சுன்னா என்ற பதம்
இஸ்லாமிய ஷரீஆவில் பயன்படுத்தப்படுகின்ற பல்வேறு பிரயோகங்களில் சட்ட மூலாதாரம் என்பதுவும்
ஒன்று. அந்தவகையில் சுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்ற கருத்தை கீழ்வரும் கிளைத் தலைப்புகளில்
ஆராயலாம்.
1. சுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்பதன் பொருள்
2. சுன்னாவின் ஆதாரபூர்வத் தன்மையும் சட்ட மூலாதாரமும்
3. சுன்னா சட்ட மூலாதாரமாக அமையும் வடிவங்கள்
இந்த ஒவ்வொரு கிளைத்
தலைப்பும் மிகவும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகள் என்றிருப்பினும் இங்கு
இவை குறித்த ஒரு சுருக்கமான பார்வை மாத்திரமே முன்வைக்கப்படுகிறது.
தலைப்பின் விரிவான
பகுதிகளுக்குச் செல்ல முன்னர் முக்கியதொரு விடயத்தைக் கோடிட்டுக் காட்டிச் செல்வது
பொறுத்தம் என நினைக்கிறேன். இங்கு கட்டுரையின் தலைப்பு தவிர்ந்த உள்ளடக்கம் எங்கும்
சட்ட மூலாதாரம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. சுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்று
சொல்லும் போது பலரது சிந்தனையில் முதலில், அது பிக்ஹிற்கான மூலாதாரம், முழு இஸ்லாத்துக்குமான மூலாதாரம் அல்ல என்ற கருத்து
எழுவதைக் காணலாம்.
ஏனெனில் சட்டம் என்பது பிக்ஹின் விளைவு, எனவே சட்ட மூலாதாரம் எனும் போது அது பிக்ஹின் மூலாதாரம் என்று மாத்திரம் புரிந்து
கொள்ளப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால் சுன்னா, பிக்ஹ் என்ற எல்லையைத்தாண்டி முழு இஸ்லாமிய வாழ்வையும் கட்டமைப்பதற்கான மூலாதாரமாக
அமைந்திருக்கிறது என்பதே உண்மை. அந்த வகையில் இங்கு சட்ட மூலாதாரம் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட
போதிலும், அது பொதுவாக இஸ்லாத்தின் அல்லது இஸ்லாமிய வாழ்வின்
மூலாதாரம் என்ற விரிந்த கருத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சுன்னா ஒரு சட்ட மூலாதாரம்
என்பதன் பொருள்
அல்லாஹ்வின் வழிகாட்டலை,
நபியவர்கள் எவ்வாறு விளங்கி, நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ அந்த வாழ்வு முறையையே
நாம் சுன்னா என்போம்.
இந்த வாழ்வு முறை இஸ்லாமிய ஷரீஅத்திற்கான ஒரு மூலாதாரமாக அமைகிறது
என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?
இங்கு சுன்னா ஒரு
சட்ட மூலாதாரம் என்பதன் பொருளை நாம் இரண்டு கோணங்களில் நின்று விளங்கிக் கொள்ளலாம்.
முதலாவது, அல்குர்ஆன் கூறுவது போல் “சட்டம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியதாகும்”
(சூறதுல் யூசுப் – 04,
67) அதாவது சட்டம் சொல்லும் அதிகாரம்
அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியது. ஆனால் ஒரு குறித்த விடயத்தில் அல்லாஹ்வின் சட்டம்
என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான வழி என்ன? அதனை அறிந்து கொள்ளக் கூடிய ஊடகங்களாக அல்லாஹ்தஆலா
அல்-குர்ஆனையும் சுன்னாவையும் அமைத்து வைத்துள்ளான். அந்தவகையில் அல்-குர்ஆனும் சுன்னாவும்
அல்லாஹ்வின் சட்டத்தை அறிந்து கொள்வதற்கான மூல வழிகள் அல்லது மூல ஊடகங்கள் அல்லது மூலாதாரங்கள்
என்று சொல்லலாம்.
