தெரிவு அடிப்படைகள்
திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள்
விடை தேட வேண்டிய கேள்விகளுள் யார்? என்ற கேள்விக்கான பதில்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கடந்த
அமர்வில் பொருத்தப்பாட்டுக் காரணிகள் குறித்துக் கலந்துரையாடினோம். இந்த அமர்வில் தெரிவு
அடிப்படைகள் குறித்து சற்று அவதானத்தைச் செலுத்தலாம் இன்ஷா அல்லாஹ்.
இங்கு ஆறு வகையான
அடிப்படைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. சந்தோசமான, நிம்மதியான ஒரு குடும்ப வாழ்வு, திருமணம் என்றதொரு முறைமையை ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்தமையின்
நோக்கங்களை அடைந்து கொள்ளக்கூடிய ஒரு குடும்ப வாழ்வு, இதுதான் எல்லோரினதும் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்ளும்
வகையில் துணைத் தெரிவின் போது, பொதுவாகப் பேண வேண்டிய ஒழுக்கங்கள் என்ன என்பது
குறித்தே இங்கு பேசப்படுகிறது.
1. மார்க்கம் எனும் அடிப்படை :-
இது மிகவும் தெளிவான,
எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஓர் அடிப்படை. ஆனாலும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய
ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. அதாவது மார்க்கம் என்பதன் மூலம் பெரிதும் நாடப்படுவது,
புறத்தோற்றமோ புற நடத்தைகளோ அல்ல. மாற்றமாக அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளக்கூடிய,
நீதியாக நடந்து கொள்ளக்கூடிய உளநிலை ஒன்றையே இது முக்கியமாகக் குறித்து நிற்கிறது.
குடும்ப வாழ்வின் வெற்றி புறத் தோற்றங்களிலன்றி இந்த உளநிலையிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது.
மார்க்கம் உள்ள பெண்ணையே தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்தைச் சொல்கின்ற பிரபல்யமான
ஹதீஸும் கூட உண்மையில் மார்க்கம் என்பதன் மூலம் இந்த உளநிலையையே விளங்கப்படுத்துகிறது.
நபியவர்கள் கூறினார்கள் “ஒரு பெண் நான்கு காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறாள். அவளது அழகு,
செல்வம், கௌரவம், மார்க்கம். இவற்றில் மார்க்கம் உள்ள பெண்ணைத் தெரிவு செய்து கொள். இல்லாத போது
உனது வாழ்வே அழிந்து விடும்.” (புஹாரி, முஸ்லிம்) என்றார்கள்.
இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள
அழகு, செல்வம், கௌரவம் போன்றவை அனைத்தும் புறத்தோற்றத்துடன் சம்பந்தப்பட்டவை. அவற்றை அடிப்படையாகக்
கொண்டு திருமண வாழ்வு நிர்ணயிக்கப்படுவது பொருத்தமானதல்ல என்கிறது. தீனின் அடிப்படையிலேயே
திருமண வாழ்வு நிர்ணயிக்கப்படல் வேண்டும் என்கிறது. அந்தவகையில் இங்கு தீன் என்பது
புறத்தோற்றமல்லாத ஒன்றையே குறிக்கிறது. அதுதான் இறையச்சம், நீதி போன்ற பண்புகளைப் பிரதிபளிக்கக் கூடிய உளநிலையாகும்.
அடுத்து, இந்த ஹதீஸில் வந்துள்ள தீன் என்ற சொல்லை பொதுப்படையாக நோக்கினால் அழகு,
செல்வம், கௌரவம் அனைத்தும் தீனுக்குள் உள்ளடங்குகின்ற,
தீனுடன் முரண்படாத காரணிகளாகும். ஆனால் இந்தக் காரணிகளைத் தவிர்த்து, தீனைத் தெரிவு செய்யுமாறு ஹதீஸ் கூறுகிறது. எனவே இங்கு தீன் என்பது பொதுவான ஒரு
கருத்தையன்றி, குறிப்பான ஒரு விடயத்தையே குறித்து நிற்கிறது எனலாம்.
