Sunday, November 16, 2014

ஹரீஸுன் அலா வக்திஹி

 தனது நேரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்பவன்

தனிமனித உருவாக்கப் பரப்புகளில் மற்றொரு முக்கியமான பகுதி, நவீன முகாமைத்துவக் கற்கைகளில் பெரிதும் விவாதிக்கப்படுகின்ற ஒரு அம்சம்,  இமாம் ஹஸனுல் பன்னாவின் பாஷையில் ஹரீஸுன் அலா வக்திஹிஎன அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்ன?

ஒரு தனிமனிதனது நடத்தைக்கும் நேரத்திற்கும் இடையிலான தொடர்பை இது விளக்குகிறது. இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் நான்கு இணைத் தலைப்புகளில் இது விளக்கப்படுகிறது.

1.            ஹரீஸ் என்பதன் பொருள் என்ன?
2.            வக்த் என்பதன் பொருள் என்ன?
3.            ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் பொருள் என்ன?
4.            தனிமனித உருவாக்கத்தில் இந்தப் பண்பின் முக்கியத்துவம் என்ன?

1. ஹரீஸ் என்பதன் பொருள் என்ன?

ஹரீஸ் என்பதன் மூலச் சொல் அல்-ஹிர்ஸ் என்பதாகும். இந்தச் சொல் அடிப்படையில் உலோபித்தனம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது ஒரு விடயத்தை தான் மாத்திரம் அனுபவிப்பதும் பிறர்க்கு விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் உலோபித்தனம் என்பதன் மூலம் நாடப்படுகிறது. இது ஒரு எதிர்மறையான பொருளைத் தருகின்ற போதிலும் இதற்கு ஒரு நேர்மறையான வடிவமும் இருக்கிறது. 

அந்த நேர்மறையான வடிவத்தையே மிகப் பிரதானமாக அல்ஹிர்ஸ்என்ற சொல் குறிக்கிறது. அதாவது ஒரு விடயத்தின் மீது அதீத ஆர்வம் கொள்ளுதல். இது சாதாரணமாக ஆர்வம் என்ற எல்லையைத் தாண்டி வேட்கை,  பசி என்ற எல்லை வரையான கருத்துக்களையும் குறிக்கக் கூடியதாகும். இந்த ஆர்வம் ஒன்றை அனுபவிப்பதற்காகவும் காணப்பட முடியும். பிறிதொருவருக்கு நன்மை விளைவிப்பதற்காகவும் காணப்பட முடியும்.

மேற்குறித்த மொழிக் கருத்தை வைத்து நோக்கும் போது,  ஹரீஸ் என்பது ஒரு விடயத்தை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பவனைக் குறிக்கிறது. அதில் எந்த ஒரு சிறிய பகுதியும் வீணடைவதையோ அல்லது அழிந்து போவதையோ அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அத்துடன் அதன் முழுமையான பயனை அடைந்து கொள்வதில் மிகுந்த ஈடுபாட்டுடன் காணப்படுவான். அவற்றில் எதனையும் விட்டுக் கொடுக்க மாட்டான். இத்தகைய உளநிலைக்கும் ஆற்றலுக்கும் சொந்தக்காரனையே நாம் ஹரீஸ் என்போம்.

2. வக்த் என்பதன் பொருள் என்ன?

பொதுவாக மொழியில் வக்த்என்ற சொல்,  வரையறுக்கப்பட்ட ஒரு நேரத்தைக் குறித்து நின்றாலும், இங்கு ஹரீஸுன் அலா வக்திஹிஎன்ற சொற்றொடரில் வக்த் என்பது வரையறுக்கப்பட்ட ஒரு நேரத்தையன்றி பொதுவாக எல்லா நேரங்களையுமே குறிக்கின்றது. இமாம் ஹஸனுல் பன்னா கூறியது போல் நேரம் தான் வாழ்க்கை. முழு மனித வாழ்வும் நேரம் என்ற சொல்லில் உள்ளடங்குகிறது. 

