கலாநிதி ஜாஸிர் அவ்தா
அவர்கள் எகிப்திய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி ஒரு கருத்தை இவ்வாறு கூறுகிறார்கள்
: சிவில் தேசம் என்ற எண்ணக்கருவில் இரண்டு கோட்பாடுகள் மிகவும் முக்கியமானவை, ஒன்று : இராணுவத்தின் மேலாண்மை இல்லாத அல்லது இராணுவப்
பண்பில்லாத மக்களாட்சியாய் அது காணப்படல் வேண்டும். இது இராணுவத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல, மாற்றமாக இராணுவம் தனக்குரிய பணியை மேற்கொள்ளும் வகையில் அதற்குரிய இடத்தில் காணப்படவேண்டும்.
இரண்டாவது : சட்டத்தின் ஆட்சி, இது மக்களது சுதந்திரம் உரிமைகள் போன்றன உத்தரவாதப்படுத்தப்படும்
நிலையும், இன மத மொழி வேறுபாடுகளைத் தாண்டிய சமத்துவமும் நீதியும்
நிலைநாட்டப்படும் நிலையுமாகும், என்றார்கள்.
மேற்கூறப்பட்ட கருத்துக்கள்
இஸ்லாம் வலியுறுத்துகின்ற உண்மைகள் என்பதில்
எவரும் இரு கருத்து கொள்ள மாட்டார்கள். அதிகாரம் என்பதையோ அல்லது தலைமை என்பதையோ இஸ்லாம், குறித்த ஒரு பிரிவினர்க்கான சொத்தாக அமைக்கவில்லை, அல்லது நுபுவ்வத் போல் இறை அதிகாரம் உள்ள ஒருவரால் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதற்குரிய
ஒன்றாகவும் போதிக்கவில்லை, மாற்றமாக மக்கள் மத்தியில் சுதந்திரமாக விருப்பத்தின்
அடிப்படையில் இடம் பெற வேண்டிய ஒரு பரிமாற்றமாகவே அடையாளப்படுத்தியிருக்கிறது.
அந்தவகையில்
மக்கள், தலைமைக்கு கட்டுப்படுவதை வலியுறுத்திய அதே அளவுக்கு
தலைமை, மக்கள் விருப்பத்தை வென்றிருக்க வேண்டியதன் அவசியத்தையும்
வலியுறுத்தியதுடன், அடிமைப்படுத்தலையும்
கொடுங்கோன்மையையும் வன்மையாக மறுத்துரைத்தது. நபியவர்கள் மூன்று பேருடைய தொழுகை அவர்களது
செவிப்புல எல்லையைத் தாண்ட மாட்டாது என்றார்கள் அதில் ஒருவர் மக்கள் வெறுக்கின்ற நிலையிலும்
அந்த மக்களுக்கு தலைமை வழங்க நினைக்கின்றவன், என்றார்கள். ( திர்மிதி)
அத்துடன் தலைமைக்குரிய
சிறப்புரிமைகளை இஸ்லாம் மறுத்துரைக்கவில்லை. ஆனால் அது பிறர் உரிமைகளை மறுப்பதாகவும் பிறர் சுதந்திரங்களைப் பறிப்பதாகவும் அமைந்துவிடக்
கூடாது. பாத்திமாதான் திருடியிருந்தாலும் அவரது கை வெட்டப்படும் என்று நபியவர்கள் கூறியமை
சட்டம் சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்குரியது, மாற்றமாக தலைமைகளையும் அவர்களது நடவடிக்கைகளையும், அவை அநீதியாக அமையும் போதும், நியாயப்படுத்திப் பாதுகாப்பதற்குரியதல்ல என்ற செய்தியையே எமக்குச் சொல்கின்றது.
எமது தாயக இலங்கையும்
கிட்டிய இறந்த காலத்தில் மேலே பேசப்பட்டவற்றை ஒத்த ஒரு நிலையையே முக்கிய சவாலாக எதிர்கொண்டது.
இராணுவச் சாயல் கொண்ட ஏதேச்சதிகாரமும், மக்கள் உரிமைகளும் சுதந்திரமும் சமத்துவமும் மறுக்கப்பட்ட,
சட்டங்கள் செல்லுபடியற்ற ஒரு நிலையும் எல்லோராலும் உணரப்பட்டன. அல்லாஹ்வின் அருளினால்
அந்நிலைகள் மாற்றம் காணத்தொடங்கியுள்ளன, அல்ஹம்துலில்லாஹ்.
பொதுவாக நியாயத்தை
விரும்பும் முற்போக்கு எண்ணம் கொண்ட எல்லோரும் மேற்குறித்த சூழ்நிலைகள் மாறவேண்டிச்
செயற்படுவார்கள். கடந்த நாட்களில் எமது
நாட்டில் நிகழ்ந்ததும் இதுதான்.
ஆனால் இங்கு முஸ்லிம்கள் மனம் கொள்ள வேண்டிய ஒரு விடயம்
இருக்கிறது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் நீதி சுதந்திரம் சமத்துவம் போன்றன வெறுமனே
அவர்களது வாழ்வியல் பெறுமானம் அல்லது அரசியல் பெறுமானம் என்பது மாத்திரமல்ல,
மாற்றமாக இது அவர்களது தீன். அவர்களது
அகீதாவின் மீது எழும் ஒரு நடத்தைக் கோலம். இவற்றுக்காக உழைப்பது அவர்களது மார்க்க ரீதியான
கடமை. தாம் வாழும் பூமி எதுவாக இருப்பினும் இந்த நடத்தைக் கோலமும் இதற்கான உழைப்பும் என்றும் மாற்றமடையாது.
எனவே அவர்கள் மீது உள்ள வகை கூறல் தாம் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதனால் மாத்திரமன்றி
அவர்களது அகீதாவின்; அடிப்படையிலும் வலுப்படுத்தப்படுகிறது,
எனவே முஸ்லிம்களது பொறுப்பு சற்றுக் கனதியானது.
எனவே முஸ்லிம்கள்
இந்தப் பாரத்தை உணர்ந்து, எல்லாத் தளங்களிலும் நல்லாட்சி ஏற்படுவதற்காய் உழைக்க
முன்வரவேண்டும் என்பதை இலங்கையின் 67வது சுதந்திர தின செய்தியாய் உங்கள் முன்வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
No comments:
Post a Comment