கலாநிதி மஹ்மூத் கஸ்லான் |
பாகம்
- 01
கௌரவ தளபதி அவர்களே,
நீங்கள் உங்கள் படையினரில்
ஒரு பிரிவினரை பக்கபலமாக வைத்துக் கொண்டு, சட்டபூர்வமான ஜனாதிபதி முகம்மத் முர்ஸி அவர்களை எதிர்க்கத் தலைப்பட்டு விட்டீர்கள்,
இது, ஒரு மனிதராக நீங்கள் செய்யக்கூடாத ஒரு விடயம் என
நான் நினைக்கிறேன்.
பல நூற்றுக் கணக்கான
இராணுவத் தலைவர்கள் இருக்கையில் இவர்தான் உங்களைத் தெரிவு செய்தார், பாதுகாப்பு அமைச்சராகவும்
இராணுவத் தளபதியாகவும் உங்களை நியமனம் செய்தார், உங்களது தரத்தை உயர்த்தி
உங்கள் மீது நம்பிக்கையும் வைத்தார்,
அரசாங்கத்திற்கு விசுவாசமாக
இருப்பதாகவும் சட்டத்தையும் யாப்பையும் மதித்து நடப்பதாகவும் நீங்கள் சத்தியப் பிரமாணம்
செய்தீர்கள்.
இந்த அனைத்திற்கும்
நீங்கள் மாறு செய்து விட்டீர்கள், சத்தியத்தை முறித்து விட்டீர்கள், அரசுக்கு துரோகமிழைத்து
விட்டீர்கள், அல்லாஹ்தஆலா கூறுகிறான்
" நீங்கள் அல்லாஹ்வை முன்னிறுத்தி செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்,
சத்தியங்களை முறிக்காதீர்கள்,
உங்களுக்குப் பொறுப்பாக
நீங்கள் அல்லாஹ்வையே வைத்திருந்தீர்கள், நீங்கள் செய்பவற்றை
அவன் நன்கறிவான் ( நஹ்ல் - 91)
நீங்கள் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்துவிட்டீர்கள், அவரைக் கைதுசெய்து
மறைத்து வைத்து விட்டீர்கள், பின்னர், உங்கள் இராணுவத்தில் சிலரை ஒன்றுகூட்டி,
அவர் பற்றி பிழை சொல்லத் தொடங்கினீர்கள்,
அவர் எந்தவகையிலும்
சம்பந்தமேயில்லாத குற்றச் சாட்டுகளை அவர் மீது சுமத்தினீர்கள்.
நடந்தது என்ன என்று மக்கள் மத்தியில் அவர் விளக்கமளிப்பதற்கு அவரை அனுமதிக்கும்
தைரியம் உங்களிடம் இருக்கிறதா? நிச்சயமாக நீங்கள்
அதனைச் செய்யமாட்டீர்கள், ஏனெனில் நீங்கள் அவரைக்
கண்டு பயப்படுகிறீர்கள், அவர் உங்களைப் போன்று
ஆயுத பலமும் உடற்பலமும் கொண்டவரல்ல, இருந்த போதிலும் நீங்கள்
அவரைக் கண்டுஅச்சம் கொள்கிறீர்கள்.
ஏனெனில் சத்தியம்
அவர் பக்கம் இருக்கிறது, அவர் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட ஜனாதிபதி, ஆனால் நீங்கள் எந்த உரிமையும் இல்லாதவர்,
அதிகாரத்தைக் கொள்ளையடித்தவர்,
மக்கள் விருப்பத்தை தலைகீழாய்ப்
புரட்டியவர், எப்பொழுதும் சத்தியம்
அசத்தியத்தை விடவும் பலமானது, பௌதீக சக்திச் சமன்பாடுகள் சத்தியத்திற்கு சார்பாக
இல்லாதிருப்பினும் கூட.
உங்கள் பக்கம் பிழை இருக்கிறது,
நீங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதற்கான மிகப் பெரிய ஆதாரம்
என்ன தெரியுமா? நீங்கள் வாசித்த மூன்று
பக்கங்களில் சுமார் இருபது தடவைகள், நான் இதனை மக்களது
எதிர்பார்பப்பை நிறைவேற்றும் வகையிலேயே செய்திருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் சொன்னீர்கள்,
இதுவே நீங்கள் சட்டபூர்வத்தன்மையற்றவர்
என்பதைக் காட்டப் போதுமானதாகும்.
நீங்கள் பல தடவைகள் ஒரே விடயத்தைச்
சொல்வதைப் பார்க்கும் போது என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுவது போலிருந்தது,
உங்கள் பேச்சில் மக்கள்
ஏமாறுவார்கள் என்று நீங்கள் நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
இங்கே ஒரு முக்கியமான
கேள்வி இருக்கிறது, நீங்கள் மக்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?
ஜுன் முப்பதாம் திகதி ஆர்ப்பாட்டத்திற்கு
கிளம்பியவர்களையா? அன்றைய நாள் ஆர்ப்பாட்டத்திற்கு
கிளம்கியவர்கள் தோல்வியுற்ற சில அரசியல்வாதிகள்தான், கடந்த இரண்டு வருட
காலத்தில் தேர்தல்கள் சர்வஜன வாக்கெடுப்புகள் என ஜந்து தடவைகள் தோல்வி கண்டவர்கள்.
ஆம், ஆர்ப்பாட்டக்காரர்களில் வாழ்க்கைப் பிரச்சினைகளால்
பாதிக்கப்பட்டவர்களும் இருந்தார்கள், உங்களுக்கு நன்றாகத்
தெரியும், உண்மையில் இந்தப்
பிரச்சினைகளை தோற்றுவித்தவர்கள் யார் என்பது? உங்களது இராணுவச் சதியுடன் அந்தப் பிரச்சினைகளும்
மாயமாய் மறைந்துவிட்டதைப் பார்க்கும் போது நிச்சயமாய் அவை அனைத்தும் யாராலோ உருவாக்கப்படடவை
என்பது புலனாகிறது.
ஜுன் 30 ன் ஆர்ப்பாட்டம் மாத்திரம்தான் உங்கள் கண்களுக்குத்
தெரிந்தன, அதற்கு உங்கள் முழு
ஆதரவையும் வழங்கினீர்கள், அதேவேளை ஜனாதிபதியின்
சட்டபூர்வத்தன்மையை ஆதரித்த பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டம் உங்கள் கண்களுக்கு ஏன்
தெரியவில்லை? இன்னும் அவர்களது ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது,
நாளுக்கு நாள் மக்கள்
தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முதலாம் தரப்பினரை மக்கள் என்றீர்கள், இரண்டாம் தரப்பினர் யார்? மக்களின் எதிரிகளா? உங்களது இந்த நிலைப்பாடுதான்
சமூகத் தரப்பினர் மத்தியில் இடைவெளியை ஆழப்படுத்துகின்றது,
இதுதான் தேசியப் பாதுகாப்பிற்கு
உண்மையான அச்சுறுத்தலாகும்.
யாப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது
போல் இராணுவம் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது, ஆனால் நீங்களும், இந்தச் சதியில் உங்களுடன்
ஈடுபட்ட சிலரும் ஒரு தரப்பைப் புறக்கணித்து மற்றோர் தரப்பிற்கு மாத்திரம் சார்பாக நடந்து
கொள்வது, இராணுவத்தின் ஒருமைப்பாட்டுக்கும்
கட்டுக்கோப்புக்கும் அச்சுறுத்தலான விடயமாகும். இந்நிலை மிகவும் ஆபத்தானது,
இதனைத்தான் எதிரிகள்
விரும்புகிறார்கள், அறபுலகிலேயே ஒரு பலமான
இராணுவம் அமைந்து விடக் கூடாது என்பதே அவர்களது எதிர்பார்ப்பு.
ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன்
இருக்கிறோம், எகிப்திய இராணுவம், தொழிலாண்மையுடைய ஒரு
தேசிய இராணுவம், அது நிச்சயமாக ஒரு
பக்கம் சார்ந்துவிட மாட்டாது, உள்ளே பிளவுபடவும் மாட்டாது, அதற்காக சில சதிகாரர்கள்
முயற்சித்தாலும் கூட.
உங்களுக்கு சட்பூர்வத்தன்மை
இல்லை என்பதை நீங்களே நன்றாக உணர்கிறீர்கள் போலும், அதனால்தானே அஸ்ஹரின் தலைவருக்கும், கிறிஸ்தவ தேவாலய பாப்புக்கும் பின்னால் உங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டீர்கள்,
அவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள்
அல்ல, அவர்களைக் கொண்டுவந்து அமரவைத்து
உங்கள் சதியை நியாயப்படுத்த முனைந்தீர்கள்.
இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது இனரீதியான
மோதல்களுக்கு எகிப்தை இழுத்துச் செல்லமுடியும். கடந்த காலங்களில் அவற்றைத் தவிர்ப்பதற்கு
நாங்கள் நிறையவே போராடியிருக்கிறோம், இதுகூட தேசியப் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலான விடயம்தான்.
nice work!
ReplyDelete