Monday, February 3, 2014

இலங்கையின் 66 வது சுதந்திர தின செய்தி

அல்லாஹ்தஆலா அல்-குர்ஆனில் கூறுகிறான் உங்களுடைய இந்த உம்மத் ஒரே உம்மத்தாகும். நான்தான் உங்கள் இரட்சகன். என்னையே வணங்குங்கள்” (அன்பியா - 92)

இந்த அல்குர்ஆன் வசனம் முழு மனித சமூகத்திற்கும் ஒரு பிணைப்பைச் சொல்கிறது. அவர்கள் அனைவரும் ஒரே உம்மத். அல்லாஹ்வின் படைப்பினர்கள்,  அவனது அடியார்கள் என்ற வகையில் அனைவரும் ஒரே உம்மத்தினர் என்கிறது.

இதே சிந்தனையை நபியவர்கள் கீழ்வருமாறு உருவகப்படுத்திக் காட்டினார்கள். எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான தொடர்பை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம்,  ஒரு மனிதன் ஒரு அழகிய வீட்டைக் கட்டுகிறான். அதன் ஒரு மூலையில் ஒரு செங்கல் வைக்கப்படாமல் இருக்கிறது. அதனைச் சுற்றி வரும் மனிதர்கள் ஆச்சரியத்துடன் இந்த இடத்திற்குரிய கல்லையும் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பார்கள். நான்தான் அந்த செங்கல். நான் இறுதி நபியாவேன்என்றார்கள் (முஸ்லிம்)

மனித சமூகம் ஒரே உம்மத் என்ற செய்தியே இங்கும் பரிமாறப்படுகிறது. எல்லா நபிமார்களும் இணைந்து ஒரே உம்மத்தையே கட்டியிருக்கிறார்கள்.

அடுத்து, முஸ்லிம் உம்மத்தின் பிணைப்பை நபியவர்கள் இவ்வாறு உருவகப்படுத்திக் காட்டினார்கள்.

முஃமின்கள் மத்தியிலான அன்பு, கருணை,  பரிவு என்பவற்றிற்கான உதாரணம் அவர்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். அதன் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் முழு உடம்பும் வலியை உணரும்என்றார்கள். (புகாரி,  முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில்,  “முஃமின்கள் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள். ஒருவர் மற்றவருடன் பிணைந்து காணப்படுவார்கள்என்றார்கள் (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிம் உம்மத்துக்கு மத்தியிலான இந்தப் பிணைப்பும்,  உறவும் இனம்,  நிறம்,  மொழி,  பௌதீக எல்லைகளைக் கடந்தது. ஒரு நம்பிக்கையையும் வாழ்க்கை முறையையும் அடிப்படையாகக் கொண்டது.

மேற்சொல்லப்பட்ட உண்மைகள் ஒரு பௌதீக எல்லைக்குற்பட்ட தாய்நாட்டுச் சிந்தனைக்கு முரணானவையா? என்பது பலரிடம் தோன்ற முடியுமான ஒரு கேள்வி.

இங்கு ஒரு முக்கிய விடயத்தைப் புரிந்து கொள்வோம். இஸ்லாம் ஒரு போதும் ஒரு மனிதன் ஒரு குடும்பத்தைச் சார்ந்திருப்பதையோ ஒரு கோத்திரத்தைச் சார்ந்திருப்பதையோ ஒரு இனத்தைச் சார்ந்திருப்பதையோ ஒரு நிலப்பிரதேசத்தைச் சார்ந்திருப்பதையோ ஒரு மொழியைச் சார்ந்திருப்பதையோ மறுக்கவில்லை. மாத்திரமன்றி,  அதனை நேசிப்பதையும் பற்றுக் கொள்வதையும் அதனை வளர்ப்பதையும்,  பாதுகாப்பதையும் கூட இஸ்லாம் மறுக்கவில்லை. இதற்கான சான்றுகள் நபியவர்களது சுன்னாவில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.

