வாழ்வியல் விதி என்ற வகையில் ஸாலிஹான வாழ்க்கைத் துணையை அடைந்து கொள்ள விரும்பும் ஒருவர் பிரதானமாகக் கவனம் செலுத்த வேண்டிய சில வாழ்வியல் நடவடிக்கைகள் குறித்து இன்றைய அமர்வில் கலந்துரையாடலாம் என நினைக்கிறோம்.

அந்த வாழ்வியல் நடவடிக்கைகள் குறித்து பேச முன்னர் முக்கியமான ஒரு கருத்தை நாம் புரிந்து கொள்வது பொறுத்தமானது. நபியவர்கள் கூறியது போல் ஒரு மனிதன் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரூஹ் வழங்குவதற்காக வருவார்கள். அப்போது அவனது நான்கு விடயங்கள் எழுதப்பட்டு விடுகின்றன. அவனது ரிஸ்க், ஆயுள், செயல்,  அவன் சுபீட்சமாக வாழ்பவனா? கஷ்டத்துடன் வாழ்பவனா? (புஹாரி,  முஸ்லிம்)

இந்த ஹதீஸ் குறிப்பிடும் ரிஸ்க் என்ற சொல் இமாம்களின் பொதுவான விளக்கத்தின்படி,  மனித வாழ்வின் அனைத்து வசதிகளையும் சந்தோஷங்களையும் குறித்து நிற்கின்றது. எனவே,  திருமணம்,  ஸாலிஹான துணை, குடும்ப அமைதி, நல்ல பிள்ளைகள் என்ற அனைத்துக் கருத்துக்களையும் ரிஸ்க் என்ற சொல் உள்ளடக்கியிருக்கிறது.

அத்துடன், இந்த ரிஸ்க் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மனித நடத்தை நிர்ணயிக்கப்பட்ட ரிஸ்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ரிஸ்க் அதிகரிப்பதோ அல்லது குறைவடைவதோ நல்ல விளைவைத் தருவதோ அல்லது தீய விளைவைத் தருவதோ மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையிலான உறவு சீராக அமைவதிலும்,  அவனது நடத்தைகள் சீராக அமைவதிலும் தங்கியிருக்கின்றன. 

நபியவர்களது கீழ்வரும் ஹதீஸ் இந்தக் கருத்தை வலிமொழிகிறது. எவரது நோக்கம் மறுமையாகக் காணப்படுகிறதோ, அல்லாஹ்தஆலா அவரது முயற்சியை ஒன்று திரட்டுவான். உள்ளத்தில் திருப்தியை ஏற்படுத்துவான். அவர் எதிர்பார்க்காத போதும் உலகம் அவரைத் தேடி வரும். எவரது நோக்கம் உலகமாக இருக்கிறதோ அவரது தேடல்களை அல்லாஹ் சிதரடித்து விடுவான். வறுமை அவர் கண் முன்னே தெரிந்து கொண்டேயிருக்கும். வரையறுக்கப்பட்ட அளவு மாத்திரமே அவருக்கு உலகம் கிடைக்கும்” (அஹ்மத்) மற்றோர் அறிவிப்பில்,  “உலகை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுபவன் எந்தப் பாதாளத்தில் விழுந்து அழிந்தாலும் அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான்என்றார்கள். (இப்னுமாஜா)  

ஸாலிஹான துணையை அடைந்து கொள்வதற்கான சில வாழ்வியல் நடவடிக்கைகள்

1. தக்வா எனும் இறையச்சம் : அல்குர்ஆன் கூறுகிறது யார் அல்லாஹ்வைப் பயந்து கொள்கிறாரோ அவருக்கு முன்னால் எல்லா வாயில்களும் திறந்து விடப்படுகின்றன. அவன் எதிர்பாராத புறத்திலிருந்து அவனுக்கு ரிஸ்க் வழங்கப்படுகிறது…” (தலாக் 2,3) 

இறையச்சம் மனித வாழ்வின் தடைகளை நீக்கி விடுகிறது. எதிர்பாராத வகையில் அவனது வாழ்வைச் செழிப்படையச் செய்கிறது என்று இந்த வசனம் சொல்கிறது. இங்கு இறையச்சத்திற்கும் ரிஸ்கிற்குமிடையிலான நேரடித் தொடர்பு தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஸாலிஹான துணை ஒரு மிகச் சிறந்த ரிஸ்க்காகும்.