எனவே, அல்லாஹ்வின் சட்டத்தை அறிந்து கொள்வதற்கான பிரதானமான ஒரு வழி என்ற வகையில் சுன்னா
ஒரு சட்ட மூலாதாரம் எனப்படுகிறது. இங்கு அல்லாஹ்வின் சட்டம் எது என்பதை எமக்கு எடுத்துக்
காட்டுகின்ற அல்லது வெளிப்படுத்துகின்ற பணியை சுன்னா செய்கிறது. அல்லாஹ்வின் சட்டம்
இதுதான் என மிகத் திட்டவட்டமான வடிவிலும் அது எடுத்துக் காட்டப்பட முடியும் அல்லது
அல்லாஹ்வின் சட்டம் இதுவாக இருக்கலாம் என திட்டவட்டமற்ற முறையில் எடுத்துக் காட்டுவதாகவும்
இருக்க முடியும். இந்த முதலாவது அணுகுமுறை அல்லாஹ்தஆலாவை அடிப்படையாகக் கொண்டு அவனுடைய
சட்டம் எங்கிருந்து பெறப்பட வேண்டும் என்பதைப் பேசுகிறது. அந்தவகையில் இங்கு சட்ட மூலாதாரம்
என்பது ஒரு வழிமுறையாக அல்லது ஊடகமாக அடையாளப்படுத்தப்படுகிறது.
இரண்டாவது அணுகுமுறை
ஒரு விடயத்தின் சட்டபூர்வத்தன்மை எதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது? என்ற வினாவுக்கான விடை மூலாதாரம் என்ற கருத்தைப்
பெறுகிறது. அந்தவகையில் எமது செயற்பாடுகளின் சட்டபூர்வத்தன்மையை நாம் அல்குர்ஆனை வைத்து
உறுதிப்படுத்திக் கொள்வோம் அல்லது சுன்னாவை வைத்து உறுதி செய்து கொள்வோம். எனவே,
சுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்பதன் பொருள் என்னவெனில், எமது செயற்பாடுகள் ஷரீஅத்துக்கு ஏற்புடையவையாக இருக்கின்றனவா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதற்கான அடிப்படைகளில் ஒன்றாக
சுன்னா காணப்படுகிறது என்பதாகும். இங்கு எமது செயற்பாடுகள் அல்லாஹ்வின் சட்டத்துடன்
எந்தளவு உடன்படுகின்றன? என்பதை சுன்னா எடுத்துக் காட்டுகிறது. அந்த உடன்பாடு திட்டவட்டமாக அடையாளப்படுத்தப்படவும்
முடியும். திட்டவட்டமற்ற வடிவில் அடையாளப்படுத்தப்படவும் முடியும்.
இந்த இரண்டாவது அணுகுமுறை
மனித செயலை அடிப்படையாகக் கொண்டு அதன் சட்டபூர்வத்தன்மை எதன் மூலம் பெறப்படுகிறது என்பதைப்
பேசுகிறது. அந்தவகையில் இங்கு சட்ட மூலாதாரம் என்பது ஒரு உரைகல்லாக அடையாளப்படுத்தப்படுகிறது.
இவ்விரு அணுகுமுறைகளும்
ஒரே விடயத்தையே வலியுறுத்துகின்றன. முதலாவது மேலிருந்து கீழ் நோக்கிப் பார்க்கும் அணுகுமுறை,
இரண்டாவது கீழிருந்து மேல் நோக்கிப் பார்க்கும் அணுகுமுறை. வித்தியாசம் இந்த இடத்தில்
மாத்திரமே இருக்கின்றது. அடுத்தபடியாக இரண்டும் இணைந்து சொல்லும் செய்தி எமது செயற்பாடுகள்
தொடர்பான அல்லாஹ்வின் சட்டத்தை அறிந்து கொள்வதற்கான பிரதானமான அடிப்படைகளில் ஒன்றாக
நபியவர்களது வாழ்வுமுறை காணப்படுகிறது என்பதாகும். சுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்பதன்
மூலம் இக்கருத்தையே நாம் விளங்கிக் கொள்கிறோம்.
சுன்னாவின் ஆதாரபூர்வத்
தன்மையும் சட்ட மூலாதாரமும்
மேலே குறிப்பிட்டது
போல் நபியவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை, எமது செயற்பாடுகளின் சட்டபூர்வத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும்
போது இரண்டு கேள்விகள் தோன்றுகின்றன.
ஒன்று, உண்மையில் நபியவர்களது வாழ்வு எமது செயற்பாடுகளுக்கான மூலாதாரமாக அமைகின்றதா?
அதனை எவ்வாறு நிரூபிக்கலாம்?
இரண்டாவது,
குறித்த ஒரு ஹதீஸை உண்மையில் நபியவர்கள்தான் முன்வைத்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவது
எவ்வாறு?
அதாவது இன்று நாம்
எவரும் நபியவர்களை நேரில் பார்த்து அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்தப் பாக்கியத்தை ஸஹாபாக்கள் மாத்திரமே பெற்றுக் கொண்டனர். நேரில் பெற்றுக் கொள்ளும்போது
முன்வைப்பவர் நபியவர்கள்தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் எழமாட்டாது. ஆனால் ஸஹாபாக்களுக்குப்
பின்னர் வந்த அனைத்துப் பரம்பரைகளும் நபியவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை வேறு ஒருவர்
மூலமே அறிந்து கொண்டுள்ளனர். எனவே, அந்த நிகழ்வுகள் உண்மையில் நபியவர்களுக்குரியவைதானா? இல்லையா? நகர்த்தியவர் பொய் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறதா?
