Friday, June 22, 2018

மகாஸித் தேடல்கள் (10)


ஒரு தலைப்பின் மகாஸிதுகளை அடையாளம் காண்பதற்கான கேள்விகள்



மகாஸிதுஷ் ஷரீஆ என்பது,  உலகில் ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான நோக்கங்கள். அவை முழுமையாக மனித நலன் சம்பந்தப்பட்டவை. அவை இலக்கு வடிவிலும் காணப்பட முடியும் மூலோபாய வடிவிலும் காணப்பட முடியும். உலகம் சம்பந்தப்பட்ட மகாஸிதுகளும் உண்டு,  மறுமை சம்பந்தப்பட்ட மகாஸிதுகளும் உண்டு. இது மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன என்பதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளும் பொதுக் கருத்தாகும்.

 இதன் மூலம் ஷரீஆவுக்கு மொத்தமான நோக்கங்கள் மாத்திரமே காணப்படுகின்றன என்று எவரும் நினைத்து விடக் கூடாது. மாற்றமாக ஷரீஆவின் ஒவ்வொரு கிளைப்பகுதிக்கும் அதுபோல் ஒவ்வொரு சட்டத்திற்கும் கூட தனியாக மகாஸிதுகள் இனம்காணப்பட முடியும்.

 அந்தவகையில் மகாஸித் எனும் சொல்லை நாம் ஷரீஆவின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பிரயோகிக்கவும் முடியும். அதாவது மகாஸிதுல் உஸ்ரா - குடும்பத்தின் மகாஸிதுகள்,  மகாஸிதுல் இபாதாத் - வணக்கவழிபாடுகளின் மகாஸிதுகள்,  மகாஸிதுஸ் ஸலாத் - தொழுகையின் மகாஸிதுகள்,  மகாஸிதுஸ் ஸுஜுத் - ஸுஜுதின் மகாஸிதுகள் என ஷரீஅத்தின் பெரிய பரப்பு முதல் மிகச்சிறிய பரப்பு வரை ஒவ்வொன்றுக்கும் பிரயோகிக்க முடியும்.

ஆனால் இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி என்னவெனின்,  குறித்த ஒரு தலைப்பின் மகாஸித்கள் எவை என்பதை அடையாளம் காண்பது எவ்வாறு? என்பதுதான். இந்தக் கேள்விக்கான எளிமையானதொரு பதிலை வழங்குவதுதான் இந்தப் பத்தியின் நோக்கம்.
குறித்த ஒரு தலைப்பின் அல்லது துறையின் அல்லது சட்டத்தின் மகாஸிதுகளை அறிந்து கொள்வதற்கு முக்கியமாக மூன்று கேள்விகளுக்குப் பதில் காண்பது அவசியமாகிறது.

1.            ஏன்?
2.            என்ன விளைவுகள் அடையப் பெற வேண்டும்?
3.            எதன் மீது எழுந்து நிற்கின்றது?

இந்த மூன்று கேள்விகளுக்கும் அளிக்கப்படும் பதில்கள்தான் குறித்த தலைப்பின் மகாஸிதுகளாக அமையும். இந்த ஒவ்வொரு கேள்வியையும் தனித்தனியாக விளங்கப்படுத்த முன்னர் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது,  மகாஸித்களை இனம்காண்பதற்கு இந்த மூன்று கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று ஆரம்ப கால மகாஸித் அறிஞர்களும் சரி நவீன கால மகாஸித் அறிஞர்களும் சரி தனித்துக் கூறியது கிடையாது. ஆனால் மகாஸித் பற்றிய ஆய்வுகளை தொகுத்து நோக்கும் பொழுது,  அறிஞர்கள் எவற்றை எல்லாம் மகாஸித் என்று அடையாளம் காட்டியிருக்கிறார்கள் எனின்,  அவை மிகப்பெரும்பாலும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களாகவே காணப்படுகின்றன. அந்தவகையில் இது எனது தனிப்பட்டதொரு இஜ்திஹாத் என்றே சொல்ல வேண்டும். மகாஸித் பற்றிய ஆய்வுகள் எல்லாமே மாற்றுப் பார்வைகளுக்கு இடம் வைத்துள்ளவை என்ற வகையில் எனது இந்த இஜ்திஹாதிலும் அதே இடம் இருக்கிறது என்பதை முதலில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

ஏன்?

ஏன் என்பது எந்தவொரு விடயத்தினதும் மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான ஒரு கேள்வியாகும். இது குறித்து விரிவாகப் பேசிய நவீன அறிஞர்களில் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் முதன்மையானவர். அவர் குறிப்பிடுவது போல்(1) ஏன் என்ற கேள்வி வரலாற்று நெடுகிலும் மனிதன் கேட்டுவந்த கேள்விதான். அந்தக் கேள்விதான் உலகில் தத்துவ சிந்தனையை உருவாக்கியது. இஸ்லாமிய பாரம்பரியத்திற்குள்ளே அல்லாஹ்வின் சட்டங்களுக்கும் செயல்களுக்கும் இந்தக் கேள்வி தொடுக்கப்படுகின்ற பொழுதுதான் மகாஸிதுகள் தோற்றம் பெறுகின்றன. 

கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்கள் குறிப்பிடுவது போல்(2) அல்லாஹ்வின் அடிப்படையான பண்புகளில் ஒன்று அவன் ஹகீம் என்பதாகும். எந்த ஒன்றையும் ஒரு நியாயம்,  காரணத்துடனேயே செய்பவன் என்பதே இதன் பொருள். எனவே அல்லாஹ்வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கிறது.  இங்குதான் அல்லாஹ்வின் நடவடிக்கைகள் குறித்து ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதற்கான நியாயம் உருவாகிறது.

ஏன்? என்ற கேள்வியின் மூலம் ஒரு விடயத்தின் இருப்புக்கான நியாயம் என்ன என்பதுதான் முக்கியமாகத் தேடப்படுகிறது. இப்படி ஒரு விடயம் ஏன் இருக்கிறது? அல்லாஹ் ஏன் இவ்வாறு ஒரு செயலை வைத்திருக்கிறான்?  உதாரணமாக குடும்பம் என்ற ஒரு முறைமையை அல்லாஹ் இந்த உலகில் ஏன் வைத்துள்ளான்? உலகில் மனித இனத்தின் இருப்பும்,  அதன் கௌரவமும் பாதுகாக்கப்படுதல். இதுதான் குடும்பம் ஏன்? என்ற கேள்விக்கான பதில். இதனைத்தான் இமாம்கள் ஹிப்ழுன் நஸ்ல் எனும் கலைச் சொல் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதுபோல் தஃவா ஏன்? உலகிலும் மறுமையிலும் மனித இனத்தின் விமோசனம். உலகில் மனித இனம் அழிவிலிருந்து காக்கப்படல். இதுதான் ஏன் என்ற கேள்விக்கான பதில். இந்தப் பதில்களும் மகாஸிதுகளில் ஒன்று என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

என்ன விளைவுகள்அடையப் பெற வேண்டும்?

இது மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மற்றொரு கேள்வி. ஒரு விடயத்தை அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை இது குறித்து நிற்கின்றது. இது மிகப்பெரும்பாலும் குறித்த தலைப்புடன் சம்பந்தப்பட்ட வகையில் உலகத்தில் நடைபெறவேண்டிய மாற்றங்களையும் மறுமையின் பேறுகளையும் உள்ளடக்கியிருக்கும். மற்றொரு வகையில் சொன்னால் நாம் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எதனை சாதிக்க விரும்புகிறோம்? எதனை விளைவாகக் கொண்டுவரப் போகிறோம்? என்ற கேள்விகளுக்கான பதில்களாக அமையும்.

