Monday, September 28, 2015

காதல் குறித்து சில வரிகள்

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

கடந்த அமர்வில் ஸாலிஹான துணையை அடைந்து கொள்வதற்கான வழிகள் குறித்துக் கலந்துரையாடினோம். காதல் என்ற வழிமுறை மூலம் ஸாலிஹான துணையை அடைந்து கொள்ள முடியுமா? என்ற கேள்வி தோன்ற முடியும். அல்லது காதல் என்பது மிகச் சரியான அல்லது ஸாலிஹான துணையை அடைந்து கொள்வதற்கு ஷரீஅத் அனுமதித்த ஒரு வழிமுறையா? இல்லையா?, 

எனது மாணவர்களிடம் நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இதில் சுவாரஷ்யம் என்னவென்றால்,  அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது,  “சேர்,  இதனை நாம் எமக்காகக் கேட்கவில்லை. எங்களிடம் பலர் இதுபற்றிக் கேட்கிறார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்வதற்காகவே கேட்கிறோம்என்பார்கள். பிறருக்காகக் கேட்பதாக இருக்கலாம். தமக்காகவே கேட்பதாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் இன்று இளைஞர் யுவதிகளிடத்தில் இது முக்கியமானதொரு கேள்வி என்பது மாத்திரம் உண்மை. அந்தவகையில் காதல் குறித்த சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வது இந்தப் பத்தியின் நோக்கம்.

இன்றைய ஊடகங்கள்,  சினிமாக்கள் போன்றன காதலை மனித நாட்டத்திற்கு அப்பால்பட்ட ஒரு செயலாகவே சித்தரிக்கின்றன. அது அறிவுபூர்வமாக நடைபெறுகின்ற ஒரு விடயமல்ல. காதல் தன்னையறியாமலே தனக்குள் நுழைந்து விடும். அதனைத் தவிர்ந்து கொள்வது சாத்தியமில்லை. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது என்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கின்றன. அதனைக் குறிக்கும் வகையிலேயே காதலில் விழுதல்என்ற பிரயோகத்தைப் பயன்படுத்துகின்றனர். காதல் என்பது நின்று நிதானித்து சிந்தித்து எடுக்கும் முடிவு அல்ல. அது தன்னை மீறி நடைபெறும் ஒரு விடயம் என்பதே இந்த வார்த்தையின் மூலம் நாடப்படுகிறது. காதல் குறித்த இந்தப் பார்வை மனித இயல்புக்கும் முரணானது,  ஷரீஅத்திற்கும் முரணானது.

ஆனால் இந்த இடத்தில் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட ஒரு உண்மை இருக்கின்றது. ஒரு பெண் மீது ஆணுக்கு விருப்பம் ஏற்படுவதும்,  ஒரு ஆண் மீது பெண்ணுக்கு விருப்பம் ஏற்படுவதும் இயற்கையானது. இதனை இஸ்லாம் மறுக்கவில்லை. இந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியும். ஆனால் அந்த விருப்பம் மனித நாட்டத்திற்கு அப்பால்பட்டு நடைபெறுகின்ற ஒரு விடயமாக இஸ்லாம் கூறவில்லை.

அடுத்து,  காதல் பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புகிறது. எனவே, காதலித்து திருமணம் செய்யும் போது அந்தக் குடும்ப வாழ்வு நிலைக்கிறது. எந்தப் பிரச்சினையையும் எந்த சவாலையும் அவர்களது காதல் சமாளித்து விடும். காதல் என்பது இன்ப மயம் என்று சிலர் காதலை விளங்கப்படுத்த முற்படுகின்றனர். இந்த எண்ணமும் வெறுமனே ஒரு கற்பனை மாத்திரமே. இங்கு நாம் ஒரு கேள்வியை நியாயமாகக் கேட்டுப் பார்க்க வேண்டும். திருமணத்திற்குப் பின்னர் அவசியமான புரிந்துணர்வை திருமணத்திற்கு முன்னர் செய்யும் காதல் உண்மையில் வழங்குகிறதா?

பல உளவியல் அறிஞர்கள் தெரிவிப்பது போல்,  திருமணத்திற்கு முன்னர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடைபெறும் காதல் உறவு உண்மைத்தன்மை மீது அமைவதை விடவும் ஒரு வித போலித்தன்மை மீதே அமைகின்றது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மற்றவர் முன்னே நடித்துக் கொண்டிருக்கும் நிலையே காணப்படுகிறது. ஒருவர் தனது எதிர்மறைப் பக்கங்களை வெளிப்படுத்தவும் மாட்டார். மற்றவருடைய எதிர்மறைகளைக் கண்டு கொள்ளவும் மாட்டார். ஒருவித கற்பனை உலகிலேயே இருவரும் சஞ்சரித்துக் கொண்டிருப்பர். இது புரிந்துணர்வு,  நம்பிக்கை என்பவற்றுக்கு முற்றிலும் எதிரான நிலை என்பதில் சந்தேகமில்லை. அங்கு புரிந்துணர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. சில வெளிப்படையான விடயங்கள் அறியப்பட முடியும். ஆனால் குடும்ப வாழ்வுக்கான புரிதல்,  திருமணத்திற்கு முன்னரான காதலால்தான் ஏற்படுகிறது என்ற பில்டப் தவறானது.

