Tuesday, December 10, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்

சகோதரர்களே, சகோதரிகளே,  உங்கள் மனதோடு கொஞ்ச நேரம் உரையாட நினைக்கிறேன். நீங்கள் தயாரா?

அந்தி மயங்கும் நேரத்தில்,  சந்தடிகளற்ற ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு நிமிடம் கண்களை மூடுங்கள். ஒரு தடவை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். மனது அமைதியாக இருக்கிறதா?

சப்தமின்றி,  உங்கள் மனதுக்கு மட்டும் கேட்கும் விதத்தில், ஆனால் தெளிவான வார்த்தைகளில்,  உறுதியான தொனியில், ஒரு தடவையல்ல மூன்று தடவைகள் சொல்லிப் பாருங்கள்.

நான் திருமணம் செய்யப் போகிறேன்

உள்ளத்தில் என்ன தோன்றுகிறது? மனதின் மறுமொழி என்ன? உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் மெலிதான ஒரு பூரிப்பு தோன்றுகிறா? அல்லது மறுதலையாக மனதில் ஒருவிதமான பயம் சூழ்ந்து கொள்கிறதா?

இந்தப் பயிற்சியை பல இளைஞர்,  யுவதிகளிடத்தில் நான் நேரடியாக செய்து பார்த்திருக்கிறேன். அதில்,  அதிகமான இளைஞர்கள் சந்தோசத்தை உணர்வதாகக் கூறியிருக்கிறார்கள். சிலர் பயம் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை இந்நிலை பெண்களிடத்தில் மறுதலையாகக் காணப்பட்டிருக்கிறது. அதிகமானவர்கள் பயமாக இருக்கிறது என்றும் சிலர் மாத்திரம் சந்தோஷத்தை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இங்கு பயம் என்பதன் அசாதாரண நிலைகளைத் தவிர்த்துப் பார்க்கும்போது,  அதாவது,  கடந்த கால கசப்பான அனுபவங்களால் திருமணம் குறித்து ஏற்படும் பயம், அல்லது அடுத்தவர்களது குடும்ப வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பார்த்து ஏற்படுகின்ற பயம் போன்றவை அசாதாரண பயம்கள். இவற்றைத் தவிர்த்து சாதாரணமாகப் பார்க்கின்ற பொழுது சந்தோசம்,  பயம் என்ற இரு உணர்வுகளும் வெளிப்பார்வையில் ஒன்றை ஒன்று முரண்பட்ட இரு உணர்வுகளாகத் தென்பட்டாலும்,  உண்மையில் திருமணம் என்ற விடயத்தில் இந்த இரு உணர்வுகளும் ஒன்றை ஒன்று முரண்பட்டவைகளல்ல. இரண்டுமே திருமணம் பற்றிய சார்பு மனப்பான்மையின் இருவேறுபட்ட வெளிப்பாடுகள் மாத்திரமே. அதாவது,  சந்தோசம் என்பதை ஒரு சமநிலையான மனநிலையாகவும் பயம் என்பதை சமநிலையற்ற ஒரு மனநிலையாகவும் நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மாற்றமாக சாதாரண நிலையில் திருமணம் பற்றிய சிந்தனையின் போது சந்தோசம் தோன்றினாலும் பயம் தோன்றினாலும் அது ஒரு சமநிலையான மனநிலையின் பிரதிபளிப்பே அன்றி வேறில்லை.

ஏனெனில், ஆண்-பெண் உறவின் ஆழங்கள் திருமணத்தின் மூலமே எட்டப்படுகின்றன. மனிதன் பிறக்கின்ற போதே அந்த உறவுக்கான இயல்பான தேடல் அவனில் விதைக்கப்பட்டே இருக்கின்றது. எனவே,  திருமணம் என்ற உறவு நினைவு கூறப்படுகின்ற பொழுது எல்லாம்,  ஒரு விதமான இன்பப் பூரிப்பு மேலெழுந்து வருவது இயல்பான ஒரு விடயம். அதே போல் பயம் என்பதும் இயல்பான ஒரு விடயமே. திருமணம் வாழ்க்கையின் ஒரு முக்கிய நிகழ்வு. இதற்கு முன்னர் அனுபவப்பட்டில்லாத ஒரு புதிய நிகழ்வு,  புதிய சூழல்,  புதிய முகங்கள்,  புதிய அனுபவங்கள் என்று எல்லாமே ஒரேயடியாய் புதிதாய் அமையப் போவதை நினைக்கும் போது நிச்சயம் மனதில், எவ்வளவு பெரிய தைரியசாலிக்கும் இலேசாய் ஒரு பயம் பிடித்துக் கொள்ளத்தான் செய்யும். புதியது மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பது இயல்பு.