போன்ற விடயங்கள் உறுதிப்படுத்தப்பட
வேண்டிய தேவை இங்கு ஏற்படுகிறது. அதனால்தான் இந்த இரண்டாவது கேள்வி தோன்றுகிறது.
இந்த இரண்டு வினாக்கள்
குறித்தும் கலாநிதி அப்துல் கனி அப்துல் காலிக் அவர்கள் தனது ஹுஜ்ஜியதுஸ் ஸுன்னா எனும்
நூலில் குறிப்பிடும்போது, உண்மையில் நபியவர்களது சுன்னா ஒரு சட்ட மூலாதாரமா?
இல்லையா? என்பதில் பொதுவாகக் கருத்து வேறுபாடு இல்லை என்கிறார்.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல்வேறு சிந்தனைப் பிரிவுகளும் கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள், ஷீயாக்கள் உற்பட அனைவரும் சுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்ற கருத்தில் உடன்படுகின்றனர்.
அதாவது நபியவர்களுடைய வாழ்வுமுறை என்பதற்காக சுன்னா சட்டமூலாதாரமாக இருக்க முடியாது
என்று யாரும் கூறவில்லை. முஃதஸிலாக்களில் ஒரு பிரிவினர் சுன்னாவை சட்ட மூலாதாரமாக ஏற்கவில்லை
என்ற சில வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்பட்டாலும், அவை தவறாகப் புரியப்பட்டிருக்கின்றன. உண்மையில் அவர்களும் சுன்னாவை மறுக்கவில்லை
என்கிறார். சுன்னாவை ஒருவர் மறுக்கிறார் எனின், நிச்சயமாக அது அவரை குப்ருக்கு இட்டுச் செல்லக்கூடியது என்கிறார். அந்தவகையில்
முதலாவது வினாவைப் பொறுத்தவரையில் சுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள்
பலராலும் முன்வைக்கப்பட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தக்க இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்திற்குள்ளே
சுன்னாவின் சட்டபூர்வத்தன்மை குறித்து பாரிய சர்ச்சைகள் எழவில்லை.
ஆனால் பாரியளவு கருத்து
வேறுபாடுகள் தோன்றிய முக்கிய ஒரு இடம் இருக்கிறது. அதுதான் இரண்டாம் வினாவுக்குரிய
பரப்பு. அதாவது நபியவர்களது வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்று எனக் குறிப்பிடப்படும் ஒரு
செய்தி உண்மையில் நபியவர்கள் சம்பந்தப்பட்டதுதானா? அதனை உறுதிப்படுத்துவதற்கான வழி என்ன? எதனை அடிப்படையாகக் கொண்டு அதனை ஏற்றுக் கொள்வது?
இந்த வினாவின் அடியாகவே
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல்வேறு சிந்தனைப் பிரிவுகள் மத்தியில் சுன்னா குறித்த
கருத்துவேறுபாடுகள் உருவானதைக் காணலாம். இமாம் ஸுயூத்தி அவர்கள் தனது மிப்தாஹுல் ஜன்னா
எனும் நூலில் குறிப்பிடுவது போல் ஷீயாக்களில் ஒரு பிரிவினர் நபியவர்களது நுபுவ்வத்தை
ஏற்றுக் கொண்டனர். ஆனால் கிலாபத் அலி (றழி) அவர்களுக்கே கிடைத்திருக்க வேண்டும் என்று
கருதியதால், கிலாபத்தை பறித்துக் கொண்ட அபூபக்ர், உமர் (ரழி) போன்ற ஸஹாபாக்களை காபிர்களாகக் கருதினர்.
அதேபோல் கிலாபத் பறித்துக் கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொண்ட அலி (ரழி) தரப்பினரையும் காபிர்களாகக்
கருதினர். இதனால் எந்த ஸஹாபியும் அவர்களிடத்தில் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கவில்லை.
இதனால் சுன்னாவில் ஸஹாபாக்கள் மூலம் அறிவிக்கப்படும் நபியவர்கள் பற்றிய எந்த ஹதீஸையும்
அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இங்கு நபியவர்களை ஏற்றுக் கொண்டாலும்
ஸஹாபாக்கள் மீது நம்பிக்கை இழந்ததன் காரணமாக இந்த நிலைப்பாடு தோன்றியது.