அடுத்து,  இன்று காதலிப்பவர்களின் நோக்கம் எவ்வாறு இருக்கிறது?  எதற்காகக் காதலிக்கிறார்கள்?  ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. வெறுமனே களிப்பிற்கும் பொழுது போக்கிற்கும் 30 வீதமான ஆண்களும் 20 வீதமான பெண்களும் காதலிக்கிறார்கள். பாலியல் நோக்கத்திற்காக மாத்திரம் 65 வீதமான ஆண்களும் 5 வீதமான பெண்களும் காதலிக்கிறார்கள். திருமண நோக்கத்திற்காக 20 வீதமான ஆண்களும் 75 வீதமான பெண்களும் காதலிக்கிறார்கள்.

இங்கு முதல் இருவகையான நோக்கங்களும் மிகத் தெளிவாக இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாதவைகளாகும். அதிலும் குறிப்பாக ஆண்களைப்  பொறுத்தவரையில் அதிகமானவர்கள்,  தனித்து பாலியல் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே காதலில் ஈடுபட நினைக்கிறார்கள். (பெண்களே உஷார்!) காதலின் இந்த வடிவத்தை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. திருமண நோக்கமில்லாத வெறுமனே டைம் பாஸிங்காக இருப்பினும் அதனைத் தாண்டிச் சென்று பாலியல் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதாக இருப்பினும் அவை இஸ்லாத்தில் ஹராமானவை என்பதில் சந்தேகமில்லை.

சிலரிடத்தில், காதல் அனுமதிக்கப்பட்டதா? என்று வினவினால் திருமணத்திற்கு முன்னர் அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பர். இந்தப் பதில் பொதுப்படையாக சரியானது என்றிருப்பினும் இக்கருத்தை இன்னும் சற்று நுணுகிப் பார்த்தல் வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில்,  இந்தப் பத்தியில் காதல் என்ற சொல்லின் மூலம் திருமணத்திற்கு முன்னர் ஒரு இளைஞனுக்கும் யுவதிக்குமிடையில் தோன்றும் உறவு குறித்தே பேசப்படுகிறது. மாற்றமாக அதன் பொதுப்படையான கருத்தில் தத்துவார்த்தமாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே,  திருமணத்திற்கு முன்னர் இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் பரவலாகக் காணப்படும் அந்த உறவின் உளவியல், ஷரீஅத் பக்கங்கள் குறித்தே இங்கு பேசப்படுகின்றது. 

அந்தவகையில் இன்று அந்த உறவு தவிர்க்கப்பட முடியாத. மனித நாட்டத்திற்கு அப்பால்பட்டு நிகழும் ஒரு செயல் என்ற கருத்தும்,  அதன் மூலமே திருமண வாழ்வின் புரிந்துணர்வும், நம்பிக்கையும் கட்டியெழுப்பப்பட முடியும் என்ற எண்ணமும் திருமண நோக்கமின்றி வெறுமனே களிப்புக்கும்,  பாலியல் தேவைக்குமாக மாத்திரம் நடைபெறும் நிலையும் தெளிவாக இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாத விடயங்களாகும்.

எனின், காதல் என்ற விடயத்தில் இஸ்லாம் மறுதலிக்காத பகுதிகள் என்ன? என்ற ஒரு கேள்வி தோன்ற முடியும். ஆம், காதல் என்ற விடயத்தில் இஸ்லாம் மறுதலிக்காத ஒரு பக்கம் இருக்கிறது. அதுதான் காதலை ஒரு உணர்வாக இஸ்லாம் மறுக்கவில்லை. அதாவது அல்லாஹ்வின் படைப்பியல்பில், ஒரு ஆண் பெண்ணை விரும்புவதும்,  பெண் ஆணை விரும்புவதும் இயற்கையானது. அந்தவகையில்,  தனக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை என்ற வகையில் குறித்த ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீதோ,  குறித்த ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மீதோ நியாயமாக ஒரு விருப்பம் ஏற்படுவதை இஸ்லாம் ஹராம் என்று கருதவில்லை. அசிங்கம் என்று கூறவில்லை. பொழுதுபோக்கு நோக்கமோ,  பாலியல் நோக்கமோ இன்றி குடும்ப வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் எழுகின்ற நியாயமான மன உணர்வை இஸ்லாம் என்றைக்கும் மதிக்கிறது. இதற்கான பல உதாரணங்களை இஸ்லாமிய வரலாற்று நெடுகிலும் நாம் காணலாம். ஓரிரு உதாரணங்களை மாத்திரம் கீழே தருகிறேன்.

நபியவர்கள் காலத்தில் இரு அடிமைகள் ஒருவரை ஒருவர் விரும்பினர். அவ்விருவரில் அடிமைப் பெண்ணுக்கு குறித்த குடும்பத்தினர் வேறு ஒரு இடத்தில் திருமணம் பேசவே,  அந்தப் பெண் மறுத்து விட்டாள். தனக்கு தான் விரும்பும் அடிமையையே திருமணம் செய்து தருமாறு கேட்டாள். விடயம் நபியவர்கள் வரை வந்தது. விடயத்தை விசாரித்த நபியவர்கள் குடும்பத்தினரை அழைத்து காதலர்களுக்கு சிறந்த தீர்வு திருமணம் தான்என்றார்கள். (இப்னு மாஜா)

இங்கு நபியவர்கள்,  அவர்கள் இருவர் மத்தியில் காணப்பட்ட விருப்பத்தைத் தவறாகக் காணவில்லை. மாத்திரமன்றி அந்த விருப்பத்தை மதித்து அவர்களை சேர்த்து வைப்பதே நியாயமானது என்று குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.

