Monday, August 11, 2014

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல்

முஸ்லிமுக்கு ஆதரவளித்தலும் நாட்டுக்கு ஆதரவளித்தலும்

பாகிஸ்தான் கிரிக்கட் அணியினர் இலங்கையில் கிரிக்கட் போட்டிகளுக்கான ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்,  இலங்கை முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் அல்லது முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற ஒரு கருத்து பெரும்பான்மை சமூகத்தவர்களிடம் பரவாலாக காணப்படுகிறது. 

இவற்றில் எது உண்மையாக இருந்தாலும் இங்கு ஆதரவளித்தல் சம்பந்தமாக ஷரீஅத் ரீதியான ஒரு பார்வையை முன்வைப்பது பொறுத்தம் என நினைக்கிறேன்.

முஸ்லிம்கள் ஒரே உம்மத்தினர் என்ற கோட்பாடும்,  தாய் நாட்டுச் சிந்தனையும் ஒன்றை ஒன்று முரண்பட்ட விடயங்கள் அல்ல என்பது இன்று பல தடவைகள் பல உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களால் தெளிவுபடுத்தப்பட்ட ஒரு விடயமாகும். அந்த வகையில் ஒரு நாட்டைச் சார்ந்திருப்பதும் அதனை நேசிப்பதும் அதற்காக உழைப்பதும் அதன் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதும் இஸ்லாமிய அகீதாவுக்கோ அல்லது ஷரீஅத் சட்டங்களுக்கோ முரணானதல்ல என்பது போல் முஸ்லிம்கள் ஒரே உம்மத்தினர் என்ற கோட்பாட்டுக்கும் முரணானதாக அமைய மாட்டாது. 

கருத்து ரீதியாக இந்த உண்மையை பொதுவாக எவரும் மறுக்க மாட்டார்கள்,  ஆனால் இதன் செயற்பாடு வடிவங்களில், மயக்கங்களும் தெளிவின்மைகளும் தோன்ற முடியும்.

அத்தகைய ஒரு தெளிவற்ற நிலை மேற்சொன்ன விவகாரத்திலும் இருப்பதாக நினைக்கிறேன். இஸ்லாம் முன்வைக்கும் |அல் வலா| எனும் சார்ந்திருத்தல் கோட்பாடு பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிக்கும் போது இங்கு சார்ந்திருத்தல் என்பது வெறுமனே பௌதீக ரீதியானதாக மாத்திரமன்றி,  அது உளப்பூர்வமானதாகவும் காணப்படல் வேண்டும் என்று குறிப்பிடுவார்கள். எனவே அங்கு பற்று நேசம் ஆதரவு உதவி ஒத்துழைப்பு என்ற எல்லா வகையான உறவுகளும் காணப்படல் வேண்டும் என்பார்கள்.

அந்த வகையில் இந்த வலா என்ற சிந்தனையை அறிஞர்கள் உம்மத் தேசியம் என்ற அடிப்படையில் நின்று சகோதரத்துவ சார்ந்திருத்தல் என்றும் ஒரு முறைமையைச் சார்ந்திருத்தல் என்றும் இரண்டாக வகுத்து நோக்குவார்கள். (வலா என்ற சார்ந்திருத்தல் கோட்பாட்டை பல்வேறு கண்ணோட்டங்களில் பலவேறு பிரிவுகளாக அறிஞர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பதும் இங்கு அதன் ஒரு வகையான பாகுபாடு மாத்திரமே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவும்). 

இதில் முதல்வகை நம்பிக்கை சார்ந்தது முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற அல்குர்ஆன் வசனம் இக்கருத்தையே குறித்து நிற்கின்றது. அந்தவகையில் இது உம்மத்தை நோக்கிய சார்ந்திருத்தலாகும். இரண்டாம் வகை ஒரு முறைமை சார்ந்தது,  அதாவது இது ஒரு தேசத்தை மையப்படுத்தியது

தேசம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் தமக்கு மத்தியில் உரிமைகளையும் கடமைகளையும் பகிர்ந்து வாழும் ஒரு முறைமையாகும்,  இங்கு இன மொழி நிற நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்வு கட்டமைக்கப்பட மாட்டாது,  மாற்றமாக குறித்த அந்த பிரதேசத்தில் வாழ்பவர்களது பொது நலனை அடிப்டையாகக் கொண்டு அங்கு வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய ஒரு வாழ்வொழுங்கையும் இஸ்லாம் மறுதலிக்கவில்லை. நபியவர்களது மதீனா சாசனம் இந்த வாழ்வொழுங்குக்கு சிறந்த உதாரணமாகும்.