ஆனால் இஸ்லாம் தடை செய்த அல்லது மறுத்த சில விடயங்கள் இருக்கின்றன. பெருமையடித்தலை இஸ்லாம் தடை செய்கிறது. வெறிகொள்வதை இஸ்லாம் தடை செய்கிறது. அடுத்தவர்களை இழிவுபடுத்துவதை இஸ்லாம் தடை செய்கிறது. மேலாதிக்கத்தையும் அடிமைப்படுத்தலையும் இஸ்லாம் தடை செய்கிறது. வெறுப்பையும் குரோதத்தையும் பகைமையையும் இஸ்லாம் தடை செய்கிறது. பொறாமையை இஸ்லாம் தடை செய்கிறது. தீங்கிழைத்தலையும அநியாயம் செய்தலையும் இஸ்லாம் தடை செய்கிறது.

இங்கு தடை செய்யப்பட்ட விடயங்கள் மேற்கூறப்பட்ட குடும்பம்,  கோத்திரம், இனம், மொழி,  நிலப்பிரதேசம் போன்றவற்றை மையப்படுத்தி மாத்திரமன்றி,  எதனை மையப்படுத்தி எழுந்தாலும் அவை இஸ்லாத்தில் மறுக்கப்படக் கூடியவை என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.

எனவே,  நாம் ஒன்றைச் சார்ந்திருத்தலோ பற்றுக் கொள்தலோ அதன் வளர்ச்சிக்காக உழைத்தலோ ஒரு போதும் நாம் ஒரே உம்மத் என்பதற்கும்,  நாம் முஸ்லிம்கள் என்பதற்கும் முரண்படுகின்ற ஒரு விடயமல்ல. மாறாக, எமது சார்பு நிலையும் பற்றும்,  உழைப்பும்,  பெருமையடித்தலாக,  பிறவற்றை மறுத்தலாக,  வெறியாக,  காழ்ப்புணர்வாக,  பிறவற்றின் மீதான பொறாமையாக,  பிறர்க்கு தீங்கிழைப்பதாக அமைந்து விடக்கூடாது. இதுவே இஸ்லாம் எமக்குக் கற்றுத்தரும் பாடமாகும்.

ஷெய்க் ஸல்மான் அவ்தா அவர்கள் கூறுவது போல், தாய் நாடு என்பது மூன்று அடிப்படைகளின் மீது எழுந்து நிற்கும் ஒரு சிந்தனையாகும்.

1.            நிலப்பிரதேசம் சார்ந்தது : ஒருவன் பிறந்த பூமி, தான் வாழ்வதற்காக தெரிவு செய்த பூமி.
2.            உள்ளம் சார்ந்தது : தான் விரும்புகின்ற,  நேசிக்கின்ற பூமி.
3.            கூட்டு நலன், உரிமைகள் சார்ந்தது : ஒரு மனிதக் கூட்டம் தமக்கு மத்தியில் நலன்களையும் உரிமைகளையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஒரு பூமி

மேற்சொன்ன அடிப்படைகளின் ஒளியில் தாய் நாடு எனும் சிந்தனையைப் பார்க்கின்ற பொழுது அது எந்த வகையிலும் நாம் ஒரே உம்மத் என்ற கோட்பாட்டையும் நாம் முஸ்லிம்கள் என்ற கோட்பாட்டையும் மறுதலிப்பதாக அமையவில்லை என்பது புரிகிறது.


அந்தவகையில் இலங்கை எமது தாய் நாடு. அதனை நாம் சார்ந்திருப்பதும், பற்றுக் கொள்வதும்,  அதன் வளர்ச்சிக்காக உழைப்பதும்,  அதனைப் பாதுகாக்க செயற்படுவதும் ஒரு மனிதனாக எங்களிடத்தில் இயல்பாய் எழ வேண்டிய பணிகள் என்பது மாத்திரமன்றி இஸ்லாம் வலியுறுத்துகின்ற ஒரு கடமையுமாகும் என்ற சிந்தனையை இலங்கையின் 66வது சுதந்திர தின சிந்தனையாக உங்கள் முன்வைப்பதில் மகிழச்சியடைகிறேன்.

No comments:

Post a Comment