இக்கருத்தையே இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள் ஆதமின் மகனே,  நீ சில நாட்களாவாய். ஒரு நாள் கழிந்து விட்டால் உன்னில் ஒரு பகுதி கழிந்து விட்டது என்ற பொருள்என்றார்கள். இதன் காரணமாகத்தான் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் ஒரு நாள் கழிவதையிட்டுக் கவலையடைந்தார்கள். ஒரு நாள் சூரியன் மறைகிற போது,  எனது ஆயுளில் ஒரு நாள் குறைந்து விடுகிறது. ஆனால் எனது செயல்கள் அதிகரிக்கவில்லை எனின்,  இதனை விடவும் ஒரு விடயத்திற்காக நான் கைசேதப்பட்டது கிடையாதுஎன்றார்கள்.
எனவே,  நேரம் என்பது வாழ்க்கை. அது வீணடையாமல் உச்ச பயன் மிக்கதாய் அமைக்கப்படல் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் இமாம்கள் நேரத்தின் சிறப்பியல்புகளைக் கீழ்வருமாறு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

-              நேரம் யாருக்காகவும் காத்திருக்க மாட்டாது. அது மிக வேகமாகக் கடந்து போய்க் கொண்டேயிருக்கும்.

-              கடந்த போன ஒரு நேரத்தை ஒருபோதும் மீளப் பெற முடியாது. இமாம் ஹஸனுல் பஸரீ அவர்கள் கூறுகிறார்கள் ஒவ்வொரு விடியலும் மனிதனைப் பார்த்துச் சொல்கிறது ஆதமுடைய மகனே,  நான் ஒரு புதிய படைப்பு. உன்னுடைய செயல்களுக்கு நான் சாட்சி. என்னைப் பயன்படுத்திக் கொள். நான் போய்விட்டால் மறுமை நாள் வரையில் மீண்டும் வர மாட்டேன்என்று சொல்கிறது என்றார்கள்.

-              நேரம் விலை மதிப்பற்றது. மனித வாழ்வின் முழு மூலதனமும் அதுதான். இமாம் ஹஸனுல் பஸரி கூறுவது போல் அது குறைந்து விட்டால்,  அவனது வாழ்வு குறைந்து விடுகிறது.

3. ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் பொருள் என்ன?

மேலே விளக்கப்பட்டவாறு ஹரீஸ்,  வக்த் ஆகிய இரு சொற்களினது கருத்துக்களையும் இணைத்து நோக்குகின்ற பொழுது ஹரீஸுன் அலா வக்திஹிஎன்ற சொற்றொடர் பேசும் கருத்துக்களை பின்வருமாறு அணுக முடியும்.

முதலில்,  நேரம் என்பது வாழ்க்கை. அதில் ஒரு சிறிய பகுதியும் வீணாகக் கடந்த விடக்கூடாது. பயனற்றதாய் சென்று விடக் கூடாது என்பது ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் முதலாவது கருத்தாகும். மேலே முன்வைக்கப்பட்ட,  அறிஞர்களது எல்லாக் கருத்துக்களும் இந்த உண்மையை விளக்கப் போதுமானதாகும். 

உண்மையில் நேர வீணடிப்பு என்பது ஒரு குற்றச் செயல். அதற்கான விசாரணை நிச்சயம் மறுமையில் காணப்படுகிறது. அல்குர்ஆன் இந்த உண்மையை இவ்வாறு கூறுகிறது யார் அணுவளவு நன்மை செய்தாலும் அதனைக் கண்டு கொள்வார். அணுவளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டு கொள்வார்” (ஸல்ஸலா – 7, 8)

இக்கருத்தை இன்னும் தெளிவாக இந்த ஹதீஸ் விளக்குகிறது மறுமையில் ஒரு மனிதனிடம் நான்கு விடயங்கள் பற்றி விசாரிக்கப்பட முன்னர் அவனது கால்கள் நகர மாட்டாது. அவனது வயதை எவ்வாறு கடத்தினான்? அவனது அறிவைப் பயன்படுத்தி என்ன செய்தான்? அவனது செல்வம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது?  எவ்வாறு செலவு செய்யப்பட்டது? அவனது உடம்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? என்று நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

இந்த ஹதீஸில் வயது என்பது நேரத்தைக் குறிக்கிறது. எனவே,  நேர வீணடிப்பு ஒரு குற்றம். அதற்கு விசாரணை இருக்கிறது என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது. கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுகிறார்கள் ஒருவன் நேரத்தை வீணடிப்பது என்பது அவன் தன்னைத் தானே கொலை செய்வதாகும். இது மக்கள் பார்த்திருக்க மெதுவாக நடைபெறும் ஒரு தற்கொலைக் குற்றமாகும். ஆனால் இதற்கு எவரும் தண்டனை வழங்குவதில்லைஎன்றார்கள்.