எனவே,  திருமணம் எனும் போது சந்தோஷமும் பயமும் இயல்பானவையே. சாதாரண நிலையில் அவற்றில் எதுவும் சமநிலையற்ற மனநிலையைக் குறித்து நிற்க மாட்டாது. அல்லாஹ்தஆலா மனிதனைப் படைத்த இயல்பு நிலை இதுதான். அவனது படைப்பில் மாற்றமேதும் இல்லை” (ரூம் - 30) என்று அல்குர்ஆன் கூறுவது இந்த உண்மையையும் உள்ளடக்குகிறது. ஏனெனில்,  இதே சூறாவின் இருபத்தி ஓராவது வசனத்தில்,  அல்லாஹ்வின் படைப்பு அற்புதங்களைப் பேசும் போது,  ஆண்-பெண் உறவின் அபூர்வமான பிணைப்பைப் பற்றிப் பேசுகிறான். ஆணிலிருந்து பெண் படைக்கப்பட்டமையும்,  ஒருவர் மற்றவரில் அமைதி காண்பது பற்றியும்,  இருவருக்குமிடையிலான அன்பு,  இரக்கம் போன்ற பிணைப்புகளைப் பற்றியும் பேசுகிறான். இவை அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு அற்புதங்கள்,  சிந்திப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறது. - ரூம் – 21-

எனவே,  ஆண்-பெண் உறவின் இயல்பான ஈர்ப்புத் தன்மையும் பூரிப்புத் தன்மையும் அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இங்கு சந்தோசம்,  பயம் ஆகிய இரு உணர்வுகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்குரிய ஒரு நிலையும் காணப்படுகிறது. இந்த வேறுபடுத்தலும் உண்மையில் எதிர்மறையானதல்ல. இதுவும் மனிதப் படைப்பின் ஒரு அற்புதத்தன்மையை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.

இந்த விடயத்தைப் புரிந்து கொள்ள நாம் ஏற்கனவே மனதில் சொல்லிப் பார்த்த நான் திருமணம் செய்யப் போகிறேன் என்ற வார்த்தைகளுடன் ஏன்?” என்ற கேள்வியையும் சேர்த்துக் கேட்டுப் பார்க்க வேண்டும். நான் திருமணம் செய்யப் போகிறேன் ஏன்? நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? கட்டாயம் திருமணம் செய்துதான் ஆக வேண்டுமா? திருமணம் செய்யாமல் இருக்க முடியாதா? திருமணம் செய்வதால் எனக்கு என்ன கிடைக்கிறது?

இந்தக் கேள்விக்கான பதில்கள் மிகவும் முக்கியமானவை. எந்தவிதமான புறத்தூண்டுதல்களோ அல்லது புறத்தடைகளோ இன்றி திறந்த மனதுடன்,  தெளிந்த மனதுடன் இந்தக் கேள்விக்கான பதில்களைப் பட்டியல் படுத்துங்கள். உண்மையாகவே உள்ளத்தில் தோன்றும் எல்லா உந்துதல்களையும் எழுத்தில் கொண்டு வாருங்கள்.

எழுதி விட்டீர்களா? அந்தப் பட்டியலை ஒரு தடவை அமைதியாக வாசித்துப் பாருங்கள். மீண்டும் வாசித்துப் பாருங்கள். அவை சந்தோஷத்தின் பிரதிபளிப்புகளாக மாத்திரம் அமைந்துள்ளனவா? அல்லது பயத்தின் பிரதிபளிப்புகளும் அங்கு காணப்படுகின்றனவா?

அதாவது ஏன் திருமணம் செய்ய வேண்டும்? என்று நீங்களே உங்களுக்குச் சொல்லிக் கொண்ட நியாயங்களில் சந்தோஷம் சம்பந்தப்பட்ட நியாயங்களும் பயம் சம்பந்தப்பட்ட நியாயங்களும் கலந்து காணப்படுகின்ற பொழுதுதான் நீங்கள் சமநிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எப்படி? என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதேவேளை சந்தோஷத்தையும் பயத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய இடம் எது? என்ற கேள்வியும் தோன்றலாம்.


இங்குதான் திருமண வாழ்வை எதிர்நோக்கி இருக்கும் சகோதரர்களுக்காகவும் சகோதரிகளுக்காகவும் நாம் எழுதும் இந்தத் தொடரின் இரண்டாவது பகுதிக்கு வருகிறோம். அவர்கள் விடைதேட வேண்டிய ஐந்து கேள்விகள் உள்ளன. எப்போது? ஏன்? யார்? எவ்வாறு? எங்கே? என்பன. இவற்றில் இரண்டாவது கேள்வி ஏன்? இந்தக் கேள்விக்குரிய விடையைத் தேடுவதற்கான முன்னுரையாகவே மேலே எழுப்பிய சில கேள்விகள் காணப்படுகின்றன. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பத்திகளில் இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில்களுடன் சந்திப்போம். 
அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

No comments:

Post a Comment