முதலில் கேட்கப்பட்ட ஏன் என்ற கேள்விக்கும் இந்தக் கேள்விக்குமிடையிலான அடிப்படை வேறுபாடு என்னவெனின்,  ஏன் என்ற கேள்வியின் பதில் குறித்த விடயத்தின் இருப்பு சம்பந்தப்பட்டது,  இந்தக் கேள்வியின் பதில் குறித்த விடயத்தின் விளைவு சம்பந்தப்பட்டது.
உதாரணமாக,  குடும்ப வாழ்வின் மூலம் என்ன விளைவுகள் அடையப்பெற வேண்டும்? என்ற கேள்விக்கு,  அல்குர்ஆன் குறித்துக் காட்டுவது போல்(3) “ஸகன் எனும் அமைதியைப் பெற்றுக் கொள்ளுதல்,  ஆறுதலை அடைந்து கொள்ளுதல்,  என்ற பதிலும் ஒன்றாகும். இது குடும்ப வாழ்வின் மூலம் அடையப்பெறும் ஒரு விளைவு என்றவகையில்,  இதுவும் குடும்ப வாழ்வின் மகாஸிதுகளில் ஒன்றாக மாறுகிறது. அதுபோல் தஃவாவின் மூலம் என்ன விளைவுகள் அடையப்பெற வேண்டும்? என்றொரு கேள்வி கேட்கப்பட்டால்,  பௌதீக ரீதியாகவும் சரி சிந்தனை ரீதியாகவும் சரி,  உலகில் அடிமைத்துவம் அகற்றப்பட்டு சுதந்திர சூழல் ஏற்படுத்தப்படல் என்பதும் ஒரு பதிலாக அமையும். இது தஃவாவின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய ஒரு விளைவு. எனவே இதுவும் தஃவாவின் மகாஸிதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தக் கேள்வி மகாஸிதை அறிந்து கொள்வதற்கான கேள்விகளுள் ஒன்று என்பதை முதலில் நாம் அல்குர்ஆனில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அல்குர்ஆன் பலசமயங்களில் ஒன்றன் விளைவை அதன் நோக்கமாகக் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம். உதாரணமாக தொழுகை பற்றிப் பேசும் பொழுது,  “…தொழுகை பாலியல் பாவங்களையும் ஏனைய குற்றங்களையும் விட்டுத் தடுக்கிறது…” என்கிறது. (அன்கபூத் - 45). இங்கு தொழுகை நிறைவேற்றப்படும் பொழுது,  அது தனிமனிதனிலும் சரி சமூகத்திலும் சரி பாவச் செயல்களைக் குறைக்கும் விளைவைக் கொண்டு வருகிறது.

அதுபோல் பல்வேறு மகாஸித் ஆய்வுகளிலும் இந்த அணுகுமுறையைக் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் நோன்பின் மகாஸிதுகளைக் குறிப்பிடும் பொழுது,  தக்வா எனும் உளநிலையை அடைந்து கொள்ளுதல் என்பார்(4). இது நோன்பு நோற்பதால் ஒவ்வொருவரிலும் ஏற்பட முடியுமான விளைவு.

எதன் மீது எழுந்து நிற்கின்றது?

மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மற்றொரு கேள்வி இது. இங்கு இருப்பு,  விளைவு என்ற பரப்புக்கள் அன்றி,  ஒரு குறித்த விடயத்தினை தாங்கி நிற்கும் காரணி எது? என்ற தேடல் காணப்படுகின்றது. இதனை மற்றொரு வகையில் கூறினால் ஒரு விடயத்தின் இருப்பு அல்லது விளைவு பிறிதொன்றில் தங்கியிருக்குமாக இருப்பின் அந்தப் பிறிதொன்றும் கூட குறித்த விடயத்தின் மகாஸிதுகளில் ஒன்றாகக் கருதப்படும்.

உதாரணமாக,  குடும்ப வாழ்வு எதன் மீது எழுந்து நிற்கின்றது? என்ற கேள்விக்கு அல்குர்ஆன் வழங்கும் பதில்,  அன்பும் அருளும் என்பதாகும்(5). இதனால்தான் அதிகம் அன்பு செலுத்தக் கூடிய பெண்ணைத் தேர்வு செய்து திருமணம் செய்யுமாறு நபியவர்கள் இளைஞர்களுக்கு ஆலோசணை வழங்கியுள்ளார்கள்(6). இது குடும்ப வாழ்வு எழுந்து நிற்கும் காரணிகளில் ஒன்றைப் பேசுகிறது. குடும்ப வாழ்வுக்கு இந்தக் காரணி பிரதானமானது என்றவகையில் இதுவும் குடும்ப வாழ்வின் மகாஸிதுகளில் ஒன்றாகிறது.

அதுபோல் தஃவா எதன் மீது எழுந்து நிற்கிறது? என்ற கேள்விக்கு மனிதவளம்,  பொருளாதார வளம்,  ஹிக்மா எனும் ஞான அணுகுமுறை போன்ற பல காரணிகள் அல்குர்ஆனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன(7). இந்தக் காரணிகள் ஒவ்வொன்றும் தஃவாவின் நீடித்த இருப்புக்கும் விளைவுக்கும் அத்தியவசியமானவை என்றவகையில் இவையும் தஃவாவின் மகாஸிதுகளில் அடங்குகின்றன.

ஒன்றைத் தாங்கி நிற்கும் காரணியும் அதே தரத்திலேயே முக்கியத்துவம் பெறுகின்றமையை வலியுறுத்தும் ஒரு சட்டவிதி இப்படிச் சொல்கிறது. ஒரு வாஜிப் முழுமை பெறுவது பிறிதொன்றில் தங்கியிருப்பின் அவ்விடயமும் வாஜிபாக அமையும் (மஃலமது ஸாயித் லில்கவாயித் அல்பிக்ஹிய்யா வல் உஸுலிய்யா,  விதி இல:1836).

கலாநிதி இஸாம் பஷீர் அவர்கள் தஃவாவின் மகாஸிதுகள் பற்றிப் பேசுகின்ற பொழுது,  ஹிக்மா எனும் ஞான அணுகுமுறையையும்,  ததர்ருஜ் எனும் படிமுறை அமைப்பையும் அதன் மகாஸிதுகளாக அடையாளப்படுத்துகிறார்கள்(8). உண்மையில் இவையிரண்டும் தஃவாவின் இருப்புக்கான நியாயங்களோ அல்லது தஃவாவின் மூலம் அடையப்பெறும் விளைவுகளோ அல்ல. மாற்றமாக தஃவா என்ற செயற்பாட்டின் விளைவுகள் சிறந்த முறையில் எய்தப்படுவதற்கு இந்த அணுகுமுறைகள் இன்றியமையாதவை. அந்தப்பின்புலத்திலேயே அவை இங்கு மகாஸிதுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இறுதியாக இப்பத்தியை நிறைவு செய்ய முன்னர்,  முன்னைய பத்திகளில் கூறப்பட்ட ஒரு விடயத்தை மீள்வலியுறுத்திவிட்டுச் செல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன். இங்கு சொல்லப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்குமான பதில்கள் மூலம் ஒரு விடயத்தின் மகாஸிதுகளை அடையாளம் காணமுடியும் என்று சொல்லும் போது,  அதன் பொருள் மகாஸிதுகள் ஒவ்வொருவரதும் மனோவிருப்பங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட முடியும் என்பதல்ல,  மாற்றமாக இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற பொழுது மாத்திரமே அவை மகாஸித் என்று கருதப்படும். அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசப்படாத ஒரு விடயம் ஒருபொழுதும் மகாஸிதாக அடையாளப்படுத்தப்பட முடியாது. இது மகாஸித் அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. இங்கு முக்கியமாக வலியுறுத்தப்படும் விடயம் என்னவெனின்,  ஒரு தலைப்பின் அல்லது சட்டத்தின் மகாஸிதுகள் என்ன என்பதை அல்குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் நாம் அடையாளம் கண்டு கொள்வதற்கான பொறிமுறை என்ன என்பது பற்றியே கருத்துரைக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

அடிக்குறிப்புக்கள்

1.            அவ்தா,  ஜாஸிர். (2012). மகாஸிதுஷ் ஷரீஆ கபல்ஸபா லித்தஷரீஃ அல்இஸ்லாமி,  ருஃயா மன்ழுமிய்யா. வெர்ஜீனிய்யா,  அமெரிக்கா: அல்மஃஹதுல் ஆலமி லில்பிக்ரில் இஸ்லாமி. பக்கம்: 65 – 109. - (2011). மகாஸிதுஷ் ஷரீஆ தலீலுன் லில்முப்ததிஈன். வெர்ஜீனிய்யா, அமெரிக்கா: அல்மஃஹதுல் ஆலமி லில்பிக்ரில் இஸ்லாமி. பக்கம் : 9 – 14.