இமாம் இப்னுல் கையிம் அவர்கள் கூறுகிறார்கள் நேர வீணடிப்பு என்பது மரணத்தை விடவும் ஆபத்தானது. ஏனெனில்,  நேர வீணடிப்பு உங்களை அல்லாஹ்வையும் மறுமை நாளை விட்டும் தூரமாக்கி விடுகிறது. ஆனால் மரணம் உங்களை உலகையும் அதிலுள்ள மக்களையும் விட்டுத்தான் தூரமாக்குகிறதுஎன்றார்கள்.

உமர் (றழி) அவர்கள் கூறினார்கள் உங்களில் எவரும்,  உலகம் சம்பந்தப்பட்ட அல்லது மறுமை சம்பந்தப்பட்ட எந்த வேலையும் இன்றி சும்மா இருப்பதை நான் வெறுக்கிறேன்என்றார்கள்.

அடுத்து ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் இரண்டாவது கருத்துக்கு வருவோம். அதாவது நேரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். கலாநிதி அப்துல் ஹமீத் பிலாலி அவர்கள் கூறுவது போல் நேர முகாமை என்று ஒரு விடயம் கிடையாது. உண்மையில் நேரத்தை முகாமை செய்ய முடியாது. ஏனெனில் அது எமது கைகளில் இல்லாத ஒரு விடயம். மாற்றமாக நேரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற விடயமே உண்மையில் இங்கு நடக்கிறது. நேரத்தின் உச்ச பயனைப் பெறும் வகையில் ஒரு மனிதன் தன்னை முகாமை செய்ய முடியும். தனது செயல்களை முகாமை செய்ய முடியும். நேரத்தை முகாமை செய்ய முடியாது. நேரம் என்றும் மாற்றமுறாது. ஒரே வடிவில் நகர்ந்து கொண்டேயிருக்கும். கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்திலிருந்தும் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு என்பதே இங்கு முக்கியமானது. அதற்காக ஒருவன் தன்னையும் தனது செயல்களையும் மாற்றியமைத்துக் கொள்வான். 

இந்தக் கருத்தைக் குறிக்கும் விதமாகவே இமாம் ஹஸனுல் பன்னா அவர்களும் தனிமனித ஆளுமைப் பண்புகளைப் பேசும்போது,  நேரம் எனும் பண்பை ஹரீஸுன் அலா வக்திஹி என்று தான் குறிப்பிட்டார். இது நேரத்தை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துவதையே குறிக்கிறது. அதேவேளை செயற்பாட்டுப் பகுதியை முனழ்ழமுன் பீ சுஊனிஹி என்று குறிப்பிட்டார்கள். அதாவது தன்னைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திக் கொள்பவன் என்று இது பொருள்படுகிறது. எனவே நேரம் என்பதில் முகாமை இல்லை உச்ச பயன் பெறுதலே இருக்கிறது. ஆனால் செயற்பாடுகளில் முகாமை இருக்கிறது.

நேரத்தின் உச்ச பயன் பெறப்படல் வேண்டும் என்பதையே நபியவர்களது இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. ஐந்து விடயங்கள் நிகழ முன்னர் ஐந்து விடயங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்திற்கு முன்னர் வாழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நோயிற்கு முன்னர் ஆரோக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேலைப்பளுவுக்கு முன்னர் ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதுமைக்கு முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வறுமைக்கு முன்னர் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்என்றார்கள் (ஹாகிம்)

இங்கு ஒவ்வொரு நிலையும் கடந்து செல்ல முன்னர் அதன் உச்ச பயன்பாடு பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இதே கருத்தை மற்றோர் ஹதீஸிலும் காண முடிகிறது. அல்லாஹ்வின் இரண்டு நிஃமத்துக்கள் குறித்து அதிகமானவர்கள் மிகவும் கவனயீனமாக இருக்கிறார்கள். அவை ஆரோக்கியமும் ஓய்வும் ஆகும்என்றார்கள் (புஹாரி)

இந்த ஹதீஸிலும் இவற்றின் உச்ச பயனைப் பெறாது மக்கள் கவனமற்றிருக்கிறார்கள் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இங்கு நேரத்தின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு? என்ற ஒரு கேள்வி எழ முடியும். இங்கு தான் திட்டமிடலும் சுய முகாமையும் பெரிதும் அவசியப்படுகின்றது. இது தனியான விரிவான ஒரு பரப்பு என்பதால் இங்கு அது தவிர்க்கப்படுகிறது.