தக்வா என்பது ஒரு உளச்செயல். தனக்கு தீங்கு ஏற்படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வையே தக்வா என்போம். அல்லாஹ்வின் கட்டளைகள் அனைத்தும் மனிதனுக்கு நன்மை விளைவித்து அவனைத் தீங்கிலிருந்து காப்பாற்றும் வகையிலேயே அமைந்துள்ளன. அதனால்தான் பல இமாம்கள் தக்வாவை வரைவிலக்கணப்படுத்தும்போது அல்லாஹ் ஏவியவற்றை ஏற்று நடத்தலும் விலக்கியவற்றை தவிர்ந்து கொள்ளுதலும் என்றார்கள்.

2. துஆ : நபியவர்கள் கூறினார்கள் நிர்ணயிக்கப்பட்ட விடயங்கள் துஆவின் மூலம் மாற்றமடையும்என்றார்கள் (திர்மிதி). துஆ ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். கழா கத்ரில் மாற்றம் செய்யும் சக்தி அதற்கிருக்கிறது. அதனால்தான் நபியவர்கள் துஆ ஒரு முஃமினின் ஆயுதம்என்றார்கள் (ஹாகிம்). எனவே,  சிறந்த வாழ்க்கைத் துணையை அடைந்துகொள்ள விரும்புகின்றவர்கள் இடையறாது கடைப்பிடிக்க வேண்டிய ஒரு அமல் இது.

அதிலும் குறிப்பாக சிறப்புக்குரிய சில பொழுதுகள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பாக எங்கள் தேவைகளை முன்னிறுத்தி துஆச் செய்கின்ற பொழுது அல்லாஹ்தஆலா அவற்றை உடனடியாக நிறைவேற்றுவான். உதாரணமாக ஸஹர் நேரம்,  ஸுப்ஹுக்குப் பிந்திய நேரம்,  மஃரிபுக்கு முந்திய நேரம்,  ஜும்ஆ தினம்,  ரமழான் மாதம்,  லைலதுல் கத்ர்,  நோன்பு திறக்கும் நேரம்,  துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் போன்ற பல விஷேட சந்தர்ப்பங்கள் ஹதீஸ்களில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பங்களை குறிப்பாக எமது விஷேட துஆக்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக கீழ்வரும் ஹதீஸைப் பாருங்கள்.

நபியவர்கள் கூறினார்கள் இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ்தஆலா முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். வந்து சொல்கிறான் என்னிடம் கேட்பவர்கள் இருக்கிறீர்களா? நான் அவர்களுக்கு வழங்குவேன். என்னை அழைப்பவர்கள் இருக்கிறீர்களா? நான் அவர்களுக்குப் பதில் தருவேன். என்னிடம் பாவமன்னிப்புக் கேட்பவர்கள் இருக்கிறீர்களா? நான் அவர்களது பாவங்களை மன்னிப்பேன் என்று பஜ்ர் உதயமாகும் வரை கேட்டுக் கொண்டே இருப்பான்என்றார்கள். (புஹாரி)

துஆக் கேட்கும் பொழுது,  உங்களுக்காக மாத்திரமன்றி எப்பொழுதும் பிறருக்காகவும் துஆக் கேட்பதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் அறிந்த உங்கள் நெருங்கியவர்கள்,  ஸாலிஹான துணையை எதிர்பார்த்திருப்பவர்கள் இவர்களை உங்கள் துஆக்களில் மறந்து விடாதீர்கள். நபியவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்காக அவனுக்குத் தெரியாமல் துஆச் செய்கின்ற பொழுது அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவன் தனது சகோதரனுக்காக துஆச் செய்யும் பொழுது அவனுக்குப் பொறுப்பாக இருக்கும் மலக்கு ஆமீன் உனக்கும் அது போன்றே கிடைக்கட்டும் என்று துஆச் செய்யும்என்றார்கள். (முஸ்லிம்)