2.            அபூஸைத்,  வஸ்பி ஆஷுர். (2014). அஹ்காமுஷ் ஷரீஆ பைனத் தஅப்புத் வத்தஃலீல். ஆய்வுகளின் தொகுப்பு. இஃமாலுல் மகாஸித் பைனத் தஹய்யுப் வத்தஸய்யுப். லண்டன்: முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி,  மர்கஸ் திராஸாதில் மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா. பக்கம் 203.

3.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களில் இருந்தே உங்களுக்குரிய சோடியைப் படைத்தமை அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் ஒன்று,  நீங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காக…” (ரூம் -21).

4.            ரைஸுனி,  அஹ்மத் அப்துஸ் ஸலாம். (2016). மகாஸிதுல் இபாதா. தொலைக்காட்சி உரை. வெளியீடு: அல்கனாத் அல்மக்ரிபிய்யா. உரை இல: 03.

5.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களில் இருந்தே உங்களுக்குரிய சோடியைப் படைத்தமை அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் ஒன்று,  நீங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காக உங்களுக்கு மத்தியில் அன்மையும் அருளையும் ஏற்படுத்தினான்…” (ரூம் -21).

6.            நபியவர்கள் கூறினார்கள் அதிகம் அன்பு செலுத்தக் கூடிய அதிகம் பிள்ளைகள் பெறக் கூடிய பெண்களைத் திருமணம் செய்யுங்கள்…” (அபூதாவுத்,  நஸாஇ).

7.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களுக்குத் சுவர்க்கத்தைத்  தருவதாய் அல்லாஹ் உங்களையும் உங்கள் செல்வங்களையும் வாங்கிக் கொண்டான்…” (தௌபா – 111),  அல்குர்ஆன் கூறுகிறது,  உங்கள் இரட்சகனின் பாதைக்கு ஞான அணுகுமுறையைக் கொண்டு அழையுங்கள்…” (நஹ்ல்-125).

8.            அல்பஷீர்,  இஸாம் அஹ்மத். (2016). மக்ஸதா அத்ததர்ருஜ் வல்ஹிக்மா. ஆய்வுகளின் தொகுப்பு. இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி. லண்டன்: முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி,  மர்கஸ் திராஸாதில் மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா. பக்கம் 53-79.

Monday, June 11, 2018

பிறை விவகாரம் குறித்து ஒரு கருத்து

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கான ஒரு ஆலோசணை

 அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத்

இம்முறை (2018) பிறை விடயத்தில் சில சுவாரஸ்யங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. உலகப் பொதுச் சூழல் மாத்திரமன்றி காலநிலை மாற்றங்களும் கூட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை சில நிர்ப்பந்தங்களுக்குத் தள்ளிவிடும் நிலை ஏற்பட்டு வருவதாக எண்ணத் தோன்றுகிறது. பிறைக் குழுச் செயலாளர் ஷெய்க் முக்க்ஷித் அஹ்மத் அவர்களது அறிக்கையும் ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத் தலைவர் ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களது ஜும்ஆ பிரசங்க தெளிவுரையும் இதனையே குறித்து நிற்கின்றன. ரமழான் தலைப்பிறைத் தீர்மானிக்கப்படுவதில் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளும் ஷரீஆ வரையறைகளுக்கு உற்பட்டுத்தான் நடைபெற்றுள்ளன என்ற தர்க்கம்தான் பிரதானமாக அவற்றில் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக,  இங்கு நிகழும் தவறுகள் மார்க்கத்தில் குற்றமாகக் கருதப்பட மாட்டாது. இது உண்மைதான் ஏலவே பிறைபார்த்தல் தொடர்பாக ஜம்இய்யதுல் உலமா எடுத்துள்ள ஜந்து அடிப்படைகளின் பிரகாரம் மேலே பேசப்பட்ட தர்க்கத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் இங்கு எங்கள் கவனத்தைப் பெற வேண்டிய முக்கியதொரு விடயம் இருக்கிறது. பிறை தொடர்பான ஜம்இய்யதுல் உலமாவின் அடிப்படைகள் ஷரீஆ வரம்புகளுக்கு உள்ளே இருந்துதான் பெறப்பட்டுள்ளன,  ஆனால் அந்த ஜந்து அடிப்படைகளும் மாத்திரம்தான் ஷரீஅத்,  அவற்றிற்கு வெளியில் ஷரீஅத் என்று சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று நாம் நினைத்தால் அங்குதான் முக்கியமாக நாம் தவறு விடுகின்றோம். அந்தவகையில் அந்த அடிப்படைகளுக்கு வெளியிலும் பிறை தொடர்பில் ஷரீஅத்துக்குற்பட்டு தீர்மானங்கள் பெறுவதற்கு இடம் இருக்கிறது என்பது உண்மை. இங்குதான் ஜம்இய்யதுல் உலமா தனது பிறை அடிப்படைகள் குறித்து மீள்பரிசீலணை செய்வதற்கான இடம் உருவாகிறது. அதற்கான காலமும் கனிந்திருக்கிறது என்றே நான் நினைக்கின்றேன்.

இவ்வருடம் (2018) ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு 28 நாட்களில் ரமழான் நிறைவுபெறும் நிலை வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கான சாதகமான நிலைப்பாட்டை ஜம்இய்யதுல் உலமா பெற்றுள்ளது. இது வரவேற்கத் தக்கது. எனினும் இந்த இடத்துடன் மாத்திரம் ஜம்இய்யதுல் உலமா நின்று விடக் கூடாது. இதற்கு அப்பால் சென்று இது போன்ற அசௌகரியமான சூழ்நிலைகளில் இருந்து நிரந்தரமாக வெளிவருவதற்கான வழிகள் பற்றி சீரியஸாக சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த அசௌகரியமான சூழ்நிலைக்கு இம்முறை பெரிதும் காலநிலை மாற்றம் காரணமாக அமைந்தது. இதன் பின்னரும் காலநிலை மாற்றங்கள் இவ்விடயத்தில் பாதிப்புச் செலுத்த மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாத்திரமன்றி சில நம்பத்தகுந்த துறைசார்ந்தவர்களது அவதானங்களின் படி எதிர்கால காலநிலை மாற்றங்கள்,  பிறைபார்க்கும் வழிமுறையில் இப்போது கடைபிடிக்கும் வெற்றுக் கண்ணால் பார்த்தல் விதியை தொடர்ந்தும் பிரயோகிக்க முடியாத நிலை தோன்றலாம் என்றும் கருத்துரைக்கப்படுகிறது. இது ஒரு காரணம்.

இந்தக் காரணத்திற்கு அப்பால் கடந்த காலங்களில் பெரிதும் கண்டு கொள்ளப்படாமல் கடந்து சென்ற மற்றொரு காரணமும் இருக்கிறது. அதுதான் மக்கள் எதிர்பார்ப்பு எனும் காரணம். இந்த மக்கள் எதிர்பார்ப்பு என்ற காரணம் நியாயமான அடிப்படைகள் மீது எழுகின்ற பொழுது அதற்கு இஸ்லாமிய ஷரீஆவில் ஒரு பெறுமானம் இருக்கிறது. பத்வாக்கள் மாற்றமடைவதற்கான நியாயமாக அது மாறுகிறது. இதனைத்தான் இமாம் இப்னுல் கையிம் போன்றவர்கள் கால இட சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பத்வா மாறுதல் என்று அடையாளப்படுத்தினார்கள். இன்று இந்த மக்கள் எதிர்பார்ப்பு என்ற காரணி எவ்வாறு உருவாகியிருக்கிறது எனின்,  இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களும்,  தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும்,  தகவல் வெடிப்பும் மனிதனது அறிவிலும் சிந்திப்பிலும் உறவுகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் ஒரு கிராமமாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில் நோன்பை ஆரம்பித்தல் என்பதும் பெருநாளைக் கொண்டாடுதல் என்பதும் உலகில் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ளும் நிலை மாத்திரமன்றி தாமும் அதில் பங்கு கொள்ள வேண்டும் என்ற மனநிலையும் பெரிதும் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக நோன்பும் பெருநாளும் முழு முஸ்லிம் உம்மத்தும் பங்கு கொள்ளும் முக்கிய இரு இபாதத்கள் என்ற வகையில் சர்வதேச ஒருமைப்பாட்டு உணர்வு பெரிதும் மக்கள் மனங்களில் வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்த மனநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் உள்நாட்டில் பிறை காண்பதில் ஏற்படும் தாமதங்கள் பல கேள்விகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. இது உலகின் புதிய சூழ்நிலை. கடந்த காலங்களில் காணப்படாத புதிய சூழ்நிலை. இந்தப் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவகையில் பத்வாக்களிலும் மார்க்க நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் தேவை. அதிலும் குறிப்பாக நோன்பு மற்றும் பெருநாள் போன்ற நடவடிக்ககைகள் தனிமனித நடவடிக்கைகள் அன்றி எல்லா மக்களும் இணைந்து பங்கு கொள்ளும் பொது நடவடிக்கைகள். எனவே மக்;களது எதிர்பார்ப்புக்கள் அங்கே பெரிதும் தாக்கம் செலுத்துகின்றன. அந்த எதிர்பார்ப்புக்கள் நேரடியாக ஷரீஅத்தின் விதிகளுடனோ மகாஸிதுகளுடனோ முரண்படவில்லை எனின் அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இமாம்களின் பொதுக் கருத்தாகும்.

