திருமண வாழ்வை எதிர்
நோக்கி இருப்பவர்களுக்கு
கடந்த அமர்வுகளில்
ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளைஞர் யுவதிகளின் பக்கம் நின்று கலந்துரையாடினோம்.
அதில் அவர்களது விருப்பு வெறுப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் எவ்வாறு இருக்கின்றன
என்பதும், உண்மையில் அவை எவ்வாறு இருப்பது மிகவும் பொறுத்தமானது
என்பதும் கலந்துரையாடலில் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
இன்றைய அமர்வில் இஸ்லாமிய
ஷரீஆவின் பக்கம் நின்று பார்க்கின்ற பொழுது திருமண வாழ்வு ஏன்?
என்ற கேள்விக்கு எவ்வாறு பதில்
சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்து கலந்துரையாடுவது பொருத்தமானது.
அல்லாஹுத்தஆலா இந்த
பூமியைப் படைத்து, அதில் மனிதனைப் படைத்துள்ளான். அவன் விரும்பியிருந்தால்
ஆண் இனத்தை மாத்திரமே படைத்திருக்க முடியும் அல்லது பெண் இனத்தை மாத்திரமே படைத்திருக்க
முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஆணையும் பெண்ணையும் படைத்து, அவர்கள் இணைந்து வாழவேண்டும் என்ற ஒழுங்கையும் ஏற்படுத்தியிருக்கிறான். இது ஏன்?
இதற்குப் பின்னால் உள்ள தத்துவம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில்தான் திருமண வாழ்விற்கான
அல்லது குடும் வாழ்விற்கான நோக்கத்தை எமக்கு மிகச் சரியாக எடுத்துரைக்கின்றது.
இது, அல்லாஹ்வின் நாட்டத்தை பலவீனமான மனித அறிவினால் கண்டு கொள்வதற்கான முயற்சி என்பதனை
விடவும், மேற்சொன்னது போன்ற ஒரு வினாவினைத் தொடுப்பதன் மூலம்
எமது விருப்பு வெறுப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால், அல்குர்ஆனும் சுன்னாவிலும் இவ்விடயம் எவ்வாறு பேசப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து
கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இது காணப்படுகிறது.
இஸ்லாமியக் குடும்பவியல்
அறிஞரான கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியில்,
இஸ்லாமிய ஷரீஅத் குடும்ப வாழ்வுக்கான மூன்று பிரதான நோக்கங்களை முன்வைப்பதாகக்
குறிப்பிடுகிறார்கள்.
1. ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.
2. உள, உடல் அமைதியை ஏற்படுத்தல்.
3. சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல்.
இங்கு முதலாவது நோக்கம்
குடும்பத்தின் தர்பிய்யத் பணியுடன் சம்பந்தப்படுகிறது. இரண்டாவது நோக்கம் அதன் பாதுகாப்புப் பணியுடன் சம்பந்தப்படுகிறது. மூன்றாவது நோக்கம் அதன் நாகரீகப் பணியுடன் சம்பந்தப்படுகிறது.
இந்த மூன்று நோக்கங்களும் சிறந்த முறையில் நிறைவேற்ப்படுகின்ற பொழுது உலகில் ஒரு உன்னதமான
மனிதவாழ்வு கட்டியெழுப்பப்படுகிறது.
1. ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.
ஸாலிஹான சந்ததிகள்
என்பது முதலில் மனித இனத்தின் நீண்ட கால இருப்பைக் குறிக்கின்றது. அல்குர்ஆனும் ஹதீஸும்
இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகவே திருமணத்தின் விளைவு குறித்துப் பேசும் போது,
‘துர்ரிய்யா’ என்ற சொல்லைக் கையாண்டிருப்பதைக்
காணலாம். இது நேரடியாக பிள்ளை என்ற கருத்தை தாண்டி ஒரு நீண்ட கால பரம்பரையைக் குறிக்கின்றது.
எனவே, திருமணம் என்பது பரம்பரை பரம்பரையாக மனித இனம் நிலைத்திருப்பதற்கான
ஒரு பொறிமுறை என்பது இங்கு விளங்கப்படுத்தப்படுகிறது.