3. இரவுத் தொழுகை : நபியவர்கள் கூறினார்கள் பர்ளான தொழுகைகளுக்கு அடுத்ததாக மிகவும் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (முஸ்லிம்) என்றார்கள். இரவுத் தொழுகை என்பது பிறர் பார்வைகள் விழாது ஒரு மனிதன் அல்லாஹ்வுடன் தனித்து உறவாடும் ஒரு சந்தர்ப்பம். மனிதனுடைய வாழ்வில் இது போன்ற ஒரு தருணம் மிகவும் முக்கியமானது. அல்லாஹ்வின் முன்னால் மண்டியிட்டு கண்ணீர் விட்டு தனது தேவைகளை முன்வைப்பதற்கான அறிய வாய்ப்பு.

இரவுத்தொழுகை ஒரு மனிதனின் உள்ளத்தில் உறுதியை ஏற்படுத்துகிறது. உத்வேகத்தை அளிக்கிறது. ஒன்றை அடைந்து கொள்ளும் வேகத்தைக் கொடுக்கிறது. பொதுவாக தொழுகை ஒரு மனிதனுக்குரிய ரிஸ்க்கை அதிகரிப்பதாக அல்குர்ஆன் கூறுகிறது உங்களது குடும்பத்தை தொழுமாறு ஏவுங்கள். அந்த விடயத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களிடத்தில் நாம் ரிஸ்க்கை எதிர்பார்க்கவில்லை. நாம்தான் உங்களுக்கு ரிஸ்க் அளிக்கிறோம். தக்வாவின் படியே இறுதி விளைவு காணப்படும்” (தாஹா 132)

இந்த வசனம் குடும்பத்தின் உள்ளே தொழுகை என்ற வணக்கம் குடும்பமாக இணைந்து மேற்கொள்ளப்படல் வேண்டும். பரஸ்பர ஆர்வமூட்டலும்,  ஏவலும் காணப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இது போன்றதொரு ஆன்மீகச் சூழல் அங்கு காணப்படுகின்ற பொழுது அதன் விளைவாக அல்லாஹ்வின் ரிஸ்க் அந்தக் குடும்பத்தில் தாராளமாகக் கிடைக்கப் பெறுகின்ற நிலை உருவாகும் என்பதை இந்த வசனம் குறித்துக் காட்டுகிறது. ஸாலிஹான துணை என்பது அல்லாஹ் தருகின்ற பெறுமதிமிக்க ஒரு ரிஸ்க். அதனை தொழுகை என்ற அமல் அதிலும் குறிப்பாக இரவுத் தொழுகை எங்களுக்குப் பெற்றுத் தருகிறது.

4.  பாவங்களை விட்டும் தூரமாகுதல் :  நபியவர்கள் கூறினார்கள் ஒரு அடியானுக்குரிய ரிஸ்க் அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு தடை செய்யப்படுகிறதுஎன்றார்கள் (அஹ்மத்) பொதுவாகப் பாவங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் செழிப்பை இழக்கச் செய்கின்றன. பரகத்தை இல்லாமல் செய்து விடுகின்றன. அந்தக் கருத்தையே மேற்சொன்ன ஹதீஸ் குறிப்பதாக இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஸாலிஹான வாழ்க்கைத் துணை ஒரு சிறந்த ரிஸ்க். அதனைப் பெற்றுக் கொள்ள விரும்பும் நீங்கள் முடிந்தவரை பாவங்களை விட்டு ஒதுங்கியிருங்கள். பாவங்கள் அதிகரிக்கும்போது நாம் அல்லாஹ்வை விட்டும் தூரமாகிக் கொண்டே செல்வோம். பாவங்கள் குறைகின்ற பொழுது தான் அவனது உதவி எமக்குக் கிடைக்கின்றது.