அலி (றழி) அவர்களிடம்,  குறித்த ஒரு வீட்டில் திருட முற்பட்டதாக ஒரு இளைஞனைக் கொண்டு வந்தார்கள். அலி (றழி) அவர்கள் அவனிடம் காரணம் கேட்டபோது,  நான் திருட வரவில்லை. அந்த வீட்டிலுள்ள அடிமைப் பெண்ணை தான் நேசிப்பதாகவும் அவளைப் பார்க்கவே வந்ததாகவும் அழகிய கவிதை வரிகளில் கூறினான். அவனது கதையைக் கேட்டு அலி (றழி) அவர்கள் அவன் மீது இரக்கப்பட்டார்கள். அந்தக் குடும்பத்தாரிடம் அந்தப் பெண்ணை இவனுக்கு திருமணம் செய்து வையுங்கள். தேவை என்றால் உங்களுக்கு அவளுக்குப் பகரமாக வேறு ஒரு அடிமையைத் தருகிறோம் என்றார்கள். அப்போது அவர்கள் இவனது குடும்பத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று கூறவே அவன் தன் குடும்பப் பெயரைக் கூறினான். உடனே இவள் உனக்குத்தான் எடுத்துக் கொள் என்று குடும்பத்தினர் கூறினர்.

இந்தச் சம்பவத்தில் அலி (றழி) அவர்கள் காதலுக்காகப் பரிந்து பேசியிருக்கிறார்கள். அத்துடன் இந்தச் சம்பவங்களில் நியாயமாக திருமண நோக்கம் இருக்கின்ற பொழுது அந்த விருப்பங்களை எவரும் தவறாக நோக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

எனவே, காதலை ஒரு உணர்வாக இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. அந்த உணர்வு ஹராமானதல்ல. ஆனால் காதல் என்ற விடயத்தில் இஸ்லாம் மறுக்கின்ற மிக முக்கியமான பகுதி எதுவெனின்?  இன்று காதல் என்ற பெயரில் நடைபெறுகின்ற அதன் செயற்பாட்டு வடிவங்களை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக இன்று காதலர்கள் மத்தியில் காணப்படுவது போன்ற எல்லை மீறிய செயற்பாடுகளை அவை இருவரும் மாத்திரம் தனியாக ஊர் சுற்றுவதாகவோ,  தொடுகைகளாகவோ,  முத்தங்களாகவோ எந்த வடிவில் அமைவதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. 

அஜ்னபியான ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் இஸ்லாம் தனித்திருத்தலைத் தடைசெய்திருக்கிறது,  தொடுகையைத் தடைசெய்திருக்கிறது,  பார்த்தல் பேசுதல் போன்ற செயற்பாடுகளில் மிகுந்த வரையறைகளை இட்டிருக்கிறது. காதலிப்பவர்களது புறச் செயற்பாடுகள் இன்று இவற்றில் ஏதேனும் ஒரு வடிவத்திலேயே அமைகின்றன. அந்த வகையில் உணர்வாக அனுமதிக்கப்பட்டாலும் அதன் இவ்வகையான செயற்பாட்டு வடிவங்களை இஸ்லாம் சரி காணவில்லை. இவை மிகத் தெளிவாக ஹராமாக்கப்பட்டவைகளாகும்.

இறுதியாக, காதலர்களையும், காதலர்களின் பெற்றோரையும் நோக்கி சில உபதேசங்களைப் பரிமாறிக் கொள்ள நினைக்கிறேன்.

1.            சகோதரர்களே,  சகோதரிகளே, காதல் ஒரு உணர்வாக சுகமானதுதான். அது தவறானதும் இல்லை. ஆனால் குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புமிக்கது. பாரமானது. சுகங்களின் மீது மாத்திரம் அது கட்டப்படவில்லை. உங்கள் காதல் குடும்ப வாழ்வின் பொறுப்பை உணர்ந்து கொண்டதாய் அமையட்டும்.

2.            சகோதரர்களே,  சகோதரிகளே,  குடும்ப வாழ்வு ஒரு வணக்கம். நன்மை தரக்கூடியது. திருமணத்தின் பின் மனைவியை நோக்கிய ஒவ்வொரு செயலுக்கும் நன்மை இருக்கிறது. ஆனால் திருமணத்திற்கு முன்னர் காதல்,  உணர்வு என்ற எல்லையைத் தாண்டுகின்ற பொழுது ஒவ்வொரு செயலும் பாவமாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. உங்கள் காதல் பாவமாக அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

3.            சகோதரர்களே,  சகோதரிகளே, ஆணிலும் பெண்ணிலும் அல்லாஹ்தஆலா எதிர்ப்பால் கவர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது, ஆணினதும் பெண்ணினதும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் இவ்வுலகில் மனித இனம் நீண்டு நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவாகும். உங்களது காதல் அந்த நோக்கத்தை மறந்து வெறுமனே பொழுது போவதற்காகவும் அற்ப பாலியல் ஆசைகளுக்காகவும் அமைந்து விடக் கூடாது.

4.            சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதேவேளை உங்களது தீர்மானம் சரியாக அமையும் வகையில் உங்களுக்கு வழிகாட்டும் உரிமை உங்கள் பெற்றோருக்கு இருக்கிறது என்பதையும் மறவாதீர்கள். அந்தவகையில் எனக்கு விருப்பம் என்பதை மட்டும் வைத்து முடிவு செய்ய நினைக்காதீர்கள். பெற்றோரின் விருப்பமும் முக்கியமானதுதான். ஏனெனில்,  திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைவது மட்டுமல்ல அது இரண்டு குடும்பங்களின் இணைவும்தான்.