அடுத்து ஹரீஸுன் அலா வக்திஹிஉணர்த்தும் மூன்றாவது கருத்து,  ஒவ்வொரு செயலையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதாகும். ஏனெனில்,  அல்லாஹ்தஆலா ஒவ்வொரு விடயத்திற்கும் அதற்கென ஒரு நேரத்தை வைத்திருக்கிறான். அந்த நேரத்திற்கு முன்னரும் சரி,  பின்னரும் சரி அது நிகழ மாட்டாது. அந்த உரிய நேரத்திலேயே நிகழும். அல்குர்ஆனில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்தஆலா பயன்படுத்திய ஒரு சொற்பிரயோகம் அஜலுன் முஸம்மாஎன்பது. இது ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட நேரம் இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. 

எந்தளவுக்கு எனின்,  அல்லாஹ்வின் தண்டனை கூட அவன் வரையறை செய்த உரிய நேரத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ நிகழ மாட்டாது என அல்குர்ஆன் கூறுகிறது. மனிதர்கள் செய்யும் அநியாயங்களுக்காக அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பதாக இருப்பின்,  பூமியின் மீது ஒரு கால் நடையும் மீதமிருக்க மாட்டாது. மாற்றமாக அவன் வரையறை செய்த அந்த நேரம் வரையில் அதனைப் பிற்போடுகிறான். ஆனால் அந்த நேரம் வந்தால் தண்டனை கொஞ்ச நேரம் முற்படுத்தப்படவோ பிற்படுத்தப்படவோ மாட்டாது” (நஹ்ல் 61)

இதனால்தான் நபியவர்களது சுன்னாவும்,  ஒவ்வொரு பணியையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாக அமைந்திருந்தது. உக்பத் இப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் ஒரு நாளைக்குரிய வேலையை அன்றைய தினமே நிறைவு செய்து விடுவார்கள்என்றார்கள் (அஹ்மத்)

கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் ஒரு தடவை வேளைப்பளுவின் காரணமாக களைப்படைந்திருந்தபோது,  இதனை நாளைக்குச் செய்யலாமே என்று சிலர் ஆலோசனை கூறினர். அதற்கவர் ஒரு நாளைக்குரிய வேலையே என்னை மிகவும் சிரமப்படுத்தி விட்டது. இரண்டு நாளைக்குரிய வேலைகள் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? என்று பதிலளித்தார்கள்.

எனவே,  ஒவ்வொரு வேலையையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பது ஹரீஸுன் அலா வக்திஹி என்பதன் மூன்றாவது கருத்தாகும்.

4. தனிமனித உருவாக்கத்தில் ஹரீஸுன் அலா வக்திஹி என்ற பண்பின் முக்கியத்துவம் என்ன?

முதலாவது,  நேரம் என்பது வாழ்க்கை. இந்த வாழ்க்கை அல்லாஹ் தந்த மிகப் பெரிய ஒரு அருள். அந்த அருளுக்காக நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மிகச் சிறந்த நன்றி எது தெரியுமா? அந்த வாழ்க்கையை வீணாகவன்றி,  உச்ச பயனை அடையும் வகையில் வாழ்வதாகும்.

இரண்டாவது,  நபியவர்கள் கூறினார்கள் அல்லாஹ்தஆலா படைத்த நாட்களில் சில விஷேட பொழுதுகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றைப் பயன்படுத்திக் கொண்டவருக்கு இதன் பின்னர் வாழ்க்கையில் நஷ்டமே கிடையாதுஎன்றார்கள் (தபரானி)

அல்லாஹ்தஆலா மக்கா,  மதீனா போன்ற விஷேட இடங்களை அமைத்திருப்பது போல் சில விஷேட காலங்களையும் அமைத்திருக்கிறான். ரமழான்,  ஹஜ் காலம் போன்ற பல விஷேட பொழுதுகள் உள்ளன. அவற்றில் பல சிறப்பம்சங்கள் வைக்கப்பட்டுள்ளன. ரமழான் மாதம் குறித்து,  அது பரகத் செய்யப்பட்ட மாதம் என நபியவர்கள் கூறினார்கள். அது போல் அதிகாலைப் பொழுதைப் பற்றிக் கூறும் பொழுது அதிகாலைப் பொழுதில் பரகத் இருக்கிறது என்றார்கள்.