5.  ஸதகா செய்தல் : நபியவர்கள் கூறினார்கள் உங்களுக்கான ரிஸ்க்கை ஸதகாவின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்என்றார்கள் (பைஹகீ). ஸதகா எப்பொழுதும் மனித வாழ்வில் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறது. அது ஒரு முதலீடு. ஸதகா ஒரு போதும் நஷ்டத்தை ஏற்படுத்த மாட்டாது. இது ஸதகாவின் பொதுவான விளைவு. இந்த ஹதீஸ் குறிப்பிடுவது போல் எமது வாழ்வின் எல்லா வகையான ரிஸ்க்கையும் ஸதகா எம்மிடத்தில் கொண்டு வந்து சேர்க்கின்றது. அந்தவகையில் ஸாலிஹான துணையையும் நிச்சயமாக அது கொண்டு வந்து சேர்த்துவிடும்.

6.  நபிலான வணக்கங்களில் ஈடுபடல் : நபியவர்கள் கூறினார்கள் “… எனது அடியான் நபிலான வணக்கங்கள் மூலம் தொடர்ந்தும் என்னை நெருங்கி வருகிறான். அப்போது அவன் எனது அன்புக்குரியவனாக மாறிவிடுகிறான். அப்போது அவனது கேட்கும் செவியாய் நான் இருப்பேன். பார்க்கும் கண்ணாய் நான் இருப்பேன். அவன் செயற்படும் கையாய் நான் இருப்பேன். நடக்கும் காலாய் நான் இருப்பேன். அவன் என்னிடத்தில் கேட்டால் உடனே கொடுத்து விடுவேன். என்னிடத்தில் பாதுகாப்புத் தேடினால் உடனே பாதுகாப்பளித்து விடுவேன்என்றார்கள். (புஹாரி)

இதுதான் நபிலான வணக்கங்களின் விளைவு. இவற்றின் மூலம் அவன் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவனாக மாறி விடுகிறான். அந்த நெருக்கத்தின் காரணமாக வாழ்வின் எல்லா விடயங்களும் அவனுக்கு இலகுவானவையாக மாறி விடுகின்றன. எந்த விடயத்தையும் இலகுவில் அடைந்து கொள்வான். எந்தக் கஷ்டமும் இலகுவில் நீங்கி விடுகின்றது. இந்த நிலையில் வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கைத் துணை நிச்சயமாக அவனது வாழ்வை அமைதியாலும் சந்தோஷத்தாலும் நிரப்பி விடும் ஸாலிஹான ஒருவராகவே அமைவார்.

7.  பெற்றோருக்கு உபகாரம் செய்தலும் உறவுகளை இணைந்து நடத்தலும்:
நபியவர்கள் கூறினார்கள் : தனது ஆயுள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும்,  தனது ரிஸ்க் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் யார் விரும்புகிறாரோ அவர் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும். தனது உறவுகளை இணைந்து நடக்கட்டும்என்றார்கள். (அஹ்மத்)

குடும்ப வாழ்வு தொடர்பான ஒரு அடிப்படைப் பெறுமானத்தை இந்த ஹதீஸ் பேசுகிறது. பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதலும்,  குடும்ப உறவுகளுடன் இணைந்த வாழ்வும். இந்த வாழ்வு முறைக்கு ஒரு எதிர் விளைவு இருக்கிறது. அது அந்த மனிதனது ஆயுளிலும் ரிஸ்க்கிலும் சாதகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே,  ரிஸ்க்கில் ஒரு அதிகரிப்பு ஏற்படுகிறது என்பதன் பொருள் அவனது வாழ்வின் எல்லாப் புறங்களிலும் சாதகமான மாற்றம் நிகழ்கிறது என்பதாகும். அந்தவகையில் வாழ்க்கைத் துணை என்ற விடயத்திலும் நிச்சயமாக சாதகமான விளைவே ஏற்படும்.