5.            சகோதரர்களே,  சகோதரிகளே,  புறத்தோற்றம் மாத்திரம் நீங்கள் காதல் கொள்வதற்குக் காரணமாக அமைந்து விடக் கூடாது. புறத்தோற்றத்திற்கு அப்பால் குணங்கள்,  நடத்தைகள்தான் குடும்ப வாழ்வின் சந்தோசத்திற்கு அவசியப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

6.            சகோதரர்களே, சகோதரிகளே,  ஒருவர் மீது உங்களுக்கு விருப்பம் தோன்றியது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களையே நீங்கள் மூன்று கேள்விகளைக் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

-              அவர் மீது நான் ஏன் விருப்பப்பட்டேன்?  (திருமண நோக்கமா? பொழுது போக்கா? பாலியல் நோக்கமா? புறத்தோற்றமா? நடத்தைகளா?)
-              அவரைத் திருமணம் செய்வதால் எனக்கு என்ன பயன்? (உலக மறுமைப் பயன்கள்)
-              அவரைத் திருமணம் செய்வதால் எனது குடும்பத்திற்கு என்ன பயன்? (நற்பெயர்,  களங்கம்)

7.            சகோதரர்களே, சகோதரிகளே, ஒருவர் மீது விருப்பம் தோன்றியது,  அந்த விருப்பம் மிக நியாயமானது என்பதில் நீங்கள் திருப்தியுடன் காணப்பட்டால் உங்கள் குடும்பத்தில் யாரிடம் கூறினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ அவரிடம் மாத்திரம் கூறுங்கள். அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள். தயவுசெய்து பலரிடம் பேசி உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாத்திரமன்றி,  உங்களுக்குக் கிடைத்துள்ள நிஃமத்தைப் பார்த்து பிறர் பொறாமைப்படவும் வாய்ப்பிருக்கிறது. நபியவர்கள் கூறினார்கள் உங்கள் தேவைகளை இரகசியமாக நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிஃமத்துகளைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவார்கள் என்றார்கள்.

8.            பெற்றோர்களே,  இன்றைய சூழலில் உங்கள் பிள்ளைகள் காதல் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான எல்லா புற வாய்ப்புக்களும் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். எனவே அவர்கள் மீதான உங்கள் அன்பும் அக்கறையும் மிகவும் அதிகமாக இருக்கட்டும். குடும்பத்தில் கிடைக்காத அன்பைத்தான் பிள்ளைகள் வெளியில் தேடிப் போகிறார்கள்.

9.            பெற்றோர்களே,  வயது வந்த உங்கள் பிள்ளைகளுடன்,  மனம்விட்டு உரையாடுங்கள். அவர்களது மனநிலைகள்,  விருப்பு வெறுப்புக்கள், பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோருடன் நட்பான உறவு இன்மையே இளைஞர்களின் பாதிப் பிரச்சினையாகும்.

10.          பெற்றோர்களே,  அவர்கள் தமது காதலைச் சொன்னால்,  அவசரப்பட்டுக் கோபம் கொள்ளாதீர்கள். நிதானமாக அணுகுங்கள். விடயத்தைப் புரிந்து கொள்ள முற்படுங்கள். பொறுத்தமில்லாத போது,  வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையில் மறுத்துரைக்காதீர்கள். அது பொறுத்தமற்றது என்பதை அவர்களாகவே உணர்ந்து கொள்ள வழி செய்யுங்கள். ஆனால் அவர்களது காதல் நியாயமானது பொறுத்தமானது என்றிருக்கும் போது,  அவர்களைச் சேர்த்து வைக்கவும் தயங்காதீர்கள்.


அல்லாஹ்வே போதுமானவன்.

Tuesday, September 1, 2015

வஸதிய்யா எனும் நடு நிலை - ஒரு சமூக எழுச்சிப் பாதை

வஸதிய்யா என்பது இன்றைய தஃவாக் களத்தின் ஆகர்ஷணமிக்க ஒரு சொற்பிரயோகம், எல்லோரும் பயன்படுத்துகின்ற ஒரு சொற்பிரயோகம் மாத்திரமன்றி பல்வேறு சமூகப் பிரச்சினைகளின்போது தீர்வாக அமைந்த ஒரு நிலைப்பாடாகவும் இது காணப்படுகிறது. 

பல சமயங்களில் நடு நிலைவாதிகள் அல்லது நடு நிலை தஃவாக்கள் விமர்சிக்கப்படுவதை நாம் அவதானிக்கிறோம். அந்த விமர்சனங்களில் மறைந்து நிற்கும் ஆதங்கங்களைப் பார்க்கின்ற பொழுது,  அவர்கள் மிகப் பெரும்பாலும் வஸதிய்யா அல்லது நடு நிலை என்பதை ஒரு சூழ்நிலையை சமாளிப்பதற்கான பொறிமுறையாகப் புரிந்து கொண்டிருப்பதைக் காணலாம். அல்லது வஸதிய்யாவைப் பிரயோகிப்பவர்களும் சில சமயங்களில் ஒரு சமாளிப்புப் பொறிமுறையாக மாத்திரம் வஸதிய்யாவைக் கையாழ்வதைக் காணலாம். இது வஸதிய்யா குறித்த எதிர் மனப்பான்மை ஒன்று கட்டியெழுப்பப்பட காரணமாக அமைய முடியும். 

உண்மையில் வஸதிய்யா என்பதன் கோட்பாட்டுப் பொருள்,  சிலர் ஊடாக நடைபெறும் அதன் பிரயோகத் தவறுகளுக்கு அப்பாற்பட்டது. வஸதிய்யா என்பது இஸ்லாத்தின் ஓர் உயிர்ப் பெறுமானம் சமூக எழுச்சியின் மையம் என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும்.