இத்தகைய விஷேட பொழுதுகள் ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையில் கிடைக்கப் பெற்றுள்ள பெறுமதியான சந்தர்ப்பங்கள். இவற்றைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமானது என்பதைப் போல் ஒரு கடமையும் ஆகும். மனிதன் தனது வாழ்வை வீணாக்கி விடக் கூடாது என்பதில் அல்லாஹ்தஆலாவும் மிகுந்த கரிசனையுடன் காணப்படுகிறான். அதற்கான அவனது பௌதீக ஏற்பாடுகளே இவை. அல்லாஹ்தஆலாவின் இந்த ஏற்பாட்டுக்கமைய மனித வாழ்வு ஒழுங்கமைக்கப்படுவதற்காகவும் தனிமனித உருவாக்கப் பொறிமுறையில் இந்தப் பண்பும் இடம் பெற்றிருக்கிறது.

மூன்றாவது,  இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் கூறியது போல்,  நேரங்களை விட கடமைகள் அதிகமானவை. எனவே,  எம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதியானது. அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெற்றுக் கொள்கின்ற பொழுதே,  கடமைகளின் பரிமாணத்தை ஓரளவுக்கேனும் எட்டிப் பிடிக்க இயலுமாக இருக்கும். அந்த வகையில் கடமைகளில் குறைபாடு விடாத ஒரு பரம்பரையின் உருவாக்கத்திற்காய்,  தனிமனித உருவாக்கப் பொறிமுறையில் இப்பண்பு இன்றியமையாததாக மாறுகின்றது.

நான்காவது. ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு கடமை இருக்கிறது. குறித்த நேரத்திற்குரிய கடமையைச் செய்வதில் சில சமயங்களில் சிலர் தவறு விடுகின்றனர். ஒன்றில் கடந்த காலத்தில் வாழ்கின்றனர். அல்லது எதிர்காலக் கற்பனைகளில் மிதக்கின்றனர். இன்றைய நாள் கடமையை மறந்து போகின்றனர். ஷெய்க் முகம்மது ஹூஸைன் அவர்கள் சொல்வது போல் இதுவும் ஷைத்தானுடைய ஒரு ஊசலாட்டமாகும். இவன் நிச்சயம் எதனையும் சாதிக்காதவனாகவே இருப்பான். கடந்த காலம் மீள வராது. எதிர்காலம் நிச்சயமற்றது. அதேவேளை நிகழ்காலத்திலும் எதுவும் செய்யவில்லை. உண்மையில் இவன் பெரும் நஷ்டவாளிதான். இதுபோன்ற நஷ்டவாளிகளாக மனிதர்கள் மாறிவிடக் கூடாது. நேரத்திற்குரிய கடமையை ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டும். இதன் காரணமாகவும் தனிமனித உருவாக்கப் பொறிமுறையில் இப்பண்பு இடம் பெற்றிருக்கிறது.

ஐந்தாவது,  இவ்வுலகிலே மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம் மிகவும் பாரியது. ஆனால் ஒவ்வொரு தனிமனிதனதும் ஆயுள் மிகவும் குறுகியது. எனவே எமது குறுகிய ஆயுளின் உச்ச பயனை அடைந்து கொள்கின்ற பொழுதே,  உலக மாற்றத்தில் ஒரு சிறிய தாக்கத்தையேனும் நாம் விளைவிக்க முடியும். அபூபக்ர் (றழி) அவர்கள் தனது இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் அன்றைய நாளின் மிக முக்கிய சாதனைகளை நிகழ்த்தினார்கள். மத மாற்ற சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். அல்குர்ஆனை ஒன்று திரட்டினார்கள். சிந்தனைச் சிக்கல்களை நீக்கி,  மீண்டும் மக்களை அல்குர்ஆனுடைய சிந்தனைக்கு மீட்டு வந்தார்கள். ஒவ்வொரு சோதனையையும் சாதனையாக மாற்றியமைத்தார்கள். இவர் போட்ட பலமான அடித்தளம் அடுத்தவர்கள் அதன் மீது கட்டுவதற்கு வசதியாக அமைந்தது.

