Monday, January 20, 2014

நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுதல் குறித்து இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள்…

நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுவது பித்அத் என்பது சிலரது அபிப்ராயமாகும். ஏனெனில்,  அது நபியவர்கள் காலத்தில் காணப்படாத ஒரு செயற்பாடு என்பதுடன் அவர்களுக்குப் பின்னர் ஸஹாபாக்களும் அவ்வாறான ஒரு செயற்பாட்டில் ஈடுபடவில்லை, அது மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு விடயம் என்கின்றனர்.

ஆனால் வேறு சிலர்,  நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுதல் ஒரு வாஜிபான செயற்பாடாகும் என்கின்றனர். ஏனெனில்,  இது நபியவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பையும்,  கண்ணியத்தையும்,  பற்றையும் வெளிப்படுத்துகின்ற ஒரு விடயமாகும். நபியவர்கள் மீது அன்பும் கண்ணியமும் பற்றும் கொள்வது எல்லா முஸ்லிம்கள் மீதும் வாஜிபானதாகும் என்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பான மிகச் சரியான நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள,  நாம் இரண்டு கேள்விகளின் அடியாக இவ்விடயத்தை அணுகவேண்டும். ஒன்று நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கான தூண்டல் காரணி எது?  மற்றது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வடிவம் எது?

கொண்டாட்டத்திற்கான தூண்டுதல்,  நபியவர்கள் மீதான அன்பாகவும் கண்ணியமாகவும் அமையும் அதேவேளை கொண்டாட்ட வடிவம் என்பது பயனுள்ள ஒரு கற்றல் நடவடிக்கையாகவோ அல்லது ஏழைகளுக்குப் பயனளிக்கும் ஸதகாவாகவோ அல்லது இதுபோன்ற நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மார்க்கம் அனுமதித்த ஒரு விடயமாகக் காணப்படுகின்ற போது,  அந்தக் கொண்டாட்டம் அனுமதிக்கப்பட்ட,  நன்மை தருகின்ற ஒரு செயலாக மாறுகின்றது.

அபூ லஹப் பற்றி வந்துள்ள ஒரு சம்பவம் இதற்கு ஆதாரமாக அமைகிறது,  நபியவர்களது பிறப்பு பற்றிய செய்தியை சுவைபா எனும் அடிமைப்பெண் வந்து சொன்ன போது,  அந்த சந்தோஷத்தின் காரணமாக அபூ லஹப் அந்த அடிமைப் பெண்ணை விடுதலை செய்தான். இதன் காரணமாக அபூ லஹபுக்கான வேதனை கொஞ்சம் தளர்த்தப்பட்டதாக அந்த சம்பவம் கூறுகிறது – புஹாரி -

அடுத்து,  நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுதல் என்ற அணுகுமுறை நபியவர்கள் காலத்தில் ஏன் காணப்படவில்லை? அல்லது ஸஹாபாக்கள் ஏன் செய்யவில்லை? என்பது உண்மையில் அக்கால வாழ்க்கைமுறை மிகவும் எளிமையானதாகக் காணப்பட்டமையே அதற்கான மிகப் பிரதானமான காரணமாகும். தற்காலத்தைப் போன்ற கொண்டாட்ட வழிமுறைகள் பற்றி அவர்கள் சிந்திக்கத் தலைப்படவில்லை. தமது உணர்வுகளை ஒரு வார்த்தை ஊடாகவோ அல்லது ஒரு அன்புப் பரிமாற்றத்தின் ஊடாகவோ வெளிப்படுத்துவது அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

எனவே,  தூண்டல் காரணி ஷரீஅத்திற்கு உற்பட்டதாக அமையும்போது, அதனை வெளிப்படுத்தும் வடிவமும் ஷரீஅத்திற்கு முரண்படாததாக இருக்கின்றபொழுது,  அதனைக் கூடாது என்று சொல்ல முடியாது.