ஹஜ்ஜதுல் வதாஇன் போது,
நபியவர்களின் பெண்கள் பற்றிய உபதேசமும், ஆண்களின் உளநிலை மாற்றம் ஒன்று பற்றியே பேசுகிறது. “பெண்கள் உங்களிடத்தில் கைதிகள் போன்றவர்கள்,
தங்களைக் காத்துக் கொள்ள அவர்களிடத்தில் எதுவுமில்லை. அல்லாஹ்வின் பாதுகாப்பு உத்தரவாதத்திலேயே
நீங்கள் அவர்களை சொந்தமாக்கியிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையை முன்னிலைப்படுத்தியே
அவர்களது உறவு உங்களுக்கு ஹலாலாகிறது. பெண்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.
நல்ல செய்திகளே அவர்களுக்கு வஸியத்தாக அமையட்டும்…” (அஹ்மத்). இந்த ஹதீஸும்
ஆண் பெண் உறவு இறையச்சம், நீதி போன்ற பெறுமானங்களின் மீது அமைய வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்தப் பின்புலத்தில்தான்
இமாம் ஹஸனுல் பஸரி அவர்களும் தனது மகளை பலர் பெண் கேட்டு வந்த நிலை பற்றி கேள்வி கேட்டவருக்கு
அவர்களில் மிகவும் தக்வா உள்ளவனுக்கு உங்களது மகளை திருமணம் செய்து வையுங்கள். ஏனெனில்
அவன்தான் அவளை நேசித்தால் கண்ணியப்படுத்துவான். வெறுத்தாலும் கூட அநியாயம் இழைக்க மாட்டான்
என்றார்கள்.
எனவே, துணைத் தெரிவின்போது தீன் என்ற காரணி தீர்மானம் மேற்கொள்வதற்கான ஒரு அடிப்படையாகக்
காணப்படல் வேண்டும் என்பதன் பொருள் இதுதான். அது தனித்து புறத்தோற்றத்தையோ புறச் செயற்பாட்டையோ
மாத்திரம் குறிக்கவில்லை. மாற்றமாக அதனையும் தாண்டிய தக்வா மிகுந்த, நீதியான ஒரு உளநிலையையே மிகவும் முக்கியமாகக் குறித்து நிற்கிறது.
2. பரம்பரைப் பண்புகள் எனும் அடிப்படை :-
நபியவர்கள் கூறினார்கள்,
“மனிதர்கள் கனிப்பொருட்கள் போன்றவர்கள். ஜாஹிலிய்யத்தில் மேன்மக்களாகக் காணப்பட்டோர்,
இஸ்லாத்திலும் மேன்மக்களாகவே கருதப்படுவர். அவர்கள் இஸ்லாத்தை ஆழ்ந்து அறிகின்றபோது” என்றார்கள். (புஹாரி). இந்த ஹதீஸ் மனித வகைகள் குறித்த ஒரு உண்மையைப்
பேசுகிறது. மனிதர்களில் உயர் குணங்கள், உயர் ஆற்றல்கள் போன்றன பரம்பரைக் காரணிகளால் கடத்தப்படுகின்றன. அந்தவகையில் சில
குடும்பங்கள் இயல்பிலேயே உயர் ஆற்றல் கொண்டவையாக இருக்கும். மற்றும் சில உயர் குணங்கள்
கொண்டவையாக இருக்கும்.
கனிப்பொருட்களில் எவ்வாறு உள்ளார்ந்த ஆற்றல், குண வேறுபாடுகள் காணப்படுகின்றனவோ அவ்வாறே மனிதர்களிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.
இது மனிதப் படைப்பில் அல்லாஹ் வைத்திருக்கும் ஒரு இரகசியம். தலைமைத்துவங்கள்,
ஆகர்ஷண ஆளுமைகள் போன்றனவெல்லாம் இந்த இரகசியத்தின் விளைவுகள்.