உமர் (றழி) அவர்களின் பத்து வருட ஆட்சியில் மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டார்கள். அதன் மூலம் உலகத்தின் தலைமையை நேரடியாக முஸ்லிம்கள் வசமாக்கினார்கள். ரோமம்,  பாரசீகம் எனும் அன்றைய உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களை வெற்றி கொண்டார்கள். பத்து வருடங்களில் உலகின் உச்சிக்கு இஸ்லாத்தைக் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

உமர் இப்னு அப்துல் அஸீஸைப் பாருங்கள். சுமார் இரண்டரை வருடங்களில் கடன்களற்ற,  வறுமையற்ற செல்வச் செழிப்புமிக்க நாடாய் இஸ்லாமிய பூமியை மாற்றியமைத்தார்கள். அவரது காலத்தில் வசதியீனத்தின் காரணமாக திருமணம் முடிக்காதோர் இருக்கவில்லை. அதுபோல் ஹஜ் செய்யாதோர் இருக்கவில்லை என வரலாறு சொல்கிறது.
இவை குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்ந்த சாதனைகளுக்கான சில உதாரணங்கள் மட்டுமே. 

இஸ்லாமிய வரலாற்றில் இவை மிகவும் அதிகம். உலக மாற்றத்தில் இவை என்றும் மறக்க முடியாத மறுக்க முடியாத பங்களிப்புகள். இவற்றைப் போன்றதாய் எங்களது பங்களிப்புகள் மாற வேண்டும். அவை உலக மாற்றத்தில் பாரிய தாக்கத்தை விளைவிப்பனவாய் அமைய வேண்டும். ஏனெனில் உலகம் எதிர்பார்க்கும் மாற்றம் மிகவும் பாரியது. தனிமனித உருவாக்கப் பொறிமுறையில் ஹரீஸுன் அலா வக்திஹி என்ற பண்பும் இடம் பெற்றமைக்கான மற்றொரு முக்கிய நியாயமாக இது அமைகிறது.


அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

Monday, November 3, 2014

முயற்சி எங்களுடையது, விளைவு அல்லாஹ்வுடையது

நபியவர்கள் கூறினார்கள் எனக்கு முன்னைய சமூகங்களின் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஒரு நபியுடன் ஒருவர் மாத்திரமே இருந்தார். மற்றொரு நபியுடன் இருவர் இருந்தனர். இன்னொரு நபியுடன் ஒரு கூட்டம் இருந்தது. மற்றொரு நபியுடன் ஒருவரும் இருக்கவில்லைஎன்றார்கள். (புஹாரி, திர்மிதி)

இந்த ஹதீஸ் நபிமார்களுடைய தஃவாவின் விளைவு நிலையை குறித்துக் காட்டுகிறது. விளைவு மையப்பட்ட செயற்பாடு எந்தப் பணிக்கும் பொதுவானது. தஃவா அதற்கு விதிவிலக்கு அல்ல. விளைவுகளைத் திட்டமிடுதலும் அவற்றை அடைந்து கொள்ளுதலும் இஸ்லாம் வலியுறுத்தும் ஸாலிஹான அமல் என்பதன் ஒரு வடிவமாகும்.

ஆனால் இங்கு இஸ்லாமிய தஃவாவைப் பொறுத்தவரை ஒரு நுணுக்கமான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தஃவா என்பது விளைவுகள் எட்டப்படாத போது நிறுத்திக் கொள்வதற்குரிய ஒரு பணியல்ல அல்லது விளைவுகள் எட்டப்படாத போது நாம் செய்தது அனைத்தும் பிழையானது அர்த்தமற்றது என்று முடிவு செய்வதற்குரிய ஒரு விடயமல்ல அல்லது நாம் செய்தது தஃவாவே அல்ல என்று கவலைப்படுவதற்குரிய ஒன்றுமல்ல.

மாற்றமாக விளைவுகளுக்குப் பொறுப்பானவன் அல்லாஹ்தஆலா. முயற்சிகள் மாத்திரமே மனிதனுக்குப் பொறுப்பானவை. நபிமார்களைப் பற்றி அல்லாஹ்தஆலா சொல்கிறான் தூதுவர்கள் மீது தெளிவாக எத்திவைக்கும் பொறுப்பு மாத்திரமல்லவா இருக்கிறது?” (நஹ்ல் - 35)

ஆரம்பத்தில் பதிவு செய்த ஹதீஸில் நபிமார்களது தஃவா விளைவு எப்படியிருக்கிறது? இவர்களில் எவரும் தஃவாவை இடை நிறுத்தியதில்லை. தாம் செய்தது பிழை என்று கருதியதில்லை. உடன் உழைத்தவர்களைக் குற்றவாளிகளாக்கியதில்லை.

