முஹர்ரம் மாதம் வருகின்ற போதெல்லாம்
தவறாது நினைவு கூறப்படுகின்ற ஒரு நிகழ்வுதான் ஹிஜ்ரத். நபியவர்களது வாழ்வில், வெறுமனே ஒரு புற அச்சுறுத்தலால் நிகழ்ந்த ஒரு சராசரி
நிகழ்வாக இதனை நோக்க முடியாது. மாற்றமாக நபியவர்களது சமூக மாற்ற செயற்றிட்டத்தின் ஒரு
மூலோபாய நகர்வாகவே இதனை நோக்க முடியும்.
நான் ஒரு வினாவை எழுப்பிப்
பார்க்கிறேன். இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வைப் போன்று, நபியவர்களுக்கு எந்த
சிரமத்தையும் கொடுக்காது ஒரே இரவில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கலாமே?
அல்லாஹ்தஆலா ஏன் அவ்வாறு செய்யவில்லை?
ஆம். நிச்சயமாக அதற்கு ஒரு
வலுவான நியாயமிருக்கிறது. நபியவர்களது சமூக மாற்றச் செயற்பாட்டின் மூலோபாயக் கட்டங்களில்
ஒன்றை நோக்கிய நகர்வாகவே ஹிஜ்ரத் அடையாளப்படுத்தப்படுகிறது. மக்காக் காலப் பகுதியில்
தனிமனிதன், குடும்பம் என்ற பரப்புக்களில் மாற்றப் பணி அழுத்தமாக
நடைபெற்றுள்ளது. இனி அடுத்து இஸ்லாம் ஒரு சமூக செயற்பாடாக மாற வேண்டும். இஸ்லாம் வெறுமனே
தனிமனிதனாகவும், குடும்பமாகவும் வாழுகின்ற
ஒரு மார்க்கமல்ல. அதற்கு ஒரு சமூக வடிவமிருக்கிறது. ஆட்சி வடிவமிருக்கிறது. சர்வதேச
வடிவமும் இருக்கிறது. தஃவாவின் இந்த ஒவ்வொரு பரப்பும் சமூக மாற்றச் செயற்பாட்டின் ஒவ்வொரு
மூலோபாயக் கட்டங்கள். இது எல்லாக் காலத்திலும் காணப்பட முடியுமானது. இது ஒரு மாறாத
பொதுவிதி. இது மனித முயற்சி ஊடாகவே எட்டப்பட வேண்டும் என்ற அல்லாஹ்தஆலாவின் ஏற்பாட்டைத்தான்,
ஹிஜ்ரத், இஸ்ராவைப் போல் அற்புதமாக
நிகழ்த்தப்படாமல், நபியவர்களது முயற்சிக்கு விடப்பட்டமை குறித்து நிற்கின்றது.
அதேபோல், நபியவர்களது தாயிப்
விஜயம், ஹபஷா ஹிஜ்ரத் போன்றனவும் நபியவர்கள் இது போன்றதொரு
மூலோபாய நகர்வுக்கான சூழலைத் தேடியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அத்துடன்,
அகபா உடன்படிக்கைகளும்,
முஸ்அப் இப்னு உமைர்
(றழி) அவர்கள் மதீனாவுக்கு அனுப்பப்பட்டமையும், இஸ்லாம் சமூக வடிவமாகத்
தொழிற்படும் அடுத்த மூலோபாயக் கட்டத்திற்கான தயார்படுத்தலாகவே நடைபெற்றமையைக் காணலாம்.
எனவே, ஹிஜ்ரத் என்பது இஸ்லாமிய
சமூக மாற்றச் செயற்பாட்டில் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கான ஒரு மூலோபாய
நகர்வு. அதற்கான அடையாளமே ஹிஜ்ரத். இது ஹிஜ்ரத்தின் திட்டமிடல் பரிமாணங்களில் முதலாவது.
இனி இரண்டாவது பரிமாணத்திற்கு
வருவோம். ஹிஜ்ரத் எனும் செயற்பாட்டின் இலக்கும், அதன் ஒவ்வொரு அமுலாக்கக்
கட்டங்களும் அவற்றிற்கான கால வரையறைகளும் மிகத் தெளிவாகக் காணப்பட்டன.
இது வெற்றிகரமான ஒரு திட்டத்தின்
தனிச் சிறப்பு என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பு மதீனாவில் உருவாக
வேண்டும். அதுதான் ஹிஜ்ரத் தொழிற்பாட்டின் இறுதி இலக்கு. அதன் முதல் கட்டம் அகபா உடன்படிக்கை.
இரண்டாம் கட்டம் முஸ்அப் இப்னு உமைர் தாயிஆக அனுப்பப்பட்டு மதீனா சூழலை அதற்குத் தயார்படுத்துதல்.