அந்தவகையில் வஸதிய்யா எனும் நடு நிலை என்பதன் பிரதானமான கருத்துக்கள் குறித்து இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

வஸதிய்யா எனும் அறபுப்பதம் குறிக்கும் மொழி ரீதியான பரிபாஷை ரீதியான கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஐந்து பிரதானமான கருத்துக்களில் வஸதிய்யா என்பது பயன்படுத்தப்படுகிறது.

முதலாவது இரண்டு விடயங்களுக்கு நடுவில் இருக்கின்ற ஒன்று,  அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பல விடயங்களுக்கு நடுவில் இருக்கின்ற ஒன்று என்ற கருத்தில் மொழியில் வஸதிய்யா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நடுவில் இருத்தல் என்பது பௌதீக ரீதியான இருத்தல்,  கருத்து ரீதியான இருத்தல் ஆகிய இரண்டையும் குறிக்கும். அல்குர்ஆன் கூறுகிறது அவ்வாறே நாம் உங்களை மத்திம சமூகமாக அமைத்தோம். நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ரஸுல் (ஸல்) அவர்கள் உங்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்” (பகரா – 143). ஷஹீத் செய்யத் குத்ப் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது இந்த உம்மத் அதன் ஒழுங்கமைப்பு, சிந்தனை,  உணர்வு,  கொள்கை,  நம்பிக்கை,  தொடர்புகள்,  காலம்,  இடம் அனைத்திலும் மத்திம தன்மையைப் பேணுகிறது என்றார்கள்.

இமாம் இப்னுல் அசீர் அவர்கள் இது குறித்துக் கூறுகையில் போற்றத்தக்க ஒவ்வொரு நல்ல பண்புக்கும் கண்டிக்கத்தக்க இரண்டு தீவிர நிலைகள் இருக்கின்றன. கொடை என்பது கஞ்சத்தனத்திற்கும் ஊதாரித்தனத்திற்கும் நடுவில் இருக்கும் பண்பாகும். துணிச்சல் என்பது கோழைத்தனத்திற்கும் அசட்டுத்தனத்திற்கும் மத்தியில் இருக்கும் பண்பாகும். கண்டிக்கத்தக்க பண்புகளைத் தவிர்ந்து வாழுமாறுதான் மனிதன் கேட்டுக் கொள்ளப்படுகிறான். கண்டிக்கத்தக்க பண்புகளை விட்டும் தூரமாகும் அளவுக்கு அவன் நடுநிலைப் பண்புக்கு நெருக்கமானவனாக இருப்பான்என்றார்கள்.

அல்குர்ஆன் இந்த சிந்தனையை மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது. அவர்கள் செலவு செய்யும் போது வீண்விரயம் செய்யவும் மாட்டார்கள். முற்றாகத் தவிர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். இவை இரண்டுக்கும் மத்தியில் சீராக நடந்து கொள்வார்கள்.” (புர்கான் 67) என்று அருளாளனின் அடியார்கள் குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. மற்றோர் இடத்தில் உனது கைகளை கழுத்தை நோக்கிக் கட்டிக் கொள்ளவும் வேண்டாம். அவற்றை முழுமையாக விரித்து விடவும் வேண்டாம். அதனால் கண்டனமும் கைசேதமும் மாத்திரமே எஞ்சும்” (இஸ்ராஃ - 29) என்றது.

எனவே வஸதிய்யா என்பதன் முதலாவது கருத்து இரண்டு கோணங்களைத் தவிர்த்து நடுவில் ஒரு நிலைப்பாட்டைக் கொள்ளுதல் என்பதாகும். நடு நிலை என்றவுடனேயே உடனடியாகப் புரிந்து கொள்கின்ற கருத்து இதுதான். மாத்திரமன்றி அதிகமானவர்களின் நடு நிலைப் பிரயோகங்களும் இந்த வடிவையே பிரதிபளித்து நிற்கின்றன.

இனி,  வஸதிய்யா என்பதன் இரண்டாவது கருத்துக்கு வருவோம். வஸதிய்யா என்பது மிகவும் சிறந்தது மிகவும் உயர்ந்தது என்ற கருத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அறபுமொழியில் வஸத்என்ற சொல் பரவலாக இந்தக் கருத்தில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நாம் உங்களை மத்திம சமூகமாக அமைத்தோம்என்ற வசனத்திற்கு இமாம் தபரி அவர்கள் விளக்கமளிக்கும் போது,  “வஸத் என்பது அறபு மொழியில் சிறந்தது என்ற கருத்தைத் தருகிறது. ஒருவரது பரம்பரையை உயர்ந்த பரம்பரை என்று குறிப்பிட விரும்பினால் அறபிகள் வஸத் என்ற சொல்லையே அதற்காகப் பயன்படுத்துவார்கள்என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் கருத்திலேயே நபியவர்கள் விடயங்களில் சிறந்தது மத்திமமானதுஎன்றார்கள். இங்கு மத்திமம் என்பது உயர்ந்தது என்ற கருத்தையே தருகிறது. ஒரு தடவை கலாநிதி தாரிக் சுவைதான் அவர்கள் தனது பிரபல்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான வாழ்க்கை கற்றுத் தந்தவைஎன்ற நிகழ்ச்சியில் வஸதிய்யா என்ற கருத்தை விளங்கப்படுத்தும்போது வஸதிய்யா என்பதை சுருக்கமாகக் கூறினால் ஒரு விடயம் இரு ஓரங்களுக்கு நடுவில் இருக்கும். அதேவேளை அது உயர்ந்ததாகவும் காணப்படுவதையே வஸதிய்யா என்போம். உதாரணமாக மத்தியில் உள்ள மலை என்று நாம் கூறும்போது சூழ உள்ள மலைகளில் அதுவே உயர்ந்தது என்பதையே நாம் நாடுகின்றோம். அதுபோல் இஸ்லாம் ஒரு நடு நிலை மார்க்கம் என்று நாம் சொல்லும் போது,  அது முரண்பட்ட பல கருத்தியல்களிடையே ஒரு மத்திய புள்ளி என்றே நாம் சொல்கிறோம். மத்திய புள்ளி எனும் போது ஒரு அபூர்வமான சமநிலையில் அது உயர்ந்து நிற்கிறது என்றே பொருள்படுகிறதுஎன்று விளங்கப்படுத்துகிறார்.