அடுத்து, ஸாலிஹான சந்ததி என்பது மனித இயல்பு சார்ந்த ஒரு தேவை. தாய்மை என்பதும் தந்தையாக
இருத்தல் என்பதும் கற்றுத் தேர்ச்சி பெறுவதற்குரிய ஒரு துறைசார் கலையல்ல. மாற்றமாக,
மனிதனின் இயல்பாக அல்லாஹ் அமைத்து வைத்திருக்கின்ற ஓர் உணர்வு அது. இதனால்தான்
அல்குர்ஆன் மனைவி பிள்ளைகளக் கண்குளிர்ச்சி என்று அடையாளப்படுத்தியது. (புர்கான்: 74)
ஒரு மனிதனிடத்தில்
பிள்ளை வேண்டுமென்ற தேடலும் எதிர்பார்ப்பும் இந்த உணர்வுப் பின்புலத்தில்தான் உருவாகின்றது. கணவன் மனைவிக்கு இடையிலான பிரத்தியேக
உறவின்போது கூட அந்த எதிர்பார்ப்பை வைத்துச் செயற்படவேண்டும் என்று அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது.
‘இப்போது அவர்களுடன் உறவு கொள்ளுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு எழுதி வைத்தவற்றை ஆர்வத்துடன் எதிர்பாருங்கள்.’ (பகரா: 187)
மற்றது ஸாலிஹான சந்ததி
என்பது ஒரு தர்பிய்யத்தை அல்லது பயிற்றுவிப்பைக் குறித்து நிற்கின்றது. அல்குர்ஆன்
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரகத்தை விட்டுப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறுவதன்
மூலம் அந்தப் பணியை ஆரம்பித்து வைக்கின்றது. இஸ்லாமிய ஷரீஅத் முன்வைக்கும் பெற்றோர்
கடமைகள், பிள்ளைகள் கடமைகள், வாரிசுரிமை சட்டங்கள், பரம்பரைச் சட்டங்கள் போன்ற அனைத்துமே இந்த உண்மையை எங்களுக்கு எடுத்துச் சொல்கின்றன.
நபியவர்கள் இந்தப் பணியை மிகவும் எளிமையாக இவ்வாறு கூறினார்கள்:
‘உங்கள் பிள்ளைகளை
கண்ணியமாக நடாத்துங்கள். அவர்களுக்கு நல்லொழுக்கத்தைக்
கற்றுக் கொடுங்கள்.’ (இப்னு மாஜா)
2. உள உடல் அமைதியை ஏற்படுத்துதல்
திருமணம் என்பது உலகில்
ஆணும் பெண்ணும் அடைந்து கொள்கின்ற மிக பெரிய இன்பமும் சந்தோசமும் திருப்தியுமாகும்.
இதில் உள்ளம் சம்பந்தப்பட்ட ஒரு பக்கமும் உடல் சம்பந்தப்பட்ட மற்றொரு பக்கமும் இருக்கின்றது.
இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
‘நீங்கள் அமைதியடைந்து
கொள்வதற்காக உங்களில் இருந்தே உங்களது சோடியை படைத்தமையும் உங்கள் மத்தியில் அன்பையும்
அருளையும் ஏற்படுத்தியமையும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்திப்பவர்களுக்கு
இந்த அத்தாட்சிகளைப் புரிந்து கொள்ள முடியும்.’ (ரூம்: 21)
ஒரு கிரிக்கட் வீரரிடம்
ஒரு பத்திரிகையாளன் கேட்டான். பொதுவாக கிரிக்கட் வீரர்கள் சில காலம் நன்றாக விளையாடுகிறார்கள்.
இன்னும் சில காலம் நன்றாக விளையாடுவதில்லை. ஆனால், நீங்கள் நீண்ட காலமாக நன்றாகவே விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இதன் இரகசியம்
என்ன? இக்கேள்விக்கு அவ்வீரன் இந்தக்
காலத்தில்தான் நான் திருமணம் முடித்தேன் என்றார். இந்த பதிலில் ஓர் அபூர்வமான உண்மை
இருக்கிறது. திருமணம் ஒரு மனிதனிடத்தில் அமைதியையும் நிதானத்தையும் ஒரு விடயத்தை மிகச்
சரியாக கையாளும் ஆற்றலையும் கொண்டு வந்து சேர்க்கிறது. மன அமைதி ஒருவனது செயலாற்றலை
அதிகரிக்கிறது, அவனது உற்பத்தித்
திறனை பலமடங்குகளாக மாற்றுகிறது. இதனையே அல்குர்ஆன் ‘ஸகன்’ (அமைதி) என்ற சொல்லினூடாக விளங்கப்படுத்தியிருக்கின்றது.