8.  உண்மையான தேடல் : நபியவர்கள் கூறினார்கள் “…யார் ஒரு நல்ல விடயத்தை அடைந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஈடுபாட்டுடன் உழைக்கிறாரோ அது அவனுக்குக் கிடைத்து விடுகிறது. யார் ஒரு தீங்கை தவிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் செயற்படுகிறாரோ அதனை விட்டும் அவன் பாதுகாக்கப்படுகிறான்என்றார்கள் (தாரகுத்னி). இங்கு உண்மையான தேடலுக்கு அல்லாஹ்வின் உதவி இருக்கிறது என்று ஹதீஸ் வலியுறுத்துகிறது. அந்தவகையில் ஸாலிஹான துணையை அடைய வேண்டும் என்ற உண்மையான எண்ணமும் அதற்கான முயற்சியும் உள்ள போது அல்லாஹ் எமக்கு அதனை நிச்சயமாக அடையச் செய்வான்.

மேற்கூறப்பட்டவை சில உதாரணங்கள் மாத்திரமே. ஸாலிஹான வாழ்க்கைத் துணையை அடைந்து கொள்வது என்பது வெறுமனே ஒரு பௌதீக முயற்சி மாத்திரமல்ல மாற்றமாக அது ஒரு ஆன்மீக முயற்சியுமாகும். பௌதீக ரீதியான முயற்சியின் மூலம் நிச்சயமாக ஒரு துணை கிடைப்பார். ஆனால் ஸாலிஹான துணை என்பதற்கான உத்தரவாதம் அங்கு இருக்கமாட்டாது. எனவே,  ஸாலிஹான துணைக்கான உத்தரவாதம் மேற்குறிப்பிட்டது போன்ற ஆன்மீக ரீதியான வாழ்வியல் நடவடிக்கைகள் மூலமே சாத்தியப்படுகிறது.


அல்லாஹ் எம் அனைவரையும் அங்கீகரிப்பானாக. 

Tuesday, July 14, 2015

ரமழானின் இறுதி நாட்களும் ரமழானுக்குப் பின்னரும்

செய்தி 01

நபியவர்கள் கூறினார்கள் : செயல்கள் அதனுடைய இறுதி நிலையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன” (அஹ்மத், புஹாரி). இந்த ஹதீஸ் எமக்கு சொல்லும் செய்தி என்ன? எமது எந்த செயலாக இருந்தாலும் அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்தவித சோர்வும் தளர்வும் இன்றி நடைபெறல் வேண்டும். ஒன்றை ஆரம்பிக்கும் போது காணப்படும் உற்சாகம் இறுதியில் குன்றிவிடவோ அற்றுப் போய்விடவோ கூடாது. 

இது குறித்த ஒரு செயலுக்கு மாத்திரமான ஒரு விதியல்ல,  முழு மனித வாழ்வுக்கும் கூட இந்த விதி பொருந்துகிறது என்பதைத்தான் நபியவர்களது கீழ்வரும் துஆ எங்களுக்குச் சொல்கிறது. யா அல்லாஹ் எனது ஆயுளின் சிறந்த காலமாக அதன் இறுதிப் பகுதியை ஆக்கி விடு, எனது செயல்களின் சிறந்த பகுதியாக அதன் கடைசியை அமைத்துவிடு,  எனது வாழ்நாளின் சிறந்த நாட்களாக உன்னை நான் சந்திக்கும் நாட்களை அமைத்து விடுஎன்றார்கள் (இப்னுஸ் ஸ{ன்னி)

எமது வாழ்வின் எந்தக் கட்டத்திலும், எமது செயற்பாடுகளின் எந்த இடத்திலும் நாம் நம்பிக்கையிழந்து விடக்கூடாது. ஒரு செயலின் சரி பிழையை இடைநடுவில் தீர்மானிப்பதைவிடவும்,  முழுமையாக நிறைவேற்றியதன் பின்னர் அதன் சரி பிழைகள் பற்றிப் பேசுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். இது தொடர்ந்த உழைப்பை வலியுறுத்துகிறது. இறுதிவரை நம்பிக்கையிழக்காமையையும் கைவிடாமையையும் போதிக்கிறது.