இந்த அல்குர்ஆன் வசனங்களின் மூலம் இந்தக் கருத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அல்குர்ஆன் மிகச் சீரானதை நோக்கி வழிநடாத்துகிறது…” (இஸ்ரா – 9) எது உலகில் மிகவும் சிறந்ததோ…? மிகவும் உயர்ந்ததோ…? மிகவும் சரியானதோ…? அதனை நோக்கியே அல்குர்ஆன் வழிகாட்டுகிறது.

அவன்தான் தனது தூதுவரை நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தான். இணைவைப்பாளர்களுக்கு வெறுப்பாக அமைந்தாலும் கூட உலகின் எல்லா மார்க்கங்களையும் வெற்றி கொண்டதாக இந்த மார்க்கம் மாற வேண்டும்” (தௌபா – 33) என்று அல்குர்ஆன் கூறுகிறது. இந்த மார்க்கம் நடுநிலையானது என்பது, அதுதான் உயர்ந்தது. அதுதான் வெற்றி பெற்றது. அதுதான் அனைத்தையும் மிகைத்து மேலெழுந்து நிற்கிறது என்று பொருள் கொள்ளப்படுகிறது.

எனவே,  வஸதிய்யா என்பது பல விடயங்களுக்கு மத்தியில் ஒன்று மிகவும் சிறந்து உயர்ந்து காணப்படுகின்ற நிலையாகும். அந்தவகையில் ஒரு உயர்ந்த சிறந்த தெரிவையே மத்திமம் என்போம். எது பயனுள்ளது? எது விளைவைத் தரவல்லது? எது பிறவற்றில் நின்றும் தனித்தன்மையுடன் வேறுபடுகிறது? எது உயர்ந்த கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது? எது உள்ளத்தை அமைதி கொள்ளச் செய்கிறது? அதுவே வஸதிய்யா.

வஸதிய்யா என்பதன் மூன்றாம் கருத்துக்கு வருவோம். வஸதிய்யா என்பது ஸ்திரமாயிருத்தல் ஆழ்ந்து வேறூன்றியிருத்தல் என்ற கருத்தையும் குறிக்கிறது. வஸதிய்யா என்பதன் முதலாவது கருத்து இரண்டு ஓரங்களுக்கு நடுவில் காணப்படும் நடு நிலை என்று கூறினோம். அந்தவகையில் அங்கு ஓரநிலைப்பாடுகளைத் தவிர்த்து நடுவில் உள்ள நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்பதே எங்களிடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணங்களில் ஒன்று என்னவெனில் ஓரநிலைப்பாடுகள் என்றும் ஸ்திரமற்றவை,  நிலையற்றவை உறுதியானவையல்ல. ஆனால் மத்திய நிலைப்பாடு ஸ்திரமானது. ஆழ்ந்து வேறூன்றியது,  உறுதியானது. 

இதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. மனிதர்களில் சிலர் அல்லாஹ்வை ஓரத்தில் இருந்து வணங்குகின்றனர். (அதாவது உறுதியற்ற நிலையில் வணங்குகின்றனர்) அவருக்கு ஒரு நன்மை நேர்ந்தால் திருப்தி கொள்வார். தீமை நேர்ந்தால் பழைய நிலைக்குத் திரும்பி விடுவார். இவர் உலகம் மறுமை இரண்டையும் இழந்து விட்டவர். இதுதான் மிகத் தெளிவான நஷ்டாகும்” (ஹஜ் - 11)

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் சில இமாம்கள் அவர் திருப்தியற்ற நிலையில் அல்லாஹ்வை வணங்குகிறார். அது மார்க்கத்தில் ஒரு ஓரத்தில் இருப்பது போன்றதாகும். அவர் உறுதியாக மார்க்கத்தில் நுழைந்து கொள்ளவில்லை. அதனால்தான் ஒரு சிறிய தீங்கை காண்கின்ற போதே மார்க்கத்தை விட்டுச் சென்று விடுகிறான்என்றார்கள்.

இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையிலேயே இந்த வசனம் இறங்கியமைக்கான காரணமும் அமைந்திருக்கிறது. இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் ஒருவர் மதீனாவுக்கு வந்து இஸ்லாத்தைத் தழுவுகிறார். தனது மனைவி ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தால் தனது குதிரை கன்றை ஈன்றால் இது நல்லதொரு மார்க்கம் என்பார்கள். இவ்வாறு நடக்காதபோது,  இது மோசமானதொரு மார்க்கம் என்பார்கள். அப்போதுதான் இந்த வசனம் இறங்கியதுஎன்றார்கள். (புஹாரி).

மேற்கூறப்பட்ட விளக்கங்களின் பின்புலத்தில் நின்று பார்க்கின்ற பொழுது,  வஸதிய்யா என்பது ஆழ்ந்ததொரு அடிப்படை கோட்பாடு,  ஒரு ஸ்திரமான வாழ்வொழுங்கு என்பதைப் புரிந்து கொள்ளலாம். மாற்றமாக அது ஒரு தற்காலிக அணுகுமுறையல்ல அல்லது ஒரு சமாளிப்புப் பொறிமுறையல்ல.