அந்தவகையில் ஜம்இய்யதுல் உலமாவின் பிறை அடிப்படைகளில் முக்கியமாக முதல் இரண்டு அடிப்படைகளான உள்நாட்டில் பிறைபார்த்துச் செயற்படுதல் என்பதும் வெற்றுக் கண்களால் பிறைபார்த்தல் என்பதும் மீள்பரிசீலணைக்கு உற்படுத்தப்பட வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். தொழிநுட்பம் வளர்ச்சியடையாத ஒரு காலத்தில் இந்த அடிப்படைகள் மிகவும் பொருத்தமானவையாகவும் சரியானவையாகவும் இருந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குரிய காலப்பொருத்தம் இவற்றுக்கு இருப்பதாக இன்னும் எண்ணுவதற்கில்லை. இங்கு மீண்டும் ஒரு விடயத்தை நினைவு படுத்திக் கொள்கிறேன். இங்கு வலியுறுத்தப்படுவது காலம் மாறுவதற்கு ஏற்ப மார்க்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அல்ல. மாற்றமாக மார்க்கம் அனுமதித்த ஒரு நிலைப்பாட்டில் இருந்து மார்க்கம் அனுமதித்த மற்றொரு நிலைப்பாட்டை நோக்கிச் செல்வதுவே இங்கு நாடப்படுகிறது. அதிலும் மார்க்கம் அனுமதித்த ஒரு காரணத்திற்காகவே அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

அதே போல்,  இங்கு மாற்றீடாக சர்வதேச பிறை எனும் பத்வாவுக்குச் செல்ல வேண்டும் என்ற பரிந்துரையையும் நான் செய்யவில்லை. காரணம் சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் அரசியல் ரீதியான முரண்பாடுகள் காரணமாக இந்த விடயத்தில் முஸ்லிம் உம்மத்தினர் அனைவரும் கடைபிடிப்பதற்குரிய பொது முறைமை ஒன்று இல்லை. முழு உம்மத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி இப்பணியை யார் மேற்கொள்வார்? என்ற கேள்விக்கு தெளிவான ஒரு பதிலைப் பெற்றுக் கொள்வது சிரமமானது. அரசியல் ரீதியான காரணங்கள் அதற்கு உண்டு. உதாரணமாக வானியல் கணிப்பீட்டின் அடிப்படையில் சர்வதேச ஹிஜ்ரி காலண்டர் ஒன்றை உருவாக்குவதற்கான சர்வதேச அறிஞர்கள் ஒன்றியத்தின் முன்மொழிவு இன்னும் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதம் கிடைக்காததால் முடிவு இல்லாமல் இருக்கிறது. இது போன்றதொரு சர்வதேச உடன்பாடு எட்டப்படும் போது அதனோடு இலங்கை முஸ்லிம் சமூகமும் இணைந்து பயணிப்பது எமது பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைய முடியும். அதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்று நினைக்கிறேன்.

அதுபோல்,  வானியல் கணிப்பீட்டு முறை,  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறை அடிப்படைகளைப் பார்க்கின்ற பொழுது,  வானியல் கணிப்பீட்டு முறையை அவர்கள் முழுமையாக மறுதலிக்கவில்லை என்பது விளங்குகிறது. ஏனெனில் பிறை அடிப்படைகளில் பிந்திய மூன்று அடிப்படைகளும் வானியலுடன் சம்பந்தப்பட்ட விடயங்களையே பேசுகின்றன. பொதுவாக வானியல் கணிப்பீட்டு முறை தொடர்பில் இஸ்லாமிய உலகின் அறிஞர்கள் மத்தியில் பிரதானமாக மூன்று வகையான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஒன்று கணிப்பீட்டு முறையை முழுமையாக ஏற்கும் நிலைப்பாடு. இரண்டு முழுமையாக மறுக்கும் நிலைப்பாடு. மூன்றாவது பிறையை உறுதிப்படுத்துவதற்காக கணிப்பீட்டைப் பயன்படுத்துவதில்லை ஆனால் பிறையை மறுப்பதற்காகப் பயன்படுத்த முடியும் என்ற நிலைப்பாடு. அதாவது கணிப்பீட்டின்படி பிறை தென்பட முடியும் என்றிருக்கிறது,  ஆனால் வெற்றுக் கண்களால் யாரும் பிறையைக் காணவில்லை, இப்பொழுது கணிப்பீட்டை மாத்திரம் வைத்து பிறை தீர்மானிக்கப்பட மாட்டாது. மாற்றமாக கணிப்பீட்டின் படி பிறை தென்பட முடியாது என்றிருக்கின்ற பொழுது எவரேனும் வெற்றுக் கண்களால் பிறையைக் கண்டதாக அறிவித்தால் கணிப்பீட்டின் படி பிறை தென்பட முடியாது என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரது சாட்சியம் மறுக்கப்படும். இந்த மூன்றாவது நிலைப்பாட்டில்தான்  ஜம்இய்யதுல் உலமா இருக்கிறது என்பது தெளிவானது. சில வருடங்களுக்கு முன்னர் கிண்ணியா பிறை மறுக்கப்பட்டமையும் இந்த அடிப்படையை வைத்தே நடைபெற்றுள்ளது.

இங்கு கணிப்பீட்டு முறையை முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் நான் ஜம்இய்யதுல் உலமாவுக்குச் சொல்லவில்லை. எனது தனிப்பட்ட கருத்தின் படி தற்காலத்தில் கணிப்பீட்டு முறைதான் மிகவும் சரியான ஷரீஅத் முடிவு,  அதுதான் தற்காலத்தில் குர்ஆனையும் ஹதீஸையும்  இவ்விடயத்தில் பின்பற்றுவதற்கான மிகச்சரியான வடிவம் என்று நம்புகிறேன். இருந்த போதிலும் அதனை நான் முழுமையாக அவர்களுக்குப் பரிந்துரைக்கவில்லை. காரணம் இஸ்லாமிய உலகின் ஓயாத கருத்து வேறுபாட்டுப் பரப்புக்களில் ஒன்றாக இதுவும் இருப்பதனால் எவரையும் குறித்த ஒரு கருத்தின் மீது நிர்பந்திக்க முடியாது,  இது விசாலமாக அணுக முடியுமான ஒரு இடம். அந்த வகையில் மிகவும் காலப்பொருத்தமானது எது என்ற தேடல்தான் இங்கு முக்கியமானது. அந்த திறந்த கலந்துரையாடல் ஜம்இய்யதுல் உலமாவுக்கு  உள்ளேயே இருந்துதான் கருக்கொள்ள வேண்டும்,  வெளி நிர்ப்பந்தங்களை விடவும்,  என்று நினைக்கிறேன்.