ஷீயாக்களில் மற்றொரு
பிரிவினர் அலி (ரழி) அவர்களை ஆதரித்தவர்கள் என்று கருதப்படும் ஸஹாபாக்கள் மூலம் வரும்
ஹதீஸ்களை மாத்திரம் ஏற்றுக் கொண்டனர். ஏனையவர்கள் ஊடாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களை மறுத்தனர்.
இதன் காரணமாக சுன்னாவின் சில பகுதிகள் ஏற்கப்பட்டன. இன்னும் சில பகுதிகள் மறுக்கப்பட்டன.
கவாரிஜ்களைப் பொறுத்தவரையில்.
உஸ்மான் (ரழி) அவர்களது கொலையுடன் சம்பந்தப்பட்ட குழப்ப நிலைக்கு முன்னர் ஸஹாபாக்கள்
ஊடாக அறிவிக்கப்பட்டவற்றை ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பின்னர் அவர்களது நம்பகத்தன்மையில்
திருப்தி கொள்ள முடியாது என அதன் பின்னர் அவர்கள் மூலம் வரும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.
முஃதஸிலாக்களைப் பொறுத்தவரையில்
இமாம் அபூ மன்சூர் அல் பக்தாதி அவர்கள் தனது உஸுலுத்தீன் எனும் நூலில் குறிப்பிடுவதுபோல்,
பெரும் தொகையானவர்கள் சேர்ந்து பொய்யுரைப்பது சாத்தியமாகும். அந்தவகையில் முஸ்லிம்
உம்மத் ஒரு தவறின் மீது ஒன்றுபடுவது சாத்தியமாகிறது. எனவே, முதவாதிரான ஹதீஸ்களை ஏற்க முடியாது என்பதுடன், ஸஹாபாக்களிலும் குறை காண்கின்றனர்.
மேற்குறிப்பிடப்பட்ட
எல்லா நிலைகளிலும் சுன்னா ஒரு சட்ட மூலாதாரம் என்ற விடயம் மறுக்கப்படவில்லை. மாற்றமாக
நபியவர்களது சுன்னா நகர்த்தப்பட்ட வழிகளின் மீதுதான் சந்தேகங்களும் மறுப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலை காரணமாக நபியவர்களது வாழ்வின் பெரும்பகுதி மறுக்கப்படுகின்ற ஒரு நிலையும் அடுத்த
பரம்பரையினர்க்கு அவை கிடைக்காமல் தடுக்கப்படுகின்ற ஒரு நிலையும் தோற்றம் பெறுகிறது.
மாத்திரமன்றி இஸ்லாத்தின் உண்மை உருவம் வெளிப்படாமல் சிதைவடைந்த பல உருவங்கள் தோற்றம்
பெறும் அபாய நிலையும் ஏற்பட்டது.
இதற்கு மறுதலையாக
மற்றோர் அபாயமும் ஏற்பட்டது. அது நபியவர்கள் கூறியதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட ஆரம்பித்தன.
இந்த நிலையிலும் ஒவ்வொரு தகவலும் உண்மையில் நபியவர்கள் மூலம் சொல்லப்பட்டதா?
இல்லையா? என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலை தோன்றியது.
இங்கு இரண்டு அபாயங்களை சுன்னா எதிர்கொண்டது. முதலாவது சுன்னாவாக இருக்க வேண்டிய ஒன்று
சுன்னாவாகக் கருதப்பட முடியாமல் போகின்ற அபாயம். இரண்டாவது சுன்னாவாக இருக்க முடியாத
ஒன்று சுன்னாவாக அடையாளப்படுத்தப்படும் அபாயம்.
இந்த அபாயங்களிலிருந்து
சுன்னாவைப் பாதுகாக்கின்ற நடவடிக்கையை வரலாற்று நெடுகிலும் இமாம்கள் தொடர்ந்து மேற்கொண்டு
வந்திருக்கின்றனர். அந்தவகையில் இமாம்கள் உருவாக்கிய வரலாற்றுப் பெருமைமிக்க கலைதான்
ஹதீஸ் திறனாய்வுக்கலை. இக்கலையின் உள்ளடக்கப் பரப்புக்களில் சுன்னாவைப் பாதுகாக்கும்
வகையில் இமாம்கள் முன்வைத்த சில விதிகளை உதாரணத்திற்காக கீழே தருகிறோம்.