விளைவைக் காணாவிட்டாலும் எமது உழைப்புக்கு கூலி இருக்கிறது என்ற உண்மையை நாம் பல சமயங்களில் மறந்து போகிறோம். விளைவைக் காண வேண்டும் அப்போது தான் கூலி உண்டு இல்லாத போது குற்றவாளிகள் என்ற மனப்பாங்கு தவறானது. இது தஃவாவை உலகியல் பார்வையில் மாத்திரம் சுறுக்கி விட்ட கண்ணோட்டம். தஃவா இதனை விடவும் உயர்ந்தது. அதற்கு ஒரு ஆன்மீகப் பெறுமானமும் இருக்கிறது.

மாத்திரமன்றி உலகியல் கண்ணோட்டத்திலும் எமது உழைப்புகள் ஒரு போதும் வீண் போவதில்லை. கடந்த காலத்தின் மீதுதான் எதிர்காலங்கள் கட்டப்படுகின்றன. எமது உழைப்புகள் விளைவுகளின் ஏதேனும் ஒரு படியாய்த்தான் அமையப் போகின்றன. முதல் உழைப்பிலேயே இறுதி விளைவைக் காண்பது சிரமமானது ஒவ்வொரு விடயத்திற்கும் அதற்குரிய ஒரு காலம் இருக்கிறது என்று அல்குர்ஆன் கூறுகிறது. எனவே, பொறுமையும் நம்பிக்கையும் மிகவும் முக்கியமானவை.

மற்றொரு புறத்தில் விளைவை எட்டாத எமது உழைப்புகள் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்,  கற்றுக் கொண்ட பாடங்கள். இது செயற்களத்தில் கிடைக்கும் தர்பிய்யத். இது விலை மதிக்க முடியாதது. இது செயற்பாட்டில் முதிர்ச்சியைக் கொண்டு வரும். தெளிவை ஏற்படுத்தும். அடுத்த கட்டப் பயணத்தை வேகப்படுத்திவிடும்.

மீண்டும் நபிமார்களைப் பாருங்கள். அவர்கள் எதனை இழந்து விட்டார்கள்? உலகை இழக்கவுமில்லை. மறுமையை இழக்கவுமில்லை. அவர்களுக்கு கூலி கிடைக்க மாட்டாது என்று சொல்ல மாட்டோம். அவர்கள் மரியாதையையோ நபி என்ற அந்தஸ்த்தையோ இழந்து விட்டார்கள் என்று நாம் சொல்ல மாட்டோம்.

தஃவாவை கூட்டு வடிவில் மேற்கொள்கின்ற பொழுது,  சகோதரர்களிடையே மேற்போந்த எதிர்மறை எண்ணங்கள் இடைக்கிடையே தோன்றி மறைய வாய்ப்பிருக்கிறது.

சகோதரர்களே,  நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். விளைவுகளைத் திட்டமிட்டுத்தான் நாம் தஃவாவை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவற்றை அடைந்து கொள்ள முடியாது போகிற போது உங்களது முயற்சி அர்த்தமற்றது என்று எண்ணி விடாதீர்கள். அவை வீணாகி விட்டன. எமக்கு எந்தக் கூலியும் இல்லை என்று நினைக்காதீர்கள். உடன் உழைத்தவர்கள் தவறு செய்து விட்டதாய்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாதீர்கள்.

நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் உழைப்புகள் எவையும் வீணாகவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தஆலா கூலி தருவான். ஒவ்வொருவரதும் எண்ணத்துக்கும் உழைப்புக்கும் உரியவற்றை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். உடன் உழைப்பவர்களை மதித்து நடவுங்கள். அவர்களது உழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உழைப்புக்கு மட்டுமே நாம் பொறுப்பானவர்கள். விளைவுக்கு அல்லாஹ்வே பொறுப்பானவன். உழைப்பைப் பற்றியே நாம் விசாரிக்கப்படுவோம். விளைவைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டோம்.


அல்லாஹ்வே போதுமானவன்.