Monday, November 3, 2014

முயற்சி எங்களுடையது, விளைவு அல்லாஹ்வுடையது

நபியவர்கள் கூறினார்கள் எனக்கு முன்னைய சமூகங்களின் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஒரு நபியுடன் ஒருவர் மாத்திரமே இருந்தார். மற்றொரு நபியுடன் இருவர் இருந்தனர். இன்னொரு நபியுடன் ஒரு கூட்டம் இருந்தது. மற்றொரு நபியுடன் ஒருவரும் இருக்கவில்லைஎன்றார்கள். (புஹாரி, திர்மிதி)

இந்த ஹதீஸ் நபிமார்களுடைய தஃவாவின் விளைவு நிலையை குறித்துக் காட்டுகிறது. விளைவு மையப்பட்ட செயற்பாடு எந்தப் பணிக்கும் பொதுவானது. தஃவா அதற்கு விதிவிலக்கு அல்ல. விளைவுகளைத் திட்டமிடுதலும் அவற்றை அடைந்து கொள்ளுதலும் இஸ்லாம் வலியுறுத்தும் ஸாலிஹான அமல் என்பதன் ஒரு வடிவமாகும்.

ஆனால் இங்கு இஸ்லாமிய தஃவாவைப் பொறுத்தவரை ஒரு நுணுக்கமான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தஃவா என்பது விளைவுகள் எட்டப்படாத போது நிறுத்திக் கொள்வதற்குரிய ஒரு பணியல்ல அல்லது விளைவுகள் எட்டப்படாத போது நாம் செய்தது அனைத்தும் பிழையானது அர்த்தமற்றது என்று முடிவு செய்வதற்குரிய ஒரு விடயமல்ல அல்லது நாம் செய்தது தஃவாவே அல்ல என்று கவலைப்படுவதற்குரிய ஒன்றுமல்ல.

மாற்றமாக விளைவுகளுக்குப் பொறுப்பானவன் அல்லாஹ்தஆலா. முயற்சிகள் மாத்திரமே மனிதனுக்குப் பொறுப்பானவை. நபிமார்களைப் பற்றி அல்லாஹ்தஆலா சொல்கிறான் தூதுவர்கள் மீது தெளிவாக எத்திவைக்கும் பொறுப்பு மாத்திரமல்லவா இருக்கிறது?” (நஹ்ல் - 35)

ஆரம்பத்தில் பதிவு செய்த ஹதீஸில் நபிமார்களது தஃவா விளைவு எப்படியிருக்கிறது? இவர்களில் எவரும் தஃவாவை இடை நிறுத்தியதில்லை. தாம் செய்தது பிழை என்று கருதியதில்லை. உடன் உழைத்தவர்களைக் குற்றவாளிகளாக்கியதில்லை.

விளைவைக் காணாவிட்டாலும் எமது உழைப்புக்கு கூலி இருக்கிறது என்ற உண்மையை நாம் பல சமயங்களில் மறந்து போகிறோம். விளைவைக் காண வேண்டும் அப்போது தான் கூலி உண்டு இல்லாத போது குற்றவாளிகள் என்ற மனப்பாங்கு தவறானது. இது தஃவாவை உலகியல் பார்வையில் மாத்திரம் சுறுக்கி விட்ட கண்ணோட்டம். தஃவா இதனை விடவும் உயர்ந்தது. அதற்கு ஒரு ஆன்மீகப் பெறுமானமும் இருக்கிறது.

மாத்திரமன்றி உலகியல் கண்ணோட்டத்திலும் எமது உழைப்புகள் ஒரு போதும் வீண் போவதில்லை. கடந்த காலத்தின் மீதுதான் எதிர்காலங்கள் கட்டப்படுகின்றன. எமது உழைப்புகள் விளைவுகளின் ஏதேனும் ஒரு படியாய்த்தான் அமையப் போகின்றன. முதல் உழைப்பிலேயே இறுதி விளைவைக் காண்பது சிரமமானது ஒவ்வொரு விடயத்திற்கும் அதற்குரிய ஒரு காலம் இருக்கிறது என்று அல்குர்ஆன் கூறுகிறது. எனவே, பொறுமையும் நம்பிக்கையும் மிகவும் முக்கியமானவை.

மற்றொரு புறத்தில் விளைவை எட்டாத எமது உழைப்புகள் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்,  கற்றுக் கொண்ட பாடங்கள். இது செயற்களத்தில் கிடைக்கும் தர்பிய்யத். இது விலை மதிக்க முடியாதது. இது செயற்பாட்டில் முதிர்ச்சியைக் கொண்டு வரும். தெளிவை ஏற்படுத்தும். அடுத்த கட்டப் பயணத்தை வேகப்படுத்திவிடும்.

மீண்டும் நபிமார்களைப் பாருங்கள். அவர்கள் எதனை இழந்து விட்டார்கள்? உலகை இழக்கவுமில்லை. மறுமையை இழக்கவுமில்லை. அவர்களுக்கு கூலி கிடைக்க மாட்டாது என்று சொல்ல மாட்டோம். அவர்கள் மரியாதையையோ நபி என்ற அந்தஸ்த்தையோ இழந்து விட்டார்கள் என்று நாம் சொல்ல மாட்டோம்.

தஃவாவை கூட்டு வடிவில் மேற்கொள்கின்ற பொழுது,  சகோதரர்களிடையே மேற்போந்த எதிர்மறை எண்ணங்கள் இடைக்கிடையே தோன்றி மறைய வாய்ப்பிருக்கிறது.

சகோதரர்களே,  நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். விளைவுகளைத் திட்டமிட்டுத்தான் நாம் தஃவாவை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவற்றை அடைந்து கொள்ள முடியாது போகிற போது உங்களது முயற்சி அர்த்தமற்றது என்று எண்ணி விடாதீர்கள். அவை வீணாகி விட்டன. எமக்கு எந்தக் கூலியும் இல்லை என்று நினைக்காதீர்கள். உடன் உழைத்தவர்கள் தவறு செய்து விட்டதாய்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாதீர்கள்.

நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் உழைப்புகள் எவையும் வீணாகவில்லை. நிச்சயமாக அல்லாஹ்தஆலா கூலி தருவான். ஒவ்வொருவரதும் எண்ணத்துக்கும் உழைப்புக்கும் உரியவற்றை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். உடன் உழைப்பவர்களை மதித்து நடவுங்கள். அவர்களது உழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உழைப்புக்கு மட்டுமே நாம் பொறுப்பானவர்கள். விளைவுக்கு அல்லாஹ்வே பொறுப்பானவன். உழைப்பைப் பற்றியே நாம் விசாரிக்கப்படுவோம். விளைவைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டோம்.


அல்லாஹ்வே போதுமானவன்.

No comments:

Post a Comment