இந்த உண்மைகளே ரமழானிலும் வலியுறுத்தப்படுகின்றன. ரமழானின் இருபத்தி ஏழாம் இரவு கடந்து விட்டால் ரமழர்னே முடிந்துவிட்டது என்பது போன்ற மன நிலைக்கு பலர் வந்து விடுகிறார்கள். அது தவறானது என்பதை மேற்சொன்ன ஹதீஸ்கள் குறிக்கின்றன. மாத்திரமன்றி,  மற்றொரு ஹதீஸ் குறிப்பாக இவ்வாறு சொல்கிறது ரமழானின் கடைசி இரவில் லைலதுல் கத்ரை எதிர்பாருங்கள்” (ஸஹீஹுல் ஜாமிஃ) என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே ரமழானின் இறுதி நாள் வரை நாம் ஓய்ந்து விடக்கூடாது. அல்லாஹ்தஆலா ஒரு செயலின் சிறப்பை அதன் கடைசித் தருணம் வரையில் வைத்திருக்கிறான். இதன் காரணமாகத்தான் உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் எல்லா நகரங்களுக்கும்,  ரமழானை இஃதிபாரின் மூலமும் ஸதகாவின் மூலமும் நிறைவு செய்யுமாறு கட்டளை அனுப்புவார்கள். மேலும் ஆதம் (அலை) அவர்கள் கேட்ட துஆவையும் (அஃராப் - 23) நூஹ் (அலை) அவர்கள் கேட்ட துஆவையும் (ஹுத் - 47) இப்றாகீம் (அலை) அவர்கள் கேட்ட துஆவையும் (ஷுஅரா – 82) மூஸா (அலை) அவர்கள் கேட்ட துஆவையும் (கஸஸ் - 16) துந்நூன் கேட்ட துஆவையும் (அன்பியா – 87) அந்நாட்களில் கேளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்கள். (பைஹகீ)

எனவே,  ரமழானின் கடைசி நிமிடம் வரையில் தளர்வின்றி,  உச்சபட்ச உற்சாகத்துடன் அதனைப் பயன்படுத்த உறுதி கொள்வோம்.

செய்தி 02

அலி (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள் : ஒரு செயலை நல்ல முறையில் செய்வதில் அதிக கவனம் செலுத்துவது போல், அது ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பதில் அதைவிடவும் கவனம் செலுத்த வேண்டும். அல்லாஹ்தஆலா கூறுவதைக் கேட்கவில்லையா? அல்லாஹ்தஆலா தக்வா உள்ளவர்களிடமிருந்தே செயல்களை ஏற்கிறான். - மாயிதா – 27 -, (இப்னு அபித்துன்யா)

எனவே, ஒரு செயலை சம்பூரணமாக நிறைவேற்றுதல் என்பது ஒரு விடயம். அது ஏற்றுக் கொள்ளப்படுதல் என்பது மற்றொரு விடயம். அல்லாஹ்தஆலா ஒருவனது செயல்களை ஏற்றுக் கொண்டு விட்டானா? இல்லையா? என்பது மனித அறிவால் தீர்மானிக்க முடியாத ஒரு விடயம் என்றிருந்தாலும் அதன் குறைந்தபட்ச ஒரு அடையாளமாக அந்த செயலின் ஊடாக பெற்றுக் கொண்ட தர்பியத்,  பெற்றுக்கொண்ட பயன் ஒருவனிடத்தில் நீண்டு நிலைத்திருக்கும் எனின்,  அது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இக்கருத்து புலப்படும் வகையிலேயே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள் உங்களுடைய செயல்கள் மாத்திரம் உங்களை சுவர்க்கத்திற்கு எடுத்துச் செல்வதில்லை. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் அது குறைவாக இருந்தாலும் தொடர்தேர்ச்சியாக செய்து வருவதாகும்என்றார்கள். (புஹாரி)

எனவே,  ரமழானில் எடுத்துக் கொண்ட பயிற்சிகள்,  பெற்றுக் கொண்ட பயன்கள்,  அவை பண்புகளில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம்,  நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம்,  இபாதத்களில் ஏற்பட்ட அதிகரிப்பாக இருக்கலாம். ரமழானுக்குப் பின்னர் இவை முற்றுப் பெற்று விடக்கூடாது. 

மேற்கூறிய ஹதீஸ் கூறும் கருத்துப்படி வெறுமனே ஒரு செயல் மாத்திரம் அல்லது ஒரு சந்தர்ப்பத்தின் செயல் மாத்திரம் எம்மை சுவர்க்கத்திற்கு எடுத்துச் செல்லப் போதுமானதல்ல. மாற்றமாக அவை ஒரு தொடர்பழக்கமாக,  தொடர் நடத்தையாக எங்களிடத்தில் மாற்றம் காணுகின்ற பொழுதே நாம் சுவர்க்கத்திற்குத் தகுதியானவர்களாக மாறுகிறோம். எனவே,  ரமழான் தொடக்கி வைத்திருக்கிறது. அவை தொடரும் வண்ணம் நன்கு பயிற்றுவிக்கப்பட்டும் இருக்கின்றன. ஏனைய காலங்களில் அவை அன்றாட வாழ்வின் நிகழ்வுகளாக மாற வேண்டும்.

அல்குர்ஆன் சொல்லும் ஒரு உதாரணத்தைப் பாருங்கள்,  உறுதியான உடன்பாட்டுக்கு வந்த பின்னர் தானே அதனை முறித்து விடும் நிலையை மக்காவில் வாழ்ந்த ரைதா பின்த் ஸஃத் என்ற ஒரு பெண்ணின் செயலை உதாரணமாகக் குறிப்பிட்டு அல்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. தனது பின்னல்களை மிகவும் பலமாகப் பின்னியதன் பின்னர் தானே அவற்றை அவிழ்த்துப் போடும் அந்தப் பெண்ணை போல் நீங்களும் இருந்துவிடாதீர்கள்” (நஹ்ல் - 92)

ஒரு பலமான நிலையை அடைந்து கொள்ளும் போது அதனை தொடர்ந்து கொண்டு செல்லுதல் அல்லது அதனை விடவும் மேலே செல்லுதல் என்பது தான் சாதாரண மனிதப் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் உண்மை. இதனை விடுத்து பலப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தான் கட்டியதை தானே உடைத்து மீண்டும் பூச்சியத்தில் இருந்து செல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையே இந்த வசனம் குறிப்பிடுகிறது.

இக்கருத்து ரமழானுக்கும் மிகவும் பொருந்துகிறது. ரமழான் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு தர்பிய்யத். எங்களது ஆன்மாவை அது பலப்படுத்துகிறது. அல்லாஹ்வுடனான நெருக்கத்தைப் பலப்படுத்துகிறது. எங்களது செயல்களைப் பலப்படுத்துகிறது. எமது உள்ளார்ந்த சக்தியைப் பலப்படுத்துகிறது. எம்மில் எத்தனையோ நல்ல பழக்கங்களை உருவாக்குகிறது. எத்தனையோ இபாதத்களை விதைக்கிறது. இவை அனைத்தும் மிகப் பெரிய பலங்கள். ரமழானுக்குப் பிந்திய நாட்களில் இவற்றை அஸ்திவாரமாகக் கொண்டுதான் நாம் கட்டடம் அமைக்கப் போகிறோம். இப்பொழுது ஒருவன் அந்த அஸ்திவாரத்தையே சிதைத்து விடுகிறான் என்றால் அவன் எத்தகையவன்? இந்தத் தவறை நாம் ரமழானிற்குப் பின்னர் செய்யக் கூடாது.


ரமழானில் பெற்ற பயிற்சிகள் பயனற்றுப் போகின்றன என்றால்,  அமல்கள் சடுதியாக வீழ்ச்சி காணுகின்றன என்றால் எமது அஸ்த்திவாரம் ஆட்டம் காணுகிறது என்று பொருள். இப்பொழுது அதன் மீது நாம் கட்டடம் கட்ட முடியாது. எனவே,  ரமழானின் மிகச் சரியான நோக்கத்தை நாம் அடைந்து கொள்வது என்பது,  அதன் பின்னர் எமது செயல்கள் தொடர்ந்தும் உயிருடன் காணப்படுவதன் மூலமே நடைபெறுகிறது. அல்லாஹ்தஆலா அந்தப் பாக்கியத்தை எம் அனைவருக்கும் தர வேண்டும் என்று கேட்டு விடை பெறுகிறேன்.