சில அவதானங்கள்
கடந்த 15,
16-06-2014 ம் திகதிகளில் இலங்கையின்
தென்பகுதியில் அமைந்துள்ள அழுத்கமை, அதனை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன.
இதுபற்றிய கண்டனங்களும் விமர்சனங்களும் குற்றம் சுமத்தல்களும் தொடர்ந்தும் பல தரப்புக்களில்
இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச மட்டத்திற்கும் செய்திகள் விரைவாகச் சென்றுவிட்டன.
இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அவர்களும் ஸ்தலத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்துள்ளார்.
இத்தனைக்கும் மத்தியில்
எனது அவதானத்தை சில விடயங்கள் தொட்டுச் சென்றன. அவற்றை இங்கு உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.
1. இது இலங்கைக்கு, சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் பெரும் அபகீர்த்தியை
உண்டு பண்ணும் ஒரு நிகழ்வாகும். இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாடு. அந்த
வகையில் நீதி, சமாதானம்,
பன்மைத்துவம் போன்ற விழுமியங்கள்,
நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு
அவசியமான காரணிகளாகும். அதிலும் குறிப்பாக முப்பது வருடத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு
யுத்தத்தின் முடிவின் பின்னர், யுத்தக் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள்,
விசாரணைகள் என பல்வேறு விடயங்கள்
உலகளவில் பேசுபொருளாய் இருக்கும் ஒரு சமயத்தில் நாட்டுக்கு மென்மேலும் இழுக்கை ஏற்படுத்தும்
ஒரு நிகழ்வாகவே இது காணப்படுகிறது. நாட்டின் மீது உண்மையான பற்றுக்கொண்ட ஒரு குடிமகன்
நிச்சயம் இதுபோன்ற ஒரு காரியத்தில் ஈடுபட மாட்டான் என்பதே நியாயமாய் சிந்திக்கும் எவரும்
புரிந்து கொள்ளும் விடயமாகும்.
2. இனரீதியான வேறுபாடுகளை விசாலப்படுத்தி பகைமையையும்
மோதலையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுகின்ற அரசியல் அணுகுமுறை ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு
வழி வகுக்குமா? என்பது குறித்து சற்று
சீரியஸாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அபிவிருத்தி என்பது பொருளாதாரம், பௌதீகம் சார்ந்தது மாத்திரமல்ல மாற்றமாக உயர்ந்த மனப்பான்மைகளும் உயர் நடத்தைகளும்
கூட அபிவிருத்தி சார்ந்தவைதான் என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும். மாத்திரமன்றி
பொருளாதார பௌதீக அபிவிருத்திப் பயணத்தின் வெற்றிக்கும், பன்முகத்தன்மையை ஏற்றல், சமாதானம், நீதி போன்ற உயர் மனப்பான்மைகள் அவசியப்படுகின்றன.
ஆசியாவின் ஆச்சரியமாய் நாம் எழுந்து நிற்க வேண்டும் எனின், இந்த இனமோதல் அணுகுமுறை ஒரு போதும் பயனளிக்காது என்பதே உண்மை.
3. அழுத்கமை நிகழ்வின் ஆரம்பத்தைப் போய்ப் பார்க்கின்ற
பொழுது, ஒரு பௌத்த பிக்கு தாக்கப்பட்டார் என்ற நியாயத்தின்
மீது முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு ஒரு சம்பவம் நிகழவில்லை
என்பதுவே உறுதியான தகவல். அதனை சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குவே உறுதிப்படுத்தியுமுள்ளார்.
எனவே, ஒரு பொய்யின் மீது இந்த தாக்குதல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
பொய், ஏமாற்று, போலித்தன்மை இவை எந்த மதத்திலும் ஆசிர்வதிக்கப்படாதவை. அதிலும் குறிப்பாக இங்கு
சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட, இஸ்லாம் பௌத்தம் ஆகிய இரண்டிலும் மிகவும் வலுவாக
இந்தப் பண்புகள் கண்டிக்கப்பட்டிருக்கின்றன. மதங்கள் உயர் போதனைகளை முன்வைத்த போதிலும்,
அவை மக்களது நடத்தைகளில் எந்தளவு வேரூன்றியிருக்கின்றன என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
நல்ல குணங்களும் பண்பாடுகளும் வெறும் ஏட்டளவிலேயே இருக்கின்றன. அவை மனித நடத்தைகளாக
மாற்றம் பெறவில்லை. மனதில் எந்தவிதமான குறுகுறுப்புமின்றி ஒரு பொய்யை மீண்டும் மீண்டும்
சொல்லி ஒரு இரத்தக் களரி உருவாக்கப்பட்டது எனின், அந்த மனித மனங்கள் எந்தளவு சீர்கெட்டிருக்கின்றன என்பது புரிகிறது.
4. அழுத்கமை நிகழ்வில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து
மிகவும் வலுவாக ஒரு முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. அதுதான் இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸும்
இராணுவமும் நியாயமாக நடக்கவில்லை, வன்முறையாளர்களுக்கு இடமளிக்கின்ற வகையிலேயே அவர்களது
நடவடிக்கைகள் அமைந்தன என்று குறிப்பிட்டிருந்தார்கள். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் அழுத்கமை முதலாவது அல்ல. இதற்கு முன்னர் பல
நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் இதே முறைப்பாட்டை நாம்
பார்த்திருக்கிறோம். இலங்கையில் மட்டுமன்றி அயல் நாடுகளில் நடைபெற்ற இதேபோன்ற சம்பவங்களிலும்
இதே முறைப்பாட்டை நாம் பார்த்திருக்கிறோம்.