மாற்றமாக,  கொண்டாட்டத்திற்கான தூண்டுதல்,  தனது பெற்றோர் அல்லது பரம்பரையினரிடமிருந்து பாரம்பரியமாகப் பெற்ற ஒரு விடயத்தைச் செய்தல் என்பதாகவோ அல்லது தனது பெருமையைப் பறைசாட்டுவதற்காக,  மக்கள் தனது செயலைப் பற்றி பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காகவோ அமைகின்ற,  அதேவேளை கொண்டாட்ட வடிவமும் அல்லாஹ்தஆலா அனுமதிக்காத வீண் கேளிக்கைகளாக,  ஆட்டம் பாட்டங்களாக, அடிப்படையான கடமைகளைக் கூட மறந்து போகும் அளவுக்கு,  பிரயோசனமற்ற முறையில் நேரங்களை வீணடிக்கின்ற வகையில்,  ஆண்களும் பெண்களும் வரையறையின்றி கலந்து விடுகின்ற அமைப்பில்,  இஸ்லாம் ஹராமாக்கியவைகளும் குற்றச் செயல்களும் நடைபெறுகின்ற வகையில் காணப்படும் எனின், இந்தக் கொண்டாட்டம் நிச்சயமாக ஹராமானதாகும். இதனை மேற்கொள்பவரும் சரி,  கலந்து கொள்பவரும் சரி பெரும் பாவத்தையே சம்பாதித்துக் கொள்வார்கள். நிச்சயமாக இது நபியவர்களை அவமானப்படுத்தும் ஒரு செயலாகவே அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே,  இந்த விடயத்தில் முஸ்லிம்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விடயம் இதுதான்,  வருடம் தோறும் வரும்,  நபியவர்களது பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற போது,  அது அவரது வாழ்வை அறிந்து கொள்வதாக,  பண்பாடுகளைக் கற்றுக் கொள்வதாக,  சுன்னாக்களை விளங்கிக் கொள்வதாக,  தமக்கு மத்தியில் சத்தியத்தையும் பொறுமையையும் போதித்துக் கொள்வதாக,  நபியவர்களது வாழ்வை முன்மாதிரியாகக் கொள்வதாக,  அமைத்துக் கொள்வதே மிகவும் பொறுத்தமானதாகும்.

அல்குர்ஆன் கூறுகிறது
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் எதிர்பார்த்து, அவனை அதிகமாக திக்ர் செய்வோர்க்கு நபியவர்களில் சிறந்த முன்மாதிரி இருக்கிறது, - அஹ்ஸாப் – 21.

ஹஸனுல் பன்னா
ஜரீததுல் இஃவான்

ஹி. 1352

Friday, January 10, 2014

நபியவர்களது பணி குறித்து ஒரு நினைவு கூறல்

அல்-குர்ஆன் கூறுகிறது:நபியே! உங்களை சாட்சியாளராகவும், சுபசோபனம் சொல்பவராகவும், அல்லாஹ்வின் அனுமதியுடன் அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவிளக்காகவும் நாம் அனுப்பி வைத்திருக்கிறோம் “. (அஹ்ஸாப் – 45,46)

அல்-குர்ஆன் நபியவர்களது பணியின் வடிவங்களை விளங்கப்படுத்த பல சொற்களைப் பயன்படுத்தியிருக்கின்றது. அவற்றின் முக்கியமான பகுதிகளை இந்த வசனத்தில் காணலாம்.

முதலாவதாக ஷாஹித்எனும் சொல், இது சாட்சியாளன் என்ற பொருளைக் குறிக்கிறது. அதாவது இஸ்லாம் எல்லா மனிதர்களையும் சென்றடைந்தது, என்பதற்கு மறுமையில் நபியவர்களே சாட்சியாளர். எவரும் எனக்கு இஸ்லாத்தின் வழிகாட்டல் கிடைக்கவில்லை என்று வாதம் செய்யும் நிலை ஏற்படக் கூடாது. அந்த வகையில் எல்லா மனிதர்களையும் நோக்கி இஸ்லாத்தை முன்வைத்தல் அல்லது எல்லோருக்கும் இஸ்லாம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக செயற்படுதல்,  நபியவர்களது பணியின் ஒரு வடிவம்.

இரண்டாவது முபஷ்ஷிர்எனும் சொல், இது சுபசோபனம் சொல்பவன் என்ற பொருளைத் தருகின்றது. சுபசோபனம் சொல்லுதல் என்றால் என்ன? அடிப்படையில் சுபசோபனம் என்பது ஒரு விடயத்தின் சிறப்பபைச் சொல்லுதல், அதன் பயனைச் சொல்லுதல், நன்மையைச் சொல்லுதல், ஏற்படும் நல்ல விளைவைச் சொல்லுதல்.

சிலர் முபஷ்ஷிர்’  என்பது நன்மையை ஏவுகின்றவர் என்ற பொருளையும் குறிக்கும் என்கின்றனர். அந்த வகையில் எது சரியானது? எது சொல்லப்பட வேண்டியது என்பதை தெளிவுபடுத்துவதும் இதில் உள்ளடங்குகிறது.