வஸதிய்யா என்பதன் நான்காவது கருத்து,  நேரான பாதை என்பதாகும். அறபுமொழியில் இது ஸிராத் முஸ்தகீம் என்று வழங்கப்படுகிறது. ஸிராத் முஸ்தகீமைக் கடைபிடித்தல் என்பது இலக்கை நோக்கிய உறுதியான பயணம். இடையில் கிளைப்பாதைகளில் கவனத்தை சிதற விடாதிருத்தல் என்பதாகும். ஸிராத் முஸ்தகீம் எனும் இந்த செயன்முறையையே வஸதிய்யா என்பதும் குறிக்கிறது. இங்கேயும் பல்வேறு கிளைப்பாதைகளைத் தவிர்த்து உறுதியான ஒரு பாதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதுதான் வஸதிய்யா.

அல்-குர்ஆன் இந்தக் கருத்தை எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பாருங்கள் இதுதான் எனது நேரான பாதை,  இதனையே பின்பற்றுங்கள். வேறு பாதைகளைப் பின்பற்றாதீர்கள். அது உங்களை நேரான பாதையை விட்டும் திசை திருப்பி விடும். இதுதான் உங்களுக்கு சொல்லப்படும் உபதேசம். நீங்கள் தக்வா உள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக” (அன்ஆம் - 153)

இந்த அல்குர்ஆன் வசனத்தை ஒரு வரைபின் மூலம் நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு விளங்கப்படுத்திக் காட்டினார்கள். ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் நாங்கள் நபியவர்களுடன் இருந்தோம்,  அப்போது நபியவர்கள் நிலத்தில் ஒரு கோடு போட்டார்கள். அதன் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரண்டு கோடுகள் வீதம் வரைந்தார்கள். பின்னர் மத்தியில் உள்ள கோட்டின் மீது தனது கையை வைத்து,  இதுதான் அல்லாஹ்வின் பாதை என்று கூறிவிட்டு இந்த ஆயத்தை ஓதிக் காட்டினார்கள்என்றார்கள்.

எனவே,  இங்கு அல்-குர்ஆனினதும் நபியவர்களினது விளக்கத்தின் அடிப்படையில்,  கிளைப்பாதைகளைத் தவிர்த்து மத்திம பாதையில் பயணம் செய்வது ஸிராதுல் முஸ்தகீமைக் கடைபிடித்தல் என்று புரிந்து கொள்ளலாம். இதுதான் வஸதிய்யா என்பதன் மூலமும் நாடப்படுகிறது.

ஸிராதுல் முஸ்தகீம் என்பதுதான் வஸதிய்யா என்ற கருத்தை பிறிதோர் இடத்தில் அல்குர்ஆன் தனது வசனப் போக்கின் மூலம் தெளிவுபடுத்துகிறது. ஸுறதுல் பகராவின் 142வது வசனத்தை நிறைவு செய்யும்போது தான் நாடுபவர்களை ஸிராதுல் முஸ்தகீமின் பால் வழிநடாத்துகிறான்என்று கூறிவிட்டு,  அடுத்த வசனத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றான். அவ்வாறே உங்களை நாம் மத்திமமான சமூகமாக அமைத்தோம்என்கிறான். இந்தத் தொடரை நோக்கும் பொழுது அல்லாஹ்வின் ஸிராதுல் முஸ்தகீம் எனும் வாழ்க்கை வழிதான் வஸதிய்யா வாழ்வொழுங்கு,  அந்தப் பாக்கியத்தை இந்த உம்மத்திற்குத்தான் அவன் வழங்கியிருக்கின்றான் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வஸதிய்யா என்பதன் ஐந்தாவது கருத்து நீதி என்பதாகும். இமாம் ராகிப் அல் இஸ்பஹான் அவர்கள் வஸதிய்யா என்ற சொல்லை வரைவிலக்கணப்படுத்துகின்ற பொழுது ஒரு விடயத்தின் நீதியான நிலை எதுவோ அதுதான் மத்திமம்என்றார்கள். அல்-குர்ஆனின் நீங்கள் தஸ்பீஹ் செய்யக்கூடாதா என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? என்று அவர்களில் மத்திமமானவர் கூறினார்” (கலம் - 28) என்ற வசனத்திற்கு இமாம் இப்னு கஸீர் அவர்கள் விளக்கமளிக்கும்போது,  அவர்களில் மத்திமமானவர் என்பதன் கருத்து அவர்களில் நீதியானவர் என்ற விளக்கத்தை இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் இன்னும் பலரும் குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

பொதுவாக நீதி என்பது ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அந்தஸ்தில் வைத்தல் என்று கூறுவார்கள். வஸதிய்யா என்பது நீதி என்று கூறும்போது,  பௌதீக ரீதியாக நடுவில் இருக்கும் பொழுது மாத்திரம்தான் அங்கு வஸதிய்யா பேணப்படுகிறது என்று சொல்வதற்கில்லை. மாற்றமாக வஸதிய்யா என்பது நீதியான நிலைப்பாட்டைக் கொள்ளுதலாகும். இது பௌதீக ரீதியில் நடுவிலன்றி வேறு வடிவிலும் காணப்பட முடியும்.