ஆனால் இங்கு நான் வலியுறுத்த விரும்புவது,  ஜம்இய்யதுல் உலமா,  கணிப்பீட்டு முறை தொடர்பில் தற்போதிருக்கும் நிலைப்பாட்டில் இருந்து இன்னும் ஒரு படி மேலே வர வேண்டும் என்பதுதான். அவர்கள் மேலே வர வேண்டிய இடம் எது என்பதை அடுத்து பேசவுள்ள கருத்தோடு விளங்கப்படுத்துகிறேன். ஏனெனில் அதனுடன் இணைத்துதான் இது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

இன்று உள்நாட்டுப் பிறையா? சர்வதேசப் பிறையா? என்ற ஒரு கருத்து வேறுபாடு இருக்கிறது. இன்று உண்மையில் உள்நாடு,  சர்வதேசம்  போன்ற சொல்லாடல்கள் மூலம் இன்றைய அரசியல் ரீதியான நில எல்லைகளே நாடப்படுகின்றன. இந்த நில எல்லைகள் நவீன காலத்தில் தோற்றம் பெற்றவை. ஆனால் ஆரம்ப கால இமாம்களின் இது தொடர்பான கருத்து வேறுபாடு உள்நாடு சர்வதேசம் என்ற நில எல்லைப் பிரிப்பை மையப்படுத்தி அமையவில்லை. மாற்றமாக ஓரிடத்தில் பிறை தென்பட்டால் அப்பிரதேசத்திற்கும் அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் மாத்திரம் உரியதா? அல்லது பிறை தென்படாத எல்லாப் பிரதேசங்களுக்கும் உரியதா? என்ற கருத்து வேறுபாடே பிரதானமாக நிலவியது. இதில் ஜும்ஹுர் எனும் பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடாக இரண்டாம் நிலைப்பாடே இருந்தது. அதாவது ஓரிடத்தில் பிறை தென்பட்டால் அது எல்லா இடங்களுக்கும் உரியது என்ற நிலைப்பாடு. முதலாம் நிலைப்பாடு பெரும்பாலான ஷாபி மத்ஹபினரின் கருத்தாகும். அதாவது ஓரிடத்தில் பிறை கண்டால் அது அண்மித்துள்ள எல்லா பிரதேசங்களுக்கும் உரியதாகும் என்ற நிலைப்பாடு. இமாம் நவவி அவர்கள் ஷாபி மத்ஹபுக்குள்ளே இந்த நிலைப்பாடே மிகவும் சரியானது என்கிறார்(1). ஆனால் ஷாபி மத்ஹபுக்குள்ளே இந்த அண்மித்த பிரதேசத்தை வரையறை செய்வது எவ்வாறு என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அவற்றில் மிகவும் பிரபலமான கருத்து எது எனின்,  ஓரிடத்தில் பிறை தென்படும் போது,  அதே பிறை தென்பட முடியுமான ஏனைய பிரதேசங்கள் என்பதாகும். இக்கருத்தை ஷாபி மத்ஹபின் பிரபல இமாம்களில் ஒருவரான இமாம் தகிய்யுத்தீன் சுப்கி அவர்கள் ராஜிஹானதாகக் கருதுகிறார்கள்(2). மாத்திரமன்றி இக்கருத்தை பிரயோகத்திற்கு எடுக்கும் போது,  அங்கு கணிப்பீட்டு முறையையும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு நிலமை ஏற்படுகிறது,  ஏனெனில் பிறை தோன்ற முடியுமான ஏனைய பிரதேசங்களை அடையாளம் காண்பது கணிப்பீட்டின் மூலமே சாத்தியப்படுகிறது என்றும் ஆனால் இங்கு கணிப்பீட்டு முறையைப் பயன்படுத்துவதானது கண்களால் பிறையைப் பார்த்தல் என்ற வழிமுறையை முழுமையாக இல்லாமல் செய்து விட மாட்டாது என்றும் விளக்கமளிக்கிறார்கள். (கணிப்பீடு தொடர்பில் இமாம் சுப்கியின் இந்த நிலைப்பாட்டுக்கு ஜம்இய்யதுல் உலமா வருவதே சிறந்தது) இமாம் நவவி அவர்களும் இந்த நிலைப்பாடே சரியானது என்கிறார்கள்(3).

ஓரிடத்தில் பிறை கண்டால் அது,  அதனை அண்மித்த பிரதேசங்களுக்கும் செல்லுபடியாகும் என்ற நிலைப்பாடு உண்மையில் ஷாபி மத்ஹபினருடன் மாத்திரம் மட்டுப்பட்ட ஒரு நிலைப்பாடு அல்ல. மாற்றமாக ஏனைய முன்று மத்ஹபுகளிலும் பலர் இந்த நிலைப்பாட்டைப் பேசியுள்ளமையைக் காணலாம். உதாரணமாக ஹனபி மத்ஹபில் இமாம் இப்னு நுஜைம் அல்மிஸ்ரி,  இமாம் ஸைலஇ,  இமாம் தஹாவி போன்ற பலர் இந்த நிலைப்பாட்டில் இருந்துள்ளனர். அது போல் மாலிகி மத்ஹபில் இமாம் மாலிகினுடைய இரு கருத்துக்களில் ஒன்றாகவும். இமாம் கராபியுடைய கருத்தாகவும் காணப்பட்டிருக்கிறது. ஹன்பலி மத்ஹபில் இமாம் தகிய்யுத் தீன் போன்றவர்கள் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளனர்(4).
 
மேற்கூறப்பட்ட சட்ட விளக்கங்கள் விரிவான ஆய்வுகளாக முன்வைக்கப்பட வேண்டியவை என்றிருப்பினும் இங்கு முக்கியமாக இது குறித்த கவனயீர்ப்பை ஏற்படுத்துவதுதான் நோக்கம் என்பதாலும்,  விரிவான ஆய்வுகளுக்குரிய இடம் இதுவல்ல என்பதாலும் சுருக்கமாகவே தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இங்கு முக்கியமாக ஒரு விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையில் பொதுவாகவும்,  ஜம்இய்யதுல் உலமாவில் குறிப்பாகவும் ஷாபி சட்டப் பாரம்பரியத்தை மையப்படுத்தியே அதிகமான பத்வாக்களும் மார்க்க நிலைப்பாடுகளும் பெறப்படுகின்றன. அந்தவகையில் ஷாபி சட்டப்பாரம்பரியத்துக்குள்ளே இருந்து கொண்டே மேற்படி பிறை விவகாரத்தில் தற்போது எதிர்கொள்ளும் சிக்கல்களிலிருந்து வெளிவருவதற்கான ஒரு வாயில் இருக்கின்றது என்பதுவே இங்கு சுட்டிக் காட்டப்படும் முக்கிய விடயமாகும்.

மேற்படி விளக்கங்களிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கவனத்தில் எடுக்க முடியுமான சில விடயங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது,  உள்நாட்டில் பிறை காண்பதன் மூலமே பிறை பற்றிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,  அதாவது உள்நாட்டில் மாத்திரம் என்று வரையறுக்காமல் பிறை தென்பட முடியுமான வலையத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஏதேனும் ஒன்றில் பிறை தென்பட்டால் அது செல்லுபடியாகும் என்ற நிலைப்பாட்டுக்கு வரமுடியும். ஏனெனில் இது இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு சிந்தனையாகும் அதிலும் குறிப்பாக ஷாபி மத்ஹபில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவும் ஷரீஆவுக்குற்பட்டதாகும்.

மேற்குறித்த அடிப்படை மாற்றத்தில் உடன்பாடு எட்டப்படுமாக இருப்பின் அதனையொட்டி நடைபெற முடியுமான இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன.

முதலாவது,  வெற்றுக் கண்களால் பார்த்தல் என்ற நிலைப்பாடு இல்லாது செய்யப்படத் தேவையில்லை ஆனால் இலங்கையில் உள்ளவர்களது கண்களுக்குப் புலப்பட்டால் மாத்திரம்தான் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலைப்பாடு அன்றி,  இலங்கையில் வெற்றுக் கண்களுக்குப் புலப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது வானியல் கணிப்பீட்டின் மூலம் நிரூபிக்கப்படுகின்ற பொழுது,  இலங்கையில் உள்ளவர்கள் காணமுடியாத சூழல் இருந்தாலும் பிறை தென்பட முடியுமான இந்த வலையத்தில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கப்படுகின்ற பொழுது,  அது இலங்கைக்கும் செல்லுபடியாகும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும்.