1. ஸஹாபாக்கள் அனைவரும் நேர்மையானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் என்ற விதியை இமாம்கள் முன்வைத்தார்கள். அதாவது எந்த ஒரு
ஸஹாபியும் நபியவர்கள் பற்றிய ஒரு பொய்யைச் சொல்ல மாட்டார்கள் என்பது இதன் பொருள். மறுமை
நாள்வரை இந்த மார்க்கம் நிலைத்திருக்க வேண்டும் எனின், அதன் மூல வடிவம் சிதைவுறாமல் பாதுகாக்கப்பட்டு அடுத்த பரம்பரைக்கு நகரத்தப்படல்
வேண்டும். முதல் பரம்பரையாக இருந்து மிகவும் சிரமமான அந்தப் பணியை சுமந்தவர்கள் ஸஹாபாக்கள்.
இது அல்லாஹ்வின் தெரிவு. எனவே, இந்த விடயத்தில் அவர்களது நம்பகத்தன்மையை சந்தேகிப்பது
குப்ருக்கு இட்டுச் செல்லும் செயலாகும். இங்கு ஸஹாபாக்களின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படுவதன்
மூலம் சுன்னா பாதுகாக்கப்படுகிறது. அதன் மூலம் இந்த தீனின் மூல வடிவம் பாதுகாக்கப்படுகின்றது.
2. பெரும் தொகையானவர்கள் நபியவர்கள் கூறியதாக ஒரு தகவலை
நகர்த்துகிறார்கள் எனின், அந்தத் தகவல் நபியவர்கள் சொன்னதுதான் என்பது திட்டவட்டமான
உண்மையாகும் என்பது மற்றொரு விதி. இங்கு பெரும்தொகை என்பதை ஒரு விடயத்தின் நம்பகத்தன்மையைக்
குறிக்கும் அடையாளமாக இமாம்கள் கருதினார்கள். நபியவர்களும் எனது உம்மத் ஒரு வழிகேட்டின்
மீது உடன்பட மாட்டாது என்ற வாக்குறுதி மூலம் இந்த விடயத்திற்கான உத்தரவாதத்தினைத் தந்திருக்கிறார்கள்.
இந்த விதியின் மூலம் பரம்பரை பரம்பரையாக நகர்த்தப்பட்டு வந்துள்ள நபியவர்களது வாழ்க்கை
முறை கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
3. சிறிய தொகையினர் அல்லது ஓரிருவர் மூலம் நபியவர்கள்
கூறியதாக ஒரு செய்தி நகர்த்தப்படுகின்ற பொழுது அந்த செய்தியை உண்மையில் நபியவர்கள்தான்
கூறினார்கள் என்பது மிகவும் திட்டவட்டமான உண்மையாகக் கருதப்பட மாட்டாது என்பது இன்னொரு
விதி.
அந்தவகையில் இந்த வடிவில் நகர்த்தப்படுகின்ற ஒரு செய்தி ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு
பல்வேறு நிபந்தனைகளை இமாம்கள் இட்டிருக்கிறார்கள். அவற்றில் மிகக் கடுமையான நிபந்தனைகளைக்
கடைபிடித்த இமாம்களும் இருக்கிறார்கள். எளிமையான நிபந்தனைகளைக் கடைபிடித்தவர்களும்
இருக்கிறார்கள். நடுநிலையான அணுகுமுறையைக் கையாண்டவர்களும் இருக்கிறார்கள். இந்த விதியின்
மூலம் போலியான விடயங்கள் சுன்னா என்ற பெயரில் உள்நுழைவது மிகப் பெரும்பாலும் தடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த மூன்றாவது விதியினை மையப்படுத்தி இமாம்களது நிபந்தனைகள் வேறுபட்டமைந்தமையினால்
இஸ்லாமிய சட்டப் பகுதியிலும் நீண்ட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட
மூன்று அடிப்படைகனை வைத்து பார்க்கும் போது, ஸஹாபாக்களின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை தோற்றுவிப்பதன் மூலம் சுன்னா முழுமையாகவோ
பகுதியாகவோ மறுக்கப்படும் நிலையை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை, அத்துடன் பெரும் தொகையின் நம்பகத்தன்மையில் சந்தேகம் தோற்றுவிக்கப்படுவதன் மூலம்
சுன்னா முழுமையாகவோ பகுதியாகவோ மறுக்கப்படும் நிலையையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் சிறு தொகையினர் மூலம் அறிவிக்கப்படும் ஒரு சுன்னவைப் பொறுத்தவரையில் ஏற்றல் மறுத்தல்
என்ற இரு கருத்து தோன்றுவதில் தவறில்லை. இந்த அடிப்படையில் சுன்னா ஒரு சட்ட மூலாதாரமாக
அமைகிறது என்று சொல்லும்போது, நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மை என்னவெனில்,
சுன்னா அல்குர்ஆனைப் போன்றதல்ல. அல்குர்ஆன் நகர்த்தப்பட்ட வழி மிகவும் திட்டவட்டமானது.