மேற்கூறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் நோக்கும் போது வஸதிய்யா என்பது பக்கச் சார்பின்றி நடுவில் அமைந்த ஒரு நிலைப்பாடு,  உயர்ந்து நிற்கும் சிறந்ததொரு தெரிவு,  நிலையான ஒரு வாழ்வொழுங்கு,  தடம் மாறாத இலக்கு நோக்கிய பயணம்,  ஒவ்வொன்றுக்கும் உரிய இடத்தை வழங்குதல் போன்ற அனைத்துக் கருத்துக்களும் பொதிந்த ஒரு கோட்பாட்டையே குறித்து நிற்கின்றது. இதில் பொதிந்துள்ள ஒவ்வொரு பெறுமானமும் ஒரு சமூகம் எழுந்து நிற்பதற்கான காரணிகள். இந்தப் பெறுமானங்களை வாழ்வாகக் கொள்ளும் ஒரு சமூகம் எப்பொழுதும் உலகிற்கே வெளிச்சம் கொடுப்பவர்களாகக் காணப்படுவர்.

உலகில் மனித வரலாறு ஆரம்பித்த நாள் முதல் வஸதிய்யா ஒரு வாழ்வு முறையாக இருந்து வந்திருக்கிறது. இது நவீன காலத்தில் சில அறிஞர்களின் ஒரு கண்டுபிடிப்பல்ல அல்லது சில தீவிர நிலைகளைக் கையாள வந்த ஒரு பொறிமுறை மாத்திரமல்ல அல்லது ஏதோ ஒன்றுக்கு எதிராகப் பெறப்பட்ட மாற்று நிலைப்பாடல்ல. மாற்றமாக எல்லாத் தரப்பினரையும் நீதியாகக் கையாளும் ஒரு ஒழுங்கு,  உலகில் மனித இனம் செழிப்பதற்கான ஒரு வாழ்வு முறை.

2005ஆம் ஆண்டு மக்காவில் நடைபெற்ற வஸதிய்யா பற்றிய மாநாட்டில்,  வஸதிய்யாவுக்கான சர்வதேச மன்றத்தின் பொதுச் செயலாளர்,  பொறியியலாளர் மர்வான் பாஊரி அவர்கள் முன்வைத்த கருத்து,  இந்த இடத்திற்கு மிகவும் பொறுத்தமானது. வஸதிய்யா என்பது ஒரு சிந்தனை,  விழுமிய மூலாதாரம். எந்த விடயத்திலும் மிகப் பொறுத்தமானதைத் தெரிவு செய்வதற்கான அளவுகோள். அது எமது சிந்தனை,  செயற்பாடு,  சட்டம், நிலைப்பாடு,  பண்பாடு,  நடத்தை என எந்தப் பகுதியிலும் மிகப் பொறுத்தமானதைத் தேர்ந்தெடுப்பதற்கான மூல அளவுகோள். எமது கொள்கைகள்,  கருத்திட்டங்கள்,  நிலைப்பாடுகள் அனைத்திலும் பொதிந்திருக்க வேண்டிய ஒரு நேர்மை. அதே சமயம் வஸதிய்யா என்பது அரைவாசித் தீர்வுகளைக் குறித்து நிற்பதில்லை. மாற்றமாக எமது தெரிவுகள், செயற்போக்குகள் அனைத்திலும் மிகச் சரியானதை அடைந்து கொள்வதற்கான இடைவிடாத உழைப்பு. வஸதிய்யா என்பது வலது சாரிக்கும் இடது சாரிக்கும் நடுவில் எடுக்கும் ஒரு நிலைப்பாடு அல்ல. மாற்றமாக அது ஒரு சிந்தனை முறை,  பண்பாட்டுத் திட்டம்,  நடத்தைக் கோலம்என்கிறார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில் வஸதிய்யா என்பது ஒன்றை நியாயப்படுத்துவதற்கான அல்லது விட்டுக் கொடுத்து செல்வதற்கான ஒரு அணுகுமுறை என்று மாத்திரம் சிலர் கருதுகின்றனர். மாற்றமாக அது ஒரு சீர்திருத்த அணுகுமுறை. அது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குரியதல்ல. மாற்றமாக எல்லாக் காலங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு வாழ்வொழுங்கு. வஸதிய்யா நீதியையும் தயாளத்தையும் பிரதிபளிப்பது போல் மனித இனத்திற்கான உயர் மாதிரியையும் பிரதிபளிக்கின்றது. வஸதிய்யா என்பது கம்பீரம்,  சக்தி. அது ஒருபோதும் பலவீனமோ அல்லது அடிபணிதலோ அல்ல. யார் நடுவில் நிற்கிறாரோ அவர் ஓரங்களை ஆள்வதற்கு சக்தி பெறுகிறார்என்று கூறியுள்ளார்.

வஸதிய்யா பற்றிய அற்புதமான வரிகள் இவை. இந்தக் கண்ணோட்டத்தில் வஸதிய்யா புரிந்து கொள்ளப்படுகின்ற போது அது எந்த சமூகத்தையும் உயர்ந்த இடத்தில் கொண்டு போய் அமர்த்தி விடும். அது அவர்களது பார்வைகளை விசாலப்படுத்தி விடும். சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி விடும். உள்ளங்களைப் பிணைத்துவிடும். அவர்களை முன்னோக்கி உந்தித் தள்ளி விடும். அவர்கள் ஒன்றுபடுவார்கள். அனைவரையும் அரவணைப்பார்கள். எல்லாத் தீவிரங்களையும் தவிர்ப்பார்கள். அவர்களது செயலில் நிதானமிருக்கும். நாவில் உண்மையிருக்கும். சிந்தனையில் ஆழமிருக்கும். உழைப்பில் சக்தியிருக்கும். பயணத்தில் உறுதியிருக்கும். இலக்கில் தெளிவிருக்கும். இதுதான் சமூக எழுச்சியின் ஆரம்பப் புள்ளி. இதனை வஸதிய்யா தொடக்கி வைக்கிறது.

அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.