மூன்றாம் கட்டம் முஸ்லிம்கள் சிறு சிறு குழுக்களாக மதீனாவுக்குச் செல்லுதல். நான்காவது
கட்டம் நபியவர்கள் மதீனாவுக்குச் செல்லுதல், ஐந்தாவது கட்டம் மதீனா
சாசனம் எனும் உடன்படிக்கை. ஆறாவது கட்டம் நபியவர்களது தலைமையில் ஒரு சமூகக் கட்டமைப்பை
உருவாக்குதல்.
மதீனாவின் இஸ்லாமிய சமூக அமைப்பு
உருவாக்கப்பட்ட இந்த ஆறு கட்டங்களும், ஏதேச்சையான நிகழ்வுகளாக
நடைபெறவில்லை. மாற்றமாக ஒரு நீண்டகால மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட
செயற்பாடுகளே அவை. முதலாவது அகபா உடன்படிக்கையின்போது, அடுத்த வருடம் மீண்டும்
சந்திப்பதாக இருந்த உடன்பாடு, தௌர் குகையில் மூன்று நாட்கள் தங்கியமை போன்றன கால
அடிப்படையிலும் தெளிவாக இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தமையைக் காட்டுகிறது.
எனவே, ஹிஜ்ரத்தின் திட்டமிடல்
பரிமாணங்களில் இரண்டாவது, அதன் இலக்கும், கட்டங்களும், காலமும் மிகத் தெளிவாக
வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டமையாகும்.
ஹிஜ்ரத்தின் மூன்றாவது திட்டமிடல்
பரிமாணம் இது ஒரு குழுச் செயற்பாடாக நடைபெற்றமை : இந்தக் குழுச் செயற்பாட்டில் இரண்டு
முக்கிய சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, குழுச் செயற்பாட்டின்
வெற்றியை உறுதி செய்யும் வகையில், இதன் வேலைப்பரப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் மிகப் பொறுத்தமான
அந்தத் துறையில் சிறப்புச் தேர்ச்சி பெற்றோரே தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன்,
மிகவும் கச்சிதமாக
வேலைப்பகிர்வு இடம்பெற்றிருந்தமையையும் காணலாம்.
மதீனா சூழலைத் தயார்படுத்துவதற்காக
முஸ்அப் இப்னு உமைர் எனும் வேகமான விவேகமான இளைஞர் தெரிவு செய்யப்பட்டமையும்,
உடன் செல்வதற்கு அபூபக்ர் (றழி) அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையும்,
தௌர் குகையில் தகவல்
அறிந்து சொல்ல அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் நியமிக்கப்பட்டமையும், உணவுப் பரிமாற்றத்திற்கு
அஸ்மா பின்த் அபீபக்ர் நியமிக்கப்பட்டமையும் அமானிதங்களை கையளித்து விட்டு வருவதற்காக
அலி (றழி) அவர்கள் நியமிக்கப்பட்டமையும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
இரண்டாவது சிறப்பம்சம்,
முஸ்லிமல்லாதவர்களுடைய
பங்களிப்பும் இந்த வேலைத்திட்டத்திற்குப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அப்துல்லாஹ்
இப்னு உரைகத் எனும் முஸ்லிமல்லாதவர் மதீனாவிற்கான வழிகாட்டியாகத் தொழிற்பட்டமை இதனைக்
குறித்து நிற்கிறது.
ஹிஜ்ரத்தின் நான்காவது திட்டமிடல்
பரிமாணம் இதன் இரகசியத் தன்மை. இங்கு இரகசியத்தன்மை என்பதன் பொருள், அதன் உள்ளார்ந்த வேலைத்திட்டம்
என்ன? யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்?
ஒவ்வொன்றும் எந்தெந்த காலங்களில்
நடைபெறப் போகின்றன? போன்ற விடயங்களின்
இரகசியத் தன்மையே இங்கு நாடப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களும் நபியவர்களும் மதீனாவை விட்டுச்
செல்கிறார்கள் அல்லது செல்லப் போகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாத ஒரு இரகசியமாக
இருக்கவில்லை. உமர் (றழி) அவர்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டுத்தான் ஹிஜ்ரத் போனார்கள்.
ஆனாலும் இங்கு ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. இந்த ஹிஜ்ரத் நிகழ்வு அது வெற்றிகரமாக நடந்து
முடியும் வரையில் ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டு, காபிர்கள் உசாராகி
விடாமல் இருப்பதிலும் நபியவர்கள் கவனமாக இருந்திருக்கிறார்கள். அகபா உடன்படிக்கையின்
இரகசியத்தன்மை, ஹிஜ்ரத்தை சிறு சிறு குழுக்களாக மேற்கொண்டமை போன்றன
இந்த உண்மையைச் சொல்கின்றன.