எனவே உலகில் மனிதர்கள் செய்ய வேண்டியது என்ன? அதன் பயன்கள் என்ன? விளைவுகள் என்ன? இஸ்லாம் உலகில் என்ன செய்யப்போகிறது? அதனால் உலகம் என்ன பலனை அடையப்போகிறது? அதனைக் கடைபிடிப்பவர்கள் என்ன நன்மைகளைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்? என்பதை விளங்கப்படுத்துவது நபியவர்களது பணியின் மற்றொரு வடிவம்.

மூன்றாவது சொல் நதீர்இதன் பொருள் எச்சரிப்பவன், இங்கு எச்சரிப்பவன் என்பதன் கருத்து,  எதனையிட்டு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் அவ்வாறில்லாத போது ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் தெளிவுபடுத்தக்கூடியவர் என்பதாகும்.

அந்த வகையில் உலகில் மனிதன் செய்யக்கூடாதது எது? அதனை ஏன் செய்யக்கூடாது? செய்வதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் என்ன? உலகம் எத்தகைய ஒரு நஷ்டத்தை அதனால் காணப்போகிறது? செய்யக்கூடாததை செய்யும் மனிதனுக்கு என்ன நேரப் போகிறது? போன்ற விடயங்கள் குறித்த தெளிவை வழங்குவது நபியவர்களது பணியின் இன்னுமொரு வடிவம்.

நான்காவது சொல் தாஇஅழைப்பாளன் என்பது இதன் பொருள். இந்த இடத்தில் அழைப்பாளன் என்பது தன்னிடமிருக்கின்ற ஒரு முழுமையான வேலைத் திட்டத்தை நோக்கி ஏனையவர்களை அழைத்தலைக் குறிக்கின்றது. அந்த வகையில் நபியவர்களுக்கு வழங்கப்பட்ட முழுமையான வாழ்க்கை முறைதான் இஸ்லாம, அந்த வாழ்க்கை முறையை நோக்கி எல்லா மனிதர்களையும் அழைக்கின்ற பணி, நபியவர்களது பணிகளுள் மற்றுமொன்றாகும்.

ஐந்தாவது ஸிராஜ் முனீர்ஒளிதரக் கூடிய விளக்கு என்பது இதன் பொருள். நபியவர்கள் எல்லோருக்கும் ஒளிதரக்கூடிய விளக்காகத் தொழிற்பட வேண்டும், இருளான இடத்தில் ஒளியேற்றப்பட்டால் தட்டுத் தடுமாறியவர்கள் எல்லாம் சீராகச் செயற்படுவார்கள். இதுதான் நபியவர்களது பணி. ஒரு வழிகாட்டியாகத் தொழிற்படல், எல்லோருக்கும் நல்லதைக் காட்டிப் கொடுத்தல், தீயதிலிருந்து பாதுகாத்தல். இந்த விளக்கு உயர்ந்து நிற்கின்ற பொழுதுதான் முழு உலகிற்கும் ஒளிகிடைக்கிறது. அத்தகைய ஒரு வழிகாட்டலை வழங்குவது நபியவர்களது பணியின் இன்னுமொரு வடிவம்.

எல்லா மனிதர்களையும் நோக்கிச் செயற்படுதல், நல்ல விளைவுகளை எடுத்துக் காட்டல், தீய விளைவுகளையிட்டு எச்சரிக்கை செய்தல், ஒரு வாழ்க்கை முறையை நோக்கி அழைத்தல், முழு உலகிற்கும் வழிகாட்டியாகத் தொழிற்படல்,  இதுதான் நபியவர்களது பணி. இந்தப் பணிதான் அவர்களுக்குப் பின்னர் அவர்களது உம்மத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பணி.

இதே விடயத்தைத் தான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் வேறு வார்த்தைகளில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். நாம் மக்களை எதனை நோக்கி அழைக்கிறோம் என்று பேசுகின்ற பொழுது,  “சத்தியத்தை நோக்கி மனித இனத்தை வழிநடாத்துதல், எல்லா மனிதர்களுக்கும் நல்லவற்றைக் காட்டிக் கொடுத்தல், முழு உலகையும் இஸ்லாம் என்ற சூரியனால் ஒளிபெறச் செய்தல்என்றார்கள்.

நபியவர்கள் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்,  இந்த மாதத்தில் அவர்களது பணியை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பமாக இதனை அமைத்துக் கொள்ள முயற்சிப்போம். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக!