Saturday, June 29, 2013

சோதனைகளின் போது...


இன்று இலங்கை முஸ்லிம்களைக் குறி வைத்து சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் சில எதிர் செயற்பாடுகள் குறித்து ஒரு சாதகமான பார்வை இங்கு முன்வைக்கப்படுகின்றது.

சோதனை என்ற கருத்தியல் பற்றி அல்குர்ஆன் என்ன சொல்கிறது?

சோதனை என்பது மனித வாழ்வின் மாறாத ஒரு விதி, ஈமான் கொண்ட ஒவ்வொரு மனிதனும், அந்த ஈமானுக்கான சோதனையை கண்டிப்பாக எதிர்கொள்ளவே வேண்டும்.
அல்குர்ஆன் கூறுகிறது தாம் ஈமான் கொள்வதனோடு மாத்திரம், எவ்விதமான சோதனைக்கும் உற்படுத்தப்படாமல் விடப்படுவோம் என்று மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களையும் நாங்கள் சோதனைக்கு உற்படுத்தியிருக்கிறோம்.  - அன்கபூத்  2, 3 -

சோதனை என்றவுடன் எமது சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் தோன்றும் முதல் விடயம், அது தீங்கானது, பாதகமானது என்பதாகும். ஆனால் அல்குர்ஆன் சோதனையை அவ்வாறு விவரிக்கவில்லை. மாற்றமாக அது நன்மையானது பயனுள்ளது என்பதாகவே சொல்கிறது. அல்குர்ஆன் கூறுகிறது

அவன்தான் வாழ்வையும் மரணத்தையும் படைத்தான். உங்களில் மிகச் சிறந்த முறையில் செயற்படுபவர் யார் என்பதை சோதிப்பதற்காக, அவன் கண்ணியமானவன், மன்னிப்பவன் - முல்க் 02-

இந்த வசனம் வாழ்வையும் மரணத்தையும் படைத்த நோக்கம் சோதனை என்கிறது. அந்த சோதனை எங்களை எதனை நோக்கி வழி நடாத்த வேண்டும் எனின், மிகச் சிறந்த செயலை நோக்கி வழிநடாத்த வேண்டும் என்கிறது. ஒரு சோதனை மனிதனுக்கு ஏற்படுத்தப்படுகிறது என்றால் அடுத்த கட்டமாக அவனுடைய வாழ்வு மிகச் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் எதிர்பார்ப்பு. இங்கு சோதனையால் மனித வாழ்வு செம்மைப்படுத்தப்படுகிறது. அது ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. இதுதான் சோதனையின் நன்மை.

இலங்கை முஸ்லிம்களின் அடுத்த கட்ட வாழ்வொழுங்கு எவ்வாறு கட்டமைக்கப்படல் வேண்டும் என்பதை அல்லாஹ்தஆலா தீர்மானித்துவிட்டான். அதனை நோக்கி முஸ்லிம்களை நகர்த்துவதற்கான ஏற்பாடாகவே இந்த சோதனை தரப்பட்டிருக்கிறது. அதனால்தான் இன்றைய நிகழ்வுகளின் காரணமாக தவிர்க்க முடியாத சில நல்ல விளைவுகள் தோன்றியிருக்கின்றன.

சோதனையின் முதலாவது நன்மை, இன்று பொதுத்தளத்தின் பிரதான பேசுபொருளாக இஸ்லாம் மாறியிருக்கிறது. நிச்சயமாக இது நன்மையானது, தீங்கானது அல்ல. இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இஸ்லாம் என்ற ஒரு மார்க்கமும், முஸ்லிம்கள் என்ற ஒரு சமூகமும் இலங்கையில் இருப்பதனால் இந்த நாடு என்ன பயனை அடையப் போகிறது என்பதனை ஒரு கருத்தாக சொல்வதற்கு மாத்திரமல்ல செயல் வடிவில் கொண்டு வருவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இஸ்லாம் என்பது உண்மை. இஸ்லாம் என்பது நீதி, இஸ்லாம் என்பது அபிவிருத்தி, மாற்றமாக இஸ்லாம் என்பது பிற்போக்கல்ல. இஸ்லாம் என்பது தீவிரவாதம் அல்ல. இஸ்லாம் என்பது காட்டுமிராண்டித்தனம் அல்ல என்பவை வார்த்தைகளினால் மட்டுமன்றி செயல்வடிவத்திலும் இடம்பெறல் வேண்டும்.

சோதனையின் இரண்டாவது நன்மை, ஒருமைப்பாடு, இலங்கையில் இஸ்லாத்திற்காக செயற்படுகின்ற எல்லா நிறுவனங்களையும், தனிமனிதர்களையும், வித்தியாசமான எல்லா சிந்தனைப் பாரம்பரியங்களையும் ஒரே தளத்தில் இது இணைத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கான பொதுத்தலைமை பற்றி அவர்களைச் சிந்திக்கத் துண்டியிருக்கிறது. சுனாமியில் நிகழாதது, மூதூர் விவகாரத்தில் நிகழாதது இப்பொழுது நிகழ்ந்திருக்கிறது.

இதுபோன்ற ஒரு சமூக ஒற்றுமை குறித்து கடந்த காலங்களில் எவ்வளவு பேசப்பட்டிருக்கிறது, எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது, எத்தனை பேருடைய நீண்ட நாள் கனவாக இருந்திருக்கிறது. அந்த நேரத்தின் அனைத்து முயற்சிகளதும் பயன் இன்று ஒரு சோதனையால் ஒரேயடியாக கிட்டியிருக்கிறது. இந்த வெற்றி இழக்கப்பட்டுவிடக்கூடாது. இது பாதுகாக்கப்படல் வேண்டும். ஒரே தலைமையாக இருந்து செயற்படுவது, ஒரு மார்க்கக் கடமை. அந்த கடமையை நிறைவேற்றுவதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் இது.

 சோதனையின் மூன்றாவது நன்மை, வஸதியா என்னும் நடுநிலைத் தன்மையின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணரத் தொடங்கி விட்டார்கள். பிளவுதான் அடிப்படை என்றும், ஒன்றில் கருப்பு அல்லது வெள்ளை மாத்திரம்மே, கருப்பும் வெள்ளையும் என்பது சாத்தியமற்றது என்றும் பேசிய கருத்துக்கள் எல்லாம் இப்பொழுது மாற்றமடையத் தொடங்கிவிட்டன. பல நிலைப்பாடுகளை அங்கீகரித்தல், அவற்றிற்கு மத்தியில் ஒற்றுமையைப் பேணல் எல்லோரையும் அரவணைத்தல் என்ற கருத்துக்கள் இப்பொழுது மேலெழத் தொடங்கிவிட்டன. உண்மையில் இதுதான், இந்த நடுநிலைமை தான் இஸ்லாத்தின் அதி உன்னதமான ஒரு சிறப்பம்சம்.

இவ்வாறுதான் நாம் உங்களை ஒரு நடுநிலையான சமூகமாக ஆக்கினோம் என்று அல்லாஹ்தஆலாவே இந்த உம்மத்தை சிலாகித்துப் பேசினான். காலத்தால் மத்திமம், இடத்தால் மத்திமம் மட்டுமல்ல மிக முக்கியமாக இந்த உம்மத் அதன் சிந்தனையில் மத்திமமானது. அதனால்தான் இதற்கு எல்லா சமூகங்களையும், எல்லா சூழலையும் எல்லா இடங்களையும் அரவணைக்க முடிகிறது. இஸ்லாத்தின் இந்த உன்னதமான பண்பு மேலெழத் தொடங்கிவிட்டது. எல்லோருடைய நாவுகளிலும் இந்த சொல் உச்சரிக்கப்படுகிறது. இந்த அதிசய மாற்றம் சோதனையால் விளைந்த நன்மையே.

சோதனையின் நான்காவது நன்மை, இது சோதனையின் மீது எழுந்த மற்றொரு சோதனையால் விளையும் நன்மை. முஸ்லிம் நிறுவனங்கள், அமைப்புகள் என்ன செய்கின்றன? அவற்றின் செயற்பாடுகள் சட்டத்திற்குற்பட்டவனவா? நிதி நடவடிக்கைள் முறையாகப் பேணப்படுகின்றனவா? அவற்றின் தொடர்புகள் எத்தகைய? போன்ற கேள்விகள் அரசாங்கத்தால் எழுப்பப்படத் தொடங்கிவிட்டன, விசாரணைகளும் தேடல்களும் ஆரம்பித்து விட்டன. இந்த சூழ்நிலை அபாயமாகப் பார்க்கப்படுதலுக்கப்பால் இதில் ஒரு பெரிய நன்மை இருப்பதை நாம் பல சமயம் மறந்து போகிறோம்.

பொதுவாக முஸ்லிம் நிறுவனங்களிடம் ஒரு பலவீனம் இருக்கிறது. கசப்பாக இருந்தாலும் இது உண்மை. அவர்களது நிறுவன செயற்பாடுகளில் தொழிலாண்மையைக் காண்பது மிகவும் அரிதாக இருக்கிறது. சட்டரீதியான பதிவுகள், நிதி ஒழுங்குகள், அறிக்கைப்படுத்தல்கள் என்பன மிகவும் பலவீனமான செயற்பக்கமாகவே காணப்படுகின்றன. பொதுவாக இஸ்லாமிய தஃவா என்றாலேயே அது பரக்கத்தில் நிகழ்கின்ற ஒரு செயலாகவே பார்க்கப்படுவதன்றி தொழிலாண்மையுடன் நடக்க வேண்டிய ஒரு செயலாகப் பார்க்கப்படுவது குறைவு. அதில் ஈடுபடுவோரிடமும் திட்டமிடலும், நேர முகாமையும், தீர்மானம் எடுத்தலும் பல சமயங்களில் அசௌகரியமான சொற்களாகவே காணப்படுகின்றன.

இதன் காரணமாக இந்த நாட்டினுள்ளே சட்ட ரீதியான நிறுவனத் தொழிற்பாட்டை உரிய ஒழுங்குகளுடன் மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது ஒழுங்குகளைப் பூரணப்படுத்தாமல் குறைபாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குறைபாடுகள்தான் பல சமங்களில் அவர்களை வீணாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடுகின்றன.

எனவே, அரசாங்கத்தின் இந்தத் தேடலும் விசாரணையும், நிர்ப்பந்தமாக அவர்களை இந்த சட்டரீதியான செயற்பாடுகளை நோக்கித் தள்ளுகின்றன. அவற்றைப் பூரணப்படுத்த வைக்கின்றன. உண்மையில் நிறுவனங்களின் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும் இந்த சட்டரீதியான செயற்பாடுகள் மிகவும் முக்கியமானவை. அவற்றில் கவனக் குறைவாக இருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது கவனம் எடுக்கிறார்கள் எனின், இது நன்மையானதல்லவா?

மாத்திரமல்ல, தொழிலாண்மை என்பது சட்டரீதியான நிறுவனத் தொழிற்பாடு என்பது மாத்திரமன்றி ஒரு உயர்ந்த இஸ்லாமியப் பெறுமானமும் ஆகும். அந்தப் பெறுமானங்களை ஞாபகப்படுத்தி இஸ்லாமியவாதிகளிடம் அவற்றை மீளக் கொண்டு வந்த பெருமை இந்த சோதனையையே சாரும்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

No comments:

Post a Comment