இங்கு மற்றொரு விடயத்தையும்
குறித்துக் காட்ட வேண்டும். இந்த இரகசியத் தன்மை ஏன்? முஸ்லிம்கள் சிறு கூட்டத்தினர், அவர்கள் இது போன்ற
ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்தால், அந்த முயற்சியைத்
தோல்வியடையச் செய்வது மாத்திரமல்ல, முஸ்லிம்களது உயிர்களுக்கும்
அது பாதிப்பாக அமையும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் நியாயம். இந்த நியாயத்தில் உண்மை
இருக்கிறது. இருந்த போதிலும், மேற்குறித்த அபாயம் இல்லை எனின், அங்கு இரகசியத் தன்மையின்
அவசியம் இல்லை என்ற ஒரு வாதம் தோன்ற முடியும். உண்மையில் இரகசியத் தன்மை என்பது அபாயத்தின் போது மாத்திரம் கையாளப்படும் ஒரு உத்தியல்ல. மாற்றமாக,
எல்லாவிதமான செயற்திட்டங்களிலும்
கட்டாயமாக இரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஒரு பரப்பு காணப்படுகிறது. அவை பகிரங்கப்படுத்தப்படக்கூடாது.
அது பகிரங்கப்படுத்தப்படுவதே இராஜ துரோகமாகப் பார்க்கப்படுகிறது. நபியவர்களது சுன்னாவில்
இதற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன. இதனால்தான் நபியவர்கள் ஒரு தடவை இவ்வாறு கூறினார்கள்.
“உங்கள் தேவைகளை இரகசியமான
முறையில் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில், உங்களது நிஃமத்துகளைப்
பார்த்து அடுத்தவர்கள் பொறாமை கொள்வார்கள்” என்றார்கள். (தபரானி) இது சாதாரண எல்லா நிலைகளிலும்
இரகசியத்தன்மை என்பது ஒரு செயற்பாட்டின் வெற்றிற்கு காரணமாக அமையும் ஒரு பெறுமானம்
என்பதை சுட்டிக் காட்டுகிறது.
ஹிஜ்ரத்தின் ஐந்தாவது திட்டமிடல்
பரிமாணம் அல்லாஹ் மீதான தவக்குல். நபியவர்கள் இலக்கில் மிகத் தெளிவாகக் காணப்பட்டார்கள்.
திறமையான ஒரு குழுவை பணிக்கு அமர்த்தினார்கள். வேலைப்பகிர்வை நுணுக்கமாக செய்திருந்தார்கள்.
இவை மாத்திரம் ஒரு செயற்றிட்டம் வெற்றி பெறுவதற்கு போதுமானவையாக இருக்குமா?
நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின்
உதவி என்றைக்கும் அவசியம். காரணங்களை சிறந்த முறையில் கையாழ்வதைத்தான் மனிதன் செய்ய
முடியும். அவற்றை வெற்றி பெறச் செய்வது அல்லாஹ்வின் கையிலேயே காணப்படுகின்றது. இந்த
நம்பிக்கையுடன்தான் நபியவர்கள் ஹிஜ்ரத் செயற்பாட்டிற்குப் போனார்கள். தௌர் குகையில்
வைத்து அபூபக்ர் (றழி) அவர்கள்
காபிர்கள் கீழே பார்த்தால் நாம் மாட்டிக் கொள்ளலாம். நாம் இருவர் மாத்திரமே இருக்கிறோம்
என்ற அச்சத்தை வெளியிட்டபோது, நபியவர்கள் நாங்கள் இருவரல்ல. அல்லாஹ் மூன்றாவதாக
உடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை நபியவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
திட்டமிடலின்போது,
இலக்கின் தெளிவும்,
பகிர்வின் நுணுக்கமும்,
ஆட்களின் திறமையும்,
மாத்திரம்தான் வெற்றிக்கு
காரணம் என்ற பிரம்மை எம்மிடம் ஏற்பட்டுவிடக் கூடாது. இவற்றில் மாத்திரம் நம்பிக்கை வைத்து
வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. இவற்றிற்கப்பால் அல்லாஹ் உதவி செய்வான் என்ற ஆழ்ந்த
நம்பிக்கையும் அவசியம். அப்போதுதான் பௌதீகக் காரணிகள் கொஞ்சம் பலவீனப்படுகின்றபோது
பின்வாங்க மாட்டோம். தோல்வி ஏற்பட்டாலும் நம்பிக்கையிழந்து போக மாட்டோம். வெற்றி வருகின்றபோது
பெருமையடிக்க மாட்டோம்.
அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.
No comments:
Post a Comment