இரண்டாவது,  கணிப்பீட்டு முறையை பிறையை மறுப்பதற்கு மாத்திரமன்றி பிறையை ஏற்பதற்கும் பயன்படுத்தல்,  அதாவது மேற்குறிப்படப்பட்டது போன்று இலங்கை எல்லையினுள் பிறை தென்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றிருப்பின்,  அதற்கு ஒரு பெறுமானம் வழங்கப்படல் வேண்டும். ஏனெனில் இலங்கை எல்லையில் பிறை இருக்கிறது. ஆனால் காண்பதற்கான வாய்ப்பு காலநிலை மாற்றங்களால் இல்லாது இருக்கின்றது. எனவே இலங்கை எல்லையினுள் காண முடியாத போதும்,  குறித்த வலையத்தினுள் பிறை தென்படுமாக இருப்பின் அது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

மூன்றாவது,  இலங்கையின் நிலப்பரப்பில் மாத்திரமன்றி கடல் பரப்பிலும் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளுக்கு வர முடியும். (இது அண்மையில் சில சகோதரர்களால் முன்வைக்கப்பட்ட பயனுள்ள ஒரு ஆலோசணை).

நான்காவது,  மேற்கூறப்பட்ட ஆலோசணைகளை நடைமுறை சாத்தியப்படுத்தும் வகையில் பிராந்தியத்தில் காணப்படும் நாடுகளின் பிறை தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற சபைகளுடன் உத்தியோகபூர்வமான உடன்பாடுகளுக்கு வர முடியும். இங்கு உண்மையில் எல்லா நாடுகளின் சபைகளும் இணைந்து பொது முடிவுகளுக்கு வர வேண்டும் என்பதை விடவும் குறைந்த பட்சம் ஒவ்வோர் நாட்டிலும் காணுகின்ற பிறையையும் அல்லது காணுவதற்கான சாத்தியப்பாட்டையும் ஏனைய நாடுகளுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு ஒழுங்கு இருப்பது கூட போதுமானதாகும். இது நாட்டு சட்டங்களுடன் கூட முரண்படும் ஒரு விடயமல்ல.

ஜந்தாவது,  இவை அனைத்துக்காகவும் ஜம்இய்யதுல் உலமா பல இடங்களில் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ள ஆலேசணைகளை ஒன்று திரட்டி,  அவை குறித்து கலந்துரையாடுவதற்காக பலதரப்பினரை இணைத்த அமர்வு ஒன்றை விரைவில் ஏற்பாடு செய்வது நல்லது.

இறுதியாக முடிக்கு முன்னர் ஒரு விடயத்தை நினைவுபடுத்திக் கொள்கிறேன். இவ்வருடம் ரமழான் 28ல் நிறைவுறும் வகையில் எங்கேனும் பிறை தென்பட்டால் மறுநாள் நோன்புப் பெருநாள் கொண்டாடும் தீர்மானத்திற்கு வருவதில் எந்தத் தடையுமில்லை என்பதை ஜம்இய்யதுல் உலமாவும் பிறை சம்பந்தப்பட்டவர்களும் தெளிவாக அறிவித்துள்ளனர். இந்த அறிவித்தலின் நடைமுறையை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 14ம் திகதி வியாழக் கிழமை அனைவரும் பிறை பார்க்க வேண்டும் என்ற அறிவித்தலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படல் வேண்டும். மாத்திரமன்றி அன்றைய தினம் வழமை போன்று பிறை தொடர்பான அனைத்துத் தரப்பினரும் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் ஒன்று கூடி இது பற்றிய தீர்மானத்தைப் பெற வேண்டும். அந்தத் தீர்மானம் நியாயமான ஆதாரங்களின் அடிப்படையில் எந்த வடிவில் அமைந்தாலும் இலங்கை முஸ்லிம்கள் கட்டுப்படுவதற்கு தயாராகவே இருக்கிறார்கள்.

அல்லாஹ் எங்களை அங்கீகரிக்கட்டும்.

அடிக்குறிப்புக்கள்
(1). அந்நவவி,  அபூஸகரிய்யா,  முஹ்யுத்தீன் இப்னு ஷரப். கிதாபுல் மஜ்மூஃ ஷரஹுல் முஹத்தப். ஜத்தா, சவூதி அரேபியா: மக்தபதுல் இர்ஷாத். பாகம் 06,  பக்கம் 280,  281.
(2). அஸ்ஸுப்கி,  தகிய்யுத்தீன் அலி இப்னு அப்துல் காபி. (ஹி 1329). கிதாபுல் இல்மில் மன்சூர் பீ இஸ்பாதிஷ் ஷுஹுர். எகிப்து : குர்திஸ்தான் அல்இல்மிய்யா. பக்கம் 14,  15.
(3) மேலது.
(4). அர்ரஹ்மானி,  ஸைபுல்லாஹ் காலித். கழாயா பிக்ஹிய்யா பில் அகல்லிய்யாதில் முஸ்லிமா. இந்தியா: முஅஸ்ஸஸது ஈபா லித்தபஃ வந்நஷர். பக்கம் 69,  70,  71.

Saturday, June 9, 2018

நோன்பு – தர்பியத்தும் மகாஸிதும்


மகாஸித் தேடல்கள் (11)

நோன்பு தர்பியத்தும் மகாஸிதும் என்று இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். உண்மையில் நோன்பின் மகாஸிதுகளைப் பற்றித்தான் அதிகம் இந்தக் கட்டுரை பேசப் போகிறது. எனவே நோன்பின் மகாஸிதுகள் என்றே தலைப்பிட்டிருக்கலாம். மாத்திரமன்றி தர்பியத் என்பதுவும் கூட நோன்பின் மகாஸிதுகளில் ஒன்றுதான். இருந்தும் தர்பியத் என்ற கருத்து தனித்து ஹைலைட்டாகும் வகையில் நோன்பு தர்பியத்தும் மகாஸிதும் என்று தலைப்பிட்டமைக்கு என்ன காரணமாக இருக்கலாம்? நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. இந்தக் கட்டுரையின் மையப் புள்ளியே அந்தக் காரணத்தைச் சுற்றித்தான் சுழல்கின்றது.

அதாவது தர்பியத் என்பது கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் குறிப்பிடுவது போல்(1) வணக்க வழிபாடுகளின் பிரதான மகாஸிதுகளில் ஒன்று எல்லா வணக்க வழிபாடுகள் ஊடாகவும் மனித சமூகத்திடம் குறித்த சில பண்புகளை வளர்ப்பதை அல்லாஹ்தஆலா நோக்கமாகக் கொண்டிருக்கிறான். வணக்க வழிபாடுகளில் ஒன்று என்ற வகையில் நோன்பின் ஊடாகவும் குறித்த மக்ஸத் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு விஷேடம் என்னவென்றால் குறிப்பாக நோன்பின் மகாஸிதுகள் என பலராலும் பேசப்பட்ட அனைத்து மகாஸிதுகளும் ஏதேனும் ஒரு வகையில் மனித சமூகத்திற்கான தர்பியத்தாகவே காணப்படுகின்றன. அதாவது,  நோன்பின் ஒவ்வொரு மக்ஸதும் மனித சமூகத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய ஒரு பண்பையே குறித்துக் காட்டுகின்றது. அந்த பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையிலேயே நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே,  நோன்பு தர்பியத்தும் மகாஸிதும் என தலைப்பிடப்பட்டிருக்கிறது.