இந்த இருவகையான சார்ந்திருப்பையும் இஸ்லாம் பேசியிருக்கின்றது, இரண்டையும் ஏற்றுக் கொண்டுமிருக்கிறது,  எனின் இவற்றிற்கிடையிலான சமநிலைப்படுத்தல் எவ்வாறு அமையலாம்

ஒரு தேசத்தில் வாழும் முஸ்லிம் தனது தேசத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிமுடன் பேணும் சார்ந்திருப்பு என்பது ஒரு போதும் தான் வாழும் தேசத்தின் ஏற்றுக் கொண்ட பொது நலன்களுக்கு முரணானதாகவோ அல்லது அவற்றை அவமதிப்பதாகவோ அமையக் கூடாது மாத்திரமன்றி தேசத்தை சார்ந்திருத்தல் என்பதும் வெறுமனே பௌதீக ரீதியானதாக மாத்திரமன்றி உளப்பூர்வமானதாகவும் காணப்படல் வேண்டும். 

அத்துடன் தனது தேசத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிமுடனான சார்ந்திருப்பு நம்பிக்கை சார்ந்தது என்ற வகையில் அந்த நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையிலும் அதனை வளர்க்கும் வகையிலும் அந்த சார்ந்திருப்பு காணப்பட முடியும். அது ஒரு போதும் அநியாயத்திற்கு துணை போவதாகவோ உடன்படிக்கைகளை மீறுவதாகவோ அமையக்; கூடாது.

மேற்கூறிய சிந்தனைகளை ஓரளவுக்கு கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் பேசுவதாக நினைக்கிறேன். அல்குர்ஆன் ஹிஜ்ரத் செய்து இஸ்லாமிய தேசத்திற்கு வந்தவர்களையும் வராதிருந்தவர்களையும் பற்றிப் பேசுகின்ற பொழுது,  | ஈமான் கொண்டு ஹிஜ்ரத் செய்யாமல் இருக்கின்றவர்களுடன் உங்களுக்கு வலா எனும் சார்ந்திருப்புக் கிடையாது,   அவர்களது மார்க்கத்தில் உங்களிடம் உதவி கேட்டால் அதற்கு உதவி வழங்குங்கள்.  ஆனால், நீங்கள் ஏற்கனவே உடன்படிக்கை செய்த ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் அது காணப்படக் கூடாது| (அன்பால் - 72). 

இந்த அல் குர்ஆன் வசனத்தில் சார்ந்திருப்பு இல்லை என்று குறிப்பிடப்பட்டமை தேசம் சம்பந்தப்பட்ட சார்ந்திருத்தலையே குறிக்கின்றது.  மாற்றமாக நம்பிக்கை சார்ந்த சார்ந்திருத்தலைக் குறிக்கவில்லை என்பதை வசனத்தின் ஓட்டத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலே பேசப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையில் இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கான ஆதரவு நிலைகள் எவ்வாறு அமைவது பொறுத்தமானது என்பதை புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். 

இங்கு கிரிக்கட் எனும் விளையாட்டின் ஷரீஅத் ரீதியான நிலைப்பாடு குறித்து நான் பேசவில்லை, அதில் சார்பான எதிரான வாதங்கள் காணப்பட முடியும். அவற்றைத் தாண்டிச் சென்று கிரிக்கட் விளையாட்டின் போதும் சரி அதுவல்லாத ஏனைய விடயங்களின் போதும் சரி எங்களது நடத்தை எவ்வாறு காணப்பட வேண்டும் என்பது குறித்தே இங்கு பேசப்படுகிறது.

அந்த வகையில் ஒருவர் பாகிஸ்தான் என்ற நாட்டையும் அதன் மக்களையும் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் விரும்புவதும் உதவி செய்வதும் தவறானதல்ல. ஆனால் அது இலங்கைக்கு எதிரானதாகக் கட்டமைக்கப்படுவது தவறானதாகும். 

அதே போல் எமது தாய் நாடு என்ற வகையில் இலங்கையையும் அதன் மக்களையும் விரும்புவதும் உதவி செய்வதும் தவறானதல்ல,  ஆனால் அது இஸ்லாம் தடை செய்த வெறியாகவோ பாகிஸ்தானை அவமதிப்பதாகவோ அமைந்து விடக் கூடாது. 

கிரிக்கட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இது நம்பிக்கை சம்பந்தப்பட்டதல்ல நலன்கள் சம்பந்தப்பட்டது. எனவே இவ்விளையாட்டின் மூலம் நாட்டுக்கு ஒரு நன்மை அமையப் பெறுகிறது என்றிருக்கும் போது நமது நாட்டை ஆதரிப்பதே பொறுத்தமானதாகும். அதேவேளை திறமைகள் எந்தத் தரப்பில் வெளிப்பட்டாலும் அவை மதிக்கப்படவும் பாராட்டப்படவும் வேண்டும்.


இது எனது தனிப்பட்ட ஒரு இஜ்திஹாத் மாத்திரமேயாகும். இதில் யாரும் மாற்றுக் கருத்துக் கொள்ள முடியும். அவற்றையும் வரவேற்றவனாக முடிந்தவரை எமது நடத்தைகளை இந்த வரையறைகளைப் பேணி அமைத்துக் கொள்ள அல்லாஹ்தஆலா தௌபீக் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் விடைபெறுகிறேன்.

No comments:

Post a Comment