சமூக வாழ்வில் மேற்கூறப்பட்ட
விளைவு கண்டிப்பாக எட்டப்பட வேண்டும் என்பதனாலேயே, கணவன் மனைவிக்கிடையிலான பிரத்தியேக உறவை நன்மை தரக்கூடிய ஓர் இபாதத் என்று இஸ்லாம்
கூறுகின்றது. நபியவர்கள் கூறினார்கள்: உங்கள் மனைவியுடன் உறவு கொள்வதும் ஸதகாவாகும்
என்றார்கள், ஸஹாபாக்களில் ஒருவர் தனது இச்சையை தீர்த்துக் கொள்வதற்கும்
நன்மைகள் வழங்கப்படுகின்றனவா என்று கேட்க, அதே இச்சையை அவன் பாவமான வழியில் தீர்த்துக் கொண்டால் தீமை கிடைக்கும் அல்லவா,
அதேபோல் ஹலாலான வழியில் தீர்த்துக் கொண்டால் நன்மை கிடைக்கும் என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லிம்)
இது உடல் உள அமைதி
என்பதன் முதலாவது கருத்து, இதுவொரு மனிதனை ஆக்க சக்தியுள்ளவனாக மாற்றுகின்றது.
அடுத்து, அதன் இரண்டாவது கருத்து, ஒரு ஒழுக்க பண்பாட்டு வடிவத்தைக் குறிக்கிறது. அதாவது
மனிதனை பாவங்கள் குற்றச் செயல்களை விட்டும் காப்பாற்றக்கூடிய ஒரு பாதுகாப்பு அரணாக
திருமணம் அமைகிறது. அல்குர்ஆன் திருமணமானவரைக் குறிப்பதற்கு ‘முஃஸின்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இந்த சொல் அடிப்படையில்
‘ஹிஸ்ன்’ எனும் பாதுகாப்பு அரண் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
எனவே, இங்கு திருமணம் என்பது ஒரு பாதுகாப்பு அரண். திருமணம்
முடித்தவர் அந்த அரணிற்குள் பாதுகாப்பாக இருப்பவர் என்ற கருத்து பெறப்படுகிறது.
மனிதனின் பாலியல்
உணர்வு மிகவும் சக்திவாய்ந்தது. அது பல குற்றச் செயல்களுக்கும் காரணமாக இருக்கக் கூடியது.
இந்த உணர்வு மிகச் சரியாக ஒழுங்குபடுத்தப்படாதபோது மனித வாழ்வே சீர்கெட்டுவிட வாய்ப்பிருக்கின்றது.
இக்கருத்தைக் குறிக்கும் விதமாகவே, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘யார் திருமணம் செய்கின்றாரோ அவர் தனது மார்க்கத்தில் அரைவாசியை
பாதுகாத்துக் கொண்டு விட்டார்.’
இங்கு, ஒரு இளைஞன் செய்யும் பாவங்களில் அரைவாசிப் பகுதி பாலியல் சம்பந்தப்பட்டவையாக அமைய
வாய்ப்பிருக்கிறது, என்பதை புரிந்து கொள்ளலாம். திருமணத்தின் மூலம்
இந்நிலை மாற்றியமைக்கப்படுகிறது. எனவே திருமணம் ஒரு சமூக ஒழுக்கத்தை உருவாக்குகிறது.
மனிதனை பாவங்களை விட்டும் காப்பாற்றுகிறது. இது உள உடல் அமைதியின் இரண்டாவது கருத்து.
3. சிறந்த சமூகக் கட்டமைப்பை உருவாக்குதல்.
குடும்பம் என்ற செங்கற்களின்
மூலமே சமூகம் கட்டமைக்கப்படுகின்றது. அந்த செங்கல்லின் பிரதான கூறுகளாகவே கணவனும் மனைவியும்
பிள்ளைகளும் காணப்படுகின்றனர். ஒரு குடும்பக் கட்டமைப்பு எந்தளவு பலமாகவும் சீராகவும்
காணப்படுகின்றதோ அந்தளவுக்கு சமூகக் கட்டமைப்பின் பலமும் சீர்மையும் உறுதி செய்யப்படுகின்றது.
குடும்ப வாழ்வையும்
சமூக வாழ்வையும் சம்பந்தப்படுத்தி அல்குர்ஆன் வலியுறுத்தும் ஒரு முக்கிய உண்மை இருக்கிறது.
அதுதான், சமூக வாழ்வில் தலைமை வழங்குகின்றவர்களின் குடும்ப
வாழ்வு அமைதியாக காணப்படல் வேண்டும். அப்போதுதான் அவர்களால் சமூகத்தை சரியான பாதையில்
வழிநடாத்த முடியும். அல்குர்ஆன் இபாதுர்ரஹ்மான்களின் கீழ்வரும் துஆவின் மூலம் இக்கருத்தைப்
பேசுகிறது. ‘இறைவா எமது மனைவிமார்கள்,
பிள்ளைகள் மூலம் எமக்கு கண்குளிர்ச்சியை ஏற்படுத்துவாயாக. எங்களை முத்தகீன்களது
தலைவர்களாக ஆக்கிவிடுவாயாக.’ (புர்கான்: 74)
இங்கு சமூகப் தலைமைப்
பொறுப்பை ஏற்க முன்னர் குடும்பத்தில் அமைதியையும் சந்தோசத்தையும் ஏற்படுத்துமாறு அவர்கள்
கேட்டமையை அவதானிக்கலாம். குடும்பங்களில் சீர்மையை ஏற்படுத்தாமல் சமூக சீர்மையை கற்பனை
செய்வது சாத்தியமற்றது என்பது இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது.