முதலில் மகாஸித் என்ற கருத்தை கொஞ்சம் விளங்கிக் கொண்டு அடுத்த பகுதிக்கு வருவோம். மகாஸித் என்றால் என்ன? என்ற கேள்விக்கு எளிமையாகப் பதில் சொன்னால் இந்த தீனின் நோக்கங்கள்,  அதாவது இந்த தீனின் போதனைகளை அமுல்படுத்துவதன் மூலம் என்ன விளைவுகள் அடையப் பெற வேண்டும் என்று அல்லாஹ்தஆலா எதிர்பார்த்தானோ அவைதான் மகாஸித். தீனின் நோக்கமாக அமையும் மகாஸிதின் பிரதான இயல்பு என்ன? அதனை இவ்வாறு வரையறுக்கலாம். உலகில் எது நிலைத்திருக்கக் கூடியதோ எது பயன்தரக் கூடியதோ அதுதான் மகாஸித். இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. கழிவுகள் பயனற்றுப் போய்விடும். மக்களுக்குப் பயனளிப்பவைதான் பூமியில் நிலைத்து நிற்கும் (ரஃத் - 17) அதாவது உலகில் மனிதவாழ்வு நீண்டு நிலைத்திருக்க அவசியமான அனைத்தையும் நாம் மகாஸித் என்போம்.

மகாஸித் என்றால் என்ன என்ற இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் தர்பியத் என்பதும் ஒரு மக்ஸதாகக் கருதப்படுகிறது. அடிப்படையில் தர்பியத் என்பது ஒரு பொறிமுறைதான். இலக்கு அல்ல. ஆனால் தர்பியத் என்ற பொறிமுறை இந்த உலகில் மறுமை வரையில் நிலைத்திருக்க வேண்டிய ஒரு பொறிமுறை. முழு மனித சமூகத்திற்கும் பயனுள்ள அத்தியவசியமான ஒரு பொறிமுறை. அந்தவகையில் தர்பியத்தும் மகாஸித்களில் ஒன்றாகிறது. மொரோக்கோ இஸ்லாமிய அறிஞரான நூருத்தீன் கர்ராத் அவர்கள்,  பொதுவாக இஸ்லாமிய ஷரீஆவினதும் குறிப்பாக வணக்க வழிபாடுகளதும் தர்பியத் சார்ந்த மகாஸிதுகளைப் பேசும் பொழுது மிகப் பிரதானமாக மூன்று விடயங்களை முன்வைக்கிறார்.(2) அதாவது,  இந்த மூன்று பகுதிகளையும் மனித சமூகத்தில் பயிற்றுவிப்பது பொதுவாக ஷரீஅத்தினதும் குறிப்பாக வணக்க வழிபாடுகளினதும்; நோக்கம் என்கிறார். இந்த நோக்கங்கள் எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவை என்கிறார். சம காலத்தில் இவை ஒவ்வொன்றும் வணக்கவழிபாடுகளின் மகாஸிதுகளாகவும் காணப்படுகின்றன.

1.            பலம் - உடல் ஆன்மீக அறிவு ஆற்றல் பலங்கள் அனைத்தையும் இது குறிக்கிறது.
2.            அன்பு - இந்த உம்மத் உடனான அன்பையும் கருணையையும் மனித இனத்துடனான ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் இது குறிக்கிறது.
3.            பணிவு உயர்வு,  தாழ்வு வேறுபாடுகள் நீங்கிய நிலையை இது குறிக்கிறது.

இந்த மூன்று மகாஸிதுகளையும் நோன்பு என்ற இபாதத்தில் பிரயோகித்துப் பார்த்தால் இந்த ஒவ்வொரு மக்ஸதையும் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடு நோன்பில் இருப்பதை அவதானிக்கலாம். இதற்கு ஆழ்ந்த ஆய்வு அவசியமில்லை. சாதாரணமான மேம்போக்கான பார்வையே இந்த உண்மையை உணர்த்தக் கூடியதாகும்.

உதாரணமாக நோன்பு ஆன்ம பலத்தை அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறது என்பது குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் வலியுறுத்துகின்ற உண்மைகள். அதுபோல் நோன்பு மனிதனுடைய வினைத்திறனை அதிகரிக்கிறது. கிரகிக்கும் ஆற்றலைக் கூட்டுகிறது என்பதும் நவீன ஆய்வுகளில் வெளிவந்துள்ள உண்மைகளாகும். இங்கு பலம் என்ற மக்ஸத் நோன்பின் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

அடுத்து,  ரமழான் காலத்தில் ஸதகாவின் முக்கியத்துவத்தைப் பார்க்கின்ற பொழுது,  பிறிதொருவரை நோன்பு திறக்க வைப்பதன் நன்மைகளை அவதானிக்கின்ற பொழுது,  பசி,  தாகத்தில் அனைவரும் பங்கு கொள்ளும் ஏற்பாட்டைப் பார்க்கின்ற பொழுது,  மனித சமூகத்தின் மீதான அன்பும் ஒத்துழைப்பும் பயிற்றுவிக்கப்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.

அதுபோல்,  பசி,  தாகத்தில் எல்லோரினதும் பங்கு கொள்ளல்,  நோன்பின் நேரம் போன்ற பொது ஒழுங்குகள் இவற்றின் மூலம் உயர்வு,  தாழ்வு வேறுபாடின்மை பயிற்றுவிக்கப்படுவதைக் காணலாம்.

எனவே,  தரபியத் என்பது சமகாலத்தில் ஒரு பொறிமுறையாகவும் மக்ஸதாகவும் காணப்படுகிறது. தர்பியத் மூலம் ஏனைய மகாஸித்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. எனவே, அது ஒரு பொறிமுறை,  தர்பியத் எல்லா சமூகங்களுக்கும் பொதுவான,  நிலையான,  கட்டாயமான பொறிமுறை என்ற வகையில் அது ஒரு மக்ஸதாகிறது.

அடுத்து,  நேரடியாக நோன்பின் மகாஸிதுகள் என்று இமாம்கள் பேசிய விடயங்கள் குறித்து கொஞ்சம் கவனம் செலுத்துவோம். குறிப்பாக அவை எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றன? என்ற விடயம் மிகவும் முக்கியமானது. நோன்பின் மகாஸிதுகள் என்று பேசுகின்ற பொழுது,  பல்வேறு கண்ணோட்டங்களில் நின்று இமாம்கள் பல மகாஸிதுகளை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் இந்த இடத்தில் எடுத்தாள்வது எனது நோக்கமல்ல. மாற்றமாக மிகவும் முக்கியமானவை என்று நான் கருதக்கூடிய இரண்டு விடயங்களை மாத்திரம் இந்த இடத்தில் பேசலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது தக்வா :- நோன்பின் தலையாய மக்ஸத் இதுதான். தக்வா என்றால் என்ன என்று பேசும்போது,  ஆரம்பகால இமாம்கள் அல்லாஹ் ஏவியவற்றை ஏற்று நடத்தலும் விலக்கியவற்றை தவிர்ந்து கொள்ளுதலும் என்றார்கள். வேறு சிலர் தக்வாவை விளங்கப்படுத்தும் போது,  தனக்கு தீங்கு ஏற்படாது தன்னைக் காத்துக் கொள்ளும் உளநிலை என்றார்கள். இதன் விளைவாகத்தான் ஒருவன் அல்லாஹ் ஏவியவற்றை ஏற்று நடத்தலும் விலக்கியவற்றை தவிர்ந்து நடத்தலும் நடைபெறுகிறது என்று விளக்கமளித்தனர். இந்த விளக்கங்களைத் தாண்டி கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனியின் விளக்கம் சற்று வித்தியானமானது. மிகவும் பொருத்தமானதாகவும் எனக்குத் தோன்றுகிறது. அவர் சொல்கிறார்(3) தக்வா என்பது ஒன்றைத் தவிர்ந்து கொள்ளும் எதிர்மறை உளநிலை அல்ல. மாற்றமாக எந்தப் புறத் தூண்டுதலும் இன்றி சுயமாய் ஒருவனை செயற்பட வைக்கும் ஒரு உளநிலை. தன் மனதுடன் தான் நீதியாய் நடக்கும் ஒரு உளநிலை என்றார்கள். நபியவர்கள் நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து கொள் (திர்மிதி) என்றார்கள்.