ஆனால் சுன்னாவைப் பொறுத்தவரை குறிப்பாக மூன்றாவது விதியின் பரப்பில், அனைத்து சுன்னாக்களும் திட்டவட்டமான வழியில் நகர்த்தப்படவில்லை. எனவே, குறித்த ஒரு விடயம், இது சுன்னாவா? இல்லையா? என்பதில் இரு கருத்து தோன்றுவதற்கான சாத்தியப்பாடு
இருக்கின்றது. எனவே, அதனையொட்டி தோன்றும் சட்டங்களும் வேறுபட முடியும்.
இது சுன்னாவின் மூலாதாரத்தன்மையில் ஒரு பலவீனமல்ல. மாற்றமாக மறுமை வரையில் நிலைத்திருக்க
வேண்டிய இந்த தீனின் பரந்த தன்மையைப் பிரதிபளிக்கும் ஒரு விடயமாகும்.
சுன்னா சட்ட மூலாதாரமாக
அமையும் வடிவங்கள்
சுன்னா ஒரு சட்ட மூலாதாரம்
என்ற கருத்தைப் பேசுகின்ற பொழுது இமாம்களது மிகுந்த கவனத்திற்குற்பட்ட பகுதிகளில் இதுவும்
ஒன்று. அதிலும் குறிப்பாக நவீன காலத்தில் இது குறித்த கருத்தாடல்கள், நவீன அறிஞர்கள் மத்தியில் அதிகமாகவே நடைபெறுகின்றன. சுன்னா சட்ட மூலாதாரமாக அமையும்
வடிவங்கள் என்பதன் மூலம் நாம் விளங்கிக் கொள்வது என்ன? இக்கருத்தைப் புரிந்து கொள்ள முதலில் சட்ட மூலாதாரமாக
அமையக்கூடிய சுன்னாவின் பரப்புக்களை நாம் அடையாளம் காணுதல் வேண்டும்.
அந்தவகையில் பொதுவாக
உஸுலிய்யூன் எனப்படும் சட்டக் கொள்கை வகுப்பாளர்கள் இது பற்றிக் கூறும்போது,
நபியவர்களது வார்த்தைகள், செயல்கள், செய்ய வேண்டும் என எண்ணியவைகள், அங்கீகாரங்கள், அவரது நற்பண்புகள் ஆகியவை சுன்னா என்ற பரப்பில்
உள்ளடங்கும் என்கின்றனர். நபியவர்களது உருவத் தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களும்,
அவரது நுபுவ்வத்திற்கு முன்னைய வாழ்க்கையும் சட்ட மூலாதாரம் என்ற வகையில் சுன்னா
என்ற பரப்புக்குள் உள்ளடங்க மாட்டாது என்கின்றனர்.
இமாம் இப்னு தைமியா
அவர்கள் கூறுவது போல், நபியவர்களது நுபுவ்வத்திற்கு முன்னைய வாழ்வு எமக்கு
ஷரீஅத்தாக அமைய மாட்டாது என்பது, இஜ்மாவான முடிவாகும். கலாநிதி அலி கரதாஇ அவர்கள்
கூறுவது போல் நபியவர்களது உருவத்தோற்றம் தொடர்பான விடயங்கள் அவர்களது தெரிவுக்குற்பட்டவையல்ல.
அந்தவகையில் அவை ஏனைய மனிதர்களுக்கு ஷரீஅத்தாக அமைய மாட்டாது.
நபியவர்களது சுன்னா
என மேலே அடையாளப்படுத்தப்பட்ட அனைத்துப் பரப்புகளும் ஏதோ ஒரு வடிவில் எமக்கு ஷரீஅத்தாக
அமையக் கூடியவையாகும். கலாநிதி அலி கரதாஇ அவர்கள் தனது தலாலதுஸ் ஸுன்னா அலல் அஹ்காம்
எனும் ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்கள். நபியவர்களது சுன்னாவில் எமக்கு
ஷரீஅத்தாக அமையாத ஒரு பகுதி இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அது தவறானது. நபியவர்களது
வாழ்வில் மேலே குறித்துக் காட்டிய இரு பகுதிகள் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளும் எமக்கு
ஷரீஅத்தாக அமையும். ஏனெனில் நபியவர்கள் பற்றி அல்குர்ஆன் கூறும் போது “முஹம்மத் என்பவர் ஒரு தூதுவர்தான்” (ஆல இம்ரான் 144) என்கிறது. எனவே, அவரது வாழ்வின் எல்லாப் பகுதிகளும் எமக்கு ஷரீஅத்தாக அமையும். ஆனால் அவை ஷரீஅத்தாக
அமையும் வடிவங்கள் வேறுபடுகின்றன என்கிறார்கள்.
வடிவங்கள் வேறுபடுதல்
என்பதன் கருத்து என்ன? அதாவது நபியவர்களது
சுன்னாவின் பெரும் பகுதி எல்லா சூழ்நிலையிலும் மறுமை வரையில் எல்லா மனிதர்களுக்கும்
ஒரே விதத்தில் ஷரீஅத்தாக அமைகின்றன. அதே நேரத்தில் இன்னும் சில பகுதிகள் சில சூழ்நிலைகளிலும்,
சில குறிப்பிட்ட வகையினர்க்கும் மாத்திரமே ஷரீஅத்தாக அமைகின்றன.
அதுபோல் நபியவர்களது
சுன்னாவில் சில பகுதிகள் நபியவர்கள் செய்த அதே நடவடிக்கை அதே வடிவில் எமக்கு ஷரீஅத்தாக
அமைகின்றன. இன்னும் சில பகுதிகள் அதே நடவடிக்கைகள் அன்றி அவற்றின் நோக்கங்களே எமக்கு
ஷரீஅத்தாக அமைகின்றன.
இந்த இடத்தில்தான்
நபியவர்கள் வகித்த சமூகப் பாத்திரங்களுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்வது முக்கியம்
பெறுகிறது. ஆரம்ப கால இமாம்களான இமாம் கராபி, இப்னு குதைபா, இப்னு ஹஜர் அல் அஸ்கலானி போன்றவர்கள் முதல் நவீன
கால அறிஞர்கள் வரையில் பல்வேறு ஆய்வுகள் இப்பரப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். நபியவர்கள் முபல்லிக் எனும் அல்லாஹ்விடமிருந்து வஹியை அறிவிப்பவர்
என்ற பிரதான பாத்திரத்தை வகித்தமை போல், சமூகத் தளத்தில் ஒரு தலைவராகவும் நீதிபதியாகவும் படைத்தளபதியாகவும் ஆலோசகராகவும்
தொழிற்பட்டிருக்கிறார்கள்.
இமாம் முகம்மத் தாஹிர் இப்னு ஆஷுர் அவர்கள் குறிப்பிடுவது
போல் நபியவர்களது செயற்பாடுகளை பன்னிரண்டு பாத்திரவகைகளில் அடக்கலாம். நபியவர்களது
பாத்திர வகைகள் வேறுபடுவதற்கு ஏற்ப அவற்றிலிருந்து பெறப்படும் சட்டங்களும் வேறுபடுகின்றன.
அதாவது நபியவர்கள் முபல்லிகாக முன்வைக்கும் ஒரு விடயம் மறுமை வரையில் எல்லோரும் பின்பற்றுவதற்குரிய
ஒரு சட்டமாக அமையும் அதே வேளை நபியவர்கள் தலைவராக முன்வைக்கும் ஒரு விடயம் மறுமை வரையில்
எல்லோருக்குமான ஒரு சட்டமாகவன்றி தலைமைத்துவ பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு குறித்த
ஒரு சூழ்நிலையில் மாத்திரம் சட்டமாக அமையும் நிலையையும் காணலாம். உதாரணமாக ஒரு தடவை
நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் “ஒரு தரிசு நிலத்தை எவர் பண்படுத்துகிறாரோ அந்த நிலம் அவருக்கே சொந்தமானதாகும்”
(அபூதாவூத்).
நபியவர்களின் இந்த
வார்தைகளை அவர் வஹி அறிவிப்பவர் என்ற அடிப்படையில் நின்று நோக்கினால் எந்தவொரு மனிதனும்
பிறர்க்கு சொந்தமில்லாத ஒரு பொது நிலத்தைப் பயன்படுத்த முடியும். அப்போது அதன் உரிமையாளராக
அவர் கருதப்படுவார். அரசாங்கமோ அல்லது வேறு எவரும் இதனைத் தடை செய்ய முடியாது. ஒவ்வொருவரும்
தாம் விரும்பியவாறு செயற்பட முடியும் என்ற கருத்தையே பெற்றுக் கொள்ள முடியும். இந்த
விளக்கம் நிச்சயமாக ஒரு சமூக ஒழுங்குக்குப் பொறுத்தமானதல்ல. அதனால் இமாம் அபூஹனீபா
அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும் போது, நபியவர்கள் இக்கருத்தை பொதுச் சட்டமாக முன்வைக்கவில்லை. மாற்றமாக அவர் ஒரு ஆட்சித்
தலைவர் என்ற அடிப்படையிலே இதனை முன்வைத்திருக்கிறார். எனவே, இது போன்ற ஒரு முடிவை ஆட்சித் தலைவர் ஒருவர் மாத்திரமே பெற முடியும்.
அந்தவகையில்
அரசாங்கத்தின் அனுமதியுடனேயே எவரும் ஒரு நிலத்தைப் பயன்படுத்தவோ உடமையாக்கவோ முடியும்
என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இடத்தில் நபியவர்களது வார்த்தைகள் எமக்கு ஷரீஅத்தாக
அமையும் வடிவம் வேறுபடுகிறது. இதனை நபியவர்கள் நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் முன்வைத்தார்கள்,
அது அந்தக் காலத்தின் பொதுத்
தேவையை கருத்தில் கொண்டு நபியவர்கள் முன்வைத்த ஒரு சட்டமாகும். இங்கு காலம் மாறுகின்ற
பொழுது இந்த சட்டம் இதே வடிவில் செயற்படுத்தப்படல் வேண்டும் என்ற அவசியமில்லை,
மாற்றமாக அந்த சூழ்நிலையின் பொதுத் தேவையைக் கருத்தில் கொண்டு நாட்டின் தலைவர்
பொறுத்தமான சட்டத்தை முன்வைக்கலாம்.
ஒரு தடவை நபியவர்கள்
இவ்வாறு குறிப்பிட்டார்கள் “தலைவர்கள் குறைஷி வம்சத்திலிருந்தே நியமிக்கப்படல் வேண்டும்;” (அஹ்மத்) இந்த ஹதீஸ் நேரடியாக தலைமைக்குரியவர்கள்
குறைஷ் வம்சத்தவர்கள் என்கிறது. இதன் நேரடியான கருத்து சட்டமாகக் கருதப்பட்டால் தலைமை
குறைஷ் எனும் ஒரு வம்சத்துடன் சுறுங்கி விடும் நிலை தோன்றுகிறது. இந்த இடத்தில்தான்
ஒரு ஹதீஸ் அதன் நேரடியான பொருளைத் தாண்டி அதன் நோக்கங்களை மையப்படுத்தி புரிந்து கொள்ளப்படல்
வேண்டும்.
இமாம் இப்னு கல்தூன் அவர்கள் குறிப்பிடுவது போல் அன்று குறைஷி வம்சத்தினர்க்குக்
காணப்பட்ட மக்களாதரவும் வளங்களும் அவர்களை தலைமைக்குத் தகுதியானவர்களாக மாற்றியது.
நபியவர்களது வார்த்தைகள் உண்மையில் தலைமைத்துவ தகைமைகளை குறித்துக் காட்ட முனைந்ததேயன்றி
குறைஷி வம்சத்திற்கு பரிந்து பேசவில்லை. அந்த வகையில் இங்கு நபியவர்களது வார்த்தைகளில்
நேரடியாகக் குறிப்பிடப்பட்ட அதே விடயம் எமக்கு ஷரீஅத்தாக அமையவில்லை மாற்றமாக அதன்
நோக்கமே எமக்கு ஷரீஅத்தாக அமைகின்றது. எனவே தகுதியானவர்கள் தலைமைக்கு தெரிவு செய்யப்படல்
வேண்டுமேயன்றி குறித்த ஒரு வம்சத்தினர் தெரிவு செய்யப்படக் கூடாது.
இந்த இடத்திலும்
நபியவர்களது வார்த்தைகள் எமக்கு ஷரீஅத்தாக அமையும் வடிவம் வேறுபடுகிறது. அதன் நேரடி
செயலன்றி அதன் நோக்கம் ஷரீஅத்தாக அமைகிறது.
இறுதியாக நபியவர்களது
வாழ்வு என்றும் எமக்கு ஒரு மூலாதாரம், எமது வாழ்வின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒளியேற்றி வழிகாட்டக் கூடியது, அதனைப் பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் எம்மை நேரான பாதையை விட்டும் எவராலும் திசை
திருப்ப முடியாது. அல்லாஹ் எம்மை நேரான வழியில் நடாத்துவானாக.
உசாத்துணை நூல்கள்:
1. அஸ்ஸுன்னா மஸ்தரன் லில் மஃரிபா வல் ஹழாரா –
கலாநிதி யூசுப் அல் கர்ளாவி.
2. மகாஷிதுஸ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா – முகம்மத் தாஹிர் இப்னு ஆஷுர்.
3. ஹுஜ்ஜிய்யதுஸ் ஸுன்னா – கலாநிதி அப்துல் கனி அப்துல் காலிக்.
4. தலாலதுஸ் ஸுன்னா அலல் அஹ்காம் - கலாநிதி அலி கரதாகி.
5. கய்ப நதஆமலு மஅஸ் ஸுன்னா அந்நபவிய்யா – கலாநிதி யூசுப் அல் கர்ளாவி.
No comments:
Post a Comment