நபியவர்கள் பொறுப்புணர்வு
சம்பந்தமாக பேசும்போது குடும்பப் பொறுப்பையும் சமூகப் பொறுப்பையும் இணைத்துப் பேசியுள்ளமையை
அவதானிக்கலாம். ‘நீங்கள் ஒவ்வொருவரும்
பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்புக்கள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் ஒரு பொறுப்பாளர்.
அவர் மக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தனது குடும்பத்திற்கு பொறுப்பாளன். குடும்பம்
குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண் தனது கணவனின் வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும்
பொறுப்பானவள். இது பற்றி அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளன் தனது எஜமானின் செல்வத்துக்கு
பொறுப்பானவன். அந்தப் பொறுப்புப் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். நீங்கள் ஒவ்வொருவரும்
பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.’ (புஹாரி)
இந்த ஹதீஸ் தனிமனிதப்
பொறுப்புணர்ச்சியை பேசுவதுபோல், குடும்ப பொறுப்புணர்ச்சியையும் சமூக பொறுப்புணர்ச்சியையும்
இணைத்து பேசுகிறது. அத்துடன் இந்த ஒவ்வொன்றும் மற்றையதில் தங்கி நிற்கின்றது என்பதும்
இங்கு வலியுறுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் சமூகத் தலைமையையும் அடுத்து குடும்பத் தலைமையையும்
பற்றி பேசியிருப்பது குடும்பக் கட்டமைப்பின் சீராக்கம், சமூகக் கட்டமைப்பின் சீரான உருவாக்கத்துக்கு அவசியம் என்பதை உணர்த்துகின்றது.
இந்த ஹதீஸில் மீண்டும்
மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயம்
இருக்கின்றது. அதுதான் வகைகூறல். அதாவது, சமூகக் கட்டமைப்பு பொறுப்பற்றதாக எவரும் வகைகூறுவதற்கு இல்லாத ஒரு நிலை காணப்படக்கூடாது.
இந்த வகைகூறல் பணி சமூகத்தலைமைகளுடன் மட்டும் சுருங்கியதல்ல. அதன் முக்கிய பகுதி குடும்ப
மட்டத்தில் நடைபெறுகிறது. உருவாக்குதல், பாதுகாத்தல் என்ற குடும்பப் பணியின் மூலம் குடும்பம் வகைகூறக் கடமைப்பட்டிருக்கிறது. எனவே, சமூக வகைகூறலின் முழுமைப் பண்பு குடும்ப வகைக்கூறலில் தங்கியிருக்கிறது என்பது
இங்கு புலப்படுகிறது.
இறுதியாக,
மேற்கூறப்பட்ட சிந்தனைகளை சாராம்சப்படுத்தி நோக்கினால், திருமணத்தின் அல்லது குடும்ப வாழ்வின் நோக்கம் ஷரீஅத்தின் பார்வையில் மூன்று பிரதான
மையக் கருத்துக்களில் அமைகின்றது. அவை, ஸாலிஹான சந்ததி, மன அமைதியும் சந்தோசமும், சீரான சமூகக் கட்டமைப்பு என்பனவாகும்.
இவை, மனித வாழ்வுக்குரிய பொது நோக்கத்தின் பிரதிபலிப்புகளாகவே காணப்படுகின்றன. ஓர் உன்னத
மனித நாகரிகம் எழுகின்ற கூறுகள் இவை. எனவே, திருமணம் குறித்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் என்பன இந்த
நோக்கங்களுடன் இயைந்து செல்ல வேண்டும். மாற்றமாக, இந்த நோக்கங்களை சிதறடிக்கின்ற அல்லது மறுதலிக்கின்ற அல்லது கருத்தில் கொள்ளாத
வகையில் தனிமனித விருப்பு வெறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் அமைந்துவிடக் கூடாது. அப்பொழுதே
ஒரு நல்ல குடும்ப வாழ்வும் சமூக வாழ்வும் தோற்றம் பெற முடியும். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.
அழகிய பார்வை
ReplyDeleteஅழுகிப்போயுள்ள திருமண வாழ்வை அழகாக்கும் அற்புதமான ஆழமான பார்வை