இந்த ஹதீஸ் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்துக்குரிய,  அவசியமான செயலை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கிறது. தனது மனசாட்சிக்கு மாற்றமாக நடந்து கொள்ள முற்படக் கூடாது. பிறர் கண்ணுக்குப் புலப்படவில்லை,  யாரும் பார்க்கவில்லை,  யாருக்கும் தெரியாது என்பதெல்லாம் நாம் மனமுரண்டாக நடந்து கொள்ளக் காரணமாக இருந்துவிடக் கூடாது. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுதல் அதாவது தக்வா என்பதன் பொருள் இதுதான் என கலாநிதி ரைசூனி அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில்தான் கீழ் வரும் நபிமொழியும் அமைந்திருக்கிறது. நபியவர்கள் கூறினார்கள் நோன்பைத் தவிரவுள்ள,  ஒரு மனிதனுடைய ஏனைய அனைத்து செயல்களும் அவனுக்குரியவை. ஆனால் நோன்பு எனக்குரியது,  நானே அதற்குக் கூலி வழங்குகிறேன். தனது ஆசையை,  உணவை,  பாணத்தை அவன் எனக்காக விட்டு விடுகிறான் என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்)

நோன்பு என்பது,  அல்லாஹ்வுக்கும் குறித்த மனிதனுக்குமிடையில் அவர்கள் இருவரும் மாத்திரமே அறிந்த இரகசிய வணக்கம். இதில் போலியாக நடிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே உண்மையாக இருந்தால் மட்டுமே நோன்பு என்ற கடமை சாத்தியமாகிறது. எனவே,  புறத் தூண்டல்கள் அன்றி உள்ளார்ந்த தூண்டலின் அடிப்படையிலேயே நோன்பு நோற்றல் நடைபெறுகிறது. இத்தகைய சுய தூண்டல் உளநிலையையே தக்வாவும் பிரதிபளிக்கிறது. அந்தவகையில் நோன்பு தக்வா என்ற மக்ஸதை மனிதனில் பயிற்றுவிக்கிறது என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துவதாக புரிந்து கொள்ள முடிகிறது.

மய்மூன் இப்னு மிஹ்ரான் அவர்கள் கூறுகிறார்கள் ஒரு மனிதன் தன்னைத் தானே விசாரணை செய்து கொள்ளாதவரை அவன் தக்வா உள்ளவனாக இருக்க முடியாது என்றார்கள். (முஸன்னப் இப்னு அபீஷைபா) இந்தக் கூற்றும் தக்வா என்பது ஒரு பயிற்சியின் மூலமே பெற்றுக் கொள்ளப்பட முடியும் என்பதை உணர்த்துகிறது. நோன்பின் ஒவ்வொரு செயற்பாடும் மனிதன் தனது மனோஇச்சையின் பிரகாரம் அன்றி குறித்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்வதற்கான பயிற்சியையே வழங்குகிறது.

எனவே,  தக்வா என்பது ஒரு ஆன்மபலம். அது மனிதனை சுயமாக செயற்பட வைக்கிறது. தனக்குத்தானே நீதியாக நடந்து கொள்ள வைக்கிறது. நம்பிக்கையுடன் ஒரு விடயத்தை எதிர்கொள்ள வைக்கிறது. பின்வாங்காமல் முன்வர வைக்கிறது. இதுதான் தக்வா. இந்த தக்வாவை மனிதனில் பயிற்றுவிப்பது தான் நோன்பின் நோக்கம். நோன்பின் செயற்பாடுகள் எல்லாம் இதற்கான தர்பியத்தாகவே அமைந்திருக்கின்றன. இந்த அனைத்து சிந்தனைகளையும் பிரதிபலிக்கின்ற வகையில்தான் அல்லாஹ்தஆலா இவ்வாறு கூறினான் உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது நீங்கள் தக்வா உள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக?” (பகரா – 183).

இரண்டாவது பாதுகாப்புக் கேடயம் :- நபியவர்கள் கூறினார்கள் நோன்பு ஒரு பாதுகாப்புக் கேடயம் என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்) இமாம் இப்னு ஆஷுர் அவர்கள் இந்த ஹதீஸ{க்கு விளக்கமளிக்கும் போது இங்கு பாதுகாப்புக் கேடயம் என்று பொதுவாகத்தான் கூறப்பட்டிருக்கிறது. எதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது என்று குறிப்பாக எதுவும் வரையறுத்துச் சொல்லப்படவில்லை. எனவே இது எல்லாவிதமான பாதுகாப்பையும் குறிக்கும். அதாவது பாவங்களில் இருந்து பாதுகாப்பு,  மறுமை வேதனையில் இருந்து பாதுகாப்பு,  முறையற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாப்பு போன்ற பல்வேறு பரப்புகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பை இந்த ஹதீஸ் குறித்து நிற்கிறது என்கிறார்.(4)

இந்த ஹதீஸ் கேடயம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறது. கேடயம் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு கருவி. அந்தவகையில் நோன்பு நோற்பதால் மனிதன் எந்த வகையான தீங்குகள்,  பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட முடியுமோ அவை அனைத்தையும் இந்த ஹதீஸ் குறிக்கிறது. அந்தவகையில் நோன்பு ஒரு தூண்டல் சக்தி மாத்திரமல்ல அது ஒரு பாதுகாப்பும் கூட. எனவே மனிதனை தீங்குகளில் இருந்து பாதுகாத்தல் என்பது நோன்பின் மற்றொரு மக்ஸத்.

நோன்பு எந்தவகையான பாதுகாப்பைத் தருகின்றது என்பதையும் அவ்வப்போது ஹதீஸ்களில் காணலாம். உதாரணமாக நபியவர்கள் கூறினார்கள் இளைஞர்களே,  உங்களில் குடும்பப் பொறுப்பை சுமக்கத் தகுதியானவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். அது பார்வையைத் தாழ்த்தும். கற்பைப் பாதுகாக்கும். முடியாத போது நோன்பு நோற்கட்டும். அது அவரது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்) இந்த ஹதீஸ் நோன்பு ஒரு மனிதனை பாலியல் ரீதியான தவறுகளில் இருந்து பாதுகாக்கிறது என்கிறது.

மற்றொரு உதாரணம்,  நபியவர்கள் கூறினார்கள் யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ,  அவர் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும் என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்). இந்த ஹதீஸ் நோன்பு ஒரு மனிதனது மறுமை வாழ்வைப் பாதுகாக்கிறது என்கிறது.

பொதுவாக ரமழான் காலத்தில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறான். எனவே தனிமனிதனது பாதுகாப்பு மாத்திரமன்றி சமூகப் பாதுகாப்புக்கு அங்கு உத்தரவாதம் கிடைக்கிறது. குழப்பங்கள்,  பிளவுகள்,  சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. தன்னுடன் ஒருவன் பிரச்சினைக்கு வர முற்பட்டால் கூட,  தான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்று கூறி தவிர்ந்து கொள்ளுமாறுதான் நபியவர்கள் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனையும் உபதேசம் செய்திருக்கிறார்கள். இது வெறுமனே பாதுகாப்பு என்பது மாத்திரமல்ல,  நிரந்தரப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு தர்பியத்தாகவும் அமைகிறது.

எனவே நோன்பின் மகாஸிதுகள் ஒவ்வொன்றும்,  வணக்கவழிபாடுகளின் பிரதான மக்ஸதான தர்பியத்தை நிறைவேற்றக் கூடியனவாகவே அமைந்திருக்கின்றன. ரமழானில் இந்த உண்மைகளை உளப்பூர்வமாக உணர்ந்து செயற்பட அல்லாஹ் எம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.

(1)          ரைஸுனி,  அஹ்மத் அப்துல் ஸலாம். (2016). மகாஸிதுல் இபாதாத்,  விரிவுரை இல.01. மொரோக்கோ: அல்மகாரிபிய்யா தொலைக்காட்சி சேவை.
(2)          கர்ராத்,  நூருத்தீன்.(2016). மின் மகாஸிதிஸ் ஸியாம் பில் இஸ்லாம். கட்டுரை. ஹுனா வஜ்தா வெப்தளம்.
(3)          ரைஸுனி,  அஹ்மத் அப்துல் ஸலாம். (2015). அஸ்ஸெளமு மத்ரஸதுத் தக்வா. உரை,  யூடியூப். வெளியீடு: ஹரகதுத் தௌஹீத் வல் இஸ்லாஹ்.
(4)          இப்னு ஆஷுர்,  முகம்மத் அத்தாஹிர். (1984). அத்தஹ்ரீர் வத்தன்வீர். தூனிஸிய்யா: அத்தாருத் தூனிஸிய்யா லின்நஷ்ர். பாகம் 02,  பக்கம் 158.