எனவே, ஜாஹிலிய்யத்தின்போது ஆகர்ஷண ஆளுமைகளாக வலம் வந்தோர், இஸ்லாத்திலும் அதே அந்தஸ்த்தைப் பெறுவர். அவர்கள் இஸ்லாத்தை சரியான வடிவில் அறிந்து
செயற்படுத்துகின்ற போது. மனித வகையின் இந்த வேறுபாடு துணைத் தெரிவின்போது கருத்தில்
கொள்ளப்படுவது இஸ்லாத்தின் பார்வையில் தவறானதல்ல. மாத்திரமன்றி அது வரவேற்கத்தக்கதும்
கூட. நபியவர்கள் கூறினார்கள் “உங்கள் இந்திரியங்களை எங்கே செலுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
ஏனெனில் பரம்பரைப் பண்புகள் தொடர்ந்து கடத்தப்படக்கூடியவை” என்றார்கள். (இப்னுமாஜா)
இந்த ஹதீஸ் குறித்து
நிற்கும் கருத்துப்படி தமது குணவியல்புகள், ஆற்றல்களுக்குப் பொருத்தமான துணையைத் தேடுதல் தவறானதல்ல என்பது புரிகிறது. ஏனெனில்
ஷெய்க் அஹ்மத் முஹம்மத் ராஷித் அவர்கள் குறிப்பிடுவது போல், இன்றைய சமூக வாழ்வமைப்பு சிக்கல் நிறைந்தது. அதனுள் தனித்து இறையச்சம்,
நேர்மைத்தன்மைகள் மாத்திரம் சோடிகளைத் தொடர்ந்தும் இணைத்து வைக்கப் போதுமானவையல்ல.
சமூக யதார்த்தங்களும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். தஃவா அமைப்பிற்குள் சில சமயங்களில்
இவை கருத்தில் கொள்ளப்படாத தவறு நடைபெறுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
எனவே, பரம்பரைப் பண்பு வேறுபாடுகள் துணைத் தெரிவில் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பது
நாம் மனங்கொள்ள வேண்டிய மற்றொரு அடிப்படையாகும்.
3. நெருங்கிய உறவுகள் தவிர்க்கப்படுவது சிறந்தது எனும்
அடிப்படை :-
நெருங்கிய உறவுகளில்
துணைத் தெரிவு நடைபெற வேண்டுமா? அல்லது உறவல்லாதவர்களில் தெரிவு நடைபெற வேண்டுமா? என்பதில் இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் மத்தியிலும்
சரி, உளவியல் அறிஞர்கள் மத்தியிலும் சரி இரு வேறுபட்ட
அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.
சட்டத்துறை அறிஞர்களில்
ஒரு தரப்பினர், நெருங்கிய உறவுகளைத் தவிர்த்து, உறவல்லாதவர்களில் இருந்து துணைத்தெரிவு நடைபெற வேண்டும் என்பதே இஸ்லாமிய வழிகாட்டுதலாகும்
என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக “நெருங்கிய உறவுகளில் திருமணம் செ;யயாதீர்கள், சந்ததிகள் பலவீனமடையும்” என்ற கருத்தில் வந்துள்ள சில ஹதீஸ்களை ஆதாரம் காட்டுகின்றனர்.
மறுதலையாக மற்ற தரப்பினர் நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது
என்ற கருத்தை முன்வைக்கின்றனர். நபியவர்களும் ஸஹாபாக்களும் நெருங்கிய உறவுகளில் திருமணம்
செய்துள்ள சந்தர்ப்பங்களை இதற்கு ஆதாரமாக முன்வைப்பதுடன், முதல் தரப்பினர் ஆதாரமாகக் கொண்ட ஹதீஸ்கள் மிகவும் பலவீனமானவை எனவும் கூறுகின்றனர்.
அதேபோல் உளவியலாளர்கள்
மத்தியிலும், பரம்பரையியல் ஆய்வுகள் குறித்து இருவேறுபட்ட பார்வைகள்
இருக்கின்றன. நெருங்கிய உறவுத் திருமணங்கள், சந்ததிகளில் நோய்கள், அங்கவீனங்கள், மந்த புத்தி நிலைகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்ற அபிப்பிராயங்கள்
நிலவுவது போல், மறுதலையாக நெருங்கிய உறவு என்பதால் மாத்திரம் இதுபோன்ற
பாதிப்புகள் ஏற்படுவதில்லை. வேறு காரணங்களாலேயே ஏற்படுகின்றன என்ற வாதங்களும் இருக்கின்றன.
இந்த வாதப் பிரதிவாதங்களின்
சரி பிழைகளைத் தாண்டி இந்த விடயத்தைப் பார்க்கின்ற பொழுது சில உண்மைகள் புலப்படுகின்றன.
முதலாவது,
துணைத் தெரிவு நெருங்கிய உறவில் அமைய வேண்டும் என்பதுவோ அல்லது அமையக் கூடாது என்பதுவோ
இரண்டு நிலைகளும் மார்க்கப் பெறுமானம் கொண்டவையல்ல. அதாவது இவற்றில் ஏதேனும் ஒரு நிலைப்பாடுதான்
இஸ்லாத்தில் கடமையானது என்றோ அல்லது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றோ நாம்
சொல்ல முடியாது. மாற்றமாக இது மனித அறிவாராய்ச்சியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதற்குரிய
ஒரு விடயமாகும். அந்தவகையில் நெருங்கிய உறவில் துணைத்தெரிவு நடந்தாலும் சரி,
உறவல்லாதவர்களில் நடந்தாலும் சரி எதுவும் மார்க்க ரீதியாக நன்மையானதாகவோ அல்லது
பாவமானதாகவோ அமைய மாட்டாது.
இரண்டாவது,
நெருங்கிய உறவில் திருமணம் செய்தல், தவிர்த்தல் இந்த இரண்டில் எது சிறந்தது? எது மிகவும் பொருத்தமானது? என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்கின்ற பொழுது,
நெருங்கிய உறவுகளில் துணைத் தெரிவு நடைபெறுவதை விடவும் உறவல்லாதவர்களில் துணைத்
தெரிவு அமைவதே மிகவும் சிறந்தது என்பது புலப்படுகிறது. காரணம் இவ்விடயம் தொடர்பான ஆரம்ப
கால இமாம்களின் வாதப்பிரதிவாதங்களை அவதானிக்கின்ற பொழுது, இந்த விடயத்திற்கு வழங்கப்பட்ட மார்க்கப் பெறுமானத்திற்கு அப்பால் சில நியாயங்களை
இமாம்கள் பேசுகின்றனர்.
1) நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் நடைபெறுவதை விடவும்
உறவல்லாதவர்களுடன் திருமணம் நடைபெறுகின்ற பொழுது ஒப்பீட்டு ரீதியில் குடும்ப முரண்பாடுகளும்,
பிரச்சினைகளும் குறைவடைகின்றன என்கின்றனர். இந்தப் பின்புலத்தில்தான் ஒரே நேரத்தில்
இரு சகோதரிகளைத் திருமணம் செய்ய முடியாது என்ற சட்டமும், ஒரு பெண்ணையும் அவளது மாமியை அல்லது சாச்சியையும் சமகாலத்தில் திருமணம் செய்ய முடியாது
என்ற சட்டமும் இஸ்லாத்தில் பின்பற்றப்படுகின்றது. இந்த சட்டத்தின் காரணத்தை இமாம்கள்
விவாதிக்கின்ற பொழுது கணவன் விடயத்தில் பெண் மிகுந்த ரோஷ உணர்வு கொண்டவள், தனது கணவனை இலகுவில் பிரிதொருவருக்கு விட்டுக் கொடுக்கவோ பங்கு போட்டுக் கொள்ளவோ
முன்வர மாட்டாள். அதிலும் குறிப்பாக தான் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய அடுத்த பெண்
தனது நெருங்கிய உறவாக இருக்கின்ற பொழுது, தனது குடும்பம்தானே என்ற அசட்டு தைரியமும் அங்கு இணைந்து விடுகிறது. எனவே பெண்ணின்
ரோஷ உணர்வுடன் குடும்பத்தின் பக்க பலமும் இணைகின்ற பொழுது குடும்பப் பிரிவுகள் அதிகரிக்கும்
நிலையே ஏற்படுகிறது என்கின்றனர்.
2) உறவல்லாதவர்களில் துணைத் தெரிவு நடைபெறுகின்ற போது,
குடும்ப உறவு வட்டம் விரிவடைகிறது, புதிய உறவுகள் கிடைக்கின்றன. இது பல்வேறு நலன்களுக்குக் காரணமாகின்றது என்கின்றனர்.
நபியவர்களது திருமணங்களை நோக்கினால் வித்தியாசப்பட்ட பல கோத்திரங்களில் அவர்கள் திருமண
உறவுகளை வைத்துக் கொண்டார்கள். இதன்மூலம் தனது உறவு வட்டத்தை விசாலப்படுத்தினார்கள்.
அது அவர்களது தஃவாவுக்கு மிகவும் பக்கபலமாக அமைந்தது.
3) உறவல்லாதவர்களில் துணைத் தெரிவு நடைபெறுகின்ற போது
வழமையான குடும்ப இயல்புகள், குணங்கள், ஆற்றல்களுடன் புதிய குணங்களும் ஆற்றல்களும் கொண்ட ஒரு பரம்பரை உருவாவதற்கான வாய்ப்பேற்படுகிறது.
அடுத்து இவ்விடயம்
குறித்து ஷெய்க் இப்னு உஸைமீன் அவர்களிடம் வினவப்பட்ட ஒரு சமயத்தில் அவரது பதில் இவ்வாறு
அமைந்தது. உறவல்லாதவர்களைத் திருமணம் செய்வது சிறந்தது என்பதற்கு இமாம்கள் முன்வைத்துள்ள
புதிய ஆற்றல்மிக்கப் பரம்பரை, குடும்பப் பிளவுகளைத் தவிர்த்தல் போன்ற காரணங்கள்
மிகவும் நியாயமானவை. அதேசமயம் நெருங்கிய உறவுக்குள், வெளிப் பெண்ணை விடவும் சிறந்த பெண் கிடைப்பாள் எனின் நெருங்கிய உறவை முற்படுத்தலாம்.
ஆனால் இரண்டும் சமனாக இருக்கின்ற ஒரு நிலை வரும் எனின் உறவல்லாத பெண்ணை முற்படுத்துவதே
சிறந்தது என்றார்கள்.
4. பொறுத்தப்பாடு எனும் அடிப்படை :-
இன்றைய சிக்கல் நிறைந்த
சமூக வாழ்வில் பொறுத்தப்பாடு என்பது மிகவும் முக்கியமானது. அது வெறுமனே உள்ளம் சார்ந்த
ஒரு விடயம் மாத்திரமல்ல கல்வி, பொருளாதாரம், அந்தஸ்து, பழக்க வழக்கங்கள் போன்ற பல பக்கங்களைக் கொண்ட ஒரு
விடயம் அது. ஷெய்க் அஹ்மத் முஹம்மத் ராஷித் அவர்கள் அடிக்கடி கூறுவது போல்,
தஃவாவுக்குள்ளே, மார்க்கமும் தஃவா ஈடுபாடும் உள்ள போது, மற்ற எதனையும் பாராது திருமணங்கள் நடைபெற்ற சம்பவங்கள் இருக்கின்றன. சமூக வாழ்வின்
சிக்கலான வடிவங்களைப் புரிந்து கொள்ளாது இரண்டு பேரின் வாழ்வை பெரும் சிரமத்திற்குள்
தள்ளி விடுகின்ற நிலைமைதான் இது என்கிறார். “படித்தவர்களும் படிக்காதவர்களும் சமமாவார்களா?”
(ஸுமர் - 9) என்று அல்லாஹ்தஆலா கேட்பதில் எல்லோருக்கும் படிப்பினை
இருக்கின்றது. பொறுத்தப்பாடு குறித்து இங்கு விரிவாகப் பேசவில்லை. கடந்த பத்தியில்
இத்தலைப்பு தனியாக ஆராயப்பட்டுள்ளது.
5. ஆலோசனை பெறுதல் எனும் அடிப்படை :-
இந்த அடிப்படை நேரடியாக
யாரைத் தெரிவு செய்வது? என்ற விடயத்தோடு சம்பந்தப்படுவதில்லை. மாற்றமாக தெரிவு முறையுடன் சம்பந்தப்படுகிறது.