இங்கு ஒரு விடயம்
புரிகிறது. ஒரு இனவன்முறையை சாதாரணமாக ஒரு இனக்குழுவால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது.
அரச தரப்பின் கவனயீனத்தின்போது, அல்லது அரச தரப்பின் ஆதரவின் போது மாத்திரமே ஒரு இன வன்முறையை வெற்றிகரமாக நிகழ்த்த
முடியும். அந்தவகையில் அழுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையில் முதல்
குற்றவாளி அரசாங்கம்தான் என்று கூறினால் அது மிகையான ஒரு கருத்தல்ல என்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில், நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. நேரடியாக இந்த விடயத்திற்குப்
பொறுப்பான பொலிஸும் இராணுவமும் உடனடியாகப் பதில் அளிக்காமையும், உரிய முறையில் கடமையைச் செய்யாமையுமே இங்கு சேதங்கள் இந்தளவு அதிகரித்தமைக்குக்
காரணமாகும். பிறர் மீது பொறாமை கொள்வோர், சேதம் விளைவிக்க நினைப்போர், பஸாது செய்வோர் உலகில் நிச்சயம் இருப்பார்கள். மனிதர்களில்
சிலர் இவ்வாறு இருக்கிறார்கள் என்பதை அல்குர்ஆனே சுட்டிக் காட்டுகின்றது. ஆனால் அவர்களை
தீங்கு செய்யாமல் தடுக்கின்ற பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. இந்த தார்மீகப் பொறுப்பில்
அரசாங்கம் தவறு விட்டிருக்கிறது. எனவே, சரிசெய்யப்பட வேண்டிய இடம் எது என்பது புரிகிறது.
5. ஏற்கனவே மூன்றாவது அம்சத்தில் மனித மனங்கள் சீர்கெட்டு
விட்டமை பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்கு மாற்றமான சூழ்நிலை முழுமையாக இல்லை
என்றும் நாம் கூற முடியாது. அங்கே தலைவர்கள், மதகுருக்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் சீர்பெற்று இருக்க வேண்டிய மனங்கள் சீர்கெட்டுவிட்டன.
ஆனால் சாதாரண பொதுமக்கள் மத்தியில் இன்னும் மனிதாபிமானம் வாழ்வதை அழுத்கமை சம்பவத்தின்போது
பார்க்க முடியுமாக இருந்தது. பொதுமக்கள் மாத்திரமன்றி பல சகோதர இன தலைவர்களிடத்திலும்
இதனைக் காணக் கிடைத்தது. அவர்கள் பகைமையை விரும்பவில்லை. வன்முறையை ஆதரிக்கவில்லை.
இந்த நல்ல மனிதப் பண்புகள் இன்னும் வாழ்கின்றன.
இது எங்களுக்கு ஒரு
உண்மையைச் சொல்கிறது. எப்பொழுதும் இன முரண்பாட்டை விரும்புகின்றவர்கள் ஒரு சிறிய தொகையினர்தான்.
நாம் அவர்களைத்தான் மிகச் சரியாக இனம்கண்டு தூரமாக்க வேண்டும். அத்தகையவர்கள் தலைவர்களாகவோ
ஆள்பவர்களாகவோ வந்து விடக்கூடாது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் ஒற்றுமையை விரும்புகின்றவர்கள்.
தீமையை விரும்பாதவர்கள். இவர்கள் நாம் வெறுப்பதற்குரியவர்கள் அல்லர். இவர்களுடனான சகவாழ்வை
இஸ்லாம் என்றைக்கும் வழியுறுத்துகின்றது.
6. நடந்து முடிந்த சம்பவத்தை மாத்திரமன்றி,
நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் எதிர்ப்புப் போராட்டத்தைப் பார்க்கின்ற
பொழுது எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. இவர்கள் இதன்மூலம் எதனை அடைந்து கொள்ளப் போகிறார்கள்?
நிச்சயமாக இது மனித குலத்திற்குப் பயனளிக்கப் போவதில்லை. நாட்டுக்கும் பயனளிக்கப்
போவதில்லை. எந்த இனத்திற்கும் இது பயனளிக்கப் போவதில்லை. அழிவும், அவமானமும், பின்னடைவும் மாத்திரமே இங்கு எஞ்சிவிடப் போகின்றன.
இப்படி இருந்தும் இதனை ஏன் செய்கிறார்கள்? இதனால் இவர்களுக்கு என்ன இலாபம்? துல்லியமாய் என்னால் விடைகாண முடியாத கேள்விகள் இவை.
ஆனால் ஒரு விடயம்
மட்டும் புரிகிறது. இவற்றிற்குப் பின்னால் இருப்பவர்கள் எதனை அடைந்து கொள்ள நினைக்கிறார்களோ
அது நிச்சயமாய் அடையப் பெற மாட்டாது. இங்கு அநியாயத்தின் மூலம் ஒன்றை அடைந்து கொள்ள
நினைக்கிறார்கள். அதற்கு அல்லாஹ் இடம்தர மாட்டான். அல்லாஹ்தஆலா சொல்கிறான் “அவர்கள் சதி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சதி செய்கிறான்.
அல்லாஹ் அவர்களை விடவும் சிறந்த சதிகாரன்” ( ஆல இம்ரான் - 54 )
சதிகாரர்கள் தாம்
விரிக்கின்ற வலையில் தாமே சிக்கிக் கொள்வார்கள். நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்
அந்த இடத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
அல்லாஹ்வே போதுமானவன்.
No comments:
Post a Comment