அதாவது துணைத் தெரிவை மேற்கொள்ளும் போது எனது நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப்
பற்றிப் பேசுகின்றது. எமது தெரிவு மிகச் சரியான இலக்கை விட்டும் விலகிவிடாதிருக்க இந்த
ஆலோசனை தேவைப்படுகிறது. “ஆலோசனை செய்தவன் நஷ்டமடைய மாட்டான், அல்லாஹ்விடம் உதவி தேடியவன் கைசேதப்பட மாட்டான்.” (தபரானி) என நபியவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸின்
நம்பகத்தன்மை குறித்த விமர்சனங்கள் இருந்தாலும் ஹதீஸின் உள்ளடக்கசிந்தனை உண்மையானது.
ஆலோசனை கேட்டல் என்பது வாழ்வின் குறித்ததொரு பகுதியுடன் மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல.
எல்லாப் பரப்புக்களுடனும் தொடர்புபட்டது. மாத்திரமன்றி ஆலோசனை கேட்டல் என்பது எப்பொழுதும்
நஷ்டமல்ல என்பதையும் இந்த ஹதீஸ் குறித்து நிற்கிறது.
துணைத்தெரிவு என்று
வருகிற போது, மிகவும் விதிவிலக்கான நிகழ்வுகளன்றி பலரும் பொதுவாக
ஆலோசனை செய்கிறார்கள். ஆனால் யாரிடம் ஆலோசனை பெறுகிறோம்? என்பதும் முக்கியமானது. ஆலோசனை பெறுபவர் உண்மையானவராக
இருத்தல், நேர்மையானவராக இருத்தல் போன்ற விடயங்களை எல்லோரும்
சொல்வார்கள். இது சரியானதுதான். ஆனால் அதனை விட முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது.
நாங்கள் ஆலோசனை பெறப் போவது எங்களது வாழ்வுக்கான துணையைத் தெரிவு செய்கின்ற விடயத்தில்.
எனவே ஆலோசனை வழங்குபவர் குடும்ப உறவில் சிறந்தவராக இருக்கிறாரா? என்பதைப் பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஏனெனில்
துணைத்தெரிவு என்பது, வெறுமனே கோட்பாட்டுப் படிப்பு சார்ந்த விடயமல்ல.
மாற்றமாக வாழ்க்கை அனுபவம். எனவே அதனை சிறந்த முறையில் மேற்கொள்பவரிடம் ஆலோசனை பெறுவதே
பொருத்தமானது.
6. அல்லாஹ்விடம் உதவி தேடுதல் எனும் அடிப்படை :-
மிக முக்கியமான அடிப்படை
இதுதான். இதுவும் யார்? என்பதுடன் நேரடியாக சம்பந்தப்படுவதை விடவும் தெரிவு முறையுடன் பெரிதும் சம்பந்தப்பட்டது.
எங்களது முயற்சிகள் எந்தளவு காத்திரமானதாக இருந்தாலும் அதன் வெற்றி தங்கியிருப்பது
அல்லாஹ்வின் உதவியில் மாத்திரம்தான். நபியவர்கள் கூறினார்கள் “மூன்று பேருக்கு உதவி செய்வது அல்லாஹ் மீது கடமை,
அல்லாஹ்வின் பாதையில் போராடுபவன், தனது அடிமைத்தலையில் இருந்து விடுதலை பெற முயற்சிப்பவன், தனது கற்பைக் காத்துக் கொள்ள திருமணம் செய்ய நினைப்பவன்” என்றார்கள். (திர்மிதி). எனவே திருமண வாழ்வு தொடர்பில் அல்லாஹ்விடம்
உதவி தேடுபவன் ஒரு போதும் வெறும் கையோடு திரும்ப மாட்டான்.
துணைத்தெரிவின்போது,
மேற்சொன்ன அடிப்படைகள் முக்கியமானவை. இவற்றை முடியுமானவரை கடைபிடிக்கின்ற பொழுது
நிச்சயம் உங்கள் வாழ்வு பிரகாசமானதாய் அமையும். அல்லாஹ் எமது வாழ்வை பிரகாசமாக்கட்டும்
